வியாழன், 5 டிசம்பர், 2019

பற்று

அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும் சொல்லிவிட முடியும்.
சாம்பிராணி புகைக்கிடையே, கடைக்கு வெளியே இருக்கும் கூடையில் உருளைக்கிழங்குகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் வெள்ளை வேட்டியணிந்த அந்த முதியவர். இந்த ஊருடன் இன்னமும் ஒட்டியிராத அன்னியத்தன்மை அவரது உடல் மொழியில். இந்திய அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்றவராக இருப்பார் என்று தோன்றியது.
இந்த ஊரில் தடம் பதிப்பதற்கான தொடக்க முயற்சியாக அவரது மகன் அக்கடையைத் துவக்கியிருக்க வேண்டும். Emotional supportக்காக ஊரிலிருந்து தந்தையை வரவழைத்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளர் பொறுக்கி எடுத்து, பின்னர் வேண்டாம் என்று விட்டுவிட்டுச் சென்ற உருளைக்கிழங்குகளை மீண்டும் அவர் சீராய்த் தட்டில் அடுக்கிய பாங்கில் மகன் தொழிலில் முன்னேறிவிட வேண்டும் என்ற வேண்டுதலுடன் கூடிய நம்பிக்கை தெரிந்தது.
அவரது அந்த நம்பிக்கை மெய்யாக வேண்டும் என்று மனம் அனிச்சையாக வேண்டிக்கொண்டது.