வெள்ளி, 26 டிசம்பர், 2014

மழைக் கவிதை


மழையைப் பற்றிய

அனுபவக் கவிதையை

நான் எழுதுவதற்குள்

என்னைப் பற்றி

எழுதிச் சென்றுவிட்டது

மழை.

வியாழன், 25 டிசம்பர், 2014

ஆலம் விழுது


 

   செடிகளின்  வேர்களுக்கு சுடுநீரை ஊற்றிவிடப்போவதாக க்ளாரா மிரட்டிய தினத்திலிருந்தே சரோஜா பாட்டிக்கு தூக்கம் கொள்ளவில்லை. அன்றிரவு, செம்பருத்திகளையும் ரோஜாக்களையும் அபரிதமாய் கொண்டிருந்த செடிகள் அவரிடம் வந்து தம்மைக் காப்பாற்றுமாறு  கண்ணீரோடு முறையிடுவதாகக் கனவு கண்டார். அவற்றைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் நேரம் கொதிநீரைக் கொண்டு வந்து கொட்டினாள் க்ளாரா. திடுக்கிட்டு விழித்த போது, சுடுநீர் தன் மீது தெறித்தாய் தோன்றிய உணர்வு மிக உண்மையானதாக இருந்தது, அவருக்கு. அது கனவு என்று அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. வெளியே சென்று செடிகளின் பாதுகாப்பை உறுதி செய்துக் கொண்ட பின்னும் உறக்கம் வரவில்லை.

   அன்றிலிருந்து மூட்டு வலி, முதுகு வலி போன்ற உடல் உபாதைகளெல்லாம் அவருக்கு ஒன்றுமற்றதாய் போய்விட்டது. நடுநிசியில் மெல்லிய சத்தம் கேட்டாலும் சட்டென்று சன்னல் வழியாக எட்டிப் பார்க்கத் தொடங்கினார். அவருக்கு தான் செடிகளை தொட்டியோடு தூக்கிக் கொண்டு போய் எங்கோ ஒளித்து வைப்பதாகவும், வைத்த இடத்தை மறந்து போய் அலைவதாகவும் கனவுகள் வரத் துவங்கின. கனவுகள் பூதங்களாய் பயமுறுத்தத் துவங்கிய நேரத்தில், ஆஸ்திரேலியாவிலிருந்து தொலைபேசியிருந்த  பேரன் ராசுவிடம் அதைப் பற்றிச் சொன்ன போது அவருக்கு அழுகை வந்தது. இந்த சனிக்கிழமை வருவதாய் சொல்லியிருந்த அவன் ஏதோவொரு தீர்வைக் தன்னோடு நிச்சயமாய் கொண்டு வருவான் என்று நம்பினார்.

   இரண்டு வருடங்களுக்கு  முன் ஆஸ்திரேலியா சென்ற பேரன், படிப்பு முடிந்து சிங்கப்பூருக்கு வரப்போகிறான் என்ற செய்தியே பாட்டிக்கு தெம்பையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. சரோஜா பாட்டிக்கு ராசுவின் மீது தனி வாஞ்சை உண்டு. தாயும் தந்தையும் வேலைக்குச் சென்ற காரணத்தால் பன்னிரெண்டு வயது வரை இவரிடம் முழுமையாக வளர்த்த பேரன் அவன். கடந்த இரண்டு வாரங்களைப் பேரன் வரப்போகிற அன்றைய தினத்தை நோக்கியே நெட்டித் தள்ளி வந்திருந்தார் சரோஜாப் பாட்டி. அவனுக்காக ஏதேனும் சமைக்க வேண்டும் என்று அவர் மனம் பரபரத்தது.


தனக்காக ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் தானே எல்லாவற்றையும் வாங்கி வருவதாகவும் அவன் சொல்லியிருந்தான். இருந்தாலும் அவருக்கு மனசு கேட்கவில்லை. பேரனுக்கு பிடித்த கோழியையாவது வாங்கிப் பொரிக்க வேண்டும் நினைத்துக் கொண்டார்.

   ஆகவேண்டிய வேலைகளை கவனிப்பதற்காக எழுந்த பாட்டி மூக்குக் கண்ணாடிக்காக தன் பக்கத்தில் இருந்த மேசையைத் தடவினார். அங்கே இல்லாமல் போகவே கண்களைச் சுருக்கி பார்த்தபடி, சலவை இயந்திரத்தின் பக்கத்தில், குளிர்பதன பெட்டிக்கு மேலே, சாப்பாட்டு மேசையின் மேலே, நாற்காலியில் என்று கவனமாய் கைகளால் தடவிக் கொண்டே வந்தார். கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்ததில் லேசாக தலையைச் சுற்றுவது போல இருந்தது. மின்விசிறியைப் போட்டுவிட்டு சற்று நாற்காலியில் அமர்ந்தார்.

   இப்போதெல்லாம் அவரால் முன்போல தொடர்ந்து வேலை செய்ய முடிவதில்லை. மயக்கமா தூக்கமா என்று புரியாத ஒரு சுழலுக்குள் அவரது மனமும் உடலும் அவ்வப்போது சென்று விடுகிறன. ஏதோ ஒரு கதையில் ராட்சஸன் ராஜகுமாரியைக் கடத்திச் சென்றது போல யாரோ தன்னை இந்த உலகத்திலிருந்து மாயாலோகத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் பின், தான் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் அவர் கற்பனை செய்துக் கொள்வார்.  அடிக்கடி ஆட்கொண்ட இந்த மனப்பெயர்ச்சி சோர்வைத் தருவதாக இருந்தது. தன் சொந்த வேலைகளை முடிக்க அது ஒரு தடையாக இருந்தது. இதனால் ஒரு சாதாரண வேலை கூட மலையாகத் தோற்றமளித்தது. அதை முடிப்பதற்குள் திணறிப்போனார்.

    முன்பெல்லாம் அவர் சுறுசுறுப்பிற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. பிள்ளைகள் வளர்ந்து கல்லூரிக்கும் வேலைக்கும் சென்ற பின் இவர் தனக்கென்று வேலைகளைத் தேடிக் கொண்டார். செம்பாவாங்கிலிருந்த பாலர் பள்ளி ஒன்றில் துப்புரவாளர் வேலையை முடித்து விட்டு அதே மூச்சில் ஜீராங் ஈஸ்ட்டில் ஒரு அலுவலகத்தை சுத்தம் செய்ய கிளம்பிவிடுவார். அதையும் முடித்து விட்டு கொஞ்சம் கூட அலுத்துக் கொள்ளாமல் வீட்டிற்கு வந்து பிள்ளைகளுக்கு உணவு பறிமாரி, மறுநாளைக்கான கறி சமைத்து, வீட்டையும்  துப்புரவாக துடைத்து அதன் பின் தான் படுப்பார். இது போல கிட்டத்தட்ட பதிநான்கு வருடங்கள். நாடி தளர்ந்து போன இன்றைய நாட்களில் அதை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்வார்.

   பெண் மற்றும் பிள்ளைகளோடு போய் இருக்க அவர் என்றும் விரும்பியதில்லை. முடிந்தவரை மற்றவற்களுக்கு உதவியாக இருக்க வேண்டும், முடியாவிட்டால் உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும் என்பது அவரின் கொள்கை. உடம்பு முடியாவிட்டால் இப்போது குளிக்காமல் கொள்ளாமல் கூட ஒரு நாள் ஓய்வாக படுத்துக் கொள்ளலாம். அடுத்தவர் வீட்டில் அப்படி இருக்க முடியுமா! சில இரவுகளில் சிறுநீரை அடக்க முடியாமல் போய் விடுவது உண்டு. அப்போது கொஞ்சமாய் நனைந்து போகும் துணிகளால் அவமானப்பட நேருவதில்லை. மற்றவருக்காக கவலைப்பட தேவையற்ற இந்த வாழ்க்கை வாழ்வதற்கு சுலபமாய் இருந்தது. என்ன, பேசுவதற்கு தான் ஆட்கள் யாரும் இல்லை!

   அப்படியொன்றும் போட்டியிட்டுக் கொண்டு இவரை தன்னுடன் வைத்துக் கொள்ள பிள்ளைகள் யாரும் ஆசைப்படவும் இல்லை. வாரம் ஒருமுறை தொலைபேசுகிறார்களே அது போதாதா! அவர்கள் பிள்ளை குட்டிகளை வைத்துக் கொண்டு தன் புறாக் கூண்டுக்குள் நிம்மதியாய் இருந்தால் போதும் என்று தன்னை சமாதானப் படுத்திக் கொள்வார். கொஞ்சம் ஏமாந்தால் இப்படி தான்! ஏதேதோ நினைப்புகள் ஆளை விழுங்கி விடுகின்றன. ‘இன்று உட்கார நேரமில்லை!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே நாற்காலியிலிருந்து எழுந்துக் கொண்டார்.

   உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திரிக்கும் போதே பூட்டுக்கு பூட்டு வலித்தது. கூடத்தைக் கடந்து குசினிக்குள் நுழையும் போது மூச்சு வாங்கியது. சற்று நிதானித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்துவிட்டதில் அடுப்பு பிசுக்கேறிப் போயிருந்தது. கண்ணாடியை சற்று மறந்து, அதை சுத்தப் படுத்துவதில் முனைந்தார். அடுப்பைத் துடைத்து முடிப்பதற்குள் கை வலியெடுத்துக் கொண்டது. அந்த வேலையை முடித்துவிட்டு நாற்காலியில் மறுபடி சென்று அமர்ந்துக் கொண்டார்.

   சாலையில் சென்ற தீயணைப்பு வண்டி அமைதியைக் கிழித்துக் கொண்டு அலறியது. அந்த சத்தம் தூரம் சென்று தேய்ந்த பின் நிசப்தம் ஆக்கிரமித்துக் கொண்டது. முன்பைவிட சப்தமின்மையின் வீர்யம் இப்போது  அதிகமாகி விட்டதாய் தோன்றியது அவருக்கு. இப்போதெல்லாம் அவரால் இந்த தனிமையைத் தாங்க முடிவதில்லை. பிள்ளைகள் ஓடி விளையாடிய வீடு, எப்போதும் கூச்சலும் குழப்பமுமாய் இருந்த வீடு, யாருமற்றிருப்பது பொட்டற்று வெறிச்சிடும் நெற்றி போல காட்சியளித்தது.

   குழந்தைகள் சிறுவர் சிறுமியராய் இருந்தவரை வேலைகள் சரியாய் இருந்தது சரோஜாவுக்கு. ஒரு புத்தகம் படிக்கக் கூட அவருக்கு நேரமிருக்காது. காலையில் பள்ளிக்குச் சென்ற மகள் திரும்பி வரும் நேரம் மகன் கிளம்ப தயாராகிக் கொண்டிருப்பான். இதில் கைக்குழந்தையாய் சிறியவன் வேறு. கணவர் மற்றும் மகன் வீடு திரும்பும் நேரத்திற்குள் மற்ற வேலைகளை முடிக்கவேண்டும். ஆரம்பகாலங்களில் இவர்கள் வீடு திரும்பும் நேரம் நோக்கியே அவரது வாழ்க்கை நகர்ந்தது. சரோஜா என்றும் வேலைக்கு அஞ்சியவர் இல்லை. இழுத்து செருகிக் கொண்டு ஆரம்பித்தால் வேலைகள் சட் சட்டென்று முடிந்துவிடும்.

   பிள்ளைகள் ஒவ்வொருவராய் திருமணம் முடிந்து சென்று, பின் கணவரும் இறந்த பின் கவிந்த இந்த சப்தமின்மை தான் அவருக்கு தாங்கமுடியாததாக இருந்தது. சேவாவுக்கு ஆளை வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். கண்ணாடி வைத்த இடத்தை அவரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. வர வர மறதி வேறு அதிகமாகிக் கொண்டு வருகிறது. ‘ஒலியில் சொல்லும் ராயல் ஃபுட்ஸ்சை முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் அவர்.

   கடைக்குச் செல்வதற்காக வீட்டின் கதவைத் திறந்த போது, வாசலிலிருந்த செடிகள், காய்ந்த இலைகளை உதிர்த்துவிட்டு பளிச்சென்று காட்சியளித்தன. இவை வந்த நேரம் இவர் வாழ்க்கை சற்று மாறிப் போயிருந்தது. நட்டநடுவில் இருந்த செம்பருத்தி செடி தான் முதலில் வந்தது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டிற்கு முன் அவளுடைய தோழி கொடுத்தது. அப்போது அது இவ்வளவு தூரம் கிளைத்திருக்கவில்லை. அன்புக்கு ஏங்கும் சோனிக் குழந்தையைப் போல ஒடுங்கிப் போயிருந்தது. அதற்கு, தண்ணீர்விட்டு, பேசி, கொஞ்சி, அதை பாசத்தோடு தடவி கொடுக்க சட்டென்று வளர்ந்துவிட்டது. அதற்கு அடுத்து இருக்கும்பட்ரோஸ் இவராக கேட்டு வாங்கி வந்தது. நடுவே இருக்கும் தக்காளிச் செடி இரண்டு மாதங்களுக்கு முன் மகள் வயிற்று பேரன் சிவா கொண்டு வந்தது. பள்ளியில் பாட சம்பத்தமாக விதைகளை விதைத்தவன் அதை இங்கே வைத்துவிட்டு போயிருந்தான். பாட்டியின் சற்றே சோம்பேறியான செல்லக் குழந்தை அது. முதல் இலை வெடித்து கிளம்ப கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் பிடித்தது. இளம்முடிகளைக் கொண்ட ஒரு குழந்தையின் பிஞ்சு உடலை நினைவுபடுத்தும் அதன் இளம் காம்புகளைத் தடவி தடவிப் பார்ப்பாள் பாட்டி. அவ்வப்போது அதை கோபத்தில் திட்டினாலும் அவள் மனம் பொறுக்காது. பாட்டியின் கொஞ்சலும் கெஞ்சலும் அதற்கு புரிந்தது போல இருந்தது, அதன் வளர்ச்சி. இப்படியாக ஏதோவொரு காரணத்தோடு  சேர்ந்து போன செடிகளின் வரிசை இப்போது மின் தூக்கிவரை நீண்டுவிட்டது.

   காலையில் எழுந்தவுடன் ரோஜா பாட்டி நேரம் செலவழிப்பது இந்த செடிகளோடு தான். பழுத்திருக்கும் இலைகளை நாசூக்காய் கிள்ளி. அழுக்கடந்திருக்கும் இலைகளை சுத்தமான துணியால் துடைத்து, கண்பட்டுவிடும் என்று  பூக்களை உள்பக்கமாய் வளைத்து விட்டு, பின் தேவையான அளவு தண்ணீர் தெளித்தோ ஊற்றியோ விடுவார். இவற்றின் காரணமாகவே அவர் வெளியே எங்கும் தங்குவது கிடையாது. கொப்பும் கிளையுமாக செழித்து வளர்ந்திருக்கும் இந்தச் செடிகள் பாட்டிக்கு இதம் தருவதாய் இருந்தன.

   அவருக்கு நிம்மதியைக் கொடுத்த அவை, அக்கம்பக்கத்தாருக்கு தொல்லையாய் அமைந்தது தான் பிரச்சனையாகிப் போனது. முதலில் கிளைகள் வெளிச்சத்தை மறைப்பதாய் புகார் செய்தாள் பக்கத்துவீட்டுப் க்ளாரா. அதன்பின் மற்றொரு நாள், அவளது பிள்ளை சீக்கில் படுத்ததற்கு அதிலிருந்து கிளம்பிய கொசுக்களே காரணம் என்று கோபத்தோடு கத்திய போது தான் அதன் வேர்களில் சுடுநீர் ஊற்றப் போவதாக சொன்னாள். அதைக் கேட்ட பாட்டியின் உயிர்க்குலை ஆடிப் போயிற்று.

குழந்தைகளாய் வளரும் இந்த பிஞ்சுகள் துடித்துப் போய்விடாதோ! அவள் பிள்ளைக்கு சீக்கு வந்ததற்காக என் பிள்ளைகளைக் குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்என்றெல்லாம் தனக்குத் தானே புலம்பியபடி இருந்தார். க்ளாரா அப்படி சொன்ன தினத்திலிருந்து பேரனின் வரவிற்காக காத்திருக்கும் இந்த நிமிடம் வரை அவள் சொன்னதை எண்ணி அவரது மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது.

   ராசு தன் இரண்டு கூட்டாளிகளோடு வந்த போது மணி மூன்றாகியிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் பார்த்ததை விட  உயரமாகியிருந்தான். அவனைப் பார்க்க பார்க்க பாட்டிக்கு நெஞ்சு நிறைந்து போனது. கையோடு பாட்டிக்கு பிடித்த இறைச்சி பிரியாணியை வாங்கி வந்திருந்தான் ராசு. அதோடு தான் பொரித்த கோழியையும் சேர்த்து, பேரனுக்கும் அவன் நண்பர்களுக்கும் பறிமாரி, தானும் அவர்களோடு அமர்ந்துக் கொண்டார் பாட்டி.  நெடுநாட்கள் கழித்து பேரனோடு கதைகள் பேசியபடி சாப்பிட்டது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

   ராசு உணவிற்கு பின் சற்று நேரம், வெளிநாட்டில் அவனது வாழ்கை முறையைப் பற்றியும், காரசாரமான உணவிற்காக ஏங்கிப் போன தன் நாவைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தான். பாட்டிக்கு அவனது பேச்சு வியப்பாயிருந்தது. அவன் படும் சிரமங்களை எண்ணி மனம் வருந்தினார். அவனுக்கு சீக்கிரம்  திருமணம் செய்து வைத்துவிட்டால் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். 

   பிறகு ராசு பக்கத்து வீட்டின் கதவைத் தட்டி க்ளாராவிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, சற்று நேரம் பேசினான்.  கோபத்தோடு பேசத் தொடங்கிய க்ளாரா  சற்று நேரத்தில் அமைதியடைந்தவளாக மாறினாள்.

   பின் ராசு, கூட்டாளிகளின் உதவியோடு  அதிகப்படியாக வளர்ந்திருந்த செடிகளின் கிளைகளை கழித்துவிட்டான். இருளடைந்திருந்த அந்த தாழ்வாரம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சத்தை அனுமதித்தது. குப்பைகளை வாரி சுத்தம் செய்ததும் பளிச்சென்று சுத்தமாகிப் போனது. பின் தொட்டிகளை இரண்டிரண்டாக அடுக்கி அவை அடைத்திருந்த இடத்தின் நீளத்தைக் குறைத்தான். இப்போது நடைபாதை அடைப்புகளற்று துப்புரவாக இருந்தது. பாட்டி ஆர்வமாய் செடிகளைத் தடவிக் கொடுத்தார். கண்கலங்க பேரனைக் கட்டிக் கொண்டார்.

ராசு கிளம்பும் முன்,

பாட்டி! எந்த பிரச்சனையாக இருந்தாலும் இனி அவங்க என்கிட்டயோ அம்மாகிட்டயோ பேசுவாங்க, நீங்க வீணா கவலைப்படாதீங்க! எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க! நான் பார்த்துக்கறேன்!” என்றான். பல வருடங்களுக்கு முன், சிறுவனாய் இருந்த ராசுவிற்காக பள்ளி ஆசிரியரிடம் பேசி, பின் அவனைச் சமாதானப்படுத்த தான் பயன்படுத்திய இதே போன்ற வார்த்தைகள் நினைவிற்கு வந்தன, பாட்டிக்கு. செடிகள் முடிவெட்டிக் கொண்ட சிறு குழந்தைகள் போல உற்சாகமாய் இலைகளை அசைத்துக் கொண்டிருந்தன. சரோஜா பாட்டிக்கு பேரனை நினைக்கையில் பெருமையாக இருந்தது.

முத்தமிழ் விழா 2013ல் இரண்டாம் பரிசு பெற்ற கதை


 

விற்பனையாளன்


கூடையைச் சுமந்தபடி

என் வீட்டைக் கடந்த போது

“தேங்கோ தேங்கோ. . .!” என்று

சத்தமாய் அவ னுதிர்த்த வார்த்தைகளிலிருந்து

புறப்பட்ட தேங்காய்கள் இரண்டும்

மோதி உடைந்ததில் தெறித்த சில்லுகள்  

தெருவெங்கும் சிதறிக் கிடந்தன.




 

சனி, 15 நவம்பர், 2014

அப்பாவுக்காக . . .



      நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் . . . பி.பி. ஸ்ரீநிவாஸின் குரல் காற்றில் மிட்டாயைப் போல கரைந்து வந்தது.

ஏண்டா! எவ்வளவு தைரியம் இருந்தா வீட்ல சொல்லாம படத்துக்கு  போவ . . .’

மழை கூரையின் மேல் தடதட வென்று விழுந்துக் கொண்டிருந்தது.

அப்பா வேணாம்பா . . .!’

ஐயோ! விட்டுடுங்க! அவன் எங்கிட்ட சொல்லிட்டு தான் போனான்

      மழைச்சாரல் உள்ளே வராமல் இருப்பதற்காக வாசலில் தடுப்பாய் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தகரத்தையும் மீறி வீட்டின் மண் தரை நனைந்து போயிருந்தது.

ஆயியும் மவனும் சேர்ந்துகிட்டு என்னை ஏமாத்துறீங்களா?’

அப்பா! அம்மாவ அடிக்காதீங்கப்பா! இனி நான் இப்படி போக மாட்டேன்!’

கண்களின் ஈரத்தினூடே யாரோ நிற்பது மசமசப்பாய் தெரிந்தது.

சங்கர் நின்றுக் கொண்டிருந்தான். ஆஸ்திரேலியாவில் இருக்கும் மகன். இவன் எப்போது இங்கே வந்தான்!

பொன்னையாவுக்கு குழப்பமாய் இருந்தது.

இறந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்குள் நினைவுகளைக் கொண்டுவர பிரயர்த்தனம் தேவையாய் இருந்தது.

சங்கர் சற்றே சதைப்போட்டிருந்தான்.

அடுத்த நொடி குழப்பம் மறந்து போய் சந்தோஷமானார்.

சங்கரு... எப்பாய்யா வந்தீங்க! அப்பாவ பாக்கணும்னு இப்பயாவது தோணுச்சா?”

பேசுவதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது அவருக்கு.

சங்கர் வந்து இரண்டு நாள் ஆகியிருந்தன. அவர் அவனை வரவேற்பது இது மூன்றாவது முறை.

     சங்கருக்கு கண்கள் கலங்கின. படுக்கையை ஒட்டியிருந்த நாற்காலியில் அமர்ந்து அப்பாவின் மெல்லிய கைகளை பிடித்துக் கொண்டான். தோல் சொர சொரவென்று நீர்பசையின்றி இருந்தது. கறுப்புத் தோலின் சுறுக்கங்களினூடே எலும்பின் வடிவம் சன்னமாய் தெரிந்தது. அம்னீஷியா வந்த பின் உடல் நன்றாய் மெலிந்து போயிருந்தது.

     ஒரு காலத்தில் இரவும் பகலும் ஓடியாடி வேலை செய்த அப்பா இவரில்லை என்று தோன்றியது. அப்போதெல்லாம் அப்பா வெள்ளை வேட்டி சட்டையைத் தான் அணிவார். நெற்றியில் பளிச்சென்று ஒரு திருநீறு கீற்று இருக்கும்.

     அப்பா எப்போதும் தன் உடைகளை தானே துவைத்துக் கொள்வார்.  அவர் தன் துணிகளைத் துவைப்பதில் ஒரு நேர்த்தி இருக்கும். காலை எழுந்த உடன் கட்டி சோப்பு போட்டு தேய்த்து துணிகளை ஊற வைத்துவிடுவார். பத்து மணி வாக்கில் குளியலறையில் கால்களை குத்த வைத்து அமர்ந்து, சட்டைகாலரில் ஆரம்பித்து, மெல்ல மெல்ல இணுக்கு விடாமல் ஒரு குழந்தையை தேய்ப்பது போல மென்மையாய் தேய்த்து, இரண்டு முறை அரை வாளி நீரில் அலசி, பிழிந்து, சுருக்கம் போக உதறி அதை நிழலில் உலர்த்துவார். ஏனோ உடைகளை வெயிலில் உலர்த்துவதில் அவருக்கு பிடித்தமில்லை.

     காய்ந்த பின் சுறுக்கங்களை விரல்களால் நீவி மடித்து வைப்பார். அலமாரியில் வைக்கப்பட்டிருக்கும் அவரது வேட்டி சட்டைகள் தொட்டு பார்ப்பதற்கு குழந்தையின் கன்னம் போல மெத்தென்று இருக்கும். இப்போது பிள்ளையின் வசதிக்காக லுங்கிக்கு மாறியிருந்தார்.

சாப்பிட்டியாப்பு!”

ஆச்சுப்பா!”

எப்படிப்பா போகுது வேலையெல்லாம்!”

ஐயோ தாத்தா! இதையே எத்தன முறை கேட்ப!” என்றான் அங்கே விளையாடிக் கொண்டிருந்த அண்ணன் மகன் சுதாகர்.

     பொன்னையாவின் கண்களில் குழப்பம் தெரிந்தது. முன்னர் கேட்டது நினைவின்றி, வெற்று நினைவுகளை ஆராய்ந்து பார்த்தார். இதைப் பார்த்த சங்கருக்கு வருத்தமாய் இருந்தது.      இப்படி கேட்பதால் அவருக்கு குழப்பமே ஏற்படும் என்பதை பாலா ஒப்புக் கொள்வதில்லை. ‘இவரை நீ கூட வச்சிருந்து பார்த்தா தான் தெரியும்!’  என்று வார்த்தைகளால் முகத்திலடித்து விடுவான்.

உனக்கு தெரியாது சங்கர்! அன்றைக்கு சோறும், மீன் சம்பாலும், அப்ப தான் சாப்பிட்டுட்டு உட்கார்ந்திருந்தார்.  அரை மணி தான் இருக்கும்! ராகவன் மாமா வந்து பேசிகிட்டு இருக்கார்.

பார் ராகவா! காலையிலேயிருந்து இன்னும் எனக்கு சாப்பாடே போடல! வயசாயிட்டா ரொம்ப நாள் உசிரோட இருக்கக் கூடாதுப்பா! பொண்டாட்டி எறந்துட்டா கூடவே நாமளும் போயிடனும் . . . முன்னல்லாம் பொண்டுகள் உடன் கட்டை ஏறுவாங்களே! அந்த மாதிரின்றார் சங்கர். எவ்வளவு சங்கடமாய் இருக்கு தெரியுமா? அன்னிக்கு எல்லாம் மாலா அழுதுகிட்டே இருந்தா!’

சங்கரால் புரிந்துக் கொள்ள முடிந்தது!

இப்போது அப்பாவின் முகம் கூம்பிப் போயிருந்தது.

எதுக்குமே லாயக்கி இல்லாமல் போயிட்டம்பா!” என்றார் அறையின் மூலையை வெறித்தபடி.

அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா!”

மனுஷனோட நினைவுகளுக்கு சாவு வந்துட்டா, பெறகு உயிர் இருந்தும் பிரயோசனமில்ல! எல்லாமே செத்துப் போயிடுது!”

அப்பா! நான் கூட தான் அப்பப்ப மறந்து போறேன்! அதுக்கெல்லாம் வருத்தப் பட்டா முடியுமா!”

நாம இருக்கறது யாருக்கும் தொல்லையா இருக்கக் கூடாதுப்பா!”

யாருக்கும் எந்த தொல்லையும் இல்லை. வந்துட்டேன்ல்ல! நான் பார்த்துக்கறேன். நீங்க தூங்குங்க!”

சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டார்.

உள்ளேயிருந்து கோழிக் குழம்பு வாசம் வந்தது.

மூடிய கண்களுக்குள் புடவைத் தலைப்பில் கைகளைத் துடைத்தபடி அவருடைய அம்மா வந்தாள்.

சாப்பிட வாப்பா! ‘ என்றாள். இவருக்கு பசித்தது. இருந்து கண்களைத் திறக்க சக்தியற்று அப்படியே கிடந்தார்.

அப்பா ஓய்வு எடுக்க விட்டு வெளியே வந்தான் சங்கர். 

     இவனை பள்ளிக் கூடத்திற்கு கையைப் பிடித்து அழைத்துப் போன அப்பாவை, தூங்கும் போது கிருஷ்ணன் கதை சொன்ன அப்பாவை, விடுமுறை நாட்களில் பட்டம் விட கற்றுக் கொடுத்த அப்பாவை, சைக்கிளில் உட்கார வைத்து சினிமாவிற்கு அழைத்துப் போன அப்பாவை நினைத்தபடி கோப்பி ஷாப்பில் உட்கார்ந்திருந்தான்.

     அவன் ஆஸ்திரேலியாவில் நல்ல வேலையிலிருந்தான். சிறுவயது முதலே அவனுக்கு வெளிநாட்டு படிப்பின் மீது, வேலையின் மீது ஒரு மோகம் இருந்தது. ஏன் அதன் மேல் ஒரு வெறி என்று கூட சொல்லலாம்! அப்பாவிற்கு பிள்ளையை வெளிநாடு அனுப்புவதில் அவ்வளவாய் விருப்பமில்லை. இருந்தாலும் அவனுடைய விருப்பத்தில் தலையிடாமல் கௌரவமாய் ஒதுங்கிக் கொண்டார்.

     அங்கே இரண்டு வருடம் படித்து முடித்து, இப்போது தான் வேலையில் சேர்ந்திருந்தான். திருமணம் முடிந்தபின் குடும்பத்தோடு அங்கேயே தங்கிவிடும் எண்ணம் இருந்தது. இப்போதிருக்கும் நிலையில் அப்பாவை அங்கே அழைத்துச் சென்று வைத்துக் கொள்ள முடியாது! அழைத்துச் சென்றாலும் அவரால் சமாளிக்க முடியுமா என்று சந்தேகமாய் இருந்தது.

     தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல், தன்னால் இயன்றதை பிள்ளைகளுக்கு செய்து, தங்களை வளர்த்த அப்பாவை இந்த நிலையில் பார்ப்பது அவனுக்கு வேதனையைக் கொடுத்தது.

     அப்பா, வேலை முடிந்து திரும்பி வரும் போது சாப்பிட ஏதோவொன்று இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்ததில்லை! இவனும், அப்பா      உள்ளே நுழையும் போது கையில் என்ன வாங்கி வருகிறார் என்பதை தான் முதலில் பார்த்திருக்கிறான். இவனுக்கும் பாலாவிற்கும் யார்  முதலில் அவர் கையிலிருக்கும் பொட்டலங்களை வாங்குவது என்ற போட்டி நடக்கும்.  பரோட்டாவோ, மீ கொரீங்கோ, மட்டன் வறுவலோ ஏதோவொன்று பொட்டலத்திற்குள் இருக்கும். பிள்ளைகள் இருவரும் சாப்பிடுவதைப் பார்த்து திருப்தியடையும் அப்பாவாகவே இருந்தார் அவர். அவர்கள் வாயில் ஒட்டியிருக்கும் உணவுத் துணுக்குகளைத் தன் மேல் துண்டினால் மெல்ல துடைத்துவிடுவார்.

     அவருக்கு நீர்விட்ட சாதமும் பச்சைமிளகாயும் போதும். கேட்டால் இதுதான்யா உடலுக்கு நல்லது என்பார். அவரது சம்பளத்தில் இவர்களுக்குச் செய்தது எவ்வளவு பெரிய விஷயம் என்று இப்போது அவனுக்குப் புரிந்தது.

     இப்போது அப்பாவிற்கு ஏதேனும் வாங்கிப் போக வேண்டும் என்று தோன்றியது. ஒரு பிரியாணி பொட்டலத்தை வாங்கிக் கொண்டான். அஜீரணக் கோளாறு ஏற்படுமோ என்று ஒரு கணம் யோசித்தான்! பின் பரவாயில்லை என்று அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான். 

அறைக்குள் நுழைந்த போது, ஜன்னலை வெறித்துக் கொண்டிருந்த அப்பாவின் பார்வை சட்டென்று இவன் கையிலிருந்த பொட்டலத்திற்கு தாவியது.

வாப்பா சங்கர்! எப்ப வந்த?” கண்கள் பொட்டலத்தின் மீதே இருந்தன.

அவருக்கு விளக்கிச் சொல்ல பிரயர்த்தனப்படாமல்

இப்பதாம்பா!” என்றான் சங்கர்.

என்னப்பா வாங்கிட்டு வந்த?’ என்றார் குழந்தையின் ஆர்வத்தோடு. பொட்டலத்தைப் பிரித்து, சாதத்தை  விரல்களால் நன்கு பிசைந்து கொடுக்க ஆசையோடு சாப்பிட்டார். கொஞ்சம் சாப்பிட்டானதும் போதும் என்று சைகை காட்டினார். தண்ணீரைக் குடித்தபின் அவர் வாயை துவாலையால் துடைத்து விட்டான் சங்கர்.  சாப்பிட்டு முடித்த திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது.

ஒரு முறை நாசி லெமாக் சாப்பிடணும்ப்பா. நம்ம வீட்டுக்கு கீழ ஒரு மலாய் கடை இருக்குமே, ஞாபகம் இருக்கா! இலையில வச்சு கட்டிக் கொடுப்பானே!” என்றார்.

சரிப்பாஎன்றான் சங்கர்.

தலையணையில் சாய்ந்தபடி, கால்களை நன்றாய் நீட்டிக் கொண்டார்.

ஏம்பா! அத்தைய நேத்து அதிகமா ஏசிட்டேன், கோபமா இருப்பாளா? அவளப் போயி பார்த்துட்டு வருவோமா?”

இருபது வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்திருக்க வேண்டும்! அத்தை இறந்து இரண்டு வருடங்களாகி விட்டது! நீண்ட காலத்துக்கு முந்தைய நினைவுகள் மறக்காமல் இருக்க, அண்மைய நினைவுகள் தொலைந்து போவது ஆச்சரியமாக இருந்தது.

சரிப்பாஎன்றான்.

இதையெல்லாம் வேண்டுமென்றே செய்வதாக அண்ணி மாலா நினைத்துக் கொள்கிறார்.

கழிவறைக்கு போகணும்னா ஒழுங்கா போகணுமில்லையா! இல்லை இவரையாவது கூப்பிடலாமா! ரெண்டுமில்லாம வாசலிலேயே அசுத்தம் பண்ணி வச்சுட்டார்! ஒருமெய்ட்எடுத்துட்டாக் கூட பரவாயில்ல! அதுக்கும் வர வருமானம் பத்தாது! என்ன செய்யறது!’ என்றாள் அவள்.

அண்ணியின் பொறுமை எல்லையை மீறிக் கொண்டிருக்கிறது என்று தோன்றியது. அவளையும் குறைச் சொல்ல முடியாது. சலிப்பாய் பேசினாலும் வேலைகளைச் செய்துக் கொண்டு தான் இருக்கிறாள்.

இதெல்லாம் தெரிந்து செய்யவில்லை!” என்றார் மருத்துவர்.

இந்த வியாதியே இப்படித்தான். பழசெல்லாம் தேதியோட பளிச்சுன்னு ஞாபகம் இருக்கும். இப்ப நடக்கறடெல்லாம் சுத்தமா மறந்து போயிடும். இது இவங்களுக்கு இரண்டாவது குழந்தைப் பருவம் மாதிரி! கூட இருக்கறவங்க தான் பத்திரமா பொறுமையோட பார்த்துக்கணும்என்றார்.

     அப்பா மருத்துவருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த கடிகாரத்தை பார்த்தபடி, ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தார். டாக்சியில் செல்லும் போது அப்பாவின் கண்கள் கலங்கியிருந்தன. சன்னலுக்கு வெளியே மழையில் நனைந்திருந்த சாலைகளைப் பார்த்தபடி வந்தார். அவ்வப்போது எச்சிலை விழுங்கிக் கொண்டார்.

     டாக்சியை விட்டு இறங்கும் போது என்ன நினைத்தாரோ, என்ன புரிந்துக் கொண்டாரோ, “என்னால யாருக்கும் எந்த பிரச்சனையும் வேண்டாம்! ஏம்ப்பா என்னை ஏதாவது இல்லத்துல சேர்த்துடேன்!” என்றார். அவர் குரல் நடுங்கியதில் வார்த்தைகள் தெளிவின்றி கேட்டது.

     ஒருமுறை தீபாவளி கொண்டாட்டத்தின் போது அப்பாவுடன் இவன் லிட்டில் இந்தியா சென்றிருந்தான். மின்விளக்குகளின் வெளிச்சத்தில் விதவிதமான பொருட்களை விற்ற கடைகளையும், மனிதர்களையும் பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டே வந்தான். அப்பாவின் கையை பத்திரமாய் பிடித்துக் கொண்டே வந்தவன் எப்படியோ கையைத் தவறவிட்டிருந்தான். 

     அந்த நிமிடம் அவ்வளவு பெரிய இடத்தில், உயரமான மனிதர்களுக்கிடையே மூச்சு முட்டுவது போல இருந்தது. சற்றுமுன் வண்ணமயமாய் தோன்றிய கடைகள் அப்போது இவனை விழுங்கக் காத்திருக்கும் பிரம்மாண்ட அரக்கர்கள் போல தோன்றின. இனி அப்பாவைப் பார்க்கவே முடியாதோ என்ற பயம் இவனை பிடித்துக் கொண்டது.

வென்று அழத் தொடங்கிய போது, எங்கிருந்தோ விரைந்து வந்த அப்பா அவனை தூக்கி வைத்துக் கொண்டு,

தம்பி இதோ இருக்கேம்பா அப்பா! எங்கேயும் போகலை!’ என்றார். பயத்தில் அவர் கழுத்தை கெட்டியாய் கட்டிக்கொண்டான் சங்கர். அதன் பின் வீடு வந்து சேரும் வரை அவனை கீழே இறக்கியே விடவில்லை, அப்பா.

இப்போது அப்பா அந்த நிலையில் இருப்பதாய் தோன்றியது!

உடல் குறுகி, தலைக் குனிந்து, நடுங்கும் விரல்களை இறுக்க மூடிக் கொண்டு நிற்கும் அவரைப் பார்க்கும் போது, தவறு செய்துவிட்ட சிறுவனைப் போல இருந்தார்.

மனம் சட்டென்று கனத்துப் போனது!

நான் இருக்கேம்ப்பா உங்ககூட! தைரியமா இருங்க!” என்றபடி அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

     அவர் கை இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தது. அப்பாவின் பயங்களைப் போக்கி ஒரு குழந்தையைத் தேற்றுவது போல தேற்ற வேண்டும் என்று தோன்றியது. அவனுக்கு தன்னைத் தோளில் சுமந்து சென்ற பழைய அப்பாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.

     இரவெல்லாம் தூக்கம் வரவில்லை, சங்கருக்கு. அப்பாவை நன்றாக பார்த்துக் கொள்வது என்பது தன்னால் மட்டுமே தனித்து செய்யக் கூடிய செயல் இல்லை என்று புரிந்தது. இங்கேயே வந்துவிட்டால் கூட, வேலைக்கு போகும் நேரமெல்லாம் அவரை எங்கே விடுவது!

எண்ணங்கள் மனதில் ஓட, புரண்டு புரண்டு படுத்தான். பின் எழுந்து சன்னல் அருகே சென்று நின்றுக் கொண்டான். வெளியே நிலா தனிமையில் உலா வந்துக் கொண்டிருந்தது.

     மிகவும் யோசித்த பின், முதலில் ஒரு திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். பின் அப்பாவைப் பார்த்துக் கொள்ள என்று மட்டுமே ஒரு பணிப்பெண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு முடிந்தவரை அப்பாவுடனேயே பொழுதைப்போக்க வேண்டும் என்று முடிவு செய்துக்கொண்டான். அதன் பின் தான் தூக்கம் வந்தது அவனுக்கு.

மறுநாள் காலை,

அப்பா! நான் இனி உங்ககூடவே இருக்கப் போறேன்!”

அப்ப உன்னோட வேலை?”

இங்க அதைவிட நல்ல வேலை கிடைக்கும்ப்பா!”

நெசமாவாய்யா!”

அப்பாவின் கண்கள் சந்தோஷத்தில் பனித்தன.

உண்மையா! இனி நீங்க எதுக்கும் பயப்பட வேணாம்! நீங்க என்னை பார்த்துகிட்டதுக்கும் மேல, உங்கள நான் பார்த்துப்பேன்!”

அப்பாவிற்கு எவ்வளவு புரிந்தது என்று தெரியவில்லை! ஆனால் அவர் சிரித்த சிரிப்பில் ஒரு நிம்மதி தெரிந்தது.

இந்த நிம்மதியை விட வெளிநாட்டு வேலை ஒன்றும் பெரிதில்லை என்று நினைத்துக் கொண்டான் சங்கர்.

(முத்தமிழ் விழா 2012ல் இரண்டாம் பரிசு பெற்ற கதை)

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

வரிக் கவிதைகள்

1
வாழ்க்கை
உளியால் ஓங்கி
செதுக்கியபடி இருக்கிறது,
சிலையாகிக் கொண்டிருக்கிறேன் . . .

2
நான் எழுதிய கவிதை
நகைச்சுவையாய் இருக்கிறது என்று
நீங்கள் பின்னூட்டமிட்ட போது
அதன் வார்த்தைகளில் ஒட்டியிருந்த
நகைத்தன்மை உதிர்ந்துவிட்டது....
முரண் நகைக் கவிதையை
இயற்ற உதவிய உங்களுக்கு
நன்றி!


3
பன்னிரெண்டு வார்த்தைகளில் கவிதை வேண்டுமாம்
சொற்களை வடித்துக் கொண்டிருக்கும் போதே
முற்றுப்புள்ளியின் குறுக்கீட்டால்
முடிந்துவிட்டது கவிதை.


வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

தமயந்தியம்மாள் இல்லம், 6, பிச்சாடனார் தெரு


தமயந்தியம்மாள் இல்லம் நான்கு தலைமுறையினைப் பார்த்துவிட்டது. இல்லம் என்றால் முழு வீடும் இல்லை, பின்னால் இருக்கும் ஓடு வேய்ந்த சமையல் அறையும், அதை ஒட்டியிருக்கும் தளம் போட்ட பூஜை அறையும் மட்டும். அவை இரண்டும் தான் தியாகராஜனின் தாத்தா காலத்தில் இருந்தன. இப்போதைய சாப்பிடும் அறை அப்போது கூடமாக இருந்தது. தியாகராஜனின் அப்பா தன் காலத்தில் அதனுடன் புது கூடம் ஒன்றை இணைக்க, முன்னது கூடம் என்ற பட்டத்தை இழந்து அறையாகிப் போனது.
அந்த அறையில் தான் பழைய பச்சை வண்ண டிரங்கு பெட்டி வைக்கப்பட்டிருக்கும். திறக்கும் போது ரசக்கற்பூர வாடையடிக்கும். அதனுள்ளே பட்டு வேஷ்டியிலிருந்து புதுப் பென்சில் வரை அனைத்தும் இருக்கும். எப்போதாவது சுத்தப்படுத்தப்படும் நேரம், முக்கியத்துவம் குறைந்து போனதால், அதிலிருந்து வேண்டாம் என தூக்கி எறியப்படும் வாழ்த்து அட்டைகள், பழைய டைரி, அடர்ரோஜா வண்ண திருமண பத்திரிக்கைகள் போன்றவை தியாகராஜனுக்கும் அவர் தம்பிகளுக்கும் பொக்கிஷங்கள். தோழர்களிடம் அந்தப் பெட்டியை காட்டி அதனுள்ளிருக்கும் பொருட்களைப் பற்றி பெருமையாய் சொல்லிக் கொள்வார்கள்.
வீட்டைச் சுற்றிலும் முள் காடாக இருந்தது, அப்போது. இருந்தும், வீட்டில் நுழையக் கூடிய பூச்சிகளைப் பற்றிய பயம் இருந்ததில்லை யாருக்கும். அது பாட்டிலும் அது, இவர்கள் பாட்டிலும் இவர்கள் என்று ஒருவர் மற்றவர் வழியில் குறுக்கிடாமல், தன் வழியே சென்று கொண்டிருந்தார்கள். பிள்ளைகளுக்கு பூச்சிகளும் புழுக்களும் விளையாட்டு தோழர்கள். பள்ளி விடுமுறைகளில் பட்டாம்பூச்சிகளின் பின்னே திரிந்தார்கள். மழை நாட்களில் வரும் ரயில் பூச்சிகளைக் குச்சியால் தொட்டு அவை சுருட்டிக் கொள்வதை ஆர்வமாய் பார்த்தார்கள். மரவட்டையை இரண்டாக வெட்டிய பின்னும் அது நகர்வதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். வீட்டின் பின்னாலிருந்த மாமரத்தில் ஏறியிறங்கினார்கள். அருகேயிருந்த இலந்தை மரத்தின் காயை பழுக்கும் முன்னரே பறித்து கடித்தார்கள். அதன் துவர்ப்பு அவர்களின் நாவை உறுத்தவில்லை. இலந்தம் பழம் என்ற பெயரே உண்ண போதுமானதாய் இருந்தது அவர்களுக்கு. தியாகராஜனுடைய அம்மா தினமும் வீட்டை ஒட்டி முளைக்கும் புற்களை செதுக்கியபடி இருப்பாள். செதுக்குவதற்காகவே செய்யப்பட்டது போல உறுதியாக, கருமையின் பளபளப்போடு இருக்கும், அவளுடைய கைகள். வீட்டைச் சுற்றிலும் கட்டை துடைப்பத்தின் தடம் எப்போதும் பதிந்திருக்கும்.
தியாகராஜனுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த அகிலாண்டம், மாமியாரை விட அதிகமாய் வீட்டைப் போற்றினாள். குடிசை வீட்டிலிருந்து வந்திருந்த அவளுக்கு வீட்டின் அருமை தெரிந்திருந்தது. திருமணத்திற்கு முன் வரை, வெயிலின் போது மண் தரையை சாணமிட்டு மெழுகி, மழையின் போது ஒழுகும் இடங்களில் பாத்திரம் வைத்து, அது நிரம்பும் நேரம் மாற்றி பழக்கப்பட்டவள். மழைக்காலத்தின் போதுஈரமான இடங்களைத் தவிர்த்து, உலர்ந்திருக்கும் கொஞ்சம் இடத்தில் சாக்குப்பைகளை விரித்து, குடும்பமே ஒண்டிக் கொண்டு படுத்திருக்கும் நேரம், அகிலாவின் கனவுகளில் மச்சுவீடு இருக்கும்.
திருமணத்திற்கு பிறகு தளம் போட்ட வீட்டிற்கு வந்தது அவளுக்கு மிக திருப்தியாய் இருந்தது. மாமியாருக்கும் மருமகளுக்கும் பல விஷயங்களில் ஒத்துப் போகாவிட்டாலும், வீடு விஷயத்தில் மட்டும் இருவரும் விட்டுக் கொடுத்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டை யார் சுத்தம் செய்வது என்ற பிரச்சனை அவர்களுக்குள் எழுந்ததேயில்லை. அகிலா மாமியாருக்கு ஒரு படி மேலே போய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டைக் கழுவும் போது சுவர்களையும் சேர்த்து துடைப்பவளாக இருந்தாள். இதில் மாமியாருக்கு மிக பெருமை. அதை வெளிப்படுத்தும் விதமாக எப்போதாவது, ‘சுவத்தை ஒரேடியா தேய்ச்சி எடுத்துடாதடி! கஷ்டப்பட்டு கட்டியது’ என்பாள். தியாகராஜனின் பங்காக இந்த வீடு வந்த போது யாருக்கும் அதில் பெரிதாக ஒன்றும் தோன்றி விடவில்லை.
தியாகராஜனின் பிள்ளைகள் வளரும் போது பழைய அறைகளுக்கு வயதாகி விட்டிருந்தபடியால், மழை நேரம் சுவர்களில் ஈரம் கசியத் துவங்கியது. அடுப்பங்கரை ஓட்டின் இடுக்குகளிலிருந்து தேள்கள் கொட்டத் தொடங்கின. அகிலாவிற்கு இதனால் ஏற்பட்ட மன வருத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. வீடு, தாங்கள் தங்குவதற்கு ஏற்றதாய் இல்லை என்ற எண்ணம் அவளுக்குள் வலுப்பெற்றபடி இருந்தது. தங்கள் காலத்திற்குள் இப்போதிருக்கும் பழைய வீட்டைப் புதுப்பித்து, மேலும் குறைந்தது மூன்று அறைகளாவது கட்டிவிட வேண்டும் என்று நினைத்திருந்தாள் அகிலா. மூன்று பிள்ளைகளின் திருமணத்திற்கு பிறகு ஆளுக்கு ஒரு அறை வேண்டும் தானே என்று நினைத்தாள். வரப்போகும் மருமக்களுக்காக தனித்தனி ஆட்டுரல், அம்மிக்கல் என்று சேர்த்தபடியிருந்தாள். அவங்க என்ன இங்கெல்லாம் வந்து தங்கப் போறாங்க!’ என்ற தியாகராஜனின் வாதமெல்லாம் எடுபடவில்லை.
உச்சி வெயிலில் நிலத்தில் உழுதெடுத்த பணத்தைப் போட்டு மிகப் பெரிய கூடமும் அதிலிருந்து பிரியக் கூடிய இரண்டு அறைகளும், அதற்கு மேலே மச்சுமாய் கட்டினார்கள். பழைய கூடத்தோடுசேர்த்து இப்போது மூன்று அறைகளாகிப் போயிருந்தது. வீட்டிற்கு தன் அம்மாவின் பெயரையே சூட்டி தமயந்தியம்மாள் இல்லம் என்று பெயர் வைத்தார் தியாகராஜன். அவர்கள் தெருவிலேயே மிகப்பெரிய மச்சு வீடாக அது அடையாளப்பட்டுப் போனது.
பொதுவாய் இருட்டியதும் பிச்சாடனார் தெரு ஆண்கள், திண்ணையில் அமர்ந்து நாட்டு நடப்புகளைப் பற்றி பேசுபவர்களாகவும், பெண்கள், சாணியிட்டு மெழுகிய தரையில் அமர்ந்து, தெருச் செய்திகளைப் பகிர்ந்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அந்த சமயம் தெருப்பிள்ளைகள் கண்ணாமூச்சியோ அல்லது கள்ளன் போலீஸ் விளையாட்டையோ விளையாடியபடி இருப்பார்கள். அது போன்ற நேரங்களில்
‘என்ன அகிலா! புள்ளைங்க கல்யாணத்த உங்க வீட்டு கூடத்திலேயே வச்சிடலாம் போல! எம்மாம் பெரிய வீடா கட்டிட்ட!’
என்று சுற்றுபட்ட பெண்கள் ஆச்சர்யத்தோடு சொல்வார்கள். அப்போதெல்லாம் அகிலாவிற்கு பெருமையாய் இருக்கும்.
அதன் பிறகு தெருவில் யார் வீட்டு மஞ்சள் நீராட்டானாலும், கல்யாணமானாலும், வளைகாப்பானாலும் இவர்களுடைய மாடியே பந்திக்கு என்றானது. பல நல்ல விஷயங்கள் நடக்கும் வீடு மங்களகரமான வீடாகத் திகழந்தது. இதில் அகிலாவிற்கு மிக சந்தோஷம். அவள் வழக்கம் போல வீட்டைச் சுற்றி முள் செதுக்கியபடியும், குழந்தையின் வாயிலிருந்து ஒழுகும் பாலைத் துடைத்து விடுபவள் போல் சுவர்களை பார்த்து பார்த்து துடைத்தபடியும் இருந்தாள்.
தியாகராஜனின் மூத்த மகனுக்கு பெண் தேடும் போது பின்னால் கழிவறையும் குளியலறையும் கட்டினார்கள். இருந்தும் மருமகள் வரும் வரை அதை விறகு அடுக்க பயன்படுத்திக் கொண்டார்கள். பட்டிணத்திலிருந்து வந்த பெண் சுமாராய் படித்திருந்தாள். அவளுக்கு சிரமமான வேலைகள் செய்து பழக்கமில்லாததால், தொடர்ந்து சுத்தம் செய்யும் பணி அகிலாவிடமே தங்கிப் போனது. அகிலா அதற்கெல்லாம் சலித்துக் கொள்ளவில்லை. உள் வேலைகளை மருமகளிடம் கொடுத்து விட்டு சுற்று வேலைகளைத் தானே எடுத்துக் கொண்டாள். அவளைப் பொறுத்த வரை வீடு, உயிருள்ள ஒரு அஃறிணையாக, அவளுடைய சுக துக்கங்களை பகிர்ந்துக் கொள்ளும் ஒரு தோழியாக மாறிப் போயிருந்தது.
நான்கைந்து வருடங்களில் இளைய பிள்ளைக்கு டில்லியிலேயும், மற்ற இரு பிள்ளைகளுக்கு சென்னையிலேயும் வேலை அமைந்தது. அதற்கேற்றவாறு அவர்களின் குடும்பங்களும் அங்கங்கே தங்கி விட, தமயந்தியம்மாள் இல்லம் வெறிச்சோடிப் போனது. பின்னாலிருந்த மாமரத்தில் வெயிலோடு அணில்கள் மட்டுமே ஏறியிறங்கியபடி இருந்தன. யாருமற்ற அறைகள், முன்பிருந்தவர்களின் நினைவுகளைத் தம்முள் நிறைத்தபடி வாளாவிருந்தன. சூரிய ஒளி வீட்டில் நுழையவும் வெளியேறவும் முயன்றபடி இருப்பதை பார்த்தவாறு அமர்ந்திருப்பார் தியாகராஜன். மாடியில் வற்றல் பிழிந்தும், காய்ந்தவற்றை அண்டாக்களில் அடுக்கியும், ஊறுகாய்களைப் போட்டு ஜாடிகளில் அடுக்கியும் காலம் தள்ளியபடியிருந்தார் அகிலா. அவர்களின் மனம் முழுக்க விடுமுறையில் ஊருக்கு வரும் பிள்ளை, பேரப்பிள்ளைகளின் வரவை எதிர்நோக்கியபடி இருந்தது.
தொடக்கத்தில் விடுமுறைகள் கலகலப்பாக கழிந்தன. பேரப்பிள்ளைகளின் கூச்சலும் கும்மாளமுமாக வீடு நிறைந்துவிடும். பரம்பரையாய் வந்த பச்சை வண்ண டிரங்கு பெட்டி, பேரப்பிள்ளைகளையும் கவர்ந்தது. நினைத்த போது அதை திறக்கச் சொல்லி உட்கார்ந்துக் கொள்வார்கள். அதனுள் கருப்பு வெள்ளை புகைப்படங்களில் விறைப்பாய் புன்னகைக்கும் இளவயது தியாகராஜனையும், அவரின் தோளை ஒட்டி நின்று கேமராவை உற்று முறைக்கும் அகிலாவையும், தமது தந்தைமார்களையும் ஆவலோடு பார்த்தார்கள். மாமரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடினார்கள். கன்று பால் குடிப்பதை ஆச்சர்யமாய் பார்த்து அதன் கழுத்தைத் தடவிக் கொடுத்தார்கள். அறைக்கு அறை ஓடி, தாவி விளையாடிய அவர்களின் குரல், அவர்கள் சென்ற பிறகும் வீட்டுச் சுவர்களில் எதிரொலித்தபடியிருக்கும்.
அடுத்த சில வருடங்களில் நடுப்பிள்ளை வேலை நிமித்தமாக தன் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சென்று விட, தில்லியிலிருக்கும் பிள்ளையாலும் வருடத்தின் அனைத்து விடுமுறைகளுக்கும் வரமுடியாமல் போனது. பிறகு அனைவரும் ஏதேனும் விசேஷத்தை முன்னிட்டு மட்டுமே ஊரில் சந்திப்பது என்றாகிப் போனது. தந்தையையும் தாயையும் தம்மோடு வந்து தங்கிக் கொள்ளும் படி அழைக்கத் தொடங்கினார்கள் பிள்ளைகள்.
ஆசைப்பட்டு ஒரு முறை சிங்கப்பூருக்கு விமானமேறினார்கள் தியாகராஜனும் அகிலாவும். போன புதிதில் சீனர்களின் முகம் முதற்கொண்டு எல்லாம் பிரம்மிப்பாக இருந்தது அவர்களுக்கு. பல இடங்களைச் சுற்றிப்பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். அந்த நாட்டின் உணவை மட்டும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்கு சென்றாலும் கட்டுச் சோற்றைக் கையோடு கட்டி எடுத்துக் கொண்டார்கள். மற்ற பிள்ளைகளிடம் தொலைபேசியில் தான் பார்த்தவற்றையெல்லாம் வியப்போடு பகிர்ந்துக் கொண்டார்கள்.
ஒரு மாதத்தில் அவர்களுக்கு புது இடத்தின் மீதிருந்த மோகம் குறைந்து போனது. அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்த பின், ஓய்வாக இருந்த நேரத்தில், வீட்டு நினைவு அகிலாவை ஆக்கிரமிக்கத் துவங்கியது. வெட்டாமல் விட்டதால் வளர்ந்த செடிகள் புதராகி வீட்டை விழுங்குவது போலெல்லாம் அவருக்கு கனவுகள் வரத் தொடங்கின. தியாகராஜனுக்கு, வேப்பங்குச்சியைக் பல்லிடுக்கில் கடித்தபடி லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு வெறுங்காலோடு கழனி வரை நடக்காமல் பொழுது விடிந்ததாய் தோன்றவில்லை. பார்க்கும் தமிழர்களையெல்லாம் மடக்கி வைத்து பேசத் தொடங்கினார் அவர். அடுத்த ஒரு மாதத்தை பல்லைக் கடித்துக் கொண்டு தாங்கினார்கள்இருவரும். அதற்கு மேல் முடியவில்லை. ஊரைப் பார்க்க கிளம்பிவிட்டார்கள்.
நாட்கள் செல்ல செல்ல பிச்சாடனார் தெரு மக்கள் இரவு நேரங்களில் வீதியில் அமர்ந்து பேசுவதைக் குறைத்துக் கொண்டார்கள். தொலைக்காட்சி நாடகங்களும், படங்களும் அவர்களின் சந்திக்கும் நேரத்தை விழுங்கத் துவங்கியிருந்தன. வீட்டிற்கு வருபவர்களிடம் கூட இடைவேளை நேரங்களில் மட்டுமே பேசுவது என்பது அவர்களின் வழக்கமாகிப் போனது. தியாகராஜனுக்கும் அகிலாவுக்கும் பொழுதை நெட்டித் தள்ள உதவியாய் இருந்தது தொலைக்காட்சி. அதில் வந்த நெடுந்தொடர்க் கதாப்பாத்திரங்களின் சூழ்ச்சிகளில், தம் பிரச்சனைகளையும் மறந்து, மனதைத் தொலைத்தார்கள் இருவரும். வீட்டு வேலைகளும் முன்பு அளவிற்கு இல்லை இப்போது. அம்மாவின் வசதிக்காக கிரைண்டர் வாங்கித் தந்திருந்தான் நடுப்பிள்ளை. முதலில் பிடிவாதமாக ஆட்டுக் கல்லில் அரைத்துத் தான் சாப்பிடுவோம் என்று இருந்த அகிலாவும் தியாகராஜனும், வயது ஏறஏற உடல் முடியாமல் போனதில், கிரைண்டருக்கு மாறினார்கள். வாங்கி வைத்திருந்த மூன்று ஆட்டுகற்களோடு தன் ஆட்டுகல்லையும் குடம் வைக்கப் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கினார் அகிலா. அம்மிக்கல் மட்டும் பிடிவாதமாய் பயன்பாட்டில் இருந்தது.
அகிலா மூட்டு வலியால் சிரமப்பட்ட போது, ஓரிரு அறைகளைப் பூட்டி வைத்தால் அம்மாவிற்கு வேலை குறையும் என்று மூத்த மகன் சொல்லப் போக, அன்று இரவு முழுவதும் அகிலா அழுதபடி இருந்தார். வீட்டைப் பராமரிக்க தன்னால் முடியாது என்பதை கடைசி வரை அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. மாரடைப்பில் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னர் கூட, சாப்பாட்டு அறையின் சுவர்களில் இருந்த விரிசல்களை, எங்கிருந்தோ ஒரு கை சிமெண்ட் வாங்கி வந்து, பூசியபடியிருந்தார்.
அகிலாவின் காலத்திற்கு பிறகு தான் வீடு சமாளிக்க முடியாத ஒரு பொருளாகிப் போனது. இவ்வளவு பெரிய வீட்டை யார் கவனிப்பது என்ற பிரச்சனை எழுந்தது. அதை தினமும் பெருக்குவதே பெரும்பாடாயிருந்தது. காசிற்காக வேலை செய்தவர்கள் கூட அதன் பிரம்மாண்டத்தை அலுத்துக் கொண்டார்கள். களையெடுக்காமல், பெருக்காமல் விடப்பட்ட மண் தரையில் சிறு கற்களும் மணலும் காலை உறுத்தத் துவங்கின. வீட்டைச் சுற்றிலும் பூண்டுச் செடிகள் உயரமாய் வளரத் துவங்கியிருந்தன.
மனைவியின் நாட்களுக்குப் பிறகு தியாகராஜன், தனிமையைப் விரட்ட, தில்லியில் சில நாட்களையும் சென்னையில் சில நாட்களையும் கடத்த முயற்சித்தார். ஆனால் அவரின் மனம் தன் ஊரைத் தவிர வேறு எதிலும் ஒட்டவில்லை. அதனால் தன் அந்திம காலத்தை, தான் பாடுபட்டு கட்டிய வீட்டின் சுவர்களையும், வாங்கி வைக்கப்பட்டிருக்கும் அம்மி கற்களையும் தடவியபடி கழித்துக் கொண்டிருக்கிறார். வெளியூருக்குச் செல்லும் வழியில் இருக்கும் கிராமங்களிலுள்ள பெரிய வீடுகளைப் பார்க்கும் போதெல்லாம் அவருள்ளிருந்து பெருமூச்சு கிளம்புகிறது.
தற்போது தன் பழைய பொலிவையெல்லாம் உதிர்த்துவிட்ட கூடாய் நிற்கிறது தமயந்தியம்மாள் இல்லம். காற்று மட்டுமே அதன் அறைகளில் உலாவிக் கொண்டிருக்கும் அரூபக் கதைகளை வாசித்தபடி, அதற்கு சாட்சியாய் வீட்டிற்குள் அலைந்துக் கொண்டோ திண்ணையில் படுத்துக் கொண்டோ இருக்கும் கிழவரைத் தழுவிச் செல்கிறது. இப்போதும் அந்த தெருவாசிகள் அதில் வசித்த மனிதர்களைப் பற்றி நினைத்தபடியே தான் அந்த வீட்டைக் கடக்கிறார்கள்
திண்ணை (4/ 8/ 2014)

ஞாயிறு, 25 மே, 2014

ஒளி தேடும் விட்டில் பூச்சி


 
      ஒன்று அம்மாவைப் போல கோதுமை நிறத்தில் இருந்திருக்கலாம் இல்லையென்றால் நூடுல்ஸ் போல சுருண்டு கிடக்கும் இந்த முடியாவது, நீளமாய், தொடுவதற்கு தேங்காய் நார் போல இல்லாமல், மெத்தென்று இருந்திருக்கலாம். இதையெல்லாம் தான் மாற்ற முடியாது. சரி! உடம்பையாவது குறைக்கலாமென்றால் அதுவும் முடியவில்லை. பட்டினி கிடந்தாலும் குறைவேனா என்கிறது அது. கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்க்கவே சங்கடமாயிருந்தது ஈஸ்வரிக்கு.

     முக ஜாடையில் தான் நடிகை அருந்ததியை ஒத்திருப்பதாய் இரண்டு வருடங்களுக்கு முன் ஊரிலிருந்து வந்த அத்தை சொல்லியிருந்தார். அப்போதிலிருந்து,  அந்த நடிகையைப் பற்றி கேலியான சித்திரமே மக்கள் மத்தியில் இருந்தாலும், அவர் அழகாய் இருப்பதாய் ஈஸ்வரிக்கு தோன்றியது. அது வரை அந்த நடிகையின் மீது இல்லாத அக்கறையை அதன் பிறகு காட்டத் தொடங்கினாள் அவள். அந்த நடிகையைப் போலவே சிரித்து, அவரைப் போலவே கண்கள் மலர பார்த்து, அவரைப் போலவே தன் நடையுடை பாவனைகளை மாற்றிக் கொள்ளத் துவங்கியிருந்தாள். இவை சற்றே மிகையாகிவிட தோழிகளின் கேலிக்கும் ஆளானாள். அதைப் பற்றியெல்லாம் அவள் பெரிதாய் கவலைப்படவில்லை. தன்னை உள்ளுக்குள் அந்த நடிகையாகவே பாவிக்கத் தொடங்கியிருந்தாள்.

     கண்ணாடியின் முன்பு நிற்கும் போதெல்லாம் அந்த நடிகையோடு தன்னை ஒப்பிட்டு நோக்கத் தொடங்கினாள் ஈஸ்வரி. அப்படி பார்க்கும் போதெல்லாம் அவரைப் போல மெலிதான உடலும், வெண்மையான தோலும் தனக்கு இல்லை என்ற உண்மை இவளது ஆற்றாமையை அதிகரித்தது. அந்த நடிகை குண்டாகிவிட்டாலாவது பரவாயில்லை என்று இப்போதெல்லாம் தோன்றத் தொடங்கிவிட்டது அவளுக்கு.

     மூச்சை பிடித்து வயிற்றை உள்ளிழுத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள். இப்போது சற்று பரவாயில்லை என்று தோன்ற தன் பள்ளிப்பையை எடுத்துக் கொண்டு,

அம்மா நான் வரேன் என்றபடி கிளம்பினாள்.

பத்திரம்டி!” என்றாள் அம்மா வேலைக்கு கிளம்பியபடியே.

     கற்பனையில் தனக்குத் தானே மனதிற்குள் பேசியபடி  வகுப்பினுள் நுழைந்தாள் ஈஸ்வரி. அதுவரை உரக்க பேசியபடி இருந்த  மாணவிகள் சட்டென்று அமைதியடைந்ததாய் தோன்றியது அவளுக்கு. அனைவரும் தன்னைத் தான் பார்க்கிறார்களோ! சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்படி யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவரவர் தன் தோழியரோடு பேசிக் கொண்டிருந்தார்கள். தனியே அமர்ந்திருந்த மாணவிகள் கையிலிருந்த புத்தகத்தில் ஒன்றியிருந்தார்கள்.

     ச்சே!’ என்று உதட்டை இறுக்கிக் கொண்டாள். திரும்பிப் பார்க்கக் கூட முடியாத அளவிற்கு தான் கோரமாய் இருக்கிறோமோ!’ இந்த எண்ணம் ஈஸ்வரிக்குள் சுய பச்சாதாபத்தைத் தோற்றுவித்தது. மனதை, கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தில் செலுத்த முயன்றாள்.

 

     இரண்டு வருடங்களுக்கு முன்வரை இது போன்ற எண்ணங்கள் ஈஸ்வரியினுள் எழுந்ததில்லை. தொடக்கநிலை ஆறு வரை வகுப்பில் முதல் ஐந்து மதிப்பெண்களுக்குள் வந்துவிடுவாள் அவள். அதனால் அனைவருக்கும் அவள் மீது மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆசிரியர்கள் சட்டென்று அழைக்கும் பெயரும் அவளுடையதாகவே இருக்கும். இதன் காரணமாக அனைவரும் தோழமையோடே பழகினர். மற்றவர்களுக்குத் புரியாத பாடத்தைச் சொல்லிக் கொடுத்ததில் சில மாணவர்களின் பெற்றோர்களும் கூட இவளை அறிந்திருந்தனர்.

     பள்ளியிறுதிப் பரீட்சையில் ஈஸ்வரி அதிக மதிப்பெண்கள் பெற்றதிலும், அவளுக்கு நல்ல பெண்கள் பள்ளியில் இடம் கிடைத்ததிலும் இவளுடைய பெற்றோர்களுக்கு மிகப் பெருமை. இந்தப் பரிட்சைக்காகவே சென்ற வருடம் வேலைக்குப் போவதை நிறுத்தியிருந்த அவளுடைய தாயார், அதன் பிறகு மறுபடி வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.

     புதுப் பள்ளிக்கு வந்ததிலிருந்து தான் ஈஸ்வரிக்கு தன்னைப் பற்றி தாழ்வான அபிப்ராயம் ஏற்படத் தொடங்கியிருந்தது. இங்கே அவளால் சராசரி மதிப்பெண்களே எடுக்க முடிந்தது. பத்தோடு பதினொன்றாக ஆனபின் தான் தன் அழகைப் பற்றிய பிரக்ஞை அவளுள் ஏற்படத் தொடங்கியது. சாதாரண மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகள் கூட சந்தோஷமாய் இருப்பதற்குக் காரணம் அவர்கள் அழகாய் இருப்பது தான் என்று நினைத்தாள். கண்ணாடியின் முன்பு நிறைய நேரம் செலவு செய்யத் தொடங்கினாள்.

 

     தனக்கு ஆண் நண்பர்கள் இருப்பதாய் மற்றவர்களிடம் ஈஸ்வரி சொல்லத் தொடங்கியது அப்போதிலிருந்து தான். அப்படி சொல்வதன் மூலம் மற்றவர்களின் கவனத்தை சுலபமாய் ஈர்க்க முடிந்தது. தோழனோடு எங்கெங்கெல்லாம் சென்று வந்தாள் என்பதைக் கற்பனையில் விவரிக்க, அதைக் கேட்பதில் மற்ற பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். அவளைச் சுற்றியும் ஒரு நட்பு வட்டம் உருவானது.

************

      இன்னிக்கி சாயங்காலமா! என்னால கண்டிப்பா முடியாதுல்லா... என்னோட ஃப்ரெண்ட் என்னை கொஸ்வே பொயிண்ட்ல்ல பார்க்கறதா சொல்லியிருக்கான். நாங்க ரெண்டு பேரும் இன்னிக்கு படத்துக்குப் போறோம். போன வாரத்திலிருந்தே போகணும்னு  நெனச்சிகிட்டு இருக்கோம்.  இன்னிக்கு கண்டிப்பா முடியாது! சாரில்லா!” என்ற ஈஸ்வரியின் கண்கள் மேற்கூரையைப் பார்த்தபடி கனவில் மிதந்து கொண்டிருந்தன.

ஹேய்! இதப் பாரேன்! இவன் யாரு? புதுசா?” என்றாள் மீனா.

ஏற்கனவே இவனைப் பற்றி தான் சொல்லியிருக்கேனே! தினகரன்... ஞாபகம் இல்லையா?”

...!”   என்றவாறு செல்வியைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள் மீனா. ஆண் நண்பர்கள் என்று ஈஸ்வரி அவ்வப்போது சொல்லும் ஆட்களின்  எண்ணிக்கை அந்தப் பெண்களின் இதழ்களை கீழ் நோக்கி வளைய வைத்தது.

ஏய்! இவ சொல்றது ஒருவேள உண்மையா இருக்குமோ!”

நீ வேற போன மாசம் குணாவைப் பத்தி சொன்னா! இன்னிக்கு தினகரன் நாளைக்கு இந்த பேரு கூட அவளுக்கு நெனப்பு இருக்காது!

ச்சே! ச்சே! இப்படியெல்லாம் ஒருத்தர கிண்டல் செய்யறது தப்பு!” என்றாள் கவிதா.

உருவத்தப் பார்த்து யாருல்லா கேலி செஞ்சா! இவளவிட கறுப்பானவங்க இல்லையா, இல்லை குண்டானவங்க தான் இல்லையா! சும்மா இருந்தா ஏன் பேசப்போறோம்? அவ சொல்ற கதை தான் நம்ம சிரிக்க வெக்குது!

ஒருவேளை அவ சொல்றது உண்மையா இருந்தா! பாவம் அவ...”

ஹேய்! இவளுக்கு எல்லாத்தையும் நிரூபிச்சுக் காட்டணும். சரி அவ தான் போயிட்டாளே, நாம மெக் டொனால்ட்ஸீக்குப் போவோம் வா.”

     சிக்கன் பர்கரைக் கொரித்துக் கொண்டிருந்த போது சட்டென்று மீனாவிற்கு பொறி தட்டியது. தன் மடிக்கணினியைப் பிரித்தவள் முகநூல் (பேஸ் புக்) வலைப்பக்கத்திற்கு சென்றாள்.

பாருல்லா அவளோட குட்டை ஒரு மாசத்துல உடைக்கிறேன்.” என்ற படி கவின் என்ற பெயரில் புதிதாய் ஒரு பக்கத்தைப் பதிவு செய்து கொண்டு,ஹாய்! உன் நீ உன் சுவற்றில் எழுதியிருக்கும் வாசகங்கள் என்னை கவர்கின்றன. மறுக்காமல் என்னை தோழனாக ஏற்றுக்கொள் என்று தகவல் அனுப்பினாள்.

****************

     ஈஸ்வரிக்கு கற்பனை நண்பர்களை விட கவின் மீது இப்போது அதிக ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வளவு நாட்களாக அவள் மனதிலிருந்த சொற்களைக் கொட்டுவதற்கு ஒரு காது மட்டுமே அவளுக்கு தேவையாயிருந்தது. வேலையிலிருந்து இரவு ஏழு மணிக்கு மேல் திரும்பும் அம்மாவாலும், பத்து மணிக்கு வரும் அப்பாவாலும் அதைக் கொடுக்க முடியவில்லை. அதனால் ஆண் நண்பர்களைப் பற்றி மனதில் தோன்றிய கதைகளைச் சொல்லி பிறரின் கவனத்தைக் கவர்ந்து வந்தாள்.  இப்போது முகநூல் அவளுக்கு அடைக்கலம் கொடுத்தது. கவின் அவளுடைய பக்கத்தில் எழுதும் பரிவு மிகுந்த வார்த்தைகள், அவளை மற்ற நிகழ்வுகளிலிருந்து முகநூலை நோக்கி இழுத்தது. அவள் தன் மகிழ்ச்சியையும் வருத்தங்களையும் கவினுடன் பகிர்ந்துக் கொள்ள துவங்கினாள். தோழிகளின் கற்பனைக்கேற்ப கவினும், ஈஸ்வரியின் சுவரில் எழுதப்பட்ட தகவல்களும் மெருகேறியபடியிருந்தன.

     தோழிகளிடம் கவினைப் பற்றி சொல்லாமல் இருக்கமுடியவில்லை ஈஸ்வரியால். அவன் தன் மீது எடுத்துக் கொண்டுள்ள அக்கறையைப் பெருமையாய் பறைசாற்றிய படியிருந்தாள். இவளது தலையைக் கண்டதுமே அவர்கள் சிரிப்பை அடக்கிக் கொள்வது அவள் கண்களுக்குப் படவில்லை. தன்னை ஒருவன் மதித்துப் பேசுவதே அவள் சிந்தையை நிறைத்திருந்தது. இதன் காரணமாக பாடங்களிலிருந்து ஈஸ்வரியின் கவனம் விலகியது. அன்று அவளைத் தமிழாசிரியை தனியே வந்து பார்க்கச் சொல்லியிருந்தார். பயத்துடனே சென்ற ஈஸ்வரியை

ஈஸ்வரி உனக்கு என்ன ஆச்சு. வீட்டுப் பாடம் செய்யறதே இல்லை! நேத்து வெச்ச தேர்வுல ரொம்ப மோசமா செஞ்சிருக்கே? வீட்டில ஏதாவது பிரச்சனையா?” என்றார்.

ஈஸ்வரியால் பதில் பேச முடியவில்லை. பேசாமல் தலை கவிழ்ந்தபடி நின்றாள்.

நல்லா படிக்கிற பிள்ளை நீ! இப்படி குறைவான மதிப்பெண் எடுக்கறது வருத்தமா இருக்கு. நான் வேணும்னா உங்க அம்மாகிட்ட பேசட்டுமா?” என்றார்.

வேணாம் ஆசிரியை, கொஞ்சம் நாளா உடம்பு சரியில்லை. இனி மேல் இப்படி செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க ஆசிரியை!” என்றாள் ஈஸ்வரி அவசரமாக.

     படிப்பிலிருந்து கவனம் சிதறுவது அவளுக்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது. இனி கவினுடனான இந்த நட்பு தன் படிப்பை கெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.

     ஒரு மாதமாய் தொடர்ந்த நட்பின் முடிவில் அன்று கவின் அவளைப் பார்க்க ஜீராங் ஈஸ்ட் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு வருமாறு அழைத்திருந்தான்.  ஈஸ்வரிக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

******************

     பெருவிரைவு ரயில் நிலையத்தில் கிட்டத்தட்ட இரண்டுமணிநேரம் காத்திருந்துவிட்டு  ஏமாற்றத்தோடு வீடு திரும்பிய ஈஸ்வரிக்கு கணினியைத் திறந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. அவளது பக்கம்  அவதூறு செய்திகளால் நிரம்பியிருந்தது.  பலர் அவளுக்கு ஏற்பட்டிருந்த ஏமாற்றத்தை கிண்டல் செய்து, மிகக் கடுமையான சொற்களால் அவளைச் சாடியிருந்தார்கள். அவள் தங்கள் வலையில் சிக்கி ஏமாந்த செய்தியை விலாவரியாக பதிவேற்றியிருந்தார்கள்.

     ஈஸ்வரியால் இதைத் தாங்க முடியவில்லை. இரவெல்லாம் அழுதபடியிருந்த அவளால் அம்மாவின் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. என்னவென்று சொல்வது! இப்படி ஒரு ஈனச் செயலில் சிக்கிக் கொண்டதைச் சொல்வதற்கு பதில் தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. பள்ளிக்கூடத்தில் மற்றவர்களின் முகத்தில் விழிப்பதற்குக் கூட பயமாக இருந்தது அவளுக்கு.

     மறுநாள் வகுப்பில் நுழையும் போது அனைவரும் அவளையே பார்ப்பதை உணர்ந்தாள். அனைவருக்கும் செய்தி தெரிந்திருக்க வேண்டும் வகுப்பு தொடங்குவதற்கு முன்னால் தமிழாசிரியரிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது. அவருக்கும் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்தாள். தன் மேல் அக்கறைக் கொண்டு ஒரு வாரத்திற்கு முன் அவர் சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.

     தடைகள் உடைந்து அவர் முன் ஓவென்று கதற, ஆசிரியர் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டார். நடந்தது அனைத்தையும் பொறுமையாய் கேட்ட அவருக்கு, ஈஸ்வரிக்கு ஏற்பட்டிருந்த தாழ்வுணர்ச்சியே அனைத்திற்கும் காரணம் என்று புரிந்தது.

செத்திடலாம் போல இருக்கு ஆசிரியை!” என்று அழுத ஈஸ்வரியை

ச்சீ! என்ன வார்த்தை சொல்ற? உனக்காக உங்கம்மா அப்பா எவ்வளவு சிரமப்படறாங்க! யோசிச்சு பாரு! ரெண்டு பேரும் வேலைக்கு போறது உன்னோட தேவைகளை நிறைவு செய்யறதுக்காக! அவங்கள பெருமைப்பட வெக்கறத விட்டுட்டு சாவறேன்னுகிட்டு!”

நீ அழகா இல்லைன்னு யார் சொன்னாங்க! சரி அப்படியே அழகா இல்லைன்னா தான் என்ன? வாழ்கையில சாதிச்ச எவ்வளவு பேர் அழகா இருந்திருக்காங்க?”

எவ்வளவு நல்லா படிக்கிற பிள்ளை நீ! உன்னோட முழு கவனத்தை உனக்கு பலமாய் இருக்கிற படிப்பில காட்டு. படிச்சா உன் தோழிகள் மட்டுமில்லை  உலகமே உன் பின்னால வரப்போகுது. இன்றையிலிருந்து புது ஈஸ்வரியா நீ மாறணும். உனக்கு என்ன உதவி வேணுமோ நான் செய்யறேன். இப்போ தலைமையாசிரியர் உன் கூட பேசுவார். தைரியமா பேசுஎன்றார்.

     ஈஸ்வரிக்கு தன் பலம் எதுவென்று புரிவது போல இருந்தது. இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு படித்தால் அனைவரையும் மிஞ்சிவிட முடியும் என்ற தன்னம்பிக்கை அவளுக்குள் ஏற்பட்டது. இனி தன் பெற்றோர்களையும் இந்த ஆசிரியரையும் பெருமைப்பட வைப்பதே தன் முக்கிய நோக்கம் என்று உறுதியுடன் நினைத்துக் கொண்டே தலைமை ஆசிரியரின் அறையை நோக்கி நடந்தாள்.

(முத்தமிழ் விழா 2014ல் இரண்டாம் பரிசு, 

தமிழ் முரசு (11/05/2014))