வெள்ளி, 30 செப்டம்பர், 2016

கைப்பிடிச் சோறு

          பானையில் வெந்துக் கொண்டிருந்த இட்லியின் மணம் நாசியுள் நுழைந்து செரிமான உறுப்புகளை இதமாய் தடவி விட்டது. அத்தோடு சட்டினி தாளிக்கும் ஓசையும் வாசமும் சேர்ந்துக் கொள்ள தன்னிச்சையாய் எச்சில் சுரந்தது.  தாளிப்பில் இன்று உளுத்தம்பருப்பு சேர்க்கவில்லைப் போல! என்னயிருந்தாலும் நான்கு பருப்பைப் போட்டு தாளித்தால் வரும் மணமே அலாதி. கோதாவரிக்கு பசிக்கத் தொடங்கி விட்டது. தலையை வீட்டினுள்ளே நீட்டிப் பார்த்தாள். நீண்ட ரேழி, கூடம், சாப்பாட்டு அறை, இவற்றையெல்லாம் தாண்டி வீட்டின் புழக்கடை தெரிந்தது. அங்கே தென்னை மரத்தினடியில் தேய்ப்பதற்காக காத்துக் கிடந்தது பாத்திரக் குவியல். மேலாக இருந்த குண்டானை காகம் தன் அலகால் சுரண்டிக் கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் தெரிந்த நெருப்பவிந்த கல்லடுப்பில் கரிக் குண்டான் ஒரு பக்கமாய் சாய்ந்து கிடந்தது.
     இப்போது அநேகமாக கணேசன் தட்டின் முன் உட்கார்ந்திருப்பான். சியாமளா அவனுக்கு இட்லிகளைப் பறிமாரிக் கொண்டிருப்பாள். பெரியவள் தலையை விரித்துப் போட்டபடி அம்மா வந்து பின்னி விடுவதற்காய் காத்துக் கிடப்பாள். முன்பெல்லாம் கோதாவரி நேராக உள்ளே சென்று வருபவளாக இருந்தாள். அப்போது அவளுடைய கணவன் திடமாய் இருந்தார். நிலையான வருவாய் இருந்தது. இவள் உண்டது போக மிகுதியாய் இருந்த உணவை வாங்கிச் செல்வதற்கு ஆட்கள் இருந்தார்கள். எப்போது சாப்பாட்டிற்காக அடுத்தவரின் கையை எதிர்பார்க்கவேண்டி வந்ததோ அதிலிருந்து மற்றவர்களின் வீட்டின் வாசற்படியேற தயக்கமாகி விட்டது அவளுக்கு. கணவர் இறந்த பின் அவளால் தன்னுடைய தேவைகளைக் குறைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் நடந்ததை  புரிந்துக் கொள்ளாமல் வயிறு அழிச்சாட்டியம் செய்தது.
     மணி எப்படியும் எட்டரைக்கு குறையாமல் இருக்கும். இன்று என்ன இவ்வளவு நேரம்! பள்ளிக் கூடத்திற்கு நேரமாகிவிட்டதே! ‘சியாமளா இன்று நேரம் கழித்து எழுந்தாளோ என்னவோ!’ என்று வாய்க்குள் முனகியபடியே திண்ணையில் அமர்ந்தாள் கோதாவரி.
     கோதாவரிக்கு இந்த கார்த்திகையோடு அறுபத்தி இரண்டு வயது முடிகிறது. இருந்த ஒரு பிள்ளை ஏழு வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்து போக தம்பி வீட்டிற்கு அருகிலிருந்த இடத்தில் குடிசை போட்டு தங்கிக் கொண்டாள். முதியோர் பென்சனும் தம்பி  கொடுக்கும் சொற்ப பணமும் அவளது வாழ்க்கையை ஓட்ட போதுமானதாய் இல்லை. கஷ்ட ஜீவனத்தோடு நில்லாமல் இப்போது உடம்பு வேறு படுத்தத் தொடங்கி விட்டது. கழுத்தெலும்பு வலிக்கிறது என்று அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போனால் தலை மேல் கனமாய் வைத்துத் தூக்கக் கூடாது என்று சொல்லி மஞ்சள் நிறத்தில் மாத்திரை கொடுத்தாள் டாக்டரம்மா. அதுமட்டுமல்லாமல் அடிக்கடி நிதானம் தவறிப் போகிறது கோதாவரிக்கு.
     தம்பியின் மனைவி கங்கா இருந்தவரை நாத்தியைத் தேடி வந்து மூன்று வேலை உணவையும் கொடுத்து விட்டுப் போவாள். வீட்டுப் பெண்ணின் வயிறும் மனமும் வாடினால் தன் குடும்பம் வாடும் என்ற அவளது நம்பிக்கை இவளது வயிற்றுப் பாட்டை கவனித்துக் கொண்டது. நான்கு மாதங்களுக்கு முன் எதிர்பாரா விபத்தில் அவளும் போய் சேர்ந்து விட இப்போது தம்பியில் மருமகள் போடும் சோற்றை எதிர் பார்க்க வேண்டியதாய் இருக்கிறது. கங்கா போனதற்கு தான் போய் சேர்ந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வாள் கோதாவரி.
     தெருவில் சைக்கிளை ஓட்டியபடி சென்ற பால்கார சேகர்  “என்ன அத்தை சாப்பிட்டாச்சா!” என்றான். “இல்லடாப்பா! எல்லாம் இனி தான்!” என்றாள். “! இன்னிக்கி என்ன வெரதமாஎன்றவாறு சைக்கிளை மிதித்தபடி சென்றுவிட்டான். ‘அதொன்னு தான் கொறையா இருக்கு!’ என்று நினைத்துக் கொண்டாள் கோதாவரி. நன்றாய் இருந்த காலத்தில் சோமவாரத்திலிருந்து சனிக்கிழமை வரை ஏதாவது ஒரு விரதத்தைக் கடைபிடிக்கவே செய்திருந்தாள். அதனால் ஏதாவது பலன் இருந்ததா என்று அவளுக்கு சந்தேகமாகவே இருந்தது.
     காலை வெயில் தெருவை இரக்கமின்றி சுட்டெரித்துக் கொண்டிருந்தது. பள்ளத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பைப்பில் இன்னமும் தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. திலகாவும், வசந்தியும் குழிக்குள் வைக்கப்பட்டிருந்த அன்னகூடையிலிருந்து தண்ணீரைக் கோரி தங்கள் குடத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி நிறைய குடங்கள் இருந்தன. பள்ளிக் கூடத்திற்கு செல்லும், ரெட்டை ஜடை போட்டு மடித்துக் கட்டிக் கொண்டிருந்த இரு பெண்கள் பேசியபடி சைக்கிளில் கடந்துச் சென்றார்கள். அந்த தெருவிற்கு சொந்தமான ராமு நாய் இங்குமங்கும் அலைந்தபடியிருந்தது.
     கோதாவரியின் மேல் வயிற்றிலிருந்து ஒரு பொறி போல கிளம்பிய பசி கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றை ஆக்கிரமித்தது. தன் அரூபக் கைகளைத் தொண்டை வழியாக நீட்டி தலையை கிடுக்கிப் போட்டு இழுக்கத் தொடங்கியது. உள்ளே கரண்டி கிண்ணத்தில் தட்டப்படும் ஓசை கேட்டது. சாப்பிடுகிறார்கள் போல! சற்று நடந்துவிட்டு வரலாம் என்று உட்கார்ந்திருந்த திண்ணையை விட்டு எழுந்தாள் கோதாவரி.
     மகன் இறந்து, வருமானம் குறைந்த பின் இரண்டு மூன்று மாதங்கள் இருப்பதை வைத்து ஓட்டினாள் அவள். ஒண்டி கட்டைக்கு என்ன வேண்டி கிடக்குது என்று நினைத்தாள். செயலாய் இருந்த சமயத்தில் ஞாயிறு ஆனால் ஆடோ கோழியோ குழம்பில் கொதிக்கும். அதோடு ஏதேனும் ஒரு மீன் காரமான மசாலையில் முக்கியெடுக்கப்பட்டு பொறிப்பதற்காய் காத்துக் கிடக்கும். மகனுக்கு அதெல்லாம் இல்லாமல் ஞாயிறு விடியாது.      
     முதலில் நாக்கு தற்போதைய தரித்திர நிலைக்கு அடங்கமாட்டேன் என்று அடம் பிடிக்கத் தான் செய்தது. அப்போதெல்லாம் சாப்பாட்டு நேரத்தில் யார் வீட்டிற்காவது சென்று பேசத் துவங்குவாள் கோதாவரி. அவர்களும் பேச்சு சுவாரஸ்யத்தில் அவளுக்கும் சாப்பிடுவதில் கொஞ்சம் கொடுப்பார்கள். ஆனால் இது நெடுநாள் நிலைக்கவில்லை. இவள் போகும் நேரம் ஆண்கள் உள்ளறையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள். இவளோடு பேசும் பெண் உணவைப் பற்றி முற்றிலும் மறந்து பேசிக்கொண்டிருப்பாள். அதற்கு மேல் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தால் பட்டும் படாமலும் பதில் வரும். பிறகு அங்கிருக்க கோதாவரியாலும் முடியாது.
     தொடக்க காலத்தில் இதெல்லாம் மனதிற்கு வலி தருவதாய் இருந்தது. எத்தனை பேருக்கு மீந்துப் போன உணவையெல்லாம் கொடுத்திருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வாள். அந்த நேரம் அவள் பார்வை, மாட்டிற்கு போடப்படும் பழைய உணவைக் கூட ஆராயத் தவறாது. ஒருநாள் பழையதாய்ப் போனால் தான் என்ன இட்லி கெட்டா போய்விடும் என்று நினைக்கத் துவங்கியிருந்த காலம் அது. ஆனால் அவளது நேரமோ என்னவோ, அந்தத் தெரு மக்கள் பழைய உணவையும் வீணாக்காமல் வத்தல் பிழிந்தோ அல்லது வேறு ஏதாவதாக உருமாற்றியோ உண்பவர்களாக மாறிப் போயிருந்தார்கள். இப்போது சற்று பரவாயில்லை. அவள் நாக்கு ருசியான உணவு வகைகளைத் தேடுவதில்லை, இருந்தாலும் குறைந்த பட்சம் மூன்று வேளைகளாவது சாப்பிடத் தேவையாய் இருக்கிறது.
    நேரம், வயிற்றுத் தீயை முந்தவிட்டு, பொறுமையாய் நகர்ந்துக் கொண்டிருந்தது. ராமு நாயும் தானும் ஒன்றாகிவிட்டதாய் தோன்றியது கோதாவரிக்கு. அந்தத் தெருவில் சாப்பாட்டை எப்போதும் நினைத்துக் கொண்டே அலைபவர்கள், அதன் வாசனையால் தூண்டப்படுபவர்கள் தாங்கள் இருவரும் மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டாள் அவள்.
     பசி உக்கிரமாகத் துவங்கியது. இன்னும் பத்து நிமிடத்தில் கணேசன் வெளியே வந்து விடுவான். எப்படியும் சாப்பிட்டியா அத்தை என்று விசாரிப்பான். பிறகு சியாமளாவைப் பார்த்து, அத்தைக்கு நாலு இட்லி கொடு!’ என்பான். இட்லியின் சுவை இப்போதே நாவில் தெரிந்தது கோதாவரிக்கு.
     கங்கா இறந்த கொஞ்ச நாளைக்கு பழக்கத்தின் காரணமாக உணவு கோதாவரியைத் தேடி வந்து கொண்டு தான் இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல  தாமதமாய் வரத் தொடங்கியது. சிறு வயதிலிருந்தே அவளது வயிறு பசியைக் கண்டதில்லை. பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, ஆண்கள் சாப்பிடுவதற்கு முன் உணவைத் தட்டில் போட்டு சாப்பிடும் சுதந்திரம் அவளுக்கு இருந்தது. பழக்கமற்ற பட்டினியால் வயிறு இடும் ஓலம் தாங்க முடியவில்லை. அதனால் தம்பியின் வீட்டுத் திண்ணையில் சென்று காத்திருக்கத் தொடங்கினாள் கோதாவரி.
     ‘நீங்க வேணா பாருங்க! சாப்பிடற நேரத்துக்கு கரெக்டா வந்துடுவாங்கஎன்று சியாமளா சொன்னதாய் அமுதா ஒருமுறை சொன்ன போது நாண்டுக் கொள்ளலாம் போல தான் இருந்தது அவளுக்கு. ஆனால் அதற்கு தைரியம் வரவில்லை. அந்த நேரம், மறுபடி அந்த வீட்டு வாசலை மிதிக்கக் கூடாது என்ற வைராக்கியமெல்லாம் கூட எழுந்தது. அதெல்லாம் அடுத்த சாப்பாட்டு வேளை வரை தான். பிறகு சியாமளா போடும் கைப்பிடி சோற்றை எதிர்பார்த்து அவளது ஐம்புலன்களும் தவமிருக்கத் தொடங்கிவிட்டன.
     தன் குடிசைக்குச் சென்று ஒரு செம்பு தண்ணீரைக் குடித்து விட்டு வெளியே வந்தாள் கோதாவரி. காற்றில் மிதந்த படி வந்த ஒரு பிஸ்கட் பாக்கெட் முள் வேலியில் சிக்கியிருந்தது. அதை விடுவித்து உள்ளே பார்த்துவிட்டு மறுபடி காற்றின் கைகளில் கொடுத்துவிட்டு தெருவிற்கு வந்தாள்.
     இப்போது திலகா குடத்தை சுமந்தபடி தன் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தாள். கிண்ணத்தில் இட்லியையோ எதையோ ஊட்டியபடி, குழந்தைக்கு ராமுவை வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தாள் சந்திரா. ‘இதோ பாரு... ஜூ, ஜூ, ஜூபாப்பா சாப்பிடலைன்னா நீ மொத்தத்தையும் சாப்பிட்டுடு,’ என்ற கையிலிருக்கும் உணவை போட்டுவிடுவது போல பாவனை காட்டினாள். அவள் கையிலிருந்து விழப்போகும் உணவுக்காக கண்களில் உயிரைத் தேக்கியபடி ராமுவும், அப்படி விழுந்தால் அதை ராமு உண்ணுவதைப் பார்க்க குழந்தையும், ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். கோதாவரியைப் பார்த்ததும் கைகளால் கிண்ணத்தை மறைத்துக் கொண்டு எதிர்புறம் திரும்பிக் கொண்டாள் சந்திரா. ராமுவும் இப்போது அந்தப் பக்கம் மூச்சிரைக்க ஓடிச் சென்று தரை சேரப் போகும் இட்லிக்காக மூச்சிரைக்க தவமிருக்கத் தொடங்கியது.
     கேட் திறக்கும் சத்தம் கேட்ட கோதாவரிக்கு பக்கென்றானது. நேரமாகிவிட்டதோ! கணேசன் கிளம்பிவிட்டான் போல. இந்நேரம் திண்ணையில் இருந்திருந்தால் கண்டிப்பாய் கேட்டிருப்பான். அதுவும் இயற்கையாய் இருந்திருக்கும். இப்போது போனால் சாப்பாட்டுக்கு வந்தது போல தான் இருக்கும். ஆனாலும் மான ரோஷமெல்லாம் பாத்து ஒரு வேளை உணவை இழக்க  அவள் வயிறு தயாராக இல்லை. சற்றே வேகமாய் நடையை எட்டிப் போட்டாள்.
     வண்டியை வெளியே எடுத்துக் கொண்டிருந்தான் கணேசன். இவளைப் பார்த்ததும் பின்பக்கம் திரும்பி மகளின் ‘டை’யை சரியாக்க முற்பட்டாள் சியாமளா. வரப்போகும் வார்த்தைகளைப் பிடித்துக் கொள்ள மூச்சை உள்ளடக்கி, காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள் கோதாவரி. பெண்ணை வண்டியின் பின்னால் உட்கார வைத்து விட்டு வண்டியைக் கிளப்பிய கணேசன், ‘அத்தே! சாப்பிட்டுட்டு போங்கஎன்றான். அந்த சொற்கள் குளிர்ச்சியாய் செவி வழியே உள்ளே இறங்கி  நாவின் எச்சில் சுரப்பிகளை அவிழ்த்து விட்டது. நிச்சயமாகி விட்ட இந்த வேளையின் உணவு மற்ற எதையும் நினைக்க விட வில்லை. வயிறு பழக்கி வைத்த நாய் போல கர்ர்ர் என்றது. இன்னும் சற்று நேரத்தில் தனக்காக வரப்போகும் இட்லியைப் பற்றிய கனவுகளுடன் காத்திருக்கத் தொடங்கினாள் கோதாவரி. குழந்தையைச் சுற்றிப் போடப்பட்ட கடைசி வாய் உணவை வேகமாய் விழுங்கிக் கொண்டிருந்தது ராமு.
(19 செப்டம்பர் 2016,  திண்ணை) 







ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

அவளுக்கென்று ஒரு தினம்



     பெரு விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது  மகளிர் தின வாழ்த்துகளைச் சொல்லி தொலைபேசிக்கு வந்த அந்த தகவல் தாரிணியின் எண்ணங்களைச் சட்டென பிடித்து நிறுத்தியது. மனதிற்கு திருப்தியாய் ஒரு தினத்தைக் கொண்டாடி எத்தனை வருடங்கள் ஆகிறது! இப்போது வரும் விழாக்களெல்லாம் பலகாரங்கள் செய்வதிலும், அடுத்தவரைத் திருப்தி படுத்துவதிலுமே கழிந்து விடுகின்றன. தனக்கே தனக்கென்று ஒரு வேலையைச் செய்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன!

     இன்றைய தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று அவளது மனம் சொன்னது. எப்படி என்பதையும் அதுவே முடிவு செய்து கொண்டது. இன்று அவளுக்குப் பிடித்த வேலைகளை மட்டுமே செய்வது! அதாவது இந்த ஏழு மணி இருபத்தியாறு நிமிடம் இரண்டு நொடி முதல் மாலை ஆறு மணி வரை அவளுக்கே அவளுக்கான நேரம். ஒரு வினாடியைக் கூட வீணாக்காமல் முழுவதும் தனக்காகவே வாழ்வது என்று முடிவு செய்து கொண்டாள்.
    
     முதலில் தான் அவசர விடுப்பில் செல்வதாக அலுவலகத்திற்கு தெரிவித்தாள். பின்னர் தொலை பேசியை ஏரோப்பிளேன் மோடில் வைத்து,  பையினுள்ளே இருந்த சிறிய தடுப்பிற்குள் போட்டாள். இதோடு இவ்வுலகத்துடனான தொடர்பு அறுந்தது என்று நினைக்கையில் சந்தோஷமாய் இருந்தது அவளுக்கு.
    
     சுற்றியிருந்த  மனிதர்களை நோக்கி தன் கவனத்தைத் திருப்பினாள். அவளுக்குப் பக்கத்தில் உடார்ந்திருந்த மாணவன் புத்தகத்திற்குள் தலையை புதைத்துக் கொண்டிருந்தான். அன்று ஏதேனும் ப்ரீட்சை இருக்கக் கூடும். ரயிலில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் காதில் ஹெட் போன்களை மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டோ அல்லது தொலைபேசியை விரல்களால் தடவியபடியோ இருந்தார்கள். கதவருகே நின்றுக் கொண்டிருந்த ஆடவன் சத்தமாய் சீன மொழியில் பேசியபடி இருந்தான்.   அனைவரின் செயல்பாடுகளிலும் மறைமுகமாய் ஒரு அவசரம் தெரிந்தது. அவர்களிலிருந்து தான் வேறுபட்டவள் என்று தோன்றியது தாரிணிக்கு. அங்கிருந்த அனைவரும் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவளுக்கு அப்படியொன்று இப்போதைக்கு இல்லை. முக்கியமாய் அவள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியது இல்லை. நேரமாகிவிட்டது என்று விரையத் தேவையில்லை. ஆர்சர்டில் இறக்கிய உடன் பேருந்து வரவேண்டுமே என்று கடவுளிடம் வேண்டத் தேவையில்லை. பேருந்து வாகன நெருக்கடியில் மாட்டாமல் செல்ல வேண்டுமே என்று பயப்படத் தேவையில்லை. தன்னைப் பிணைத்திருந்த தளைகள் அனைத்தையும் அறுத்துவிட்டதாகவும் தான் காற்றில் மிதப்பதாகவும் கற்பனை செய்துக்கொண்டாள்.
    
     இப்படி இருந்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. இலக்கியா தொடக்கப்பள்ளி செல்லும் வரை அவளைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்டிருந்தாள். அப்போது இது போன்ற அவசரங்கள் இல்லாமல் பொறுமையாய் வேலைகளைச் செய்ய முடிந்தது அவளால். வீட்டிலிருந்து பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி இருந்தாலும், அப்போது நிம்மதியாய்  இருந்தோமா என்று யோசித்துப் பார்த்தாள். காலை எழுந்து பிரபு வேலைக்குச் செல்வதற்குள் சமைக்க வேண்டும். செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதால் அவன் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் செல்பவனாய் இருந்தான். அப்போது அவளுக்கு இப்போதிருக்கும் பொருளாதாரச் சுதந்திரம் இருக்கவில்லை. வீட்டுச் செலவிற்கென்று குறிப்பிட்ட தொகையை அவளுக்கு பிரபு கொடுத்து வந்தாலும், அவளுக்கு விருப்பமான சட்டையையோ, செருப்பையோ வாங்க அவள் பல முறை யோசிக்க வேண்டியிருந்தது. அவனிடம் அனுமதி கேட்க வேண்டியிருந்தது.

     இப்போதும் இவள் நினைத்தபடியெல்லாம் சம்பளத்தை செலவு செய்ய முடியாது தான். சென்ற வருடம் தாரிணியின் அப்பாவிற்கு உடம்புக்கு முடியவில்லை. அவளது வீட்டில் பண நெருக்கடி ஏற்பட்டிருந்த நேரம், கொடுத்து உதவலாம் என்று சொன்ன போது, அப்படி கொடுக்கும் பணத்தை திரும்பப் பெறுவது சிரமம் என்று சொல்லிவிட்டான் பிரபு. அந்த மாதம் முஸ்தஃபாவிற்குச் சென்று ஐந்தரை பவுனில் நெக்லஸ் வாங்கிய போது அவளுக்கு ஏற்பட்ட உறுத்தல் இப்போதும் அந்நகையைப் பார்த்தால் எழவே செய்கிறது. அவனது தாய்க்கு செலவு செய்வதில் அவனுக்கு இது போன்ற தடைகள் எதுவும் இருந்ததில்லை! இது நம்மவர்களின் பாரம்பரியம் என்று தோன்றியது தாரிணிக்கு. பிரபுவாவது பரவாயில்லை மாதமொரு முறை பணத்தை தாரிணியின் கையில் கொடுத்து வந்தான். அவளது தாய்க்கு கணவனிடம் ஒவ்வொரு செலவையும் சொல்லி பணம் கேட்டே செலவு செய்ய வேண்டியிருந்தது. அதற்கும் அவளது தாய் சரியான கணக்கைச் சொல்லியாக வேண்டும்!

     ரயில் ஆர்சர்டில் நின்ற போது, அதிலிருந்து இறங்காமல் மற்றவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்குள் கிலேசத்தை ஏற்படுத்தியது. அவளுக்கு பழக்கமான ஒரு ரயில் நிலையத்தை அவள் பின்தள்ளி விட்டுப் போகிறாள். முதன்முறையாக அவளுக்கென்று சமுதாயம் ஏற்படுத்தி வைத்திருந்த விதிகளை மீறுகிறாள். மனம் சட்டென்று குறும்புத் தனம் செய்யப் போகும் ஒரு சிறுமியைப் போல உற்சாகம் கொண்டது. தான் இப்படி வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டு ஊர் சுற்றுவது தன் கணவனுக்குத் தெரிந்தால் என்னவாகும்! அவனது அதிர்ச்சியைக் கற்பனை செய்து பார்க்கும் போது சந்தோஷமாய் இருந்தது. அவன் நினைத்தாற் போல தன் நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு வருவதெல்லாம் கணக்கில்லை. ஆனால் பெண்கள் தன் ஓய்வு நேரத்தைக் கூட குடும்பத்திற்காகவே செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் அவன்.
    
     தாரிணி அப்படியெல்லாம் வளர்ந்தவள் இல்லை. அவளது அப்பா, மனைவியின் மீது கட்டுப்பாடுகளைச் சுமத்தினாலும், அவள் மீது அன்பு செலுத்தினார். திருமணம் வரை மகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தரும் தந்தையாகவே இருந்தார். விடுமுறையின் போது தோழிகளோடு வெளியே சென்று வருவதற்கெல்லாம் அனுமதி பெறும் அவசியமே அவளுக்கு இருந்ததில்லை. எங்கே போகிறாள் என்ற தகவலைத் தெரிவிப்பது மட்டுமே போதுமானதாய் இருந்தது. மனைவிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆண்கள் மகளிடம் குழைந்து போய்விடுவதும் வழி வழியாய் வருவது போல என்று நினைத்துப் புன்னகைத்துக் கொண்டாள் தாரிணி. அதே பழக்கத்தில் திருமணமான புதிதில் வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு தோழியின் பிறந்தநாளைக் கொண்டாட வெளியே சென்று விட்டாள் தாரிணி. மாலை அதைச் சாதாரணமாய் பிரபுவிடம் தெரிவித்த போது திகைத்துப் போய்விட்டான். இரண்டு நாட்களுக்கு அவளுடம் முகம் கொடுத்தே பேசவில்லை. மூன்றாவது நாள் தாயிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்த போது தான் தனது வீட்டிற்கு அழைத்து அதைப் பற்றி பேசியிருக்கிறான் என்று தெரிந்தது அவளுக்கு. அருகிலேயே இருக்கும் அவளோடு பேசியிருந்தால் சுலபமாய் தீர்ந்து போயிருக்கக் கூடிய ஒரு விஷயம், அவனது நடவடிக்கையால், மனதில் ஆழமான கோட்டைக் கிழித்து விட்டது. தான் கற்பனை செய்து வைத்திருந்த வாழ்க்கையிலிருந்து நிஜ வாழ்கை முற்றிலும் வேறுபட்டது என்ற புரிதல் அவளுக்கு ஏற்பட்டது அன்று தான்.

     சிட்டி ஹால் எம்.ஆர்.டி நிலையத்தில் இறங்கி வெளியே வந்தாள் தாரிணி. நன்றாய் உடுத்திக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக விரைந்தபடி இருந்தார்கள். கட்டிடத்திற்கு மேலே தெரிந்த மிகப் பெரிய திரையில் தோன்றிய விளம்பரத்தைச் சற்று நேரம் பார்த்தபடி இருந்தாள். திடீரென்று அவளுக்கு ஒரு பெரிய உணவகத்தில் தனியே அமர்ந்து இதுவரை சாப்பிடாத உணவை உட்கொண்டு தன்னுடைய இந்த  தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று தோன்றியது.
    
     எதிரே தெரிந்த கேப்பிட்டல் ப்ளாஸாவிற்குள் நுழைந்தாள். ஒவ்வொரு கடையையும் மனதிற்குள் ஆராய்ந்து ஒரு ஜப்பானிய உணவகத்தைத் தேர்ந்தெடுத்தாள். மெனுவில் இருந்த அன்னிய உணவு வகைகளை சிரமப்பட்டு எழுத்துக் கூட்டிப் பார்த்து, அன்கோ நாபே என்று அவளால் படிக்கப்பட்ட உணவை கொண்டு வரும் படி  செய்தாள். ஈரல், மீன் மற்றும் காய்கறிகளைக் கொண்டு செய்யப்பட்ட அந்த உணவு நாவிற்குப் பழகப்படாததாய் இருந்தாலும், அப்போதிருந்த மனநிலையில் ருசியாய் இருந்தது. நூற்றி இருபது வெள்ளிகள் கட்டி விட்டு வெளியே வந்த போது மனம் திருப்தியாய் இருந்தது. நிச்சயம் பிரபு உணவிற்கு இவ்வளவு செலவு செய்ய மாட்டான். என்றோவொரு நாள் இது கூட செய்யவில்லை என்றால் எப்படியென்று நினைத்துக் கொண்டாள்.

     இப்போது அவளுக்கு தனியே அமர்ந்து  கடலைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. மறுபடி ரயில் நிலையத்திற்குள் நுழைந்து பாசிர் ரிஸ் நோக்கி பயணத்தைத் தொடர்ந்தாள். இப்படி மனம் போன போக்கில் திரிவதில் கூட  சுகம் இருப்பதை அவளால் உணர முடிந்தது.

     தாரிணி எங்கே செல்வதாக இருந்தாலும் பிரபு அவளுடன் வருவதை விரும்புவான், அது அவளது தாய் வீடாக இருந்தாலும் சரி! இருவரும் சென்றால் கூட, அங்கு செல்ல  தகுந்த காரணம் இருக்க வேண்டும். அவனுக்கு நேரம் ஒழிய வேண்டும். தனியாக தன் தாயுடன் நேரில் சில வார்த்தைகள் பேசலாம் என்றால் கூட தாரிணியால் முடியாது! அவனுடனே சென்று அவனுடனே திரும்பி விட வேண்டும். அதனால் அவள் தன் பயணங்களை வெகுவாக குறைத்துக் கொண்டாள். அவள் தாய் வீட்டிற்குச் சென்றே மாதக் கணக்காகி விட்டது.

     பாசிர் ரிஸில் இறங்கி  பேருந்தைப் பிடித்து கடலை அடைந்த போது மணி ஒன்றை நெருங்கியிருந்தது. கடல் காற்று இதமாய் வீசிக் கொண்டிருந்தது. அந்த நேரத்திலும் கடலை  ரசிக்க வந்திருந்த  சிலரை அவளால் பார்க்க முடிந்தது. அங்கிருந்த மரத்தின் நிழலில் இருந்த இருக்கையில் முகத்தை மூடிக் கொண்டு ஒரு வயதானவர் படுத்திருந்தார். அவருக்கு சற்று தள்ளியிருந்த குப்பைத் தொட்டிக்கு அருகே பாதி உணவை மட்டும் சாப்பிட்டு விட்டு பொட்டலத்தோடு யாரோ எறிந்திருந்தார்கள். அதிலிருந்த சோற்றை புறாக்கள் இறைத்து கொத்திக் கொண்டிருந்தன. பூனையொன்று தன் நிழலுடன் சேர்ந்து, எதைப் பற்றிய கவலையுமின்றி மெல்ல அவளைக் கடந்து சென்றது.
    
     அவள் நிதானமாய் கடலை நோக்கி நடந்தாள். காற்று ஏற்படுத்திய சலனத்தில் கடல் நீர் அசைந்தாடியபடி இருந்தது. அவளுக்கு கடலை மிகவும் பிடிக்கும். தனியே அமர்ந்து கடலை ரசித்து நிறைய நாட்கள் ஆகியிருந்தன. சிறிது நேரம் காற்சட்டை நனைய கடலுக்குள் நின்றாள். தூரத்தில் தெரிந்த கப்பல்களை எண்ணிப் பார்த்தாள். ஆறு கப்பல்கள் மிதந்துக் கொண்டிருந்தன.
கொஞ்சம் நேரம் ஈர மணலில் அமர்ந்தாள். மணல் வீடு கட்டி, சுரங்கப்பாதை அமைத்தாள். அதன் பக்கத்தில் தன் பெயரை விரலால் எழுதினாள். இலக்கியா இதையெல்லாம் ரசிப்பாள் என்று தோன்றியது அவளுக்கு. இன்னொரு நாள் அவளையும் பிரபுவோடு சேர்த்து அழைத்து வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
    
     கிட்டத்தட்ட மூன்று மணியான போது மண்ணை உதறிக் கொண்டு கிளம்பினாள். ஏதாவது ஒரு நூலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணினாள். இப்போது எதிர் எல்லையை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. அதனால் ஜீராங் ஈஸ்ட் நூலகத்திற்கு பயணித்தாள். அவளுக்கு திருமணத்திற்கு முன் ஓரளவு புத்தகங்கள் படிப்பதில் விருப்பம் உண்டு. திருமணத்திற்குப் பின், புத்தகங்கள் புரட்சி எண்ணத்தை புகுத்தி, பெண்களின் மனதைக் கெடுப்பவை என்ற பிரபுவின் நம்பிக்கையை அவளும் பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவளுக்கு புத்தகங்களின் மீது காதலே பிறந்தது. தன் வாழ்கையை பிரபு நிர்மாணிப்பதாய் தோன்றத் துவங்கிய கணம் வரை நூலகங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட்டிராத அவள், புத்தகங்களை இரவல் பெற்று அவன் இல்லாத நேரத்திலெல்லாம் படிக்க தலைபட்டாள். நிஜ உலகை விட்டுத் தப்பிச் செல்லும்  புஷ்பக விமானக்களாய் அமைந்தன புத்தகங்கள்.

     தன் மனதிற்குப் பிடித்ததாய் தோன்றிய புத்தகங்களையெல்லாம்  எடுத்து வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தாள் தாரிணி. அதிலிருந்து ஒரு நாவலை எடுத்து வாசிக்கத் துவங்கினாள். குளிரூட்டப் பட்ட அறையில் ரமணிச்சந்திரனைப் படிப்பது சந்தோஷமாய் இருந்தது. அந்த கதையின் கதாநாயகியாக தன்னை கற்பனை செய்துக் கொண்டாள். அவளைத் தவறாய் நினைத்து நாயகன் துன்புறுத்திய போது அழுதாள். பின்னர் உண்மை தெரிந்து நாயகன் மன்னிப்பு கேட்ட போது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. அப்புத்தகத்தை படித்து முடித்த போது, ஒரு ஜென்மத்து வாழ்கையை வாழ்ந்து முடித்த திருப்தியில் அவள் நெஞ்சு நிறைந்திருந்தது. அந்த நிறைவு முகத்தில், தெரிய தொலைபேசியை உயிரூட்டி ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டாள்.
    

     சரியாய் ஆறு மணிக்கு நூலகத்தை விட்டு வெளியே வந்த போது, இந்த நாளின் இனிய நினைவுகளோடு மற்ற நாட்களைக் கடந்து விட முடியும் என்று நினைத்துக் கொண்டாள் அவள். தன் ரகசிய தினத்தின் நினைவாக, ரயில் நிலையத்திற்கு அருகே டிஷ்யூ விற்றுக் கொண்டிருந்த பாட்டிக்கு ஐம்பது வெள்ளியைப் போட்டாள். பின்னர் ஏரோப்ளேன் மோடிலிருந்து தொலைபேசியை விடுவித்து, அன்று கணவனிடமிருந்தும், தாயிடமிருந்தும், தோழியிடமிருந்தும் வந்திருந்த தகவல்களை ஆராய்ந்த போது அவளுக்கு துக்கமாய் இருந்தது.

(செராங்கூன் டைம்ஸ், ஏப்ரல் 2016)

வெள்ளி, 16 அக்டோபர், 2015

பெயர்


பாக் பக் பக்காக இருக்கலாம்

கொத்துவானாக இருக்கலாம், இல்லை

நாயாகவோ மாரியாத்தாளாகவோ

கூட இருக்கலாம்

சேவலின் பெயர்

கோழியின் பாஷையில்

 

பேசிக் கொண்டே இருக்கும்

‘சள சளா’வாக இருக்கலாம்

ப்ரசவித்த வெம்மை  தீருமுன்

அதன் முட்டையைத் திருடும்

திருடனாக இருக்கலாம்,

அல்லது

கூண்டிலடைக்கப் பட்ட

சுற்றத்தின் முன் அதை

சுடுநீரில் முக்கி சிறகுரித்து

பலவிதமாய் சமைத்துண்டு

திருப்தியாய் ஏப்பம் விடும்

அரக்கனாய் இருக்கலாம்

என் பெயரின் அர்த்தம்

கோழியின் பாஷையில்

 

 

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

உறைவிடம்


எங்கேயென்று தெரியவில்லை!
பேருந்தின் கூரையில் மழைத்துளி தாளமிட
வெகுதூரம் சென்றது மட்டும்
நினைவில் பொதிந்து ஈரமாய் . . .
நின்ற பேருந்திலிருந்து
தலை தப்ப
ஓடிய சில நொடிகளில்
வேகமாய் மண்டையிலடித்த
துளியின் ஊசிமுனைகளை
இன்னமும் உணரமுடிகிறது!
அதுவரை
கடின முகமணிந்து
ஆங்கிலம் மட்டுமே நடத்தி வந்த
பாகீரதி டீச்சர்
நீர் சொட்டும் தன் கூந்தலை
நுனிமுடிச்சிட்டு
சந்நிதி முன் பாடி, தன்
ஓடு கழற்றிய போது
விடிந்த தினத்தில் தான்
நாங்கள்
நனைந்த புல்வெளியில்
திராட்சை பழம் போட்ட
தயிர் சாதம் சாப்பிட்டது.
சாப்பிட்டு முடிக்கும் போது
வந்த அவசர தகவல்
எங்களுள் ஒருத்தியின்
தந்தை இறந்ததைச் சுமந்திருந்தது.
வெண்மையாய் குழைந்து
கைகளில் ஒட்டியிருந்த
பருக்கைகளைக்
கழுவிய கையுடன்
பயணம் முடிந்து திரும்பி விட்டோம்.
இப்போதும் கூட என்னால்
திராட்சை போட்ட 
தயிர் சாதத்தி லெல்லாம்
மழையை உணர முடிகிறது.
நுனிமுடிச்சில் ஈரம் சொட்ட
பாடியபடி இருக்கும்
பாகீரதி மிஸ்ஸீம்,
அடையாளம் மறந்து போன
தந்தையை யிழந்த மாணவியும் கூட
மழையுடன் சேர்ந்து அதில்
நிரந்தரமாய் உறைந்துவிட்டார்கள்.
 
 
 
 

வெள்ளி, 8 மே, 2015

ஒருவேளை கோப்பி

சல்லடைக் கண்களாய் பூச்சியரித்த
முருங்கைக் கீரையை
ஒரு வெள்ளி இருபது காசுக்கு
வாங்கியிருக்கும் என்னைப் பார்த்து
நீங்கள் சிரிக்கக் கூடும். . . . . .

அதை விற்ற பல்லுதிர்ந்த கிழவன் தன்
பதறும் சரீரத்தை நிலை நிறுத்தி
துரட்டி வைத்து பறித்திருக்கக் கூடிய சாத்தியத்தையும்,
விழப்போகிற இலைகளைப் பொறுக்கும் ஆவலோடு
கண் இடுங்க மேல் நோக்கி பார்த்தபடியிருக்கும்
கோலூன்றிய கிழவி யொருத்தியின் உருவத்தையும்
சித்திரமாய் வரைந்தது,
அவனது மிச்சமிருந்த பற்களின்
இடைவெளி வழி செவியடைந்த.
‘இந்த பணம் என் ஒரு வேளை கோப்பிக்கானது’ என்ற
மொழி கடந்த மலாய் வார்த்தைகள்.

காத்திருந்த கிழவியின் பங்கு கோப்பிக்காய்
இன்னொரு கட்டு கீரை வாங்கிய என்னை
நீங்கள் முட்டாள் என்றும் நினைக்கக் கூடும். . .
பரவாயில்லை!
அவர்கள் இந்நேரம் கோப்பி குடித்திருப்பார்கள்.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

மழைக் கவிதை


மழையைப் பற்றிய

அனுபவக் கவிதையை

நான் எழுதுவதற்குள்

என்னைப் பற்றி

எழுதிச் சென்றுவிட்டது

மழை.

வியாழன், 25 டிசம்பர், 2014

ஆலம் விழுது


 

   செடிகளின்  வேர்களுக்கு சுடுநீரை ஊற்றிவிடப்போவதாக க்ளாரா மிரட்டிய தினத்திலிருந்தே சரோஜா பாட்டிக்கு தூக்கம் கொள்ளவில்லை. அன்றிரவு, செம்பருத்திகளையும் ரோஜாக்களையும் அபரிதமாய் கொண்டிருந்த செடிகள் அவரிடம் வந்து தம்மைக் காப்பாற்றுமாறு  கண்ணீரோடு முறையிடுவதாகக் கனவு கண்டார். அவற்றைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் நேரம் கொதிநீரைக் கொண்டு வந்து கொட்டினாள் க்ளாரா. திடுக்கிட்டு விழித்த போது, சுடுநீர் தன் மீது தெறித்தாய் தோன்றிய உணர்வு மிக உண்மையானதாக இருந்தது, அவருக்கு. அது கனவு என்று அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. வெளியே சென்று செடிகளின் பாதுகாப்பை உறுதி செய்துக் கொண்ட பின்னும் உறக்கம் வரவில்லை.

   அன்றிலிருந்து மூட்டு வலி, முதுகு வலி போன்ற உடல் உபாதைகளெல்லாம் அவருக்கு ஒன்றுமற்றதாய் போய்விட்டது. நடுநிசியில் மெல்லிய சத்தம் கேட்டாலும் சட்டென்று சன்னல் வழியாக எட்டிப் பார்க்கத் தொடங்கினார். அவருக்கு தான் செடிகளை தொட்டியோடு தூக்கிக் கொண்டு போய் எங்கோ ஒளித்து வைப்பதாகவும், வைத்த இடத்தை மறந்து போய் அலைவதாகவும் கனவுகள் வரத் துவங்கின. கனவுகள் பூதங்களாய் பயமுறுத்தத் துவங்கிய நேரத்தில், ஆஸ்திரேலியாவிலிருந்து தொலைபேசியிருந்த  பேரன் ராசுவிடம் அதைப் பற்றிச் சொன்ன போது அவருக்கு அழுகை வந்தது. இந்த சனிக்கிழமை வருவதாய் சொல்லியிருந்த அவன் ஏதோவொரு தீர்வைக் தன்னோடு நிச்சயமாய் கொண்டு வருவான் என்று நம்பினார்.

   இரண்டு வருடங்களுக்கு  முன் ஆஸ்திரேலியா சென்ற பேரன், படிப்பு முடிந்து சிங்கப்பூருக்கு வரப்போகிறான் என்ற செய்தியே பாட்டிக்கு தெம்பையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. சரோஜா பாட்டிக்கு ராசுவின் மீது தனி வாஞ்சை உண்டு. தாயும் தந்தையும் வேலைக்குச் சென்ற காரணத்தால் பன்னிரெண்டு வயது வரை இவரிடம் முழுமையாக வளர்த்த பேரன் அவன். கடந்த இரண்டு வாரங்களைப் பேரன் வரப்போகிற அன்றைய தினத்தை நோக்கியே நெட்டித் தள்ளி வந்திருந்தார் சரோஜாப் பாட்டி. அவனுக்காக ஏதேனும் சமைக்க வேண்டும் என்று அவர் மனம் பரபரத்தது.


தனக்காக ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் தானே எல்லாவற்றையும் வாங்கி வருவதாகவும் அவன் சொல்லியிருந்தான். இருந்தாலும் அவருக்கு மனசு கேட்கவில்லை. பேரனுக்கு பிடித்த கோழியையாவது வாங்கிப் பொரிக்க வேண்டும் நினைத்துக் கொண்டார்.

   ஆகவேண்டிய வேலைகளை கவனிப்பதற்காக எழுந்த பாட்டி மூக்குக் கண்ணாடிக்காக தன் பக்கத்தில் இருந்த மேசையைத் தடவினார். அங்கே இல்லாமல் போகவே கண்களைச் சுருக்கி பார்த்தபடி, சலவை இயந்திரத்தின் பக்கத்தில், குளிர்பதன பெட்டிக்கு மேலே, சாப்பாட்டு மேசையின் மேலே, நாற்காலியில் என்று கவனமாய் கைகளால் தடவிக் கொண்டே வந்தார். கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்ததில் லேசாக தலையைச் சுற்றுவது போல இருந்தது. மின்விசிறியைப் போட்டுவிட்டு சற்று நாற்காலியில் அமர்ந்தார்.

   இப்போதெல்லாம் அவரால் முன்போல தொடர்ந்து வேலை செய்ய முடிவதில்லை. மயக்கமா தூக்கமா என்று புரியாத ஒரு சுழலுக்குள் அவரது மனமும் உடலும் அவ்வப்போது சென்று விடுகிறன. ஏதோ ஒரு கதையில் ராட்சஸன் ராஜகுமாரியைக் கடத்திச் சென்றது போல யாரோ தன்னை இந்த உலகத்திலிருந்து மாயாலோகத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் பின், தான் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் அவர் கற்பனை செய்துக் கொள்வார்.  அடிக்கடி ஆட்கொண்ட இந்த மனப்பெயர்ச்சி சோர்வைத் தருவதாக இருந்தது. தன் சொந்த வேலைகளை முடிக்க அது ஒரு தடையாக இருந்தது. இதனால் ஒரு சாதாரண வேலை கூட மலையாகத் தோற்றமளித்தது. அதை முடிப்பதற்குள் திணறிப்போனார்.

    முன்பெல்லாம் அவர் சுறுசுறுப்பிற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. பிள்ளைகள் வளர்ந்து கல்லூரிக்கும் வேலைக்கும் சென்ற பின் இவர் தனக்கென்று வேலைகளைத் தேடிக் கொண்டார். செம்பாவாங்கிலிருந்த பாலர் பள்ளி ஒன்றில் துப்புரவாளர் வேலையை முடித்து விட்டு அதே மூச்சில் ஜீராங் ஈஸ்ட்டில் ஒரு அலுவலகத்தை சுத்தம் செய்ய கிளம்பிவிடுவார். அதையும் முடித்து விட்டு கொஞ்சம் கூட அலுத்துக் கொள்ளாமல் வீட்டிற்கு வந்து பிள்ளைகளுக்கு உணவு பறிமாரி, மறுநாளைக்கான கறி சமைத்து, வீட்டையும்  துப்புரவாக துடைத்து அதன் பின் தான் படுப்பார். இது போல கிட்டத்தட்ட பதிநான்கு வருடங்கள். நாடி தளர்ந்து போன இன்றைய நாட்களில் அதை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்வார்.

   பெண் மற்றும் பிள்ளைகளோடு போய் இருக்க அவர் என்றும் விரும்பியதில்லை. முடிந்தவரை மற்றவற்களுக்கு உதவியாக இருக்க வேண்டும், முடியாவிட்டால் உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும் என்பது அவரின் கொள்கை. உடம்பு முடியாவிட்டால் இப்போது குளிக்காமல் கொள்ளாமல் கூட ஒரு நாள் ஓய்வாக படுத்துக் கொள்ளலாம். அடுத்தவர் வீட்டில் அப்படி இருக்க முடியுமா! சில இரவுகளில் சிறுநீரை அடக்க முடியாமல் போய் விடுவது உண்டு. அப்போது கொஞ்சமாய் நனைந்து போகும் துணிகளால் அவமானப்பட நேருவதில்லை. மற்றவருக்காக கவலைப்பட தேவையற்ற இந்த வாழ்க்கை வாழ்வதற்கு சுலபமாய் இருந்தது. என்ன, பேசுவதற்கு தான் ஆட்கள் யாரும் இல்லை!

   அப்படியொன்றும் போட்டியிட்டுக் கொண்டு இவரை தன்னுடன் வைத்துக் கொள்ள பிள்ளைகள் யாரும் ஆசைப்படவும் இல்லை. வாரம் ஒருமுறை தொலைபேசுகிறார்களே அது போதாதா! அவர்கள் பிள்ளை குட்டிகளை வைத்துக் கொண்டு தன் புறாக் கூண்டுக்குள் நிம்மதியாய் இருந்தால் போதும் என்று தன்னை சமாதானப் படுத்திக் கொள்வார். கொஞ்சம் ஏமாந்தால் இப்படி தான்! ஏதேதோ நினைப்புகள் ஆளை விழுங்கி விடுகின்றன. ‘இன்று உட்கார நேரமில்லை!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே நாற்காலியிலிருந்து எழுந்துக் கொண்டார்.

   உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திரிக்கும் போதே பூட்டுக்கு பூட்டு வலித்தது. கூடத்தைக் கடந்து குசினிக்குள் நுழையும் போது மூச்சு வாங்கியது. சற்று நிதானித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்துவிட்டதில் அடுப்பு பிசுக்கேறிப் போயிருந்தது. கண்ணாடியை சற்று மறந்து, அதை சுத்தப் படுத்துவதில் முனைந்தார். அடுப்பைத் துடைத்து முடிப்பதற்குள் கை வலியெடுத்துக் கொண்டது. அந்த வேலையை முடித்துவிட்டு நாற்காலியில் மறுபடி சென்று அமர்ந்துக் கொண்டார்.

   சாலையில் சென்ற தீயணைப்பு வண்டி அமைதியைக் கிழித்துக் கொண்டு அலறியது. அந்த சத்தம் தூரம் சென்று தேய்ந்த பின் நிசப்தம் ஆக்கிரமித்துக் கொண்டது. முன்பைவிட சப்தமின்மையின் வீர்யம் இப்போது  அதிகமாகி விட்டதாய் தோன்றியது அவருக்கு. இப்போதெல்லாம் அவரால் இந்த தனிமையைத் தாங்க முடிவதில்லை. பிள்ளைகள் ஓடி விளையாடிய வீடு, எப்போதும் கூச்சலும் குழப்பமுமாய் இருந்த வீடு, யாருமற்றிருப்பது பொட்டற்று வெறிச்சிடும் நெற்றி போல காட்சியளித்தது.

   குழந்தைகள் சிறுவர் சிறுமியராய் இருந்தவரை வேலைகள் சரியாய் இருந்தது சரோஜாவுக்கு. ஒரு புத்தகம் படிக்கக் கூட அவருக்கு நேரமிருக்காது. காலையில் பள்ளிக்குச் சென்ற மகள் திரும்பி வரும் நேரம் மகன் கிளம்ப தயாராகிக் கொண்டிருப்பான். இதில் கைக்குழந்தையாய் சிறியவன் வேறு. கணவர் மற்றும் மகன் வீடு திரும்பும் நேரத்திற்குள் மற்ற வேலைகளை முடிக்கவேண்டும். ஆரம்பகாலங்களில் இவர்கள் வீடு திரும்பும் நேரம் நோக்கியே அவரது வாழ்க்கை நகர்ந்தது. சரோஜா என்றும் வேலைக்கு அஞ்சியவர் இல்லை. இழுத்து செருகிக் கொண்டு ஆரம்பித்தால் வேலைகள் சட் சட்டென்று முடிந்துவிடும்.

   பிள்ளைகள் ஒவ்வொருவராய் திருமணம் முடிந்து சென்று, பின் கணவரும் இறந்த பின் கவிந்த இந்த சப்தமின்மை தான் அவருக்கு தாங்கமுடியாததாக இருந்தது. சேவாவுக்கு ஆளை வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். கண்ணாடி வைத்த இடத்தை அவரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. வர வர மறதி வேறு அதிகமாகிக் கொண்டு வருகிறது. ‘ஒலியில் சொல்லும் ராயல் ஃபுட்ஸ்சை முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் அவர்.

   கடைக்குச் செல்வதற்காக வீட்டின் கதவைத் திறந்த போது, வாசலிலிருந்த செடிகள், காய்ந்த இலைகளை உதிர்த்துவிட்டு பளிச்சென்று காட்சியளித்தன. இவை வந்த நேரம் இவர் வாழ்க்கை சற்று மாறிப் போயிருந்தது. நட்டநடுவில் இருந்த செம்பருத்தி செடி தான் முதலில் வந்தது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டிற்கு முன் அவளுடைய தோழி கொடுத்தது. அப்போது அது இவ்வளவு தூரம் கிளைத்திருக்கவில்லை. அன்புக்கு ஏங்கும் சோனிக் குழந்தையைப் போல ஒடுங்கிப் போயிருந்தது. அதற்கு, தண்ணீர்விட்டு, பேசி, கொஞ்சி, அதை பாசத்தோடு தடவி கொடுக்க சட்டென்று வளர்ந்துவிட்டது. அதற்கு அடுத்து இருக்கும்பட்ரோஸ் இவராக கேட்டு வாங்கி வந்தது. நடுவே இருக்கும் தக்காளிச் செடி இரண்டு மாதங்களுக்கு முன் மகள் வயிற்று பேரன் சிவா கொண்டு வந்தது. பள்ளியில் பாட சம்பத்தமாக விதைகளை விதைத்தவன் அதை இங்கே வைத்துவிட்டு போயிருந்தான். பாட்டியின் சற்றே சோம்பேறியான செல்லக் குழந்தை அது. முதல் இலை வெடித்து கிளம்ப கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் பிடித்தது. இளம்முடிகளைக் கொண்ட ஒரு குழந்தையின் பிஞ்சு உடலை நினைவுபடுத்தும் அதன் இளம் காம்புகளைத் தடவி தடவிப் பார்ப்பாள் பாட்டி. அவ்வப்போது அதை கோபத்தில் திட்டினாலும் அவள் மனம் பொறுக்காது. பாட்டியின் கொஞ்சலும் கெஞ்சலும் அதற்கு புரிந்தது போல இருந்தது, அதன் வளர்ச்சி. இப்படியாக ஏதோவொரு காரணத்தோடு  சேர்ந்து போன செடிகளின் வரிசை இப்போது மின் தூக்கிவரை நீண்டுவிட்டது.

   காலையில் எழுந்தவுடன் ரோஜா பாட்டி நேரம் செலவழிப்பது இந்த செடிகளோடு தான். பழுத்திருக்கும் இலைகளை நாசூக்காய் கிள்ளி. அழுக்கடந்திருக்கும் இலைகளை சுத்தமான துணியால் துடைத்து, கண்பட்டுவிடும் என்று  பூக்களை உள்பக்கமாய் வளைத்து விட்டு, பின் தேவையான அளவு தண்ணீர் தெளித்தோ ஊற்றியோ விடுவார். இவற்றின் காரணமாகவே அவர் வெளியே எங்கும் தங்குவது கிடையாது. கொப்பும் கிளையுமாக செழித்து வளர்ந்திருக்கும் இந்தச் செடிகள் பாட்டிக்கு இதம் தருவதாய் இருந்தன.

   அவருக்கு நிம்மதியைக் கொடுத்த அவை, அக்கம்பக்கத்தாருக்கு தொல்லையாய் அமைந்தது தான் பிரச்சனையாகிப் போனது. முதலில் கிளைகள் வெளிச்சத்தை மறைப்பதாய் புகார் செய்தாள் பக்கத்துவீட்டுப் க்ளாரா. அதன்பின் மற்றொரு நாள், அவளது பிள்ளை சீக்கில் படுத்ததற்கு அதிலிருந்து கிளம்பிய கொசுக்களே காரணம் என்று கோபத்தோடு கத்திய போது தான் அதன் வேர்களில் சுடுநீர் ஊற்றப் போவதாக சொன்னாள். அதைக் கேட்ட பாட்டியின் உயிர்க்குலை ஆடிப் போயிற்று.

குழந்தைகளாய் வளரும் இந்த பிஞ்சுகள் துடித்துப் போய்விடாதோ! அவள் பிள்ளைக்கு சீக்கு வந்ததற்காக என் பிள்ளைகளைக் குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்என்றெல்லாம் தனக்குத் தானே புலம்பியபடி இருந்தார். க்ளாரா அப்படி சொன்ன தினத்திலிருந்து பேரனின் வரவிற்காக காத்திருக்கும் இந்த நிமிடம் வரை அவள் சொன்னதை எண்ணி அவரது மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது.

   ராசு தன் இரண்டு கூட்டாளிகளோடு வந்த போது மணி மூன்றாகியிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் பார்த்ததை விட  உயரமாகியிருந்தான். அவனைப் பார்க்க பார்க்க பாட்டிக்கு நெஞ்சு நிறைந்து போனது. கையோடு பாட்டிக்கு பிடித்த இறைச்சி பிரியாணியை வாங்கி வந்திருந்தான் ராசு. அதோடு தான் பொரித்த கோழியையும் சேர்த்து, பேரனுக்கும் அவன் நண்பர்களுக்கும் பறிமாரி, தானும் அவர்களோடு அமர்ந்துக் கொண்டார் பாட்டி.  நெடுநாட்கள் கழித்து பேரனோடு கதைகள் பேசியபடி சாப்பிட்டது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

   ராசு உணவிற்கு பின் சற்று நேரம், வெளிநாட்டில் அவனது வாழ்கை முறையைப் பற்றியும், காரசாரமான உணவிற்காக ஏங்கிப் போன தன் நாவைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தான். பாட்டிக்கு அவனது பேச்சு வியப்பாயிருந்தது. அவன் படும் சிரமங்களை எண்ணி மனம் வருந்தினார். அவனுக்கு சீக்கிரம்  திருமணம் செய்து வைத்துவிட்டால் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். 

   பிறகு ராசு பக்கத்து வீட்டின் கதவைத் தட்டி க்ளாராவிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, சற்று நேரம் பேசினான்.  கோபத்தோடு பேசத் தொடங்கிய க்ளாரா  சற்று நேரத்தில் அமைதியடைந்தவளாக மாறினாள்.

   பின் ராசு, கூட்டாளிகளின் உதவியோடு  அதிகப்படியாக வளர்ந்திருந்த செடிகளின் கிளைகளை கழித்துவிட்டான். இருளடைந்திருந்த அந்த தாழ்வாரம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சத்தை அனுமதித்தது. குப்பைகளை வாரி சுத்தம் செய்ததும் பளிச்சென்று சுத்தமாகிப் போனது. பின் தொட்டிகளை இரண்டிரண்டாக அடுக்கி அவை அடைத்திருந்த இடத்தின் நீளத்தைக் குறைத்தான். இப்போது நடைபாதை அடைப்புகளற்று துப்புரவாக இருந்தது. பாட்டி ஆர்வமாய் செடிகளைத் தடவிக் கொடுத்தார். கண்கலங்க பேரனைக் கட்டிக் கொண்டார்.

ராசு கிளம்பும் முன்,

பாட்டி! எந்த பிரச்சனையாக இருந்தாலும் இனி அவங்க என்கிட்டயோ அம்மாகிட்டயோ பேசுவாங்க, நீங்க வீணா கவலைப்படாதீங்க! எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க! நான் பார்த்துக்கறேன்!” என்றான். பல வருடங்களுக்கு முன், சிறுவனாய் இருந்த ராசுவிற்காக பள்ளி ஆசிரியரிடம் பேசி, பின் அவனைச் சமாதானப்படுத்த தான் பயன்படுத்திய இதே போன்ற வார்த்தைகள் நினைவிற்கு வந்தன, பாட்டிக்கு. செடிகள் முடிவெட்டிக் கொண்ட சிறு குழந்தைகள் போல உற்சாகமாய் இலைகளை அசைத்துக் கொண்டிருந்தன. சரோஜா பாட்டிக்கு பேரனை நினைக்கையில் பெருமையாக இருந்தது.

முத்தமிழ் விழா 2013ல் இரண்டாம் பரிசு பெற்ற கதை