கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 அக்டோபர், 2015

பெயர்


பாக் பக் பக்காக இருக்கலாம்

கொத்துவானாக இருக்கலாம், இல்லை

நாயாகவோ மாரியாத்தாளாகவோ

கூட இருக்கலாம்

சேவலின் பெயர்

கோழியின் பாஷையில்

 

பேசிக் கொண்டே இருக்கும்

‘சள சளா’வாக இருக்கலாம்

ப்ரசவித்த வெம்மை  தீருமுன்

அதன் முட்டையைத் திருடும்

திருடனாக இருக்கலாம்,

அல்லது

கூண்டிலடைக்கப் பட்ட

சுற்றத்தின் முன் அதை

சுடுநீரில் முக்கி சிறகுரித்து

பலவிதமாய் சமைத்துண்டு

திருப்தியாய் ஏப்பம் விடும்

அரக்கனாய் இருக்கலாம்

என் பெயரின் அர்த்தம்

கோழியின் பாஷையில்

 

 

வெள்ளி, 8 மே, 2015

ஒருவேளை கோப்பி

சல்லடைக் கண்களாய் பூச்சியரித்த
முருங்கைக் கீரையை
ஒரு வெள்ளி இருபது காசுக்கு
வாங்கியிருக்கும் என்னைப் பார்த்து
நீங்கள் சிரிக்கக் கூடும். . . . . .

அதை விற்ற பல்லுதிர்ந்த கிழவன் தன்
பதறும் சரீரத்தை நிலை நிறுத்தி
துரட்டி வைத்து பறித்திருக்கக் கூடிய சாத்தியத்தையும்,
விழப்போகிற இலைகளைப் பொறுக்கும் ஆவலோடு
கண் இடுங்க மேல் நோக்கி பார்த்தபடியிருக்கும்
கோலூன்றிய கிழவி யொருத்தியின் உருவத்தையும்
சித்திரமாய் வரைந்தது,
அவனது மிச்சமிருந்த பற்களின்
இடைவெளி வழி செவியடைந்த.
‘இந்த பணம் என் ஒரு வேளை கோப்பிக்கானது’ என்ற
மொழி கடந்த மலாய் வார்த்தைகள்.

காத்திருந்த கிழவியின் பங்கு கோப்பிக்காய்
இன்னொரு கட்டு கீரை வாங்கிய என்னை
நீங்கள் முட்டாள் என்றும் நினைக்கக் கூடும். . .
பரவாயில்லை!
அவர்கள் இந்நேரம் கோப்பி குடித்திருப்பார்கள்.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

மழைக் கவிதை


மழையைப் பற்றிய

அனுபவக் கவிதையை

நான் எழுதுவதற்குள்

என்னைப் பற்றி

எழுதிச் சென்றுவிட்டது

மழை.

வியாழன், 25 டிசம்பர், 2014

விற்பனையாளன்


கூடையைச் சுமந்தபடி

என் வீட்டைக் கடந்த போது

“தேங்கோ தேங்கோ. . .!” என்று

சத்தமாய் அவ னுதிர்த்த வார்த்தைகளிலிருந்து

புறப்பட்ட தேங்காய்கள் இரண்டும்

மோதி உடைந்ததில் தெறித்த சில்லுகள்  

தெருவெங்கும் சிதறிக் கிடந்தன.




 

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

வரிக் கவிதைகள்

1
வாழ்க்கை
உளியால் ஓங்கி
செதுக்கியபடி இருக்கிறது,
சிலையாகிக் கொண்டிருக்கிறேன் . . .

2
நான் எழுதிய கவிதை
நகைச்சுவையாய் இருக்கிறது என்று
நீங்கள் பின்னூட்டமிட்ட போது
அதன் வார்த்தைகளில் ஒட்டியிருந்த
நகைத்தன்மை உதிர்ந்துவிட்டது....
முரண் நகைக் கவிதையை
இயற்ற உதவிய உங்களுக்கு
நன்றி!


3
பன்னிரெண்டு வார்த்தைகளில் கவிதை வேண்டுமாம்
சொற்களை வடித்துக் கொண்டிருக்கும் போதே
முற்றுப்புள்ளியின் குறுக்கீட்டால்
முடிந்துவிட்டது கவிதை.