சனி, 20 மார்ச், 2021

தங்க இளவரசியின் ஆலயம்

      Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது.



     Pangeran என்ற வீரன் ஜாவானிய அரசனின் சகோதரன். இவன் அரசவையில் நாட்டியமாடும் பெண்ணின் மீது காதல் கொண்டு அவளை ரகசிய திருமணம் செய்து கொள்கிறான். அவர்களுக்கு பிறக்கும் பெண் தான் Radin Mas Ayu. தங்க இளவரசி என்ற பெயருக்கேற்ப அழகான குழந்தையாக அவள் இருக்கிறாள். 
     அவர்களுடைய இந்தக் காதல் ஜாவானிய அரசனுக்குத் தெரிய வருகிறது. Pangeran-ஐ எதிரிகளுடன் போரிட அனுப்பிவிட்டு Radin Mas Ayu குடியிருக்கும் வீட்டை தீயிட்டு கொளுத்த ஆணையிடுகிறான். அதில் Radin Mas Ayuவின் தாய் இறந்துவிடுகிறாள். பணிப்பெண் ஒருத்தி Radin Mas-உடன்  தப்புகிறாள். இவ்விஷயம் தெரியவரும் போது சினம் கொள்ளும் Pangeran ஜாவானிய அரச குடும்பத்துடன் தனக்கிருக்கும் தொடர்பை அறுத்துக் கொண்டு  Radin Mas-உடன் நாட்டை விட்டு வெளியேறுகிறான்.                                      
                                      

     அவர்கள் சிங்கப்பூரின் தெலோக் ப்ளாங்கா பகுதிக்கு வந்து இங்கு எளிமையாக வாழ்கிறார்கள். ஒருநாள் Pangeran ஜாவானிய அரசகுலத்தைச் சேர்ந்தவன் என்பது சிங்கப்பூர் சுல்தானுக்குத் தெரிய வருகிறது. அவனை அரசவைக்கு அழைத்து மரியாதை செய்கிறான். இதன் வழி ஜாவானிய அரசனுக்குத் தன் சகோதரனின் இருப்பிடம் தெரிய வருகிறது. அவன் சிங்கப்பூர் சுல்தானின் மகளை Pangeranக்கு திருமணம் செய்து வைக்கிறான்.

     அழகான பெண்ணாக வளர்ந்து நிற்கும் Radin Masஐத் தன் வழியிலிருந்து அகற்ற முயலும் Pangeran-இன் புது மனைவி அவளைத் தனது தமக்கையின் மகனான Tengku Bagus-க்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயல்கிறாள். அதற்குத் தடையாக வரும் Pangeran-ஐ Tengku Bagus கத்தியால் குத்த வருகிறான். தந்தையைக் காக்கும் நோக்கில் இடையில் புகுந்து கத்திக் குத்தை ஏற்றுக் கொண்டு இறந்து போகிறாள் Radin Mas. அவள் நினைவாக அமைதியான சூழலில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

வியாழன், 18 மார்ச், 2021

ரப்பர் மரமும் அது காத்து நிற்கும் பழைய மசூதியும்

செம்பாவாங் கடற்கரைக்கு அருகிலிருக்கும் Andrews avenue சாலை வழியாகச் சென்றால் பாதி வழியில் தனியார் வீடுகள் மறைந்து மரங்கள் அடர்ந்த சாலையான Jln Mempurong வருகிறது. தொடர்ந்து நடந்தோமென்றால் அச்சாலையின் இறுதியில் Masjid Petempatan Melayu Sembawang என்றழைக்கப்படும் இம்மசூதியைப் பார்க்கலாம்.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை இந்தப் பகுதி இஸ்லாமியர்களின் கல்லறைகளைக் கொண்டிருந்திருக்கிறது. 1900 களின் துவக்கத்தில் அவை அகற்றப்பட்டு ரப்பர் தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 1940களில் அந்த ரப்பர் தோட்டமும் அகற்றப்பட்டு செம்பவாங் கடற்படைத் தளத்தில் வேலை செய்த மலாய் ஊழியர்களுக்காக ஒரு சிறு  குடியிருப்பு இப்பகுதியில் உருவானது. பின்னர் 1963 ல் இந்த மசூதி கட்டப்பட்டது. அதன் வாயிலில், இந்த ரப்பர் மரம் அங்கு ஒருகாலத்திலிருந்த ரப்பர் வனத்தின்் கடைசி சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. 

இந்த மரத்தை வெட்ட முயன்ற போதெல்லாம் அதை செயல்படுத்த நினைத்தவர்களுக்கு ஏதோவொரு பாதிப்பு ஏற்பட்டதாம். அந்த மசூதியை இந்த மரம் காத்து நிற்கிறது என்று மலாய்க்காரர்கள் நம்புகிறார்கள்.