சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 அக்டோபர், 2019

இரைச்சல்



     இரவு பதினோரு மணிக்கு கை தட்டி கூப்பிடத் தொடங்கிவிட்டான் வில்லியம். சமீப நாட்களாய், இரவு பதினோரு மணி, ஒரு மணி, விடியற்காலை நான்கு மணி என்று சீராய் அதிகரித்த இடைவெளிகளில் கேட்ட அவனது கைதட்டல்களாலும் அதைத் தொடர்ந்து அவன் நிகழ்த்திய உரையாடல்களாலும் தூக்கத்தை இழக்கத் துவங்கியிருந்தேன். ஒருமுறை அதிலிருந்து தப்பிக்க முயன்று, எப்பொழுதும் ஒன்பதரை மணிக்கே உறங்கச் சென்றுவிடும் நான், தூக்கம் கண்களைச் சுழற்ற கூடத்திலேயே அமர்ந்திருந்தேன்.
என்ன இன்னமும் முழிச்சிருக்கே?” என்று கேட்ட ராகுலிடம் உள்ளுக்குள் இருந்த விதிர்விதிர்ப்பைக் காட்டாமல் கவனமாய் புன்னகைத்து, வசந்தம் தொலைக்காட்சியின் நாடகத்திற்கு முகத்தைத் திருப்பினேன்.
     சிலீரென எதுவோ விழுந்து உடையும் சத்தமும். அதைத் தொடர்ந்த ஶ்ரீநிதியின் அழுகையையும் கேட்டு திடுக்கிட்ட போது தான், நான் அமர்ந்தபடியே உறங்கிவிட்டது புரிந்தது. எழுந்தோடிச் சென்று பார்த்த போது சுவரில் மாட்டியிருந்த புகைப்படச் சட்டம் கீழே விழுந்திருந்தது. மணி சரியாக பதினொன்று ஒன்று. அன்று வில்லியம் தனக்கு ஏற்பட்டிருந்த கோபத்தை ஒரு மணி கைதட்டலை ஓங்கியடித்து வெளிப்படுத்தினான். 
என்னைக் கவனிக்காமல் இருந்துவிட நினைக்கிறாயா?”
அது வரை கைதட்டலில் மட்டுமே அறிமுகமாகியிருந்த அவன், அன்றிலிருந்து தான் என்னுடன் பேசத் துவங்கினான்.
இல்லையே!’ என்று ராகுலிடம் சொல்வது போல வில்லியமிடம்  இன்றைய தினம் வரை பொய் சொல்ல முடிந்ததேயில்லை. நான் நினைப்பது அவனுக்குத் துல்லியமாய் தெரிந்துவிடுகிறது.
முதன்முதலாய் குரல் கேட்ட அதிர்ச்சியில் பயந்து போய், பக்கத்தில் படுத்திருந்த ராகுலை எழுப்ப முயற்சித்தேன். உடலையோ குரல் வளையையோ அசைக்க முடியவில்லை.
என்னை விட்டு விலக நினைத்தால் அதற்குத் தண்டனை ஹாஹாஉனக்குத் தான் தெரியுமே!”
ஆம் என்பது போல் என் உள்மனம் நடுங்கியது.
     மறுநாள் ஶ்ரீநிதியின் முதுகில் காணப்பட்ட அழுத்தமான கீறல்கள், என்னை எச்சரிப்பதற்காக வில்லியம் போட்டது என்றே நம்பினேன். அது எரிகிறது என்று நிதி அழுததை என்னால் தாங்க முடியவில்லை.
வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த ராகுலிடம்,
கொஞ்சம் லேட்டா போயேன் ராகுல், கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்துட்டு வரலாம்
முதல்ல குழந்தைக் கையிலே இருக்கற நகத்தை வெட்டுஎன்று சிரித்தான் அவன்.
மூன்று வயது பெண்ணால், கைகளைப் பின்னால் மடித்து அவ்வளவு தூரத்திற்குக் கீறிக் கொள்ள முடியுமா என்ன? நான் மட்டும் நிதியை அழைத்துக் கொண்டு, தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்று கும்பிட்டு, விபூதியை அவளின் நெற்றியில் பூசினேன். அன்று முழுவதும், குற்றவுணர்வு எழும்போதெல்லாம் அவளை இழுத்துத் தேங்காய் எண்ணெய்யைத் தடவி விட்டபடியிருந்தேன். மிகவும் கவனமாய் அன்றிரவு பத்து மணிக்கெல்லாம் படுத்துவிட்டேன்.
சமர்த்து ஜென்னி! இந்த வில்லியமிற்கு உன்னை இது போன்ற சமயங்களில் தான் மிகவும் பிடிக்கும்!” அன்று பதினோரு மணிக்கு இதை அவன் சொன்ன தொனியிலிருந்து விடுபடமுடியாமல் ஶ்ரீநிதியைக் கட்டிக் கொண்டேன்.
அந்த நிலையிலும் வில்லியம் எழுத்துத் தமிழில் என்னுடன் உரையாடுகிறான் என்பதைக் கவனித்தேன். உரையாடல் என்றால், சத்தமாக நீங்களும் நானும் பேசுவது போல இல்லை. மனதோடு மனம் ரகசியம் சொல்லிக் கொள்வது போல, எனது மூளைக்குள் அவன் நினைப்பதைத் தமிழில் மாற்றி, நேராய் கொண்டு வந்து வைப்பதைப் போல. எனக்கு மட்டும் கேட்கும் அந்த கைதட்டல் ஒலிகூட அப்படித் தான், மூளைக்குள் கைவிட்டு அறையும் சப்தம்.
     அன்றைய தினத்திற்குப் பின்னர் வில்லியம் என்னிடம் நிறைய பேசத் துவங்கினான்.
ஜப்பானியனிடம் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா? எவரைப் பற்றியும் கவலைப்படாத மனத்தைரியம். எனக்கு இருந்த அதே குருட்டுத் தைரியம். நட்ட நடு ராத்திரியில் சிறிய படகுகளில் வந்து ஊரைப் பிடிக்க கொள்ளைத் தைரியம் வேண்டும். அவன் இங்குக் கொடியை நாட்டியதே நம்புவார்களா என்பதைப் பற்றி கவலைப்படாமல் சொன்ன பொய்களால் தான்.”
அவன் இதையெல்லாம் என்னிடம் சொல்வதற்கான அர்த்தம் எனக்குப் புரிவதில்லை. இருந்தும் வலுக்கட்டாயமாய் சொற்களை என் மனதினுள் திணித்துக் கொண்டிருந்தான் அவன்.
அச்சொற்களின் அழுத்தம் தாளாமல் வெடித்துவிடுவேன் என்றுணர்ந்த நாளில் ராகுலிடம் எனக்குப் பயமாயிருக்கிறது என்றேன். ஷூ லேஸின் முடிச்சைப் போட்டுவிட்டு நிமிர்ந்த அவன்,
பி.டி.சாமி கதைகளைப் படிக்கிறதை நிறுத்தினா எல்லாம் சரியாப் போகும்என்று சொல்லிவிட்டு பணிக்குக் கிளம்பினான்.
நீ சொன்னால் அவன் நம்பமாட்டான்என்றான் வில்லியம், என் நினைவுகள் சென்ற திசையைப் பின்பற்றி. அவன் பகலிலும் என்னுடன் பேசத் தொடங்கியிருந்தான்.
அவனை விட நான் உன் மீது வைத்திருக்கும் அன்பு அதிகம் தெரியுமா? ஜென்மாந்திரங்களாய்த் தொடரும் அன்பு
உன் பின்னால் நான் சுற்றி வந்த நாட்கள் நினைவிருக்கிறதா? முயற்சித்துப் பாரேன்!”
வேண்டாம்!”
அப்படிச் சொல்லக் கூடாது ஜென்னி! என் தங்கமே!”
ராகுல், நிச்சயமா ஏதோவொன்னு இங்க இருக்கு, என்கிட்ட என்னென்னவோ சொல்லுது! எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலை.”
அதெல்லாம் பிரமைஎன்றான் ராகுல்.
கொலம்பேரியத்துக்குப் பக்கத்தில வீடு வாங்கினது தப்பான்னு தெரியலை!”
எதுக்க இருக்கற பள்ளி பிள்ளைங்க கூட அங்க பேய் சுத்தறதா சொல்றாங்களாம். லலிதாவோட பையன் சொன்னான்!”
லூசு மாதிரி பேசாத! இப்படி சொல்லிகிட்டேயிருந்தா ஐ.எம்.எச்சுக்குத் தான் போகணும்
     அன்றிரவின் பதினோரு மணி கைதட்டல், பொளேர் என்று தலையில் அடித்தது.
உன் அம்மா என்னிடம் வாங்கிய ஐந்து கட்டி அரிசியைத் திருப்பிக் கொடுஎன்றான் வில்லியம்.  
என்னைப் பிடிக்கலைன்னு நீ சொன்னதால தான், உன் அப்பா ஜப்பானியர்களுக்கு எதிரா காசு திரட்டியதா தகவல் கொடுத்தேன். இன்னமும் அதே தப்பை செய்யற!”
கோபத்தில் அவன், பேச்சுத் தமிழுக்கு மாறியிருந்தான்.
தண்ணீர் பைப்பை அவர் வாய்க்குள்ள விட்டு, வயிறு நிறைய தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பூட்ஸ் காலோட வயிறு மேலே ஏறி நின்னு தொப்புன்னு குதிச்சான் பாரு!” என்று சொல்லிவிட்டு அவன் சிரித்தது, சிலீரென முதுகுத்தண்டில் இறங்கியது.
     ராகுலிடம் வில்லியம் பற்றி சொல்லி நம்ப வைக்கும் முயற்சியை அன்றுடன் கைவிட்டேன். தினமும் இரவில் வில்லியம் பேசும் வார்த்தைகள் வெளியேற வழியின்றி, மூளை மடிப்புகளில் பதிந்தன. அவன் உதிர்த்த இரைச்சலான சொற்களுக்குள் இழுபட்டுச் செல்வதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அச்சொற்களின் நீட்சி போல், மெல்ல மெல்ல, ஓரங்கள் வெளிறிய வெண்ணிற வில்லியம் என் கண்களுக்குப் புலப்படத் துவங்கினான்.
உனக்கும் என் மேல் காதல் இருந்தது ஜென்னி. இப்போதும் இருக்கிறது. உன் கண்களுக்குத் தெரிகிறேன். இதை விட என்ன சாட்சி இருந்துவிட முடியும்! நீ என்னுடன் வந்துவிடு! தோல்வி, பொறாமை எதுவுமற்ற உலகம்.”
பயமில்லை, ஐயமில்லை எங்களிடத்தில் தயக்கமில்லை, தூக்கமில்லை
துக்கம் கொஞ்சமும் இல்லவே இல்லை
சம்பந்தா சம்பந்தமின்றி அவன் பேசிக் கொண்டே என் பின்னால் வருவது காதுகளுக்குள் வண்டுகள் ரீங்காரமிடுவது போலத் தொடர்ந்தது கேட்டது. வேறுவழியின்றி, மெல்ல மெல்ல, வில்லியமின் இருப்பைப் பழக்கிக் கொள்ளத் துவங்கினேன்.
ஜப்பானியன் எளிதில் யாரையும் நம்புவதில்லை. ஆனால் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால், வெகுமதிகள் தாராளமாய் கிடைக்கும். கிடைக்காதது நீ மட்டுமே. உன்னைத் தேடி அகண்ட வெளிக்காடுகளில் அலைந்து திரிந்து தாகத்தால் அழிந்தேன். நாம் இணையும் காலம் சந்திக் காலம்இப்படி சுலோகம் போல சரம் சரமாய் அவனிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் ஒரு ஸ்ருதியில் சேரும் போது தூக்கத்திற்குள் விழுவேன். திடீரென தூக்கி வாரிப்போட்டு எழுந்திருக்கும் போது வில்லியம் எதையோ சொல்லி முடித்துவிட்டு சத்தமாய் சிரித்துக் கொண்டிருப்பான், அல்லது அறையின் ஓரத்தில் நிசப்தமாய் மிதந்து கொண்டிருப்பான்.
     சிலநாட்களில், அவனது வார்த்தைகள் மனதில் தீட்டிய வரைபடத்திற்குச் சொந்தமான உலகிற்குள் சஞ்சரிக்கத் தொடங்கினேன். அவனது சொற்கள் மரங்களையும், தெருக்களையும், வீடுகளையும், கத்தியால் மனிதத்தலையைச் சீவும் ஜப்பானியனையும் தத்ரூபமாய் வரைந்தன. எதிரே தோன்றிய ஜப்பானியனை உடல் வளைத்து வணங்கினேன். தூரத்தில் தெரிந்த ஆட்களிடம் பேச நினைத்து விரைந்தேன். அவர்கள் வேகமாய் நடந்து மறைந்தார்கள். திடீரென கடையொன்றிலிருந்து வெளிப்பட்ட வில்லியம் என்னைத் துரத்தத் தொடங்கினான். அணிந்திருந்த நீளப்பாவாடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, வீடுகளுக்கிடையே இருந்த சந்துகளில் புகுந்து ஓடத் துவங்கினேன். அடுத்த சாலைச் சந்திப்பில் நின்றிருந்த நீலச்சட்டை அதிகாரிகள் என்னை நிறுத்தினார்கள்.
வெளியே திரியாதே, அவர்களின் கண்களில் பட்டுத் தொலைப்பாய் என்று திரும்பத் திரும்பச் சொன்னேனே! கேட்டாயா?” சீன மொழியில் ஒரு பெண் குரல் கண்டித்தது. பதறிப்போய் சட்டெனத் திரும்ப, அங்கிருந்த வீடுகளும், மனிதர்களும், வில்லியமும் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டார்கள். மரங்கள் நிறைந்த சாலையில், அந்த அதிகாரிகளுடன் தனித்து நின்றிருந்தேன். எதற்காக மண்டாய் சாலையில் தனியே நிற்கிறேன் என்று அவர்கள் கேட்ட கேள்விக்கு என்னால்  பதில் சொல்ல முடியவில்லை.
     ராகுல் அவர்களிடமிருந்து என்னை மீட்டெடுக்க வந்த போது கடும் கோபத்திலிருந்தான். ஶ்ரீநிதி எனக்காகப் பள்ளி முடிந்து நெடுநேரம் காத்திருந்திருக்கிறாள். ஆசிரியர்கள் நான் கையில் வைத்திராத என் தொலைப்பேசிக்கு அடித்துப் பார்த்துவிட்டு, ராகுலை அழைத்திருக்கிறார்கள்.
     வீட்டிற்கு வந்த போது ஶ்ரீநிதி அழுத களைப்பில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. அவள் பக்கத்தில் என் அம்மா. அம்மா கேட்ட கணக்கில்லாத கேள்விகளுக்குஎனக்குப் பயமா இருக்குதும்மா!” என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னேன். கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து விட்டு வந்தோம். சற்றே மனம் தெளிந்தது
அந்த அதிகாரிகள் ஜப்பானியர்களைப் போன்றவர்கள் இல்லை. அதனால் எனக்கு அவர்களைப் பிடிப்பதில்லைஎன்று நான் தூங்கியெழுந்ததும் சொன்னான் வில்லியம். அவன் அழைத்துச் செல்லும் இடத்திற்கு நான் போகப் போவதில்லை என்ற மனவுறுதியுடன் அன்று இருந்தேன். அவனும் என்னை அதிகம் தொல்லை செய்யவில்லை. அடுத்த நாள், “இனியும் என்னால் காத்திருக்க முடியாது! என்னுடன் வந்து விடு!” என்றான் வில்லியம். நான் அசைந்து கொடுக்கவில்லை.
சொல்வதை அலட்சியப்படுத்தினால் ஜப்பானியனின் கோபம் எனக்கும் வரும் தெரியுமா?”
பதறிய உள்மனதை இழுத்துப் பிடித்து அமர்ந்திருந்தேன்.
     மறுநாள் ராகுல் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. பலத்த சிராய்ப்புகளுக்குள்ளான அவனை மருத்துவமனைக் கண்காணிப்பில் இரண்டு நாட்கள் இருக்கும் படி சொல்லி விட்டார்கள்.
உனக்குப் பாடம் கற்பிப்பதற்காக மட்டும் என்பதால் அவன் உயிர் தப்பித்தான். நீ என்னுடையவள், எனக்கானவள் மட்டுமே! என்னை விட உனக்கு முக்கியமாகத் தோன்றுபவர்களை ஒவ்வொருவராய் பிடுங்கியெடுப்பேன்.” என்றான் வில்லியம்.
     அன்றிரவு முழுவதும் அழுது கொண்டிருந்தேன். மறுநாள் காலை தெளிவான முடிவிற்கு வந்திருந்தேன். இனியும் நான் எதையும் இழக்கத் தயாராயில்லை. வில்லியமிற்குக் கோபத்தை உண்டாக்காமல் இருக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்யத் துவங்கினேன். கணவன் மனைவியாய் எங்களுக்குள்ளான உறவை இனியும் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டிருந்தான் வில்லியம். ராகுலுக்கு உடல் நலமில்லாத காரணத்தையொட்டி கூடத்தில் படுத்துக் கொள்ளத் துவங்கினேன். ஶ்ரீநிதி அம்மாவுடன் மற்றொரு அறையில் படுத்துக் கொண்டாள். மறுபடியும் முன் போல வில்லியமுடன் அவனது உலகிற்குள் செல்லத் தயாரானேன்.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் திருட்டுத்தனமாய் தோண்டியெடுத்த வள்ளிக்கிழங்கைத் துண்டுகளாக்கி உப்பிட்டு வேக வைத்துச் சாப்பிடுவது என்ன ருசி தெரியுமா?”
     நட்சத்திரம் மின்னும் வானிற்குக் கீழேயிருந்த கிழங்குச் செடிகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்தேன்.
ஜென்னி, இருட்டில் அமர்ந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” சீன மொழிக் குரலில் பதறிப்போய் அது வந்த திசையில் நடந்து, கதவைத் திறந்து, மிகவும் பழகிப் போன ஜன்னல்களைக் கொண்ட அறைக்குள் நுழைந்தேன். என் கால்கள் நடந்த தரையின் மேடு பள்ளங்கள் எனக்கு நன்கு அறிமுகமாகியிருந்தன.
ஏற்கனவே உன் அண்ணனைக் காணவில்லை என்று ஊர் முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறேன். உனக்குக் கொஞ்சமாவது கவலை இருக்கிறதா? அந்த ராட்சதர்கள் கண்ணில் பட்டுத் தொலைத்தால் என்ன ஆகும். முதல் வேளையாக உன் முடியைக் கத்தரித்துத் தள்ள வேண்டும். நாளை முதல் இந்தப் பாவாடையையெல்லாம் தூக்கி வீசிவிட்டு, அண்ணனின் உடைகளை அணியத் துவங்கு, சொல்லிவிட்டேன்!” என்று அதட்டலாய் பேசியபடி வந்த அம்மா, மனதின் ஆழத்தில் ஜன்னல்களைப் போல, தரையின் மேடு பள்ளங்களைப் போல பழகிப் பதிந்து போயிருந்த அம்மா, அப்படியே உட்கார்ந்து அழத் துவங்கினாள்
மைக்கேல் கடைசியாக வேனில் ஏற்றப்பட்டதை செங் யோங் பார்த்திருக்கிறான். எங்குக் கொண்டு சென்றார்கள் என்று தெரியவில்லை. நாளைச் சென்று விசாரிக்க வேண்டும். பெட்டியிலிருந்து உன் அண்ணனின் புகைப்படத்தை எடுத்துக் கொடு!” சொல்லிவிட்டு மறுபடி அழத்தொடங்கிய அவளது உருவம் கலைந்தது. வேகமாய் உலுக்கப்பட்டதில் திகைத்துத் திரும்ப ராகுல்! இருவரும் மூடப்பட்டிருந்த அந்த தேவாலயத்திற்கு வெளியே நின்றிருந்தோம்.    

சொல்லுங்கள், ஏன் நள்ளிரவு நேரத்தின் அங்குச் சென்றீர்கள்?”
தெரியலை, டாக்டர்!”
உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் ஏதாவது பிரச்சனையா?”
அப்படியெல்லாம் இல்லை டாக்டர். நாங்க ரெண்டு பேரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம்.”
ராகுல் என் கைகளை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டான்.
முன்பு ஒரு முறை இதே மாதிரி சம்பந்தமில்லாமல் மண்டாய் ரோட்டில நின்று கொண்டிருந்தீர்களாமே!”
நீங்கள் என்னிடம் எதையும் தைரியமாகச் சொல்லலாம். ராகுல், சற்று வெளியே இருங்கள்!”
நான் தயங்கினேன்
நடப்பதையெல்லாம் மருத்துவரிடம் கூறினால்….’
உன்னைப் பைத்தியக்காரி என்பார்!” என்றான் வில்லியம்.
கொஞ்சம் யோசித்து பின்னர் பேசத் துவங்கினேன்.
     மருத்துவர் தந்த மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனையில் தங்கியிருந்த நாட்களில் வில்லியம் ஒளியிழந்து காணாமல் போகத் தொடங்கினான். அவனது குரலும் தன் சக்தியை இழந்தது போல என்னை விட்டு விலகியிருந்தது.
அவன் திரும்ப வந்தால், பிடிச்சி சாங்கி ஜெயில்ல போட்டுடுவோம்ன்னு சொல்லுங்க!” என்று சொல்லியிருந்தார் மருத்துவர்.
வெகுநாட்களுக்குப் பிறகு ஓய்வைக் கண்ட மூளையுடன் மாத்திரைகளின் தாக்கமும் சேர, இரவு பகல் என்ற கணக்கின்றி தூங்கினேன்.
மீண்டும் என் வீட்டிற்குச் செல்ல வேண்டும், மகளை அணைத்துக் கொள்ள வேண்டும், ராகுலுடன் கை கோர்த்து நடக்க வேண்டும் போன்ற ஆசைகள் மட்டுமே இப்போது மனதிற்குள். அப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொண்டுவரும் நாளை எதிர் நோக்கி நாட்களை நகர்த்தத் துவங்கினேன் நான்.

வியாழன், 8 மார்ச், 2018

இரண்டாவது ஆண்

“நாம போன மாசம் படத்துக்குப் போனது எப்படியோ ஐரினுக்குத் தெரிஞ்சிருக்கு. வீட்டில ஒரே பிரச்சனை”
சரயுவின் மனதில் என்றோ விழுந்திருந்த அச்சப் புள்ளி, மடமடவென அசுரத்தனமாய் வளர்ந்து குரல்வளையைப் பிடிக்கத் துவங்கியது. மார்ட்டினின் வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த வார்த்தைகள் தம் அர்த்தத்தை இழந்து, அவளின் மேல் பட்டு நாற்திசைகளிலும் தெறித்தபடியிருந்தன. அவற்றின் சாரம் மட்டும் அவளது மூளைக்குள் மெல்ல சொட்டிச் சென்று, உறைந்து போயிருந்த அதை உசுப்ப முயற்சித்தது.
“அன்றையிலிருந்து நம்ம என்ன செய்யறோம்ன்னு கவனிக்க ஆரம்பிச்சிருக்கா!”
இனி வார நாட்களின் மாலையில் மார்ட்டினின் ஷூக்கள் அவளது வீட்டு வாசலில் இருக்காது.
“நேத்து அவங்க அம்மாவும் ஊரிலிருந்து வந்துட்டாங்க. ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு. . .”
எதிர்வரும் முன்னிரவுப் பொழுதுகளில் கிரண் பேசுவதற்கு ஆளின்றி தனித்து அமர்ந்திருப்பான்.
“நைட்டும் வீட்டில சாப்பிடல. காலையில கூட . . .”
இனி மேல் வரப்போகும் சனிக்கிழமைகளில் கிரணும் அவளும் மட்டுமே ஸ்னோ பௌலிங்கிற்கோ, கருடா மாலுக்கோ செல்வார்கள்.
அப்படி தாங்கள் வாழ்ந்த, மார்ட்டினின் வருகைக்கு முந்தைய காலங்கள், அர்த்தம் பொதிந்திருந்தும் சுவாரஸ்யமற்றுப் போன ஈஸ்ட்மென் கலர் படமாய் அவளது மனதின் பின்னணியில். . .
காலம் விடுவிடுவென இருபத்தாறு மாதங்கள் பின்நழுவ, இவளது குழுவில் வேலை செய்யப் போகிறவன் என்று மேலாளர் நீல சட்டை அணிந்திருந்த மார்ட்டினை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சரயுவின் பிரத்தியேக உணர்வுகளைத் தீண்டக் கூடிய எந்த அடையாளமும் இன்றி கைகுலுக்கி புன்னகைத்தான் அவன்.
“ஐ நீட் யுவர் ஹெல்ப் இன் திஸ் ப்ராஜக்ட். கவலைப் படாதீங்க, இந்த வேலை பழகற வரைக்கும் தான், ரொம்ப படுத்த மாட்டேன்!”
சரயுவைச் சட்டென இரண்டு விஷயங்களில் அவன் கவர்ந்தான். ஐ.டியில் வேலை செய்பவர்கள், பிற தமிழர்களிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று அவன் வைத்திராத கொள்கையில், வெளிப்படையாக உதவிக் கேட்டதில். அவளுக்கு அவன் மீது முதல் ஈர்ப்பு விழுந்த புள்ளியும் அதுவாய் தான் இருக்க வேண்டும்.
முதல் மாத சம்பள தினத்தன்று இருவரும் காப்பி டேவிற்குச் சென்றார்கள். அவனுடைய அமெரிக்க கனவு, இருவரின் கல்லூரி நாட்கள், நம்பிக்கைகள் என்று பயணித்த பேச்சினூடாக, அலுவல் நிமித்தமாகவன்றி கடைசியாக ஒரு ஆணுடன் இப்படி தனியாக அமர்ந்து, பிறரைப் பற்றிய கவலையின்றி பேசி, ரசித்துச் சாப்பிட்டது எப்பொழுது என்று யோசித்தாள் சரயு.
“ஆறரைக்கே வேலை முடிஞ்சுடிச்சி இல்லை! வீட்டுக்கு வர ஏன் இவ்வளவு நேரம்?”
“நைட் எட்டரை மணிக்கு அவன் ஏன் உனக்கு போன் பண்ணறான்?”
அன்று, மார்ட்டின் இரண்டு வயது ரேச்சலுக்கு தகப்பன் என்பதை அறிந்தாள் சரயு. தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்டிருந்த சம்பிரதாய வேலியைத் தளர்த்தி, தனக்கு ஏழு வயது கிரண் இருப்பதைச் சொன்னவள், விவாகரத்து ஆகிவிட்டதைச் சொல்லாமல் தவிர்த்தாள். அதன் பின்னர் வந்த தினங்களின் உணவு இடைவேளைகளை இருவரும் அவர்களுடையதாக்கிக் கொண்டார்கள். மார்ட்டினுடனான பேச்சினூடாக வளர்ந்த தோழமையின் மூலம், தன் மனதின் பதின்ம வயது சாளரங்கள் திறந்து கொள்வதை சரயு உணர்ந்தாள்.
அன்று மதியம் சாப்பிட்டு முடித்ததன் எச்சமாய், சரயுவின் கேபினில் நின்றபடி, அன்று நடந்து கொண்டிருந்த கிரிக்கெட்டைப் பற்றிய தன் வருத்தங்களை மார்ட்டின் பகிர்ந்து கொண்டிருந்தான். அவனை இடைவெட்டியது சரயுவுக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு.
“மேடம், வீ ஆர் காலிங் ஃப்ரம் கிட்ஸ் க்ளோபல் ஸ்கூல், ஐ ஏம் கிரண்ஸ் மேக்த்ஸ் டீச்சர் ஹியர்”
“ஓக்கே. . .”
“லஞ்ச் ப்ரேக் முடிஞ்சு முதல் பீரியட், திடீர்ன்னு கிரண் வாந்தி எடுத்தான். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி ஸிக் ரூமுக்கு அழைச்சுகிட்டு போகும் போதே மயங்கி விழுந்திட்டான்”
“இப்ப எப்படி இருக்கான், ஸார், ப்ளீஸ் யாராவது டாக்டரைக் கூப்பிட்டு ஏதாவது பண்ணுங்க. நான் உடனே கிளம்பி வரேன்!”
“இப்ப ஹாஸ்பிடலுக்கு தான் மேடம் போயிட்டிருக்கோம். நீங்க நேரா மராத்தாஹள்ளியில இருக்க ரெயின்போ ஹாஸ்பிடலுக்கு வந்திடுங்க! வந்து இதே நம்பருக்குக் கூப்பிடுங்க! நான் அவன் கூட தான் இருப்பேன்”
பீறிட்டெழுந்த கண்ணீரை அடக்க பிரயச்சித்தம் செய்தபடி திரையில் தெரிந்த சிவப்பு பொத்தானை அழுத்த முயன்றாள் சரயு. கைநடுக்கத்தில் இரண்டு முறை தவறி பின்னர் அழைப்பே தன்னைத் துண்டித்துக் கொண்டது. மீண்டும் மீண்டும் கீழே நழுவிய கைப்பையை எடுக்க முயற்சித்தபடி, மார்ட்டினிடம் சுருக்கமாக நடந்ததைச் சொன்னாள்.
சட்டெனச் சூழலைத் தன் கையில் எடுத்துக் கொண்டான் மார்ட்டின். சரயுவைச் சற்று நேரம் அமரச் சொன்ன அவன், ஏஸியின் தகடுகளை அவளை நோக்கித் திருப்பினான். பின்னர் வெளியே சென்று மேலாளரிடம் சரயுவுடன் தனக்கும் சேர்த்து விடுமுறை சொல்லி விட்டு, ஸ்கூட்டி பக்கமாய் சென்ற அவளைத் தடுத்து தன் பைக்கை எடுத்தான். முக்கியப் பணியை பிறர் தோள்களில் சுமத்திவிட்டு தன் கவலைக்குள் மட்டுமே அமிழ்ந்து கிடப்பது கூட வரம் தான் என்பதை மருத்துவமனையை நோக்கிய அப்பயணத்தில் உணர்ந்தாள் சரயு.
பச்சைப் போர்வைக்குள் கண்களை மூடித் துவண்டிருந்த கிரணைப் பார்த்த நொடியில் சுற்றிலுமிருந்த பொருட்கள் மொத்தமும் சரயுவின் பார்வையிலிருந்து மறைந்து போயின. அவளது கால்கள் தம் கனத்தை இழந்து துவளத் துவங்கியது.
“ஏம்மா, நீ சின்ன பிள்ளையைத் தனியா வச்சி எப்படி பார்த்துப்ப? திடீர்ன்னு உடம்பு சரியில்லைன்னா என்ன பண்ணுவ? நாங்க கிளம்பி வர ஆறு மணிநேரமாவது ஆகும்! குழந்தை நாள் முழுக்க டே கேர்ல இருந்தா ஏங்கிப் போயிடுவான்”
ஏதோவொரு குற்றவுணர்வு அவளைப் பற்றிக் கொள்ள, கிரணின் படுக்கைக்கு அருகில் மண்டியிட்டு, அவனது கன்னத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
மார்ட்டின் மொத்த மருத்துவச் சம்பிரதாயங்களையும் கவனித்துக் கொண்டான். கிளம்பும் போது, பிஸ்கட்டுகளையும் பழச்சாறையும் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவளது ஸ்கூட்டியின் சாவியையும், வீட்டு விலாசத்தையும் வாங்கிச் சென்றான்.
இனி பயப்படவேண்டியது இல்லை என்று மருத்துவமனையில் கூறியதும், அன்றிரவே மகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினாள் சரயு.
இரவு கிரண் படுக்கையில் சலனமின்றி படுத்திருக்கும் நேரமெல்லாம், அவன் மயங்கியிருக்கக் கூடும் என்று அவளுக்குப் பயமாக இருந்தது. தன் வாழ்வின் ஒரே பிடிப்பாக இருக்கும் அவனை இழந்துவிடுவோமென்ற அச்சம் அவளைக் கண்ணயர விடவில்லை.
“சம்பளம் அவ்வளவு இல்லாட்டியும் பரவாயில்லை! இங்கேயே பக்கத்தில எங்காவது வேலையைப் பார்த்துக்கக் கூடாதா! ரங்கநாதன் பையன் விப்ரோவில் டீம் லீடரா இருக்கான். அவன்ட்ட பேசி பார்க்கட்டுமா?”
“கூட வந்து இருக்கலாம்ன்னா, உடம்பு முன்ன மாதிரி இல்லை! இங்க பழகின இடம். சட்டுன்னு டாக்டரப் பார்க்க வசதியா இருக்கும்! அம்மாவை வேணும்னா கூப்பிட்டுட்டு போறியா!”
“நான் போயிட்டா அப்புறம் நீங்க? ஏற்கனவே சுகர் தொண்டை வரைக்கும் நிற்குது!”
வார்த்தைகள் இரவு முழுவதும் அவளைத் துரத்தியபடி இருந்தன.
மறுநாள் மார்ட்டின் காமிக்ஸ் புத்தகமும் ஆப்பிளும் வாங்கிக் கொண்டு அவர்களின் வீட்டுக்கு வந்தான். அவனைப் பார்த்ததும் சரயுவிற்கு, தான் சாதாரணமாய் அணிந்திருந்த நைட்டியைப் பற்றிய பிரஞ்ஜை எழுந்தது. அதைப் புறந்தள்ளி புன்னகையுடன் ஸ்கூட்டி சாவியை வாங்கி ஆணியில் மாட்டிவிட்டு, சமையலறைக்குள் சென்றாள் சரயு.
“உங்களுக்கும் காமிக்ஸ் பிடிக்குமா, அங்கிள்?”
“உன் வயசில இதைத் தான் படிப்பேன்!”
“இப்ப அம்மா மாதிரி பெரிய புக்ஸ் படிப்பீங்களா? அதோ, அதெல்லாம் அம்மா புக்ஸ் தான். நானும் பெரிய புக்ஸ் படிப்பேன், ஆனா இங்லீஷ் புக்ஸ் மட்டும் தான்.”
சரயுவின் வைத்திருந்த டான் ப்ரௌன், சில்வியா வுல்ஃப், பொன்னியின் செல்வன், புதுமைப்பித்தன்களை வியப்புடன் அளைந்த படி,
“சரயு, கொஞ்ச நாள் போனா நீங்க வேலையை விட்டுட்டு ஒரு நூலகம் வச்சிடலாம்!” என்றான் மார்ட்டின்.
“விட்டா, சந்தோஷமா அந்த வேலையைச் செய்வேன்! ஆனா பணம் தேவைப் படுதே!”
வெங்காயம் வதங்கும் வாசனைக்கு நடுவிலிருந்து குரல் வந்தது.
ஒவ்வொரு புத்தகத்திலும், அதை வாங்கி வந்த தேதியையும், இடத்தையும் குறித்து வைத்திருந்தாள் சரயு. ஹிப்னாடிஸம் பற்றிய புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, காமிக்ஸை ஆர்வத்தோடு புரட்டிக் கொண்டிருந்த கிரணுக்கு அருகில் அமர்ந்தான் மார்ட்டின்.
“கிரண், புக்கை இவ்வளவு கிட்ட வச்சி படிச்சா சீக்கிரம் கண்ணாடி போட வேண்டி வரும்”
“நீங்களும் அதனால தான் கண்ணாடி போட்டிருக்கீங்களா, அங்கிள்”
“அந்த படத்தில இருக்கறது நீயா?”
தொலைக்காட்சியின் மீது வைக்கப்பட்டிருந்த அதன் அருகில் சென்று பார்த்த போது அதிலிருந்த சரயு ஒல்லியாக, இன்னும் இளமையாக இருந்தாள்.
“ஆமாம், அது என்னோட தேர்ட் பர்த்டேல எடுத்தது. பக்கத்துல இருக்கறது என்னோட மெட்ராஸ் தாத்தா, கேக்கை ஊட்டி விடுறது எங்க பாட்டி”
சரயுவின் கணவன் அந்தப் புகைப்படத்தில் இல்லை, அந்தக் கூடத்திலிருந்த மற்ற புகைப்படங்களிலும் கூட.
சரயு சூடான கிச்சடியைத் தட்டுகளில் கொண்டு வந்து சாப்பாட்டு மேசையில் வைத்தாள். பொதுவாய் ரவைப் பண்டங்கள் அவனுக்கு உவப்பாய் இருந்ததில்லை. ஆனால் அன்று ருசித்துச் சாப்பிட்டான். அதன் பிறகு நேரம் கிடைக்கும் அவர்கள் வீட்டுக்கு வந்து செல்லத் துவங்கினான் மார்ட்டின்.
கிரணுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவன் நெருக்கமாய்ப் பழகிய ஆண்கள் என்று யாருமில்லை. தனது தந்தையைக் கூடப் புகைப்படம் மூலமாக மட்டுமே அறிந்திருந்தான்.
எல்.கே.ஜி சேர்ந்த புதிதில், உடன் படிக்கும் மாணவர்களின் தந்தையர் எப்போதாவது பள்ளிக்கு வரும் போது, தங்கள் மகனை வாரி அணைத்துக் கொள்வதைக் கண்டிருக்கிறான். தன்னையும் ஒரு ஆண் அதே போல தூக்கிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அந்த மாணவனின் இடத்தில் தான் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வான்.
அம்மாவுடன், நண்பர்களின் பிறந்த நாள் விழாக்களுக்குச் செல்லும் சமயம் அங்கிருக்கும் ஆண்களுடன் நேரம் செலவிடுவதை அவன் மிகவும் விரும்பினான். முரட்டுத் துணியால் ஆன அவர்களது காற்சட்டையைக் கைகளால் தடவிப்பார்க்க அவனுக்கு மிகவும் பிடிக்கும். தங்கள் அருகில் வந்து கால்களை உரசியபடி நிற்கும் அவனது ஸ்பரிசத்தை உணர்ந்து, பெரும்பாலானவர்கள் அவனை மடியில் அமர வைத்துக் கொள்வார்கள். மடியில் உட்காரவைத்த ஆணின் மணத்தை ஆழ்ந்து உள்ளிழுத்து, தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பான் கிரண். அங்கு அமர்ந்திருக்கும் வரைத் தன்னை மிகவும் கம்பீரமானவனாய் உணர்வான்.
எல்லா நேரமும் இப்படி அமைந்து விடுவதில்லை. சிலர் அருகில் நிற்கும் அவனை அலட்சியப் படுத்தி கைத்தொலைப்பேசியில் இருப்பார்கள். அது வரை தன் அப்பாவைப் பற்றிய நினைவே இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, இவன் அவர்களின் மடி மீது உட்கார்ந்திருக்கும் போது தான், தந்தையைப் பற்றி நினைத்துக் கொள்ளும்.
பாசம் புரண்டோட வந்து கால்களைக் கட்டிக் கொண்டு, இவனை இறக்கி விட்டே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கும். பெரும்பாலான ஆண்கள் இதற்கு மசிந்து, அவனை இறக்கி விட்டுவிடுவார்கள். தான் இறக்கப் பட்டதை விடச் சற்று முன்னர் தானிருந்த இடத்தைப் பிடித்திருக்கும் குழந்தைகளைப் பார்க்கும் போது அவனுக்குக் கோபமாய் வரும். அதை வெளிப்படுத்த வழியின்றி, கண்கள் கலங்க நிற்கும் அவனைச் சரயு இழுத்து அணைத்துக் கொள்வாள். கொஞ்சம் கொஞ்சமாய் இப்படிப்பட்ட நிகழ்வுகள் பழகிப் போய், ஆண்களுடன் பழகும் விருப்பத்தைக் குறைத்துக் கொண்டிருந்தான் கிரண்.
இப்போது தன்னுடன் அமர்ந்து கிரிக்கெட் பற்றியும், ஸ்டார் வார்ஸ் பற்றியும் பேசும் மார்ட்டினைப் பார்க்கும் போது ஆழப் புதைந்து கிடந்த ஆசைகள் மேலெழும்பத் தொடங்கின. சனிக்கிழமைகளில் தனக்கு இணையாக கிரிகெட் விளையாடும் மார்ட்டினை கிரணுக்கு மிகவும் பிடித்துப் போனது. பைக்கில் அவனுக்குப் பின்னால் அமர்ந்து காற்றில் தலைமுடி பறக்க ஐஸ்க்ரீம் கார்னர் செல்லும் நேரங்களை அவன் மிகவும் விரும்பினான். அந்தச் சமயத்தில் தான், ஆறு வருடங்களுக்கு முன்னர் நடந்த தனது விவாகரத்தைப் பற்றியும், முன்னாள் கணவன் வேறு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வசிப்பதைப் பற்றியும் மார்ட்டினிடம் சொன்னாள் சரயு.
இரண்டாம் பிரசவத்திற்காக ஐரின் நாகர்கோவிலுக்குச் சென்றிருந்த நாட்களில், யாருமற்ற வீட்டிற்குப் போகப் பிடிக்காமல் கிரணைப் பார்க்கத் தினமும் வரத் துவங்கினான் மார்ட்டின். வேலையிலிருந்து திரும்பியதும் சரயு, சமையலறைக்குள் உணவு தயாரிக்கச் செல்வாள். மார்ட்டின் கிரணுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவன் செய்யும் வீட்டுப் பாடத்தை மேற்பார்வையிடுவான்.
சமையல் முடிந்ததும் மூன்று பேரும், அன்றைய நிகழ்வுகளை அலசியபடி ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவார்கள். பின்னர் மொட்டை மாடியில், கிரணை விளையாட விட்டு, சற்று நேரம் சரயுவும் மார்ட்டினும் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒன்பது மணி வாக்கில் தன் வீட்டிற்கு மார்ட்டின் கிளம்பும் போது, கிரணுக்கு அவனை வழியனுப்பவே மனம் வராது.
எப்பொழுதாவது கிரண் சீக்கிரம் உறங்கிவிடும் நாட்களில், சரயுவுடன் மொட்டை மாடி நிலவொளியில் அமர்ந்து பேசும் நேரங்களை மார்ட்டின் மிகவும் விரும்பினான். சரயுவிற்கும் தன் தனிமையை விரட்ட, அந்தத் தோழமை தேவையாக இருந்தது. தனக்கும் கூட இப்படி மனம் விட்டு பேசக் கூடிய நட்பு அமையுமென்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. சில நாட்களில் கிரண் உறங்குவதற்காகக் காத்திருக்கத் தொடங்கினார்கள் இருவரும். இப்படியான ஒரு நாளின் தனிமையில் மார்ட்டினின் மனம் தன்னுள் இருந்த ஏக்கத்தைக் காதலாக சரயுவிடம் வெளிப்படுத்திக் கொண்டது.
அந்தக் கணம், சர்ரென சரயுவின் வயிற்றிலிருந்து முட்டியெழும்பிய வார்த்தைகள் அவளது தொண்டையிலேயே தடுக்கி விழுந்தன. மெல்ல நகர்ந்து எதிரே இருந்த கைப்பிடிச் சுவருக்கு அருகே சென்று தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயன்றாள் அவள். சில்லென்று இறங்கிய பனியை அப்பொழுதுதான் உணர்ந்தது போல அவளது உடல் சிலிர்த்தது. தெருவிளக்கொளியில், இரண்டு மாடிகளுக்குக் கீழே, வாகனங்கள் அவளின் கவனத்தில் பதியாமல் நகர்ந்தன. அவளது மௌனத்தின் நீட்சியில் சங்கடமுற்ற மார்ட்டின்,
“சரயு, மனசில தோன்றியதை வச்சிருக்க முடியலை! பட்டுன்னு சொல்லிட்டேன். உங்களுக்குப் பிடிக்கலைன்னா நாம இதே போல நண்பர்களாகவே இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினான். தெரு முனையில் அப்பியிருந்த இருளுக்குள் அவனது வாகனம் மறைந்த பின்னரும் சரயுவின் உடலுள் ஏற்பட்டிருந்த மெல்லிய நடுக்கம் மறையவில்லை.
அன்றிரவு முழுவதும் மீண்டும் மீண்டும் அந்நிகழ்வு சரயுவின் மனதில் விரிந்து அவளைத் தொந்தரவு செய்தது. வீட்டில் மனைவி, குழந்தை என்று அழகாய் ஒரு குடும்பம், நல்ல வேலை, இப்போது தன்னுடைய மன உணர்வுகளுக்குத் தீனி போட மற்றொரு கைநிறைய சம்பாதிக்கும் பெண். அதாவது அவன் செலவு செய்ய வேண்டியிராத, தேவைப்பட்டால் பணத்தைக் கடனாகவோ அன்பளிப்பாகவோ தந்து உதவக் கூடிய பெண். மார்ட்டின் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான் என்று சரயுவிற்குத் தோன்றியது தான் ஒப்புக் கொண்டால் பயன்படுத்திவிட்டு, வேண்டாம் என்னும் போது தூக்கி எறிந்துவிடலாம். எவ்வளவு சுலபமாய் சொல்லிவிட்டான்! அவளுள் சினம் மூண்டெழுந்தபடி இருந்தது.
மறுநாள் வேலையிடத்தில் அவளுக்கு மார்ட்டினைப் பார்க்கவேப் பிடிக்கவில்லை. மனதில் ஒட்டியிருந்த முந்தைய தினத்தின் துணுக்குகளுடன், உறக்கமின்மை தந்த எரிச்சலும் அவன் மீதே குவிந்தது. மார்ட்டினும் அவளை வெறுப்பேற்றுவது போல, அவளிடம் பேசவோ மன்னிப்பு கேட்கவோ முயற்சிக்காமல், தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான். அந்த வாரம் முடிக்கப்பட வேண்டி அவசியத்துடன் கணினிக்குள் காத்திருந்த பணியில் அவளால் கவனம் செலுத்த முடியவில்லை. மொத்தமும் சேர்ந்து தலையில் இடிக்க, மதியத்திற்கு மேல் அவளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
மேலாளரைச் சந்தித்து விடுப்பெடுத்துக் கொண்டு, அப்படியே தன்னை வேறு குழுவிற்கு மாற்றிவிடும் படி விண்ணப்பித்தாள்.
“இன்னிக்கு மார்ட்டின் அங்கிள் வரலையாம்மா”
“இல்லை, கிரண். அவங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகுதில்ல, அதனால் இனிமே வரமாட்டாங்க!”
கிரண் அதற்கு மேல் அவளை எதுவும் கேட்கவில்லை.
அன்றைய முன்னிரவு மிகவும் மோசமானதாய் இருந்தது. தன் வேலைக்குள் புதைந்து கிடந்த இரண்டு பேரைச் சட்டை செய்யாமல், தொலைக்காட்சியின் குரல் அமானுஷ்யமாய் வீட்டைச் சுற்றி வந்தபடியிருந்தது. மார்ட்டின் வருகைக்கு முன்னால் அவர்களுக்குள் இருந்த சகஜ தன்மை எங்கோ போய் ஒளிந்து கொண்டது. அச்சமூட்டும் படியாய் இருந்த அந்தச் சூழல் சிலநாட்களில் சரியாகிப் போகும் என்று சமாதானப் படுத்திக் கொண்டாள் சரயு.
நினைத்தது போல இரண்டு நாட்களில் அவ்வீடு மார்ட்டினின் இல்லாமைக்குப் பழகிக் கொண்டது. கிரண் எதுவுமே கேட்காமல் தன்னைப் பள்ளி வேலைகளுக்குளோ, புத்தகங்களுக்குள்ளோ மூழ்கடித்துக் கொண்டான். சரயுவும் வீட்டின் ஒவ்வொரு மூலையையும் இழுத்துப் போட்டுச் சுத்தப் படுத்துவதில் முனைந்தாள், மார்ட்டின் எந்தவொரு மாற்றத்தையும் தன் வாழ்வில் கொண்டுவரவில்லை என்பதைத் தனக்குத் தானே நிரூபித்துக் கொள்வதைப் போல.
தொடர்ந்து வந்த மாலைகளில் மனச்சோர்வு அவளைப் பற்றத் துவங்கியது. விவாகரத்து செய்த கணவன் மொத்த கறைகளையும் இவள் பக்கம் தள்ளி, முதல் திருமண சம்பவத்தைச் சுத்தமாய் துடைத்தெறிந்து விட்டு, வேறுமணம் செய்து கொண்டு நிம்மதியாய் இருக்கிறான். என்றோ ஒரு நாள் திரும்பி வந்து மகனே என்றால் கிரணும் அவனைக் கட்டிக் கொள்ளக்கூடும்.
இவளால் அப்படியொன்றை நினைத்துப் பார்க்கவே முடியாது. இன்னொரு மணம் செய்து கொண்டாலும், முதல் திருமணம் அருவருக்கத்தக்கத் தழும்பாய் அவளது வாழ்வில் பின் தொடரவே செய்யும். இரண்டாம் கணவன் என்ற பதத்திற்குள் நுழையும் பக்குவம் இந்திய ஆண்களுக்கு வரவே வராது என்று அவளுக்குத் தோன்றியது. இத்தகைய எண்ணங்கள் வெளிப்படுவதற்கு வழியின்றி மண்டைக்குள்ளேயே சுற்றி குடைச்சலைக் கொடுத்தன. தன்னிரக்கத்திற்குள் விழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. இடையிடையே மார்ட்டினின் நினைவுகள் வேறு.
எந்த பிடிப்புமற்று நாட்கள் நகர்வதைக் காண அவளுக்குப் பயமாய் இருந்தது. அப்படியொரு கணத்தில் தான், சரயுவிற்குத் தானும் அவனைக் காதலிக்கிறோமோ என்ற சந்தேகம் ஏற்பட்டத் துவங்கியது. அடுத்த நொடி, சரசரவென குற்றவுணர்ச்சி உடலெங்கும் பாம்பாய் ஊரத் துவங்கியது.
தன் எண்ணங்கள் செல்லும் திசையைப் பார்த்து, திகைத்துப் போனாள் சரயு. திருமணமாகி இரண்டாம் குழந்தைக்கு தகப்பனாகப் போகும் ஒருவனைத் தான் எப்படி விரும்ப முடியும்? அப்படி விரும்புவதாகவே வைத்துக் கொண்டாலும் இதற்கு எதிர்காலம்? இது சூழலின் காரணமாய் ஏற்பட்ட ஈர்ப்பாய் தான் இருக்க முடியும் என்று தனக்குள் சத்தமாய்ச் சொல்லிக் கொண்டாள் சரயு.
கல்லூரி காலங்களில் பேருந்து நிலையம் வரை தொடர்ந்து வந்த பிரபு மீது, இயற்பியல் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் மீது இது போன்ற ஈர்ப்புகள் அவளுக்குத் தோன்றியிருக்கின்றன. சில வருடங்கள் கழித்து அவற்றை நினைத்துப் பார்த்து அவளால் புன்னகைக்கவும் முடிந்திருக்கிறது. மார்ட்டினின் மீது தற்போது ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியும் அப்படி சீக்கிரம் வடிந்து போய்விடும் என்று நினைத்தாள் அவள். அதைத் தாண்டி யோசிக்க அவளுக்குத் தைரியம் இருக்கவில்லை. ஆனால் மார்ட்டினை நினைவுகளில் இருந்து நீக்குவது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.
வாரயிறுதியில் மகனை அழைத்துக் கொண்டு சினிமாவிற்கோ, கோவிலுக்கோ சென்றாள். ஆனாலும் இழப்பு அவளைப் பின் தொடர்ந்தபடி இருந்தது. கிரண் எதையும் பெரிதாய் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை, இருந்தும், அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த ஒரு சலுகையைத் தான் வெட்டிவிட்டோமோ என்ற குற்றவுணர்வு அவளுள் தோன்றத் துவங்கியது. அப்படித் தோன்றிய கணமே, தன் மனம் மார்ட்டினுடன் மறுபடியும் பேசுவதற்கு வழி தேடுவதை உணர்ந்து அதிர்ந்தாள். தார்மீகமாய் யோசிக்கும் மூளைக்கு எதிராகத் தன் மனம் செயல்படத் துவங்கிவிட்டதை அறிந்து தன் மீதே அவளுக்குப் பயம் வரத் துவங்கியது. அவளது மனம் மூளையிடமிருந்து பிரிந்து விவாதம் செய்யத் துவங்கியது.
‘மார்ட்டினை விரும்புகிறாய் அதை ஒப்புக்கொள்’
‘அவன் திருமணமானவன், இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன்…’
‘அதனால் என்ன, அவனிடம் காசை எதிர்பார்த்தா பழகுகிறாய்? அவனுடைய துணையை மட்டும் தானே!’
‘அது எப்படி நிரந்தரமான துணையாகும்? என்று இருந்தாலும் அவன் தன் குடும்பத்திற்குத் தானே முதலில் சொந்தமாகிறான்?’
‘இருக்கட்டுமே, மீதமிருக்கும் நேரத்தை
உன்னுடனும் கிரணுடனும் செலவு செய்கிறான், அதற்கு மேல் நீயும் எதிர்பார்க்காதே!’
‘சரி, நான் இதற்கு ஒப்புக் கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்ளலாம், இது அவனது மனைவிக்குத் தெரிந்தால்…’
‘அது அளவிற்கு மீறிச் செல்லும் போது தான். நீங்கள் ஏன் அப்படி செய்யப் போகிறீர்கள்.’
‘சரி, என்றோ ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டால்?’
‘அப்போது வெட்டிக் கொள்!’
‘பழகிய பின் வலி அதிகம் இருக்குமே’
‘இப்பொழுது மட்டும் என்ன? இந்த வலியைக் கொஞ்ச நாட்களுக்குத் தள்ளிப் போடுகிறாய், அவ்வளவு தான்!’
‘சரி இது அவன் மனைவிக்குச் செய்யும் துரோகம் இல்லையா?’
‘நீ காசு பணத்தை அவனிடமிருந்து எடுத்துக் கொண்டால், அல்லது அவனை அழைத்துக் கொண்டு ஓடிப் போனால் அது துரோகம்’
அன்றிரவு படுத்த போது, அவளது மனம் தெளிந்திருந்தது. மார்ட்டினைத் தான் காதலிக்கிறோம் என்பதைத் தயக்கமின்றி முழுதாய் ஒப்புக் கொண்டாள். ஆனால் அதில் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள, அவள் தனக்குள் சில வரையறைகளை அமைத்துக் கொண்டாள்.
மார்ட்டினின் காதலை ஏற்றுக் கொள்ளும் போது அவனுடன் சேர்த்து ஐரினையும் மனதில் ஏற்றுக் கொள்ள வெண்டும். மார்ட்டினின் பணத்தை எந்த நேரத்திலும் தொடக்கூடாது, அவனுடைய விடுமுறை நாட்களை அநாவசியமாக பறித்துக் கொள்ளக்கூடாது. அவனுடனான பழக்கத்தால் ஐரினுக்கு எந்த பாதிப்புமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அவளிடமிருந்து மூளை தனியே பிரிந்து கேள்விகள் கேட்கத் துவங்கியது
‘சரி! என்றாவது ஒரு நாள் ஐரினுக்குத் தெரிந்தால், உன்னால் சமாளிக்க முடியுமா? அப்போது பிரியத் தானே வேண்டும்?’
‘என்ன இப்போது இருப்பது போல இருப்பேன், அவ்வளவு தானே?’
எப்போதோ நடக்கக் கூடிய ஒன்றுக்காகப் பயந்து, கிடைக்கும் கொஞ்சம் வாய்ப்பைத் தவறவிட அவள் மனம் தயாராய் இல்லை.
அதன் பிறகும் மார்ட்டினுடன் கிரண் செஸ் விளையாடும் போது, அவர்கள் சேர்ந்து அமர்ந்து படம் பார்க்கும் போது, இந்தப் பயம் தோன்றியபடி இருந்தது. அது தோன்றும் நொடியே கிள்ளி தூக்கி எறிந்துவிடத் தானாகவே அவளது மனம் பழகிக் கொண்டது.
மார்ட்டினுடன் பேசிக் கொண்டிருக்கும் போது நடுவில் ஐரினையும் குழந்தையையும் பற்றி வலிந்து பேசினாள் சரயு. அப்படிப் பேசுவதன் மூலம், தன் வரையறைகளை நினைவுபடுத்திக் கொள்வதாகவும், தன்னை அவன் குடும்பத்துடன் இணைத்துக் கொள்வதாகவும் அவள் நினைத்தாள். ஆனால் இரவின் தனிமையில் தனக்குக் கிடைக்காத ஒரு வாழ்க்கை, இதுவரை நேரில் பார்த்தறியா ஐரினுக்குக் கிடைத்ததை எண்ணிப் புழுங்கிய மனதை எதுவும் செய்ய முடியவில்லை.
ஐரின் குழந்தையுடன் வீட்டிற்கு வந்த பின்னர் அவளுடன் நட்பாகிவிட முயற்சி செய்தாள் சரயு. குழந்தையைப் பார்க்க, பொம்மைகளையும், கேக்குகளையும் வாங்கிக் கொண்டு மார்ட்டினின் வீட்டிற்கு மாதம் இருமுறையாவது செல்லத் தொடங்கினாள். ஆனால் இவள் நினைத்தது போல, எதையும் எடுத்தெறிந்து பேசும் ஐரினுடன் நட்பாவது சுலபமான காரியமாக இருக்கவில்லை. இவளது வரவைக் கூட அவள் விரும்பவில்லை என்பதைச் சீக்கிரமே உணர்ந்து போவதை நிறுத்துக் கொண்டாள்.
இன்று அவளுடன் பேச வேண்டும் என்று மார்ட்டின் தகவல் அனுப்பிய போது கூட அவனைவிட்டுப் பிரிய நேரும் என்று சரயு யோசித்திருக்கவில்லை.
“சத்தியம் செஞ்சா கூட அவ நம்ப மாட்டேங்கறா”
இந்நிகழ்விற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல, சரயுவிற்குப் பின்னால் இருந்த சுவரைப் பார்த்தபடி சொல்லிக் கொண்டிருந்தான் மார்ட்டின். இனி தன்னுடைய உணர்வுகள் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல என்று சரயுவுக்கு தோன்றியது.
“இன்னிக்கு வேலைக்கு வரதில கூட அவளுக்கு விருப்பமில்லை!”
அவளின் வாழ்வில் நுழைந்த இரண்டாவது ஆண், இலகுவாய் நழுவி தன் வளைக்குள் சென்று ஒளிந்து கொள்ள முயல்வதை அவளால் உணர முடிந்தது.
“நான் வேலையை மாத்திகிட்டு சென்னைக்குப் போயிடலாம்னு பார்க்கறேன். வேற என்ன செய்ய!”
‘என்னைப் பத்தி, கிரணைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா?’ என்று அவன் கால்களைப் பிடிக்கத் தயாரான மனதை, வலுக்கட்டாயமாய் இழுத்து நிறுத்தி,
“ஆல் தி பெஸ்ட்!” என்றாள் சரயு.
மார்ட்டினின் உருவம், சரயுவின் நெற்றியில் அனுபவச் சுருக்கத்தை ஏற்றிவிட்டு விலகிச் செல்லத் துவங்கியது.

நன்றி
மலைகள்.காம் இணைய இதழ் ( ஜனவரி 2)

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

கைப்பிடிச் சோறு

          பானையில் வெந்துக் கொண்டிருந்த இட்லியின் மணம் நாசியுள் நுழைந்து செரிமான உறுப்புகளை இதமாய் தடவி விட்டது. அத்தோடு சட்டினி தாளிக்கும் ஓசையும் வாசமும் சேர்ந்துக் கொள்ள தன்னிச்சையாய் எச்சில் சுரந்தது.  தாளிப்பில் இன்று உளுத்தம்பருப்பு சேர்க்கவில்லைப் போல! என்னயிருந்தாலும் நான்கு பருப்பைப் போட்டு தாளித்தால் வரும் மணமே அலாதி. கோதாவரிக்கு பசிக்கத் தொடங்கி விட்டது. தலையை வீட்டினுள்ளே நீட்டிப் பார்த்தாள். நீண்ட ரேழி, கூடம், சாப்பாட்டு அறை, இவற்றையெல்லாம் தாண்டி வீட்டின் புழக்கடை தெரிந்தது. அங்கே தென்னை மரத்தினடியில் தேய்ப்பதற்காக காத்துக் கிடந்தது பாத்திரக் குவியல். மேலாக இருந்த குண்டானை காகம் தன் அலகால் சுரண்டிக் கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் தெரிந்த நெருப்பவிந்த கல்லடுப்பில் கரிக் குண்டான் ஒரு பக்கமாய் சாய்ந்து கிடந்தது.
     இப்போது அநேகமாக கணேசன் தட்டின் முன் உட்கார்ந்திருப்பான். சியாமளா அவனுக்கு இட்லிகளைப் பறிமாரிக் கொண்டிருப்பாள். பெரியவள் தலையை விரித்துப் போட்டபடி அம்மா வந்து பின்னி விடுவதற்காய் காத்துக் கிடப்பாள். முன்பெல்லாம் கோதாவரி நேராக உள்ளே சென்று வருபவளாக இருந்தாள். அப்போது அவளுடைய கணவன் திடமாய் இருந்தார். நிலையான வருவாய் இருந்தது. இவள் உண்டது போக மிகுதியாய் இருந்த உணவை வாங்கிச் செல்வதற்கு ஆட்கள் இருந்தார்கள். எப்போது சாப்பாட்டிற்காக அடுத்தவரின் கையை எதிர்பார்க்கவேண்டி வந்ததோ அதிலிருந்து மற்றவர்களின் வீட்டின் வாசற்படியேற தயக்கமாகி விட்டது அவளுக்கு. கணவர் இறந்த பின் அவளால் தன்னுடைய தேவைகளைக் குறைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் நடந்ததை  புரிந்துக் கொள்ளாமல் வயிறு அழிச்சாட்டியம் செய்தது.
     மணி எப்படியும் எட்டரைக்கு குறையாமல் இருக்கும். இன்று என்ன இவ்வளவு நேரம்! பள்ளிக் கூடத்திற்கு நேரமாகிவிட்டதே! ‘சியாமளா இன்று நேரம் கழித்து எழுந்தாளோ என்னவோ!’ என்று வாய்க்குள் முனகியபடியே திண்ணையில் அமர்ந்தாள் கோதாவரி.
     கோதாவரிக்கு இந்த கார்த்திகையோடு அறுபத்தி இரண்டு வயது முடிகிறது. இருந்த ஒரு பிள்ளை ஏழு வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்து போக தம்பி வீட்டிற்கு அருகிலிருந்த இடத்தில் குடிசை போட்டு தங்கிக் கொண்டாள். முதியோர் பென்சனும் தம்பி  கொடுக்கும் சொற்ப பணமும் அவளது வாழ்க்கையை ஓட்ட போதுமானதாய் இல்லை. கஷ்ட ஜீவனத்தோடு நில்லாமல் இப்போது உடம்பு வேறு படுத்தத் தொடங்கி விட்டது. கழுத்தெலும்பு வலிக்கிறது என்று அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போனால் தலை மேல் கனமாய் வைத்துத் தூக்கக் கூடாது என்று சொல்லி மஞ்சள் நிறத்தில் மாத்திரை கொடுத்தாள் டாக்டரம்மா. அதுமட்டுமல்லாமல் அடிக்கடி நிதானம் தவறிப் போகிறது கோதாவரிக்கு.
     தம்பியின் மனைவி கங்கா இருந்தவரை நாத்தியைத் தேடி வந்து மூன்று வேலை உணவையும் கொடுத்து விட்டுப் போவாள். வீட்டுப் பெண்ணின் வயிறும் மனமும் வாடினால் தன் குடும்பம் வாடும் என்ற அவளது நம்பிக்கை இவளது வயிற்றுப் பாட்டை கவனித்துக் கொண்டது. நான்கு மாதங்களுக்கு முன் எதிர்பாரா விபத்தில் அவளும் போய் சேர்ந்து விட இப்போது தம்பியில் மருமகள் போடும் சோற்றை எதிர் பார்க்க வேண்டியதாய் இருக்கிறது. கங்கா போனதற்கு தான் போய் சேர்ந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வாள் கோதாவரி.
     தெருவில் சைக்கிளை ஓட்டியபடி சென்ற பால்கார சேகர்  “என்ன அத்தை சாப்பிட்டாச்சா!” என்றான். “இல்லடாப்பா! எல்லாம் இனி தான்!” என்றாள். “! இன்னிக்கி என்ன வெரதமாஎன்றவாறு சைக்கிளை மிதித்தபடி சென்றுவிட்டான். ‘அதொன்னு தான் கொறையா இருக்கு!’ என்று நினைத்துக் கொண்டாள் கோதாவரி. நன்றாய் இருந்த காலத்தில் சோமவாரத்திலிருந்து சனிக்கிழமை வரை ஏதாவது ஒரு விரதத்தைக் கடைபிடிக்கவே செய்திருந்தாள். அதனால் ஏதாவது பலன் இருந்ததா என்று அவளுக்கு சந்தேகமாகவே இருந்தது.
     காலை வெயில் தெருவை இரக்கமின்றி சுட்டெரித்துக் கொண்டிருந்தது. பள்ளத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பைப்பில் இன்னமும் தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. திலகாவும், வசந்தியும் குழிக்குள் வைக்கப்பட்டிருந்த அன்னகூடையிலிருந்து தண்ணீரைக் கோரி தங்கள் குடத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி நிறைய குடங்கள் இருந்தன. பள்ளிக் கூடத்திற்கு செல்லும், ரெட்டை ஜடை போட்டு மடித்துக் கட்டிக் கொண்டிருந்த இரு பெண்கள் பேசியபடி சைக்கிளில் கடந்துச் சென்றார்கள். அந்த தெருவிற்கு சொந்தமான ராமு நாய் இங்குமங்கும் அலைந்தபடியிருந்தது.
     கோதாவரியின் மேல் வயிற்றிலிருந்து ஒரு பொறி போல கிளம்பிய பசி கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றை ஆக்கிரமித்தது. தன் அரூபக் கைகளைத் தொண்டை வழியாக நீட்டி தலையை கிடுக்கிப் போட்டு இழுக்கத் தொடங்கியது. உள்ளே கரண்டி கிண்ணத்தில் தட்டப்படும் ஓசை கேட்டது. சாப்பிடுகிறார்கள் போல! சற்று நடந்துவிட்டு வரலாம் என்று உட்கார்ந்திருந்த திண்ணையை விட்டு எழுந்தாள் கோதாவரி.
     மகன் இறந்து, வருமானம் குறைந்த பின் இரண்டு மூன்று மாதங்கள் இருப்பதை வைத்து ஓட்டினாள் அவள். ஒண்டி கட்டைக்கு என்ன வேண்டி கிடக்குது என்று நினைத்தாள். செயலாய் இருந்த சமயத்தில் ஞாயிறு ஆனால் ஆடோ கோழியோ குழம்பில் கொதிக்கும். அதோடு ஏதேனும் ஒரு மீன் காரமான மசாலையில் முக்கியெடுக்கப்பட்டு பொறிப்பதற்காய் காத்துக் கிடக்கும். மகனுக்கு அதெல்லாம் இல்லாமல் ஞாயிறு விடியாது.      
     முதலில் நாக்கு தற்போதைய தரித்திர நிலைக்கு அடங்கமாட்டேன் என்று அடம் பிடிக்கத் தான் செய்தது. அப்போதெல்லாம் சாப்பாட்டு நேரத்தில் யார் வீட்டிற்காவது சென்று பேசத் துவங்குவாள் கோதாவரி. அவர்களும் பேச்சு சுவாரஸ்யத்தில் அவளுக்கும் சாப்பிடுவதில் கொஞ்சம் கொடுப்பார்கள். ஆனால் இது நெடுநாள் நிலைக்கவில்லை. இவள் போகும் நேரம் ஆண்கள் உள்ளறையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள். இவளோடு பேசும் பெண் உணவைப் பற்றி முற்றிலும் மறந்து பேசிக்கொண்டிருப்பாள். அதற்கு மேல் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தால் பட்டும் படாமலும் பதில் வரும். பிறகு அங்கிருக்க கோதாவரியாலும் முடியாது.
     தொடக்க காலத்தில் இதெல்லாம் மனதிற்கு வலி தருவதாய் இருந்தது. எத்தனை பேருக்கு மீந்துப் போன உணவையெல்லாம் கொடுத்திருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வாள். அந்த நேரம் அவள் பார்வை, மாட்டிற்கு போடப்படும் பழைய உணவைக் கூட ஆராயத் தவறாது. ஒருநாள் பழையதாய்ப் போனால் தான் என்ன இட்லி கெட்டா போய்விடும் என்று நினைக்கத் துவங்கியிருந்த காலம் அது. ஆனால் அவளது நேரமோ என்னவோ, அந்தத் தெரு மக்கள் பழைய உணவையும் வீணாக்காமல் வத்தல் பிழிந்தோ அல்லது வேறு ஏதாவதாக உருமாற்றியோ உண்பவர்களாக மாறிப் போயிருந்தார்கள். இப்போது சற்று பரவாயில்லை. அவள் நாக்கு ருசியான உணவு வகைகளைத் தேடுவதில்லை, இருந்தாலும் குறைந்த பட்சம் மூன்று வேளைகளாவது சாப்பிடத் தேவையாய் இருக்கிறது.
    நேரம், வயிற்றுத் தீயை முந்தவிட்டு, பொறுமையாய் நகர்ந்துக் கொண்டிருந்தது. ராமு நாயும் தானும் ஒன்றாகிவிட்டதாய் தோன்றியது கோதாவரிக்கு. அந்தத் தெருவில் சாப்பாட்டை எப்போதும் நினைத்துக் கொண்டே அலைபவர்கள், அதன் வாசனையால் தூண்டப்படுபவர்கள் தாங்கள் இருவரும் மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டாள் அவள்.
     பசி உக்கிரமாகத் துவங்கியது. இன்னும் பத்து நிமிடத்தில் கணேசன் வெளியே வந்து விடுவான். எப்படியும் சாப்பிட்டியா அத்தை என்று விசாரிப்பான். பிறகு சியாமளாவைப் பார்த்து, அத்தைக்கு நாலு இட்லி கொடு!’ என்பான். இட்லியின் சுவை இப்போதே நாவில் தெரிந்தது கோதாவரிக்கு.
     கங்கா இறந்த கொஞ்ச நாளைக்கு பழக்கத்தின் காரணமாக உணவு கோதாவரியைத் தேடி வந்து கொண்டு தான் இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல  தாமதமாய் வரத் தொடங்கியது. சிறு வயதிலிருந்தே அவளது வயிறு பசியைக் கண்டதில்லை. பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, ஆண்கள் சாப்பிடுவதற்கு முன் உணவைத் தட்டில் போட்டு சாப்பிடும் சுதந்திரம் அவளுக்கு இருந்தது. பழக்கமற்ற பட்டினியால் வயிறு இடும் ஓலம் தாங்க முடியவில்லை. அதனால் தம்பியின் வீட்டுத் திண்ணையில் சென்று காத்திருக்கத் தொடங்கினாள் கோதாவரி.
     ‘நீங்க வேணா பாருங்க! சாப்பிடற நேரத்துக்கு கரெக்டா வந்துடுவாங்கஎன்று சியாமளா சொன்னதாய் அமுதா ஒருமுறை சொன்ன போது நாண்டுக் கொள்ளலாம் போல தான் இருந்தது அவளுக்கு. ஆனால் அதற்கு தைரியம் வரவில்லை. அந்த நேரம், மறுபடி அந்த வீட்டு வாசலை மிதிக்கக் கூடாது என்ற வைராக்கியமெல்லாம் கூட எழுந்தது. அதெல்லாம் அடுத்த சாப்பாட்டு வேளை வரை தான். பிறகு சியாமளா போடும் கைப்பிடி சோற்றை எதிர்பார்த்து அவளது ஐம்புலன்களும் தவமிருக்கத் தொடங்கிவிட்டன.
     தன் குடிசைக்குச் சென்று ஒரு செம்பு தண்ணீரைக் குடித்து விட்டு வெளியே வந்தாள் கோதாவரி. காற்றில் மிதந்த படி வந்த ஒரு பிஸ்கட் பாக்கெட் முள் வேலியில் சிக்கியிருந்தது. அதை விடுவித்து உள்ளே பார்த்துவிட்டு மறுபடி காற்றின் கைகளில் கொடுத்துவிட்டு தெருவிற்கு வந்தாள்.
     இப்போது திலகா குடத்தை சுமந்தபடி தன் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தாள். கிண்ணத்தில் இட்லியையோ எதையோ ஊட்டியபடி, குழந்தைக்கு ராமுவை வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தாள் சந்திரா. ‘இதோ பாரு... ஜூ, ஜூ, ஜூபாப்பா சாப்பிடலைன்னா நீ மொத்தத்தையும் சாப்பிட்டுடு,’ என்ற கையிலிருக்கும் உணவை போட்டுவிடுவது போல பாவனை காட்டினாள். அவள் கையிலிருந்து விழப்போகும் உணவுக்காக கண்களில் உயிரைத் தேக்கியபடி ராமுவும், அப்படி விழுந்தால் அதை ராமு உண்ணுவதைப் பார்க்க குழந்தையும், ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். கோதாவரியைப் பார்த்ததும் கைகளால் கிண்ணத்தை மறைத்துக் கொண்டு எதிர்புறம் திரும்பிக் கொண்டாள் சந்திரா. ராமுவும் இப்போது அந்தப் பக்கம் மூச்சிரைக்க ஓடிச் சென்று தரை சேரப் போகும் இட்லிக்காக மூச்சிரைக்க தவமிருக்கத் தொடங்கியது.
     கேட் திறக்கும் சத்தம் கேட்ட கோதாவரிக்கு பக்கென்றானது. நேரமாகிவிட்டதோ! கணேசன் கிளம்பிவிட்டான் போல. இந்நேரம் திண்ணையில் இருந்திருந்தால் கண்டிப்பாய் கேட்டிருப்பான். அதுவும் இயற்கையாய் இருந்திருக்கும். இப்போது போனால் சாப்பாட்டுக்கு வந்தது போல தான் இருக்கும். ஆனாலும் மான ரோஷமெல்லாம் பாத்து ஒரு வேளை உணவை இழக்க  அவள் வயிறு தயாராக இல்லை. சற்றே வேகமாய் நடையை எட்டிப் போட்டாள்.
     வண்டியை வெளியே எடுத்துக் கொண்டிருந்தான் கணேசன். இவளைப் பார்த்ததும் பின்பக்கம் திரும்பி மகளின் ‘டை’யை சரியாக்க முற்பட்டாள் சியாமளா. வரப்போகும் வார்த்தைகளைப் பிடித்துக் கொள்ள மூச்சை உள்ளடக்கி, காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள் கோதாவரி. பெண்ணை வண்டியின் பின்னால் உட்கார வைத்து விட்டு வண்டியைக் கிளப்பிய கணேசன், ‘அத்தே! சாப்பிட்டுட்டு போங்கஎன்றான். அந்த சொற்கள் குளிர்ச்சியாய் செவி வழியே உள்ளே இறங்கி  நாவின் எச்சில் சுரப்பிகளை அவிழ்த்து விட்டது. நிச்சயமாகி விட்ட இந்த வேளையின் உணவு மற்ற எதையும் நினைக்க விட வில்லை. வயிறு பழக்கி வைத்த நாய் போல கர்ர்ர் என்றது. இன்னும் சற்று நேரத்தில் தனக்காக வரப்போகும் இட்லியைப் பற்றிய கனவுகளுடன் காத்திருக்கத் தொடங்கினாள் கோதாவரி. குழந்தையைச் சுற்றிப் போடப்பட்ட கடைசி வாய் உணவை வேகமாய் விழுங்கிக் கொண்டிருந்தது ராமு.
(19 செப்டம்பர் 2016,  திண்ணை) 







ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

அவளுக்கென்று ஒரு தினம்



     பெரு விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது  மகளிர் தின வாழ்த்துகளைச் சொல்லி தொலைபேசிக்கு வந்த அந்த தகவல் தாரிணியின் எண்ணங்களைச் சட்டென பிடித்து நிறுத்தியது. மனதிற்கு திருப்தியாய் ஒரு தினத்தைக் கொண்டாடி எத்தனை வருடங்கள் ஆகிறது! இப்போது வரும் விழாக்களெல்லாம் பலகாரங்கள் செய்வதிலும், அடுத்தவரைத் திருப்தி படுத்துவதிலுமே கழிந்து விடுகின்றன. தனக்கே தனக்கென்று ஒரு வேலையைச் செய்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன!

     இன்றைய தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று அவளது மனம் சொன்னது. எப்படி என்பதையும் அதுவே முடிவு செய்து கொண்டது. இன்று அவளுக்குப் பிடித்த வேலைகளை மட்டுமே செய்வது! அதாவது இந்த ஏழு மணி இருபத்தியாறு நிமிடம் இரண்டு நொடி முதல் மாலை ஆறு மணி வரை அவளுக்கே அவளுக்கான நேரம். ஒரு வினாடியைக் கூட வீணாக்காமல் முழுவதும் தனக்காகவே வாழ்வது என்று முடிவு செய்து கொண்டாள்.
    
     முதலில் தான் அவசர விடுப்பில் செல்வதாக அலுவலகத்திற்கு தெரிவித்தாள். பின்னர் தொலை பேசியை ஏரோப்பிளேன் மோடில் வைத்து,  பையினுள்ளே இருந்த சிறிய தடுப்பிற்குள் போட்டாள். இதோடு இவ்வுலகத்துடனான தொடர்பு அறுந்தது என்று நினைக்கையில் சந்தோஷமாய் இருந்தது அவளுக்கு.
    
     சுற்றியிருந்த  மனிதர்களை நோக்கி தன் கவனத்தைத் திருப்பினாள். அவளுக்குப் பக்கத்தில் உடார்ந்திருந்த மாணவன் புத்தகத்திற்குள் தலையை புதைத்துக் கொண்டிருந்தான். அன்று ஏதேனும் ப்ரீட்சை இருக்கக் கூடும். ரயிலில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் காதில் ஹெட் போன்களை மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டோ அல்லது தொலைபேசியை விரல்களால் தடவியபடியோ இருந்தார்கள். கதவருகே நின்றுக் கொண்டிருந்த ஆடவன் சத்தமாய் சீன மொழியில் பேசியபடி இருந்தான்.   அனைவரின் செயல்பாடுகளிலும் மறைமுகமாய் ஒரு அவசரம் தெரிந்தது. அவர்களிலிருந்து தான் வேறுபட்டவள் என்று தோன்றியது தாரிணிக்கு. அங்கிருந்த அனைவரும் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவளுக்கு அப்படியொன்று இப்போதைக்கு இல்லை. முக்கியமாய் அவள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியது இல்லை. நேரமாகிவிட்டது என்று விரையத் தேவையில்லை. ஆர்சர்டில் இறக்கிய உடன் பேருந்து வரவேண்டுமே என்று கடவுளிடம் வேண்டத் தேவையில்லை. பேருந்து வாகன நெருக்கடியில் மாட்டாமல் செல்ல வேண்டுமே என்று பயப்படத் தேவையில்லை. தன்னைப் பிணைத்திருந்த தளைகள் அனைத்தையும் அறுத்துவிட்டதாகவும் தான் காற்றில் மிதப்பதாகவும் கற்பனை செய்துக்கொண்டாள்.
    
     இப்படி இருந்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. இலக்கியா தொடக்கப்பள்ளி செல்லும் வரை அவளைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்டிருந்தாள். அப்போது இது போன்ற அவசரங்கள் இல்லாமல் பொறுமையாய் வேலைகளைச் செய்ய முடிந்தது அவளால். வீட்டிலிருந்து பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி இருந்தாலும், அப்போது நிம்மதியாய்  இருந்தோமா என்று யோசித்துப் பார்த்தாள். காலை எழுந்து பிரபு வேலைக்குச் செல்வதற்குள் சமைக்க வேண்டும். செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதால் அவன் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் செல்பவனாய் இருந்தான். அப்போது அவளுக்கு இப்போதிருக்கும் பொருளாதாரச் சுதந்திரம் இருக்கவில்லை. வீட்டுச் செலவிற்கென்று குறிப்பிட்ட தொகையை அவளுக்கு பிரபு கொடுத்து வந்தாலும், அவளுக்கு விருப்பமான சட்டையையோ, செருப்பையோ வாங்க அவள் பல முறை யோசிக்க வேண்டியிருந்தது. அவனிடம் அனுமதி கேட்க வேண்டியிருந்தது.

     இப்போதும் இவள் நினைத்தபடியெல்லாம் சம்பளத்தை செலவு செய்ய முடியாது தான். சென்ற வருடம் தாரிணியின் அப்பாவிற்கு உடம்புக்கு முடியவில்லை. அவளது வீட்டில் பண நெருக்கடி ஏற்பட்டிருந்த நேரம், கொடுத்து உதவலாம் என்று சொன்ன போது, அப்படி கொடுக்கும் பணத்தை திரும்பப் பெறுவது சிரமம் என்று சொல்லிவிட்டான் பிரபு. அந்த மாதம் முஸ்தஃபாவிற்குச் சென்று ஐந்தரை பவுனில் நெக்லஸ் வாங்கிய போது அவளுக்கு ஏற்பட்ட உறுத்தல் இப்போதும் அந்நகையைப் பார்த்தால் எழவே செய்கிறது. அவனது தாய்க்கு செலவு செய்வதில் அவனுக்கு இது போன்ற தடைகள் எதுவும் இருந்ததில்லை! இது நம்மவர்களின் பாரம்பரியம் என்று தோன்றியது தாரிணிக்கு. பிரபுவாவது பரவாயில்லை மாதமொரு முறை பணத்தை தாரிணியின் கையில் கொடுத்து வந்தான். அவளது தாய்க்கு கணவனிடம் ஒவ்வொரு செலவையும் சொல்லி பணம் கேட்டே செலவு செய்ய வேண்டியிருந்தது. அதற்கும் அவளது தாய் சரியான கணக்கைச் சொல்லியாக வேண்டும்!

     ரயில் ஆர்சர்டில் நின்ற போது, அதிலிருந்து இறங்காமல் மற்றவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்குள் கிலேசத்தை ஏற்படுத்தியது. அவளுக்கு பழக்கமான ஒரு ரயில் நிலையத்தை அவள் பின்தள்ளி விட்டுப் போகிறாள். முதன்முறையாக அவளுக்கென்று சமுதாயம் ஏற்படுத்தி வைத்திருந்த விதிகளை மீறுகிறாள். மனம் சட்டென்று குறும்புத் தனம் செய்யப் போகும் ஒரு சிறுமியைப் போல உற்சாகம் கொண்டது. தான் இப்படி வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டு ஊர் சுற்றுவது தன் கணவனுக்குத் தெரிந்தால் என்னவாகும்! அவனது அதிர்ச்சியைக் கற்பனை செய்து பார்க்கும் போது சந்தோஷமாய் இருந்தது. அவன் நினைத்தாற் போல தன் நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு வருவதெல்லாம் கணக்கில்லை. ஆனால் பெண்கள் தன் ஓய்வு நேரத்தைக் கூட குடும்பத்திற்காகவே செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் அவன்.
    
     தாரிணி அப்படியெல்லாம் வளர்ந்தவள் இல்லை. அவளது அப்பா, மனைவியின் மீது கட்டுப்பாடுகளைச் சுமத்தினாலும், அவள் மீது அன்பு செலுத்தினார். திருமணம் வரை மகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தரும் தந்தையாகவே இருந்தார். விடுமுறையின் போது தோழிகளோடு வெளியே சென்று வருவதற்கெல்லாம் அனுமதி பெறும் அவசியமே அவளுக்கு இருந்ததில்லை. எங்கே போகிறாள் என்ற தகவலைத் தெரிவிப்பது மட்டுமே போதுமானதாய் இருந்தது. மனைவிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆண்கள் மகளிடம் குழைந்து போய்விடுவதும் வழி வழியாய் வருவது போல என்று நினைத்துப் புன்னகைத்துக் கொண்டாள் தாரிணி. அதே பழக்கத்தில் திருமணமான புதிதில் வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு தோழியின் பிறந்தநாளைக் கொண்டாட வெளியே சென்று விட்டாள் தாரிணி. மாலை அதைச் சாதாரணமாய் பிரபுவிடம் தெரிவித்த போது திகைத்துப் போய்விட்டான். இரண்டு நாட்களுக்கு அவளுடம் முகம் கொடுத்தே பேசவில்லை. மூன்றாவது நாள் தாயிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்த போது தான் தனது வீட்டிற்கு அழைத்து அதைப் பற்றி பேசியிருக்கிறான் என்று தெரிந்தது அவளுக்கு. அருகிலேயே இருக்கும் அவளோடு பேசியிருந்தால் சுலபமாய் தீர்ந்து போயிருக்கக் கூடிய ஒரு விஷயம், அவனது நடவடிக்கையால், மனதில் ஆழமான கோட்டைக் கிழித்து விட்டது. தான் கற்பனை செய்து வைத்திருந்த வாழ்க்கையிலிருந்து நிஜ வாழ்கை முற்றிலும் வேறுபட்டது என்ற புரிதல் அவளுக்கு ஏற்பட்டது அன்று தான்.

     சிட்டி ஹால் எம்.ஆர்.டி நிலையத்தில் இறங்கி வெளியே வந்தாள் தாரிணி. நன்றாய் உடுத்திக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக விரைந்தபடி இருந்தார்கள். கட்டிடத்திற்கு மேலே தெரிந்த மிகப் பெரிய திரையில் தோன்றிய விளம்பரத்தைச் சற்று நேரம் பார்த்தபடி இருந்தாள். திடீரென்று அவளுக்கு ஒரு பெரிய உணவகத்தில் தனியே அமர்ந்து இதுவரை சாப்பிடாத உணவை உட்கொண்டு தன்னுடைய இந்த  தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று தோன்றியது.
    
     எதிரே தெரிந்த கேப்பிட்டல் ப்ளாஸாவிற்குள் நுழைந்தாள். ஒவ்வொரு கடையையும் மனதிற்குள் ஆராய்ந்து ஒரு ஜப்பானிய உணவகத்தைத் தேர்ந்தெடுத்தாள். மெனுவில் இருந்த அன்னிய உணவு வகைகளை சிரமப்பட்டு எழுத்துக் கூட்டிப் பார்த்து, அன்கோ நாபே என்று அவளால் படிக்கப்பட்ட உணவை கொண்டு வரும் படி  செய்தாள். ஈரல், மீன் மற்றும் காய்கறிகளைக் கொண்டு செய்யப்பட்ட அந்த உணவு நாவிற்குப் பழகப்படாததாய் இருந்தாலும், அப்போதிருந்த மனநிலையில் ருசியாய் இருந்தது. நூற்றி இருபது வெள்ளிகள் கட்டி விட்டு வெளியே வந்த போது மனம் திருப்தியாய் இருந்தது. நிச்சயம் பிரபு உணவிற்கு இவ்வளவு செலவு செய்ய மாட்டான். என்றோவொரு நாள் இது கூட செய்யவில்லை என்றால் எப்படியென்று நினைத்துக் கொண்டாள்.

     இப்போது அவளுக்கு தனியே அமர்ந்து  கடலைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. மறுபடி ரயில் நிலையத்திற்குள் நுழைந்து பாசிர் ரிஸ் நோக்கி பயணத்தைத் தொடர்ந்தாள். இப்படி மனம் போன போக்கில் திரிவதில் கூட  சுகம் இருப்பதை அவளால் உணர முடிந்தது.

     தாரிணி எங்கே செல்வதாக இருந்தாலும் பிரபு அவளுடன் வருவதை விரும்புவான், அது அவளது தாய் வீடாக இருந்தாலும் சரி! இருவரும் சென்றால் கூட, அங்கு செல்ல  தகுந்த காரணம் இருக்க வேண்டும். அவனுக்கு நேரம் ஒழிய வேண்டும். தனியாக தன் தாயுடன் நேரில் சில வார்த்தைகள் பேசலாம் என்றால் கூட தாரிணியால் முடியாது! அவனுடனே சென்று அவனுடனே திரும்பி விட வேண்டும். அதனால் அவள் தன் பயணங்களை வெகுவாக குறைத்துக் கொண்டாள். அவள் தாய் வீட்டிற்குச் சென்றே மாதக் கணக்காகி விட்டது.

     பாசிர் ரிஸில் இறங்கி  பேருந்தைப் பிடித்து கடலை அடைந்த போது மணி ஒன்றை நெருங்கியிருந்தது. கடல் காற்று இதமாய் வீசிக் கொண்டிருந்தது. அந்த நேரத்திலும் கடலை  ரசிக்க வந்திருந்த  சிலரை அவளால் பார்க்க முடிந்தது. அங்கிருந்த மரத்தின் நிழலில் இருந்த இருக்கையில் முகத்தை மூடிக் கொண்டு ஒரு வயதானவர் படுத்திருந்தார். அவருக்கு சற்று தள்ளியிருந்த குப்பைத் தொட்டிக்கு அருகே பாதி உணவை மட்டும் சாப்பிட்டு விட்டு பொட்டலத்தோடு யாரோ எறிந்திருந்தார்கள். அதிலிருந்த சோற்றை புறாக்கள் இறைத்து கொத்திக் கொண்டிருந்தன. பூனையொன்று தன் நிழலுடன் சேர்ந்து, எதைப் பற்றிய கவலையுமின்றி மெல்ல அவளைக் கடந்து சென்றது.
    
     அவள் நிதானமாய் கடலை நோக்கி நடந்தாள். காற்று ஏற்படுத்திய சலனத்தில் கடல் நீர் அசைந்தாடியபடி இருந்தது. அவளுக்கு கடலை மிகவும் பிடிக்கும். தனியே அமர்ந்து கடலை ரசித்து நிறைய நாட்கள் ஆகியிருந்தன. சிறிது நேரம் காற்சட்டை நனைய கடலுக்குள் நின்றாள். தூரத்தில் தெரிந்த கப்பல்களை எண்ணிப் பார்த்தாள். ஆறு கப்பல்கள் மிதந்துக் கொண்டிருந்தன.
கொஞ்சம் நேரம் ஈர மணலில் அமர்ந்தாள். மணல் வீடு கட்டி, சுரங்கப்பாதை அமைத்தாள். அதன் பக்கத்தில் தன் பெயரை விரலால் எழுதினாள். இலக்கியா இதையெல்லாம் ரசிப்பாள் என்று தோன்றியது அவளுக்கு. இன்னொரு நாள் அவளையும் பிரபுவோடு சேர்த்து அழைத்து வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
    
     கிட்டத்தட்ட மூன்று மணியான போது மண்ணை உதறிக் கொண்டு கிளம்பினாள். ஏதாவது ஒரு நூலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணினாள். இப்போது எதிர் எல்லையை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. அதனால் ஜீராங் ஈஸ்ட் நூலகத்திற்கு பயணித்தாள். அவளுக்கு திருமணத்திற்கு முன் ஓரளவு புத்தகங்கள் படிப்பதில் விருப்பம் உண்டு. திருமணத்திற்குப் பின், புத்தகங்கள் புரட்சி எண்ணத்தை புகுத்தி, பெண்களின் மனதைக் கெடுப்பவை என்ற பிரபுவின் நம்பிக்கையை அவளும் பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவளுக்கு புத்தகங்களின் மீது காதலே பிறந்தது. தன் வாழ்கையை பிரபு நிர்மாணிப்பதாய் தோன்றத் துவங்கிய கணம் வரை நூலகங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட்டிராத அவள், புத்தகங்களை இரவல் பெற்று அவன் இல்லாத நேரத்திலெல்லாம் படிக்க தலைபட்டாள். நிஜ உலகை விட்டுத் தப்பிச் செல்லும்  புஷ்பக விமானக்களாய் அமைந்தன புத்தகங்கள்.

     தன் மனதிற்குப் பிடித்ததாய் தோன்றிய புத்தகங்களையெல்லாம்  எடுத்து வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தாள் தாரிணி. அதிலிருந்து ஒரு நாவலை எடுத்து வாசிக்கத் துவங்கினாள். குளிரூட்டப் பட்ட அறையில் ரமணிச்சந்திரனைப் படிப்பது சந்தோஷமாய் இருந்தது. அந்த கதையின் கதாநாயகியாக தன்னை கற்பனை செய்துக் கொண்டாள். அவளைத் தவறாய் நினைத்து நாயகன் துன்புறுத்திய போது அழுதாள். பின்னர் உண்மை தெரிந்து நாயகன் மன்னிப்பு கேட்ட போது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. அப்புத்தகத்தை படித்து முடித்த போது, ஒரு ஜென்மத்து வாழ்கையை வாழ்ந்து முடித்த திருப்தியில் அவள் நெஞ்சு நிறைந்திருந்தது. அந்த நிறைவு முகத்தில், தெரிய தொலைபேசியை உயிரூட்டி ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டாள்.
    

     சரியாய் ஆறு மணிக்கு நூலகத்தை விட்டு வெளியே வந்த போது, இந்த நாளின் இனிய நினைவுகளோடு மற்ற நாட்களைக் கடந்து விட முடியும் என்று நினைத்துக் கொண்டாள் அவள். தன் ரகசிய தினத்தின் நினைவாக, ரயில் நிலையத்திற்கு அருகே டிஷ்யூ விற்றுக் கொண்டிருந்த பாட்டிக்கு ஐம்பது வெள்ளியைப் போட்டாள். பின்னர் ஏரோப்ளேன் மோடிலிருந்து தொலைபேசியை விடுவித்து, அன்று கணவனிடமிருந்தும், தாயிடமிருந்தும், தோழியிடமிருந்தும் வந்திருந்த தகவல்களை ஆராய்ந்த போது அவளுக்கு துக்கமாய் இருந்தது.

(செராங்கூன் டைம்ஸ், ஏப்ரல் 2016)

வியாழன், 25 டிசம்பர், 2014

ஆலம் விழுது


 

   செடிகளின்  வேர்களுக்கு சுடுநீரை ஊற்றிவிடப்போவதாக க்ளாரா மிரட்டிய தினத்திலிருந்தே சரோஜா பாட்டிக்கு தூக்கம் கொள்ளவில்லை. அன்றிரவு, செம்பருத்திகளையும் ரோஜாக்களையும் அபரிதமாய் கொண்டிருந்த செடிகள் அவரிடம் வந்து தம்மைக் காப்பாற்றுமாறு  கண்ணீரோடு முறையிடுவதாகக் கனவு கண்டார். அவற்றைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் நேரம் கொதிநீரைக் கொண்டு வந்து கொட்டினாள் க்ளாரா. திடுக்கிட்டு விழித்த போது, சுடுநீர் தன் மீது தெறித்தாய் தோன்றிய உணர்வு மிக உண்மையானதாக இருந்தது, அவருக்கு. அது கனவு என்று அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. வெளியே சென்று செடிகளின் பாதுகாப்பை உறுதி செய்துக் கொண்ட பின்னும் உறக்கம் வரவில்லை.

   அன்றிலிருந்து மூட்டு வலி, முதுகு வலி போன்ற உடல் உபாதைகளெல்லாம் அவருக்கு ஒன்றுமற்றதாய் போய்விட்டது. நடுநிசியில் மெல்லிய சத்தம் கேட்டாலும் சட்டென்று சன்னல் வழியாக எட்டிப் பார்க்கத் தொடங்கினார். அவருக்கு தான் செடிகளை தொட்டியோடு தூக்கிக் கொண்டு போய் எங்கோ ஒளித்து வைப்பதாகவும், வைத்த இடத்தை மறந்து போய் அலைவதாகவும் கனவுகள் வரத் துவங்கின. கனவுகள் பூதங்களாய் பயமுறுத்தத் துவங்கிய நேரத்தில், ஆஸ்திரேலியாவிலிருந்து தொலைபேசியிருந்த  பேரன் ராசுவிடம் அதைப் பற்றிச் சொன்ன போது அவருக்கு அழுகை வந்தது. இந்த சனிக்கிழமை வருவதாய் சொல்லியிருந்த அவன் ஏதோவொரு தீர்வைக் தன்னோடு நிச்சயமாய் கொண்டு வருவான் என்று நம்பினார்.

   இரண்டு வருடங்களுக்கு  முன் ஆஸ்திரேலியா சென்ற பேரன், படிப்பு முடிந்து சிங்கப்பூருக்கு வரப்போகிறான் என்ற செய்தியே பாட்டிக்கு தெம்பையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. சரோஜா பாட்டிக்கு ராசுவின் மீது தனி வாஞ்சை உண்டு. தாயும் தந்தையும் வேலைக்குச் சென்ற காரணத்தால் பன்னிரெண்டு வயது வரை இவரிடம் முழுமையாக வளர்த்த பேரன் அவன். கடந்த இரண்டு வாரங்களைப் பேரன் வரப்போகிற அன்றைய தினத்தை நோக்கியே நெட்டித் தள்ளி வந்திருந்தார் சரோஜாப் பாட்டி. அவனுக்காக ஏதேனும் சமைக்க வேண்டும் என்று அவர் மனம் பரபரத்தது.


தனக்காக ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் தானே எல்லாவற்றையும் வாங்கி வருவதாகவும் அவன் சொல்லியிருந்தான். இருந்தாலும் அவருக்கு மனசு கேட்கவில்லை. பேரனுக்கு பிடித்த கோழியையாவது வாங்கிப் பொரிக்க வேண்டும் நினைத்துக் கொண்டார்.

   ஆகவேண்டிய வேலைகளை கவனிப்பதற்காக எழுந்த பாட்டி மூக்குக் கண்ணாடிக்காக தன் பக்கத்தில் இருந்த மேசையைத் தடவினார். அங்கே இல்லாமல் போகவே கண்களைச் சுருக்கி பார்த்தபடி, சலவை இயந்திரத்தின் பக்கத்தில், குளிர்பதன பெட்டிக்கு மேலே, சாப்பாட்டு மேசையின் மேலே, நாற்காலியில் என்று கவனமாய் கைகளால் தடவிக் கொண்டே வந்தார். கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்ததில் லேசாக தலையைச் சுற்றுவது போல இருந்தது. மின்விசிறியைப் போட்டுவிட்டு சற்று நாற்காலியில் அமர்ந்தார்.

   இப்போதெல்லாம் அவரால் முன்போல தொடர்ந்து வேலை செய்ய முடிவதில்லை. மயக்கமா தூக்கமா என்று புரியாத ஒரு சுழலுக்குள் அவரது மனமும் உடலும் அவ்வப்போது சென்று விடுகிறன. ஏதோ ஒரு கதையில் ராட்சஸன் ராஜகுமாரியைக் கடத்திச் சென்றது போல யாரோ தன்னை இந்த உலகத்திலிருந்து மாயாலோகத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் பின், தான் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் அவர் கற்பனை செய்துக் கொள்வார்.  அடிக்கடி ஆட்கொண்ட இந்த மனப்பெயர்ச்சி சோர்வைத் தருவதாக இருந்தது. தன் சொந்த வேலைகளை முடிக்க அது ஒரு தடையாக இருந்தது. இதனால் ஒரு சாதாரண வேலை கூட மலையாகத் தோற்றமளித்தது. அதை முடிப்பதற்குள் திணறிப்போனார்.

    முன்பெல்லாம் அவர் சுறுசுறுப்பிற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. பிள்ளைகள் வளர்ந்து கல்லூரிக்கும் வேலைக்கும் சென்ற பின் இவர் தனக்கென்று வேலைகளைத் தேடிக் கொண்டார். செம்பாவாங்கிலிருந்த பாலர் பள்ளி ஒன்றில் துப்புரவாளர் வேலையை முடித்து விட்டு அதே மூச்சில் ஜீராங் ஈஸ்ட்டில் ஒரு அலுவலகத்தை சுத்தம் செய்ய கிளம்பிவிடுவார். அதையும் முடித்து விட்டு கொஞ்சம் கூட அலுத்துக் கொள்ளாமல் வீட்டிற்கு வந்து பிள்ளைகளுக்கு உணவு பறிமாரி, மறுநாளைக்கான கறி சமைத்து, வீட்டையும்  துப்புரவாக துடைத்து அதன் பின் தான் படுப்பார். இது போல கிட்டத்தட்ட பதிநான்கு வருடங்கள். நாடி தளர்ந்து போன இன்றைய நாட்களில் அதை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்வார்.

   பெண் மற்றும் பிள்ளைகளோடு போய் இருக்க அவர் என்றும் விரும்பியதில்லை. முடிந்தவரை மற்றவற்களுக்கு உதவியாக இருக்க வேண்டும், முடியாவிட்டால் உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும் என்பது அவரின் கொள்கை. உடம்பு முடியாவிட்டால் இப்போது குளிக்காமல் கொள்ளாமல் கூட ஒரு நாள் ஓய்வாக படுத்துக் கொள்ளலாம். அடுத்தவர் வீட்டில் அப்படி இருக்க முடியுமா! சில இரவுகளில் சிறுநீரை அடக்க முடியாமல் போய் விடுவது உண்டு. அப்போது கொஞ்சமாய் நனைந்து போகும் துணிகளால் அவமானப்பட நேருவதில்லை. மற்றவருக்காக கவலைப்பட தேவையற்ற இந்த வாழ்க்கை வாழ்வதற்கு சுலபமாய் இருந்தது. என்ன, பேசுவதற்கு தான் ஆட்கள் யாரும் இல்லை!

   அப்படியொன்றும் போட்டியிட்டுக் கொண்டு இவரை தன்னுடன் வைத்துக் கொள்ள பிள்ளைகள் யாரும் ஆசைப்படவும் இல்லை. வாரம் ஒருமுறை தொலைபேசுகிறார்களே அது போதாதா! அவர்கள் பிள்ளை குட்டிகளை வைத்துக் கொண்டு தன் புறாக் கூண்டுக்குள் நிம்மதியாய் இருந்தால் போதும் என்று தன்னை சமாதானப் படுத்திக் கொள்வார். கொஞ்சம் ஏமாந்தால் இப்படி தான்! ஏதேதோ நினைப்புகள் ஆளை விழுங்கி விடுகின்றன. ‘இன்று உட்கார நேரமில்லை!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே நாற்காலியிலிருந்து எழுந்துக் கொண்டார்.

   உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திரிக்கும் போதே பூட்டுக்கு பூட்டு வலித்தது. கூடத்தைக் கடந்து குசினிக்குள் நுழையும் போது மூச்சு வாங்கியது. சற்று நிதானித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்துவிட்டதில் அடுப்பு பிசுக்கேறிப் போயிருந்தது. கண்ணாடியை சற்று மறந்து, அதை சுத்தப் படுத்துவதில் முனைந்தார். அடுப்பைத் துடைத்து முடிப்பதற்குள் கை வலியெடுத்துக் கொண்டது. அந்த வேலையை முடித்துவிட்டு நாற்காலியில் மறுபடி சென்று அமர்ந்துக் கொண்டார்.

   சாலையில் சென்ற தீயணைப்பு வண்டி அமைதியைக் கிழித்துக் கொண்டு அலறியது. அந்த சத்தம் தூரம் சென்று தேய்ந்த பின் நிசப்தம் ஆக்கிரமித்துக் கொண்டது. முன்பைவிட சப்தமின்மையின் வீர்யம் இப்போது  அதிகமாகி விட்டதாய் தோன்றியது அவருக்கு. இப்போதெல்லாம் அவரால் இந்த தனிமையைத் தாங்க முடிவதில்லை. பிள்ளைகள் ஓடி விளையாடிய வீடு, எப்போதும் கூச்சலும் குழப்பமுமாய் இருந்த வீடு, யாருமற்றிருப்பது பொட்டற்று வெறிச்சிடும் நெற்றி போல காட்சியளித்தது.

   குழந்தைகள் சிறுவர் சிறுமியராய் இருந்தவரை வேலைகள் சரியாய் இருந்தது சரோஜாவுக்கு. ஒரு புத்தகம் படிக்கக் கூட அவருக்கு நேரமிருக்காது. காலையில் பள்ளிக்குச் சென்ற மகள் திரும்பி வரும் நேரம் மகன் கிளம்ப தயாராகிக் கொண்டிருப்பான். இதில் கைக்குழந்தையாய் சிறியவன் வேறு. கணவர் மற்றும் மகன் வீடு திரும்பும் நேரத்திற்குள் மற்ற வேலைகளை முடிக்கவேண்டும். ஆரம்பகாலங்களில் இவர்கள் வீடு திரும்பும் நேரம் நோக்கியே அவரது வாழ்க்கை நகர்ந்தது. சரோஜா என்றும் வேலைக்கு அஞ்சியவர் இல்லை. இழுத்து செருகிக் கொண்டு ஆரம்பித்தால் வேலைகள் சட் சட்டென்று முடிந்துவிடும்.

   பிள்ளைகள் ஒவ்வொருவராய் திருமணம் முடிந்து சென்று, பின் கணவரும் இறந்த பின் கவிந்த இந்த சப்தமின்மை தான் அவருக்கு தாங்கமுடியாததாக இருந்தது. சேவாவுக்கு ஆளை வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். கண்ணாடி வைத்த இடத்தை அவரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. வர வர மறதி வேறு அதிகமாகிக் கொண்டு வருகிறது. ‘ஒலியில் சொல்லும் ராயல் ஃபுட்ஸ்சை முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் அவர்.

   கடைக்குச் செல்வதற்காக வீட்டின் கதவைத் திறந்த போது, வாசலிலிருந்த செடிகள், காய்ந்த இலைகளை உதிர்த்துவிட்டு பளிச்சென்று காட்சியளித்தன. இவை வந்த நேரம் இவர் வாழ்க்கை சற்று மாறிப் போயிருந்தது. நட்டநடுவில் இருந்த செம்பருத்தி செடி தான் முதலில் வந்தது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டிற்கு முன் அவளுடைய தோழி கொடுத்தது. அப்போது அது இவ்வளவு தூரம் கிளைத்திருக்கவில்லை. அன்புக்கு ஏங்கும் சோனிக் குழந்தையைப் போல ஒடுங்கிப் போயிருந்தது. அதற்கு, தண்ணீர்விட்டு, பேசி, கொஞ்சி, அதை பாசத்தோடு தடவி கொடுக்க சட்டென்று வளர்ந்துவிட்டது. அதற்கு அடுத்து இருக்கும்பட்ரோஸ் இவராக கேட்டு வாங்கி வந்தது. நடுவே இருக்கும் தக்காளிச் செடி இரண்டு மாதங்களுக்கு முன் மகள் வயிற்று பேரன் சிவா கொண்டு வந்தது. பள்ளியில் பாட சம்பத்தமாக விதைகளை விதைத்தவன் அதை இங்கே வைத்துவிட்டு போயிருந்தான். பாட்டியின் சற்றே சோம்பேறியான செல்லக் குழந்தை அது. முதல் இலை வெடித்து கிளம்ப கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் பிடித்தது. இளம்முடிகளைக் கொண்ட ஒரு குழந்தையின் பிஞ்சு உடலை நினைவுபடுத்தும் அதன் இளம் காம்புகளைத் தடவி தடவிப் பார்ப்பாள் பாட்டி. அவ்வப்போது அதை கோபத்தில் திட்டினாலும் அவள் மனம் பொறுக்காது. பாட்டியின் கொஞ்சலும் கெஞ்சலும் அதற்கு புரிந்தது போல இருந்தது, அதன் வளர்ச்சி. இப்படியாக ஏதோவொரு காரணத்தோடு  சேர்ந்து போன செடிகளின் வரிசை இப்போது மின் தூக்கிவரை நீண்டுவிட்டது.

   காலையில் எழுந்தவுடன் ரோஜா பாட்டி நேரம் செலவழிப்பது இந்த செடிகளோடு தான். பழுத்திருக்கும் இலைகளை நாசூக்காய் கிள்ளி. அழுக்கடந்திருக்கும் இலைகளை சுத்தமான துணியால் துடைத்து, கண்பட்டுவிடும் என்று  பூக்களை உள்பக்கமாய் வளைத்து விட்டு, பின் தேவையான அளவு தண்ணீர் தெளித்தோ ஊற்றியோ விடுவார். இவற்றின் காரணமாகவே அவர் வெளியே எங்கும் தங்குவது கிடையாது. கொப்பும் கிளையுமாக செழித்து வளர்ந்திருக்கும் இந்தச் செடிகள் பாட்டிக்கு இதம் தருவதாய் இருந்தன.

   அவருக்கு நிம்மதியைக் கொடுத்த அவை, அக்கம்பக்கத்தாருக்கு தொல்லையாய் அமைந்தது தான் பிரச்சனையாகிப் போனது. முதலில் கிளைகள் வெளிச்சத்தை மறைப்பதாய் புகார் செய்தாள் பக்கத்துவீட்டுப் க்ளாரா. அதன்பின் மற்றொரு நாள், அவளது பிள்ளை சீக்கில் படுத்ததற்கு அதிலிருந்து கிளம்பிய கொசுக்களே காரணம் என்று கோபத்தோடு கத்திய போது தான் அதன் வேர்களில் சுடுநீர் ஊற்றப் போவதாக சொன்னாள். அதைக் கேட்ட பாட்டியின் உயிர்க்குலை ஆடிப் போயிற்று.

குழந்தைகளாய் வளரும் இந்த பிஞ்சுகள் துடித்துப் போய்விடாதோ! அவள் பிள்ளைக்கு சீக்கு வந்ததற்காக என் பிள்ளைகளைக் குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்என்றெல்லாம் தனக்குத் தானே புலம்பியபடி இருந்தார். க்ளாரா அப்படி சொன்ன தினத்திலிருந்து பேரனின் வரவிற்காக காத்திருக்கும் இந்த நிமிடம் வரை அவள் சொன்னதை எண்ணி அவரது மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது.

   ராசு தன் இரண்டு கூட்டாளிகளோடு வந்த போது மணி மூன்றாகியிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் பார்த்ததை விட  உயரமாகியிருந்தான். அவனைப் பார்க்க பார்க்க பாட்டிக்கு நெஞ்சு நிறைந்து போனது. கையோடு பாட்டிக்கு பிடித்த இறைச்சி பிரியாணியை வாங்கி வந்திருந்தான் ராசு. அதோடு தான் பொரித்த கோழியையும் சேர்த்து, பேரனுக்கும் அவன் நண்பர்களுக்கும் பறிமாரி, தானும் அவர்களோடு அமர்ந்துக் கொண்டார் பாட்டி.  நெடுநாட்கள் கழித்து பேரனோடு கதைகள் பேசியபடி சாப்பிட்டது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

   ராசு உணவிற்கு பின் சற்று நேரம், வெளிநாட்டில் அவனது வாழ்கை முறையைப் பற்றியும், காரசாரமான உணவிற்காக ஏங்கிப் போன தன் நாவைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தான். பாட்டிக்கு அவனது பேச்சு வியப்பாயிருந்தது. அவன் படும் சிரமங்களை எண்ணி மனம் வருந்தினார். அவனுக்கு சீக்கிரம்  திருமணம் செய்து வைத்துவிட்டால் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். 

   பிறகு ராசு பக்கத்து வீட்டின் கதவைத் தட்டி க்ளாராவிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, சற்று நேரம் பேசினான்.  கோபத்தோடு பேசத் தொடங்கிய க்ளாரா  சற்று நேரத்தில் அமைதியடைந்தவளாக மாறினாள்.

   பின் ராசு, கூட்டாளிகளின் உதவியோடு  அதிகப்படியாக வளர்ந்திருந்த செடிகளின் கிளைகளை கழித்துவிட்டான். இருளடைந்திருந்த அந்த தாழ்வாரம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சத்தை அனுமதித்தது. குப்பைகளை வாரி சுத்தம் செய்ததும் பளிச்சென்று சுத்தமாகிப் போனது. பின் தொட்டிகளை இரண்டிரண்டாக அடுக்கி அவை அடைத்திருந்த இடத்தின் நீளத்தைக் குறைத்தான். இப்போது நடைபாதை அடைப்புகளற்று துப்புரவாக இருந்தது. பாட்டி ஆர்வமாய் செடிகளைத் தடவிக் கொடுத்தார். கண்கலங்க பேரனைக் கட்டிக் கொண்டார்.

ராசு கிளம்பும் முன்,

பாட்டி! எந்த பிரச்சனையாக இருந்தாலும் இனி அவங்க என்கிட்டயோ அம்மாகிட்டயோ பேசுவாங்க, நீங்க வீணா கவலைப்படாதீங்க! எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க! நான் பார்த்துக்கறேன்!” என்றான். பல வருடங்களுக்கு முன், சிறுவனாய் இருந்த ராசுவிற்காக பள்ளி ஆசிரியரிடம் பேசி, பின் அவனைச் சமாதானப்படுத்த தான் பயன்படுத்திய இதே போன்ற வார்த்தைகள் நினைவிற்கு வந்தன, பாட்டிக்கு. செடிகள் முடிவெட்டிக் கொண்ட சிறு குழந்தைகள் போல உற்சாகமாய் இலைகளை அசைத்துக் கொண்டிருந்தன. சரோஜா பாட்டிக்கு பேரனை நினைக்கையில் பெருமையாக இருந்தது.

முத்தமிழ் விழா 2013ல் இரண்டாம் பரிசு பெற்ற கதை