புதன், 3 அக்டோபர், 2012

55- வார்த்தை கதை (வேலைச் சுமை)

 
இவற்றைப் பற்றிய அறிமுகம் சுஜாதா எழுதிய 'சிறு சிறு கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து கிடைத்தது. மொத்தம் 55- வார்த்தைகளில் கதை இருக்க வேண்டும். இது தான் முக்கிய விதி!

மற்ற விதிமுறைகள்:

1. கதையின் தலைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் அதுவும் ஏழு வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. எண்களும் கணக்கில் உண்டு 45, 500, 3458 போன்றவையெல்லாம் வார்த்தைகளே!

3. நிறுத்தக் குறிகள் (பஞ்சுவேஷன்ஸ்)வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளப்படாது.


சுஜாதாவின் வரிகள் மீண்டும் இங்கே -

‘55 வார்த்தைக் கதை எழுதுவதில் ஒரே ஒரு சௌகரியம் . தினம் ஒரு 55-கதை எழுதலாம். ஏதாவது ஒன்று தேறும், 365 மோசமான 55-கதைகளை யாராலும் எழுத முடியாது.’

என்னுடைய 55-கதை முயற்சி, என் மற்றொரு வலைபக்கமான
http://rithikadarshini.blogspot.com  ல் எழுதியது  
மறுபதிவாய்  இங்கே . . .



வேலைச் சுமை


சுந்தரேஸ்வரன் தன் ‘டை'யைத் தளர்த்திக் கொண்டார். இவருக்காக வெளியே பலர் காத்திருந்தனர். இவர் புகழ் பாடவும், குறைகளை முறையிடவும் வந்திருந்தவர்களைப் பார்க்க சலிப்பாய் இருந்தது. தனக்கிருக்கும் வேலைச் சுமைக்கு, இரண்டு யுகங்களாவது விடுமுறை தேவையென அவருக்குப் பட்டது.

இப்போது நேரமாகிவிட்டது. வாசலில் இருந்தவர்களை விலக்கி, அவசரமாய் வெளியேறினார். மதுரையின் குறுகிய தெருக்களை அதிவேகமாய் தன் வாகனத்தில் கடந்து, கோயிலின் உள்ளே சென்றார். தீபாராதனை காட்டப்பட்டது.

அதனை ஏற்றுக் கொண்டு அனைவரையும் ஆசீர்வதித்த சுந்தரேஸ்வரனின் கழுத்திலிருந்த ‘டை’ நெளிந்தது.