குறுங்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறுங்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 மார்ச், 2018

அஃறிணைக் கடவுள்


‘இன்றாவது என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு மன உளைச்சலினால் யாரிடமும் கத்தக்கூடாது’ என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த போதே, ‘வள்’ என்றது நிக்கி. அதன் ‘வள்’ளலில் எள்ளல் பாவம் தொக்கி நின்றதாய்த் தோன்றியது. ரத்தம், நாளங்களுள் வேகமாய் பரவி, நிக்கியைக் காலால் எத்திவிடும் ஆவலைத் தூண்டியது.
‘ஓம் சாந்தி ஹி!’
‘உன்னால் என் திடத்தை உடைக்க முடியாது, போ நாயே!’
தன் உடலின் கடைப் பகுதியை அவனுக்குக் காட்டியபடி அறைக்குள் சென்றது நிக்கி.
பொதுவாய் எரிச்சலை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் அனைத்தும் நேற்றைய பிரம்ம முகூர்த்தத்தில் விமானமேறி பத்திரமாய் சென்னையை அடைந்துவிட்டன.
‘நானாவது… கத்துவதாவது?'
மேசையிலிருந்த காயாவை எடுத்து, அதன் மீது ஒட்டியிருந்த ஒன்றிரண்டு எறும்புகளை நசுக்காமல் தட்டிவிட்டான். எறும்புகளே! நான் உங்கள் கடவுள். உங்களைக் கொல்லாமல் ரட்சித்தேன். இதை ஒரு கவிதையாக்கி முகநூலில் போட்டால் இருபது லைக்குகளாவது பெரும் என்று தோன்றியது.
‘கணவா! உனக்கு எவ்வளவு பவர் வேணுமானாலும் இருக்கட்டுமே! அதெல்லாம் வேலையிடத்துல மட்டும் தான்! ஒரு நாள், ஒரே ஒரு நாள் நீ கத்தாம இருந்துட்டா, என் பேரை கட்டெறும்புன்னு மாத்திக்கறேன்!’
அவள் பெயரை சிற்றெறும்பு என்று மாற்றுவதில் கூட அவனுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் என்ன திமிர்!
காயாவை மீண்டும் அங்கே வைத்த போது, இன்னும் சில எறும்புகள்…. துணியை எடுத்து அவற்றை லாவகமாகத் தள்ளிவிட்டு மீண்டும் கடவுளானான்.
கணினியில் ஆங்கிலப் படம் ஒன்றைச் சத்தமாய் ஓடவிட்டான்.
‘காலையில எழுந்து இதில உட்கார்ந்துகிட்டா, மத்த வேலையெல்லாம் எப்படி நடக்கும்!’
சுவாரஸ்யமான படத்தின் நடுவில், கட்டெறும்பின் குரல் காலைக் கடிக்க, சினம் சர்ரென நரம்புகளுள் ஊடுருவியது. கடித்தது மனைவியின் குரல் அல்ல, நிஜ எறும்பு.
அதை அழுத்தமாய் அதே சமயம் உயிர் போய்விடாதபடிக்குப் பற்றித் தூர வீசினான். பிடித்த பிடியில் தன் கோபத்தை உணர்த்தி விட்டதாய் நினைத்தான். ஆனால் இன்று அவனுக்குச் சுரணையற்று போய்விட்டதாக எண்ணிய அவ்வெறும்பு, காதில், பின் கழுத்தில், முதுகின் கைக்கெட்டாத பகுதியில் என்று மாறி மாறி ஊரத் துவங்கியது. ஆத்திரத்தில் தெய்வ குணத்தைத் துறந்து, அதைப் பிடித்து நசுக்கினான். இருந்தும் பிரச்சனை தீரவில்லை. எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு பார்த்த போது, எறும்புப் படையே தன்னைக் குறி வைத்திருப்பதை உணர்ந்தான்.
எறும்புகள் வந்த திசையை ஆராய்ந்ததில், மானசி புதைத்து வைத்திருந்த சாக்லேட் துண்டு கிடைத்தது. அதைத் தூக்கி வீசி, எறும்புகளைப் பெருக்கி, நாற்காலியைத் துடைத்த போது, மலையைத் தூக்கி மறுபக்கம் வைத்த அயற்சி ஏற்பட்டிருந்தது. கணினியை அணைத்துவிட்டு அப்படியே சோஃபாவில் சாய்ந்தான். அவனுக்குச் சுகமாய் உறக்கம் வந்த நேரம் எறும்புகள் விழித்துக் கொண்டன. தலையில் கிரீடம் அணிந்து கடவுளாகி, பன்னிரண்டாவது மாடியிலிருந்து வீசுவதற்காக அவனைத் தூக்கிச் செல்லத் துவங்கின. “விட்டா, நீங்க பாட்டுக்குப் போயிட்டே இருக்கீங்க! என்னோட பவர் உங்களுக்குத் தெரியாது! உங்களை…..!” என்று கத்தியவாறு எழுந்தவனை, மூலையில் படுத்திருந்த நிக்கி அலட்சியமாய்ப் பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பிக் கொண்டது.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

பார்வை

( கொடுக்கப்பட்ட முதல் வரிக்காக  எழுதிய கதை.  இக்கதை பிப்ரவரி (2017)  கதைக்களத்தில் இரண்டாம் பரிசு பெற்றது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்திற்கு நன்றி) 

எனக்கு இந்த ஊர் புதிதாக இருந்தது.  
இதுநாள் வரையில், என் மன வரைபடத்திலிருந்தது, ஓசைகளாலும் தொடுகைகளாலும் வாசத்தாலும் கட்டமைக்கப்பட்ட ஊர். இது அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத இடம்.
எல்லாவற்றையும் இன்றே பருகிவிடும் துடிப்போடு கண்களைப் பெரிதாய்  விரித்து, சுற்றிலும் பார்த்தவாறு நடந்தேன். பள்ளமும் மேடுமாக மட்டுமே இத்தனை நாட்கள் அறிமுகமாகியிருந்த சாலை, எல்லையில்லா வழிகளைக் காட்டி மலைப்பைத் தந்தது. சுற்றிலும் வட்ட, அல்லது வட்டத்திற்கு அருகிலிருக்கும் முகங்கள். மரங்களின் பச்சை மனதைத் தடவுவதாயிருந்தது. இதுவரை வெப்பத்தால் மட்டுமே உணர்ந்திருந்த சூரியன், நேரத்தைப் பொறுத்து மஞ்சள் அல்லது ஆரஞ்சாய் மாறக்கூடியது என்பதை மனதில் குறித்துக் கொண்டேன். இதையெல்லாம் நான் கற்றுக்கொள்ள படப்புத்தகம் வாங்கி வைத்திருக்கிறாள் அம்மா.
தாழம்பூ குங்குமம் மணக்கும் குளிர்ச்சியான அம்மா என் நினைவில் இருப்பது போல, அவளது முப்பரிமாண முகம் இன்னும் மனதில் பதியவில்லை. அப்பாவின் அறிவுசார்ந்த வாதத்தை, அவர் முகத்தில் தெரிந்த உணர்வுகளோடு சேர்த்து உள்வாங்க முடியாமல் தடுமாறினேன். மொத்தத்தில் இருண்ட என் முன்னாள் உலகின் கதகதப்பை, இப்புதிய ஊர் எனக்குக் கொடுக்கவில்லை.
என்னைப் பொறுத்தவரை, இவ்வுலகம் வண்ணக் குழம்புகளால் தீட்டப்பட்ட, மிகப்பெரிய புதிர் விளையாட்டு. வழியில் என்னைப் பார்த்து உதடு விரிய சிரித்தவர்கள் புதிர் விளையாட்டின் பகுதிகளாக என் மனதுள் உறைந்தார்கள். பேசினாலொழிய அவர்களை என்னால் அடையாளம் காண முடியாது.
இரைச்சலாய், நாற்றமாய், இதுவரை நெஞ்சில் படிந்து போயிருந்த ஈரச்சந்தையின் மூன்றாவது பரிமாணத்துள் நுழைந்து ரோஜா மலர்களை வாங்கிக் கொண்டேன்.
எம்.ஆர்.டி நிலையத்தைக் கண்களால் பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. அப்போது,
ஹாய், யூ லுக் ஹேண்ட்சம்!” என்ற குரலுக்குத் திரும்பி அதைச் சொன்ன பெண்ணின் குண்டு முகத்தைப் பார்த்தேன். அவளுடைய கண்கள் என் கவனத்தைக் கலைத்தது. பிற கண்கள் என் விழிகளை நோக்குவதை என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்களை மூடி, மூளையை நிரடி, அது ரோசலினின் குரல் என்று உணர்ந்து சந்தோஷித்தேன். புதிரின் ஓர் முடிச்சை அவிழ்க்க முடிந்த குதூகலத்துடன் அவளுடைய ஷேமத்தை விசாரித்தேன்.
கால்களைத் தாங்கிய தரை, தனது அடையாளத்தை உணர்த்தி என்னை விரைவு ரயிலினுள்ளே செலுத்தியது. ரயில் முழுக்க ரோசலின் போன்ற முகங்கள். இன்னுமொருமுறை அவளைப் பார்த்தால் நிச்சயம் அடையாளம் காணமுடியாது. மார்சிலிங்கில் இறங்கும் போது, ஒரு முறை கண்களை மூடி, போக வேண்டிய விலாசத்தை நினைவுபடுத்திக் கொண்டேன்.
ஒன்பதாவது மாடியிலிருந்த அந்த வீட்டினுள்ளே பெரிதாய் மாட்டப்பட்டிருந்த படம்…… அவனாய்  தான் இருக்க வேண்டும். யாரென விசாரித்து, “ப்ளீஸ் கம்!” என்று உள்ளே அழைத்த பணிப்பெண், என்னை அமரச் சொன்னாள்.

மாம்! நம் ஜோயியின் கண்களைப் பொருத்தியிருக்கிறார்களே! அந்த  ஆடவன் வந்திருக்கிறான்!” என்று அவள் ஆங்கிலத்தில் சொல்வது கேட்டது. சற்றே பரபரப்புடன் கூடிய காலடிகள் கூடத்தை நோக்கி வருவதை உணர்ந்தேன். என் மனம் இந்த அழகான உலகைக் காதலிக்கத் தொடங்கியது அந்த நொடியில் தான். எனக்கு பார்வையைக் கொடுத்த மகனின் தாயைச் சந்திக்க தயாராகத் துவங்கினேன்