வியாழன், 31 அக்டோபர், 2019

இரைச்சல்



     இரவு பதினோரு மணிக்கு கை தட்டி கூப்பிடத் தொடங்கிவிட்டான் வில்லியம். சமீப நாட்களாய், இரவு பதினோரு மணி, ஒரு மணி, விடியற்காலை நான்கு மணி என்று சீராய் அதிகரித்த இடைவெளிகளில் கேட்ட அவனது கைதட்டல்களாலும் அதைத் தொடர்ந்து அவன் நிகழ்த்திய உரையாடல்களாலும் தூக்கத்தை இழக்கத் துவங்கியிருந்தேன். ஒருமுறை அதிலிருந்து தப்பிக்க முயன்று, எப்பொழுதும் ஒன்பதரை மணிக்கே உறங்கச் சென்றுவிடும் நான், தூக்கம் கண்களைச் சுழற்ற கூடத்திலேயே அமர்ந்திருந்தேன்.
என்ன இன்னமும் முழிச்சிருக்கே?” என்று கேட்ட ராகுலிடம் உள்ளுக்குள் இருந்த விதிர்விதிர்ப்பைக் காட்டாமல் கவனமாய் புன்னகைத்து, வசந்தம் தொலைக்காட்சியின் நாடகத்திற்கு முகத்தைத் திருப்பினேன்.
     சிலீரென எதுவோ விழுந்து உடையும் சத்தமும். அதைத் தொடர்ந்த ஶ்ரீநிதியின் அழுகையையும் கேட்டு திடுக்கிட்ட போது தான், நான் அமர்ந்தபடியே உறங்கிவிட்டது புரிந்தது. எழுந்தோடிச் சென்று பார்த்த போது சுவரில் மாட்டியிருந்த புகைப்படச் சட்டம் கீழே விழுந்திருந்தது. மணி சரியாக பதினொன்று ஒன்று. அன்று வில்லியம் தனக்கு ஏற்பட்டிருந்த கோபத்தை ஒரு மணி கைதட்டலை ஓங்கியடித்து வெளிப்படுத்தினான். 
என்னைக் கவனிக்காமல் இருந்துவிட நினைக்கிறாயா?”
அது வரை கைதட்டலில் மட்டுமே அறிமுகமாகியிருந்த அவன், அன்றிலிருந்து தான் என்னுடன் பேசத் துவங்கினான்.
இல்லையே!’ என்று ராகுலிடம் சொல்வது போல வில்லியமிடம்  இன்றைய தினம் வரை பொய் சொல்ல முடிந்ததேயில்லை. நான் நினைப்பது அவனுக்குத் துல்லியமாய் தெரிந்துவிடுகிறது.
முதன்முதலாய் குரல் கேட்ட அதிர்ச்சியில் பயந்து போய், பக்கத்தில் படுத்திருந்த ராகுலை எழுப்ப முயற்சித்தேன். உடலையோ குரல் வளையையோ அசைக்க முடியவில்லை.
என்னை விட்டு விலக நினைத்தால் அதற்குத் தண்டனை ஹாஹாஉனக்குத் தான் தெரியுமே!”
ஆம் என்பது போல் என் உள்மனம் நடுங்கியது.
     மறுநாள் ஶ்ரீநிதியின் முதுகில் காணப்பட்ட அழுத்தமான கீறல்கள், என்னை எச்சரிப்பதற்காக வில்லியம் போட்டது என்றே நம்பினேன். அது எரிகிறது என்று நிதி அழுததை என்னால் தாங்க முடியவில்லை.
வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த ராகுலிடம்,
கொஞ்சம் லேட்டா போயேன் ராகுல், கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்துட்டு வரலாம்
முதல்ல குழந்தைக் கையிலே இருக்கற நகத்தை வெட்டுஎன்று சிரித்தான் அவன்.
மூன்று வயது பெண்ணால், கைகளைப் பின்னால் மடித்து அவ்வளவு தூரத்திற்குக் கீறிக் கொள்ள முடியுமா என்ன? நான் மட்டும் நிதியை அழைத்துக் கொண்டு, தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்று கும்பிட்டு, விபூதியை அவளின் நெற்றியில் பூசினேன். அன்று முழுவதும், குற்றவுணர்வு எழும்போதெல்லாம் அவளை இழுத்துத் தேங்காய் எண்ணெய்யைத் தடவி விட்டபடியிருந்தேன். மிகவும் கவனமாய் அன்றிரவு பத்து மணிக்கெல்லாம் படுத்துவிட்டேன்.
சமர்த்து ஜென்னி! இந்த வில்லியமிற்கு உன்னை இது போன்ற சமயங்களில் தான் மிகவும் பிடிக்கும்!” அன்று பதினோரு மணிக்கு இதை அவன் சொன்ன தொனியிலிருந்து விடுபடமுடியாமல் ஶ்ரீநிதியைக் கட்டிக் கொண்டேன்.
அந்த நிலையிலும் வில்லியம் எழுத்துத் தமிழில் என்னுடன் உரையாடுகிறான் என்பதைக் கவனித்தேன். உரையாடல் என்றால், சத்தமாக நீங்களும் நானும் பேசுவது போல இல்லை. மனதோடு மனம் ரகசியம் சொல்லிக் கொள்வது போல, எனது மூளைக்குள் அவன் நினைப்பதைத் தமிழில் மாற்றி, நேராய் கொண்டு வந்து வைப்பதைப் போல. எனக்கு மட்டும் கேட்கும் அந்த கைதட்டல் ஒலிகூட அப்படித் தான், மூளைக்குள் கைவிட்டு அறையும் சப்தம்.
     அன்றைய தினத்திற்குப் பின்னர் வில்லியம் என்னிடம் நிறைய பேசத் துவங்கினான்.
ஜப்பானியனிடம் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா? எவரைப் பற்றியும் கவலைப்படாத மனத்தைரியம். எனக்கு இருந்த அதே குருட்டுத் தைரியம். நட்ட நடு ராத்திரியில் சிறிய படகுகளில் வந்து ஊரைப் பிடிக்க கொள்ளைத் தைரியம் வேண்டும். அவன் இங்குக் கொடியை நாட்டியதே நம்புவார்களா என்பதைப் பற்றி கவலைப்படாமல் சொன்ன பொய்களால் தான்.”
அவன் இதையெல்லாம் என்னிடம் சொல்வதற்கான அர்த்தம் எனக்குப் புரிவதில்லை. இருந்தும் வலுக்கட்டாயமாய் சொற்களை என் மனதினுள் திணித்துக் கொண்டிருந்தான் அவன்.
அச்சொற்களின் அழுத்தம் தாளாமல் வெடித்துவிடுவேன் என்றுணர்ந்த நாளில் ராகுலிடம் எனக்குப் பயமாயிருக்கிறது என்றேன். ஷூ லேஸின் முடிச்சைப் போட்டுவிட்டு நிமிர்ந்த அவன்,
பி.டி.சாமி கதைகளைப் படிக்கிறதை நிறுத்தினா எல்லாம் சரியாப் போகும்என்று சொல்லிவிட்டு பணிக்குக் கிளம்பினான்.
நீ சொன்னால் அவன் நம்பமாட்டான்என்றான் வில்லியம், என் நினைவுகள் சென்ற திசையைப் பின்பற்றி. அவன் பகலிலும் என்னுடன் பேசத் தொடங்கியிருந்தான்.
அவனை விட நான் உன் மீது வைத்திருக்கும் அன்பு அதிகம் தெரியுமா? ஜென்மாந்திரங்களாய்த் தொடரும் அன்பு
உன் பின்னால் நான் சுற்றி வந்த நாட்கள் நினைவிருக்கிறதா? முயற்சித்துப் பாரேன்!”
வேண்டாம்!”
அப்படிச் சொல்லக் கூடாது ஜென்னி! என் தங்கமே!”
ராகுல், நிச்சயமா ஏதோவொன்னு இங்க இருக்கு, என்கிட்ட என்னென்னவோ சொல்லுது! எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலை.”
அதெல்லாம் பிரமைஎன்றான் ராகுல்.
கொலம்பேரியத்துக்குப் பக்கத்தில வீடு வாங்கினது தப்பான்னு தெரியலை!”
எதுக்க இருக்கற பள்ளி பிள்ளைங்க கூட அங்க பேய் சுத்தறதா சொல்றாங்களாம். லலிதாவோட பையன் சொன்னான்!”
லூசு மாதிரி பேசாத! இப்படி சொல்லிகிட்டேயிருந்தா ஐ.எம்.எச்சுக்குத் தான் போகணும்
     அன்றிரவின் பதினோரு மணி கைதட்டல், பொளேர் என்று தலையில் அடித்தது.
உன் அம்மா என்னிடம் வாங்கிய ஐந்து கட்டி அரிசியைத் திருப்பிக் கொடுஎன்றான் வில்லியம்.  
என்னைப் பிடிக்கலைன்னு நீ சொன்னதால தான், உன் அப்பா ஜப்பானியர்களுக்கு எதிரா காசு திரட்டியதா தகவல் கொடுத்தேன். இன்னமும் அதே தப்பை செய்யற!”
கோபத்தில் அவன், பேச்சுத் தமிழுக்கு மாறியிருந்தான்.
தண்ணீர் பைப்பை அவர் வாய்க்குள்ள விட்டு, வயிறு நிறைய தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பூட்ஸ் காலோட வயிறு மேலே ஏறி நின்னு தொப்புன்னு குதிச்சான் பாரு!” என்று சொல்லிவிட்டு அவன் சிரித்தது, சிலீரென முதுகுத்தண்டில் இறங்கியது.
     ராகுலிடம் வில்லியம் பற்றி சொல்லி நம்ப வைக்கும் முயற்சியை அன்றுடன் கைவிட்டேன். தினமும் இரவில் வில்லியம் பேசும் வார்த்தைகள் வெளியேற வழியின்றி, மூளை மடிப்புகளில் பதிந்தன. அவன் உதிர்த்த இரைச்சலான சொற்களுக்குள் இழுபட்டுச் செல்வதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அச்சொற்களின் நீட்சி போல், மெல்ல மெல்ல, ஓரங்கள் வெளிறிய வெண்ணிற வில்லியம் என் கண்களுக்குப் புலப்படத் துவங்கினான்.
உனக்கும் என் மேல் காதல் இருந்தது ஜென்னி. இப்போதும் இருக்கிறது. உன் கண்களுக்குத் தெரிகிறேன். இதை விட என்ன சாட்சி இருந்துவிட முடியும்! நீ என்னுடன் வந்துவிடு! தோல்வி, பொறாமை எதுவுமற்ற உலகம்.”
பயமில்லை, ஐயமில்லை எங்களிடத்தில் தயக்கமில்லை, தூக்கமில்லை
துக்கம் கொஞ்சமும் இல்லவே இல்லை
சம்பந்தா சம்பந்தமின்றி அவன் பேசிக் கொண்டே என் பின்னால் வருவது காதுகளுக்குள் வண்டுகள் ரீங்காரமிடுவது போலத் தொடர்ந்தது கேட்டது. வேறுவழியின்றி, மெல்ல மெல்ல, வில்லியமின் இருப்பைப் பழக்கிக் கொள்ளத் துவங்கினேன்.
ஜப்பானியன் எளிதில் யாரையும் நம்புவதில்லை. ஆனால் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால், வெகுமதிகள் தாராளமாய் கிடைக்கும். கிடைக்காதது நீ மட்டுமே. உன்னைத் தேடி அகண்ட வெளிக்காடுகளில் அலைந்து திரிந்து தாகத்தால் அழிந்தேன். நாம் இணையும் காலம் சந்திக் காலம்இப்படி சுலோகம் போல சரம் சரமாய் அவனிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் ஒரு ஸ்ருதியில் சேரும் போது தூக்கத்திற்குள் விழுவேன். திடீரென தூக்கி வாரிப்போட்டு எழுந்திருக்கும் போது வில்லியம் எதையோ சொல்லி முடித்துவிட்டு சத்தமாய் சிரித்துக் கொண்டிருப்பான், அல்லது அறையின் ஓரத்தில் நிசப்தமாய் மிதந்து கொண்டிருப்பான்.
     சிலநாட்களில், அவனது வார்த்தைகள் மனதில் தீட்டிய வரைபடத்திற்குச் சொந்தமான உலகிற்குள் சஞ்சரிக்கத் தொடங்கினேன். அவனது சொற்கள் மரங்களையும், தெருக்களையும், வீடுகளையும், கத்தியால் மனிதத்தலையைச் சீவும் ஜப்பானியனையும் தத்ரூபமாய் வரைந்தன. எதிரே தோன்றிய ஜப்பானியனை உடல் வளைத்து வணங்கினேன். தூரத்தில் தெரிந்த ஆட்களிடம் பேச நினைத்து விரைந்தேன். அவர்கள் வேகமாய் நடந்து மறைந்தார்கள். திடீரென கடையொன்றிலிருந்து வெளிப்பட்ட வில்லியம் என்னைத் துரத்தத் தொடங்கினான். அணிந்திருந்த நீளப்பாவாடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, வீடுகளுக்கிடையே இருந்த சந்துகளில் புகுந்து ஓடத் துவங்கினேன். அடுத்த சாலைச் சந்திப்பில் நின்றிருந்த நீலச்சட்டை அதிகாரிகள் என்னை நிறுத்தினார்கள்.
வெளியே திரியாதே, அவர்களின் கண்களில் பட்டுத் தொலைப்பாய் என்று திரும்பத் திரும்பச் சொன்னேனே! கேட்டாயா?” சீன மொழியில் ஒரு பெண் குரல் கண்டித்தது. பதறிப்போய் சட்டெனத் திரும்ப, அங்கிருந்த வீடுகளும், மனிதர்களும், வில்லியமும் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டார்கள். மரங்கள் நிறைந்த சாலையில், அந்த அதிகாரிகளுடன் தனித்து நின்றிருந்தேன். எதற்காக மண்டாய் சாலையில் தனியே நிற்கிறேன் என்று அவர்கள் கேட்ட கேள்விக்கு என்னால்  பதில் சொல்ல முடியவில்லை.
     ராகுல் அவர்களிடமிருந்து என்னை மீட்டெடுக்க வந்த போது கடும் கோபத்திலிருந்தான். ஶ்ரீநிதி எனக்காகப் பள்ளி முடிந்து நெடுநேரம் காத்திருந்திருக்கிறாள். ஆசிரியர்கள் நான் கையில் வைத்திராத என் தொலைப்பேசிக்கு அடித்துப் பார்த்துவிட்டு, ராகுலை அழைத்திருக்கிறார்கள்.
     வீட்டிற்கு வந்த போது ஶ்ரீநிதி அழுத களைப்பில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. அவள் பக்கத்தில் என் அம்மா. அம்மா கேட்ட கணக்கில்லாத கேள்விகளுக்குஎனக்குப் பயமா இருக்குதும்மா!” என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னேன். கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து விட்டு வந்தோம். சற்றே மனம் தெளிந்தது
அந்த அதிகாரிகள் ஜப்பானியர்களைப் போன்றவர்கள் இல்லை. அதனால் எனக்கு அவர்களைப் பிடிப்பதில்லைஎன்று நான் தூங்கியெழுந்ததும் சொன்னான் வில்லியம். அவன் அழைத்துச் செல்லும் இடத்திற்கு நான் போகப் போவதில்லை என்ற மனவுறுதியுடன் அன்று இருந்தேன். அவனும் என்னை அதிகம் தொல்லை செய்யவில்லை. அடுத்த நாள், “இனியும் என்னால் காத்திருக்க முடியாது! என்னுடன் வந்து விடு!” என்றான் வில்லியம். நான் அசைந்து கொடுக்கவில்லை.
சொல்வதை அலட்சியப்படுத்தினால் ஜப்பானியனின் கோபம் எனக்கும் வரும் தெரியுமா?”
பதறிய உள்மனதை இழுத்துப் பிடித்து அமர்ந்திருந்தேன்.
     மறுநாள் ராகுல் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. பலத்த சிராய்ப்புகளுக்குள்ளான அவனை மருத்துவமனைக் கண்காணிப்பில் இரண்டு நாட்கள் இருக்கும் படி சொல்லி விட்டார்கள்.
உனக்குப் பாடம் கற்பிப்பதற்காக மட்டும் என்பதால் அவன் உயிர் தப்பித்தான். நீ என்னுடையவள், எனக்கானவள் மட்டுமே! என்னை விட உனக்கு முக்கியமாகத் தோன்றுபவர்களை ஒவ்வொருவராய் பிடுங்கியெடுப்பேன்.” என்றான் வில்லியம்.
     அன்றிரவு முழுவதும் அழுது கொண்டிருந்தேன். மறுநாள் காலை தெளிவான முடிவிற்கு வந்திருந்தேன். இனியும் நான் எதையும் இழக்கத் தயாராயில்லை. வில்லியமிற்குக் கோபத்தை உண்டாக்காமல் இருக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்யத் துவங்கினேன். கணவன் மனைவியாய் எங்களுக்குள்ளான உறவை இனியும் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டிருந்தான் வில்லியம். ராகுலுக்கு உடல் நலமில்லாத காரணத்தையொட்டி கூடத்தில் படுத்துக் கொள்ளத் துவங்கினேன். ஶ்ரீநிதி அம்மாவுடன் மற்றொரு அறையில் படுத்துக் கொண்டாள். மறுபடியும் முன் போல வில்லியமுடன் அவனது உலகிற்குள் செல்லத் தயாரானேன்.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் திருட்டுத்தனமாய் தோண்டியெடுத்த வள்ளிக்கிழங்கைத் துண்டுகளாக்கி உப்பிட்டு வேக வைத்துச் சாப்பிடுவது என்ன ருசி தெரியுமா?”
     நட்சத்திரம் மின்னும் வானிற்குக் கீழேயிருந்த கிழங்குச் செடிகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்தேன்.
ஜென்னி, இருட்டில் அமர்ந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” சீன மொழிக் குரலில் பதறிப்போய் அது வந்த திசையில் நடந்து, கதவைத் திறந்து, மிகவும் பழகிப் போன ஜன்னல்களைக் கொண்ட அறைக்குள் நுழைந்தேன். என் கால்கள் நடந்த தரையின் மேடு பள்ளங்கள் எனக்கு நன்கு அறிமுகமாகியிருந்தன.
ஏற்கனவே உன் அண்ணனைக் காணவில்லை என்று ஊர் முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறேன். உனக்குக் கொஞ்சமாவது கவலை இருக்கிறதா? அந்த ராட்சதர்கள் கண்ணில் பட்டுத் தொலைத்தால் என்ன ஆகும். முதல் வேளையாக உன் முடியைக் கத்தரித்துத் தள்ள வேண்டும். நாளை முதல் இந்தப் பாவாடையையெல்லாம் தூக்கி வீசிவிட்டு, அண்ணனின் உடைகளை அணியத் துவங்கு, சொல்லிவிட்டேன்!” என்று அதட்டலாய் பேசியபடி வந்த அம்மா, மனதின் ஆழத்தில் ஜன்னல்களைப் போல, தரையின் மேடு பள்ளங்களைப் போல பழகிப் பதிந்து போயிருந்த அம்மா, அப்படியே உட்கார்ந்து அழத் துவங்கினாள்
மைக்கேல் கடைசியாக வேனில் ஏற்றப்பட்டதை செங் யோங் பார்த்திருக்கிறான். எங்குக் கொண்டு சென்றார்கள் என்று தெரியவில்லை. நாளைச் சென்று விசாரிக்க வேண்டும். பெட்டியிலிருந்து உன் அண்ணனின் புகைப்படத்தை எடுத்துக் கொடு!” சொல்லிவிட்டு மறுபடி அழத்தொடங்கிய அவளது உருவம் கலைந்தது. வேகமாய் உலுக்கப்பட்டதில் திகைத்துத் திரும்ப ராகுல்! இருவரும் மூடப்பட்டிருந்த அந்த தேவாலயத்திற்கு வெளியே நின்றிருந்தோம்.    

சொல்லுங்கள், ஏன் நள்ளிரவு நேரத்தின் அங்குச் சென்றீர்கள்?”
தெரியலை, டாக்டர்!”
உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் ஏதாவது பிரச்சனையா?”
அப்படியெல்லாம் இல்லை டாக்டர். நாங்க ரெண்டு பேரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம்.”
ராகுல் என் கைகளை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டான்.
முன்பு ஒரு முறை இதே மாதிரி சம்பந்தமில்லாமல் மண்டாய் ரோட்டில நின்று கொண்டிருந்தீர்களாமே!”
நீங்கள் என்னிடம் எதையும் தைரியமாகச் சொல்லலாம். ராகுல், சற்று வெளியே இருங்கள்!”
நான் தயங்கினேன்
நடப்பதையெல்லாம் மருத்துவரிடம் கூறினால்….’
உன்னைப் பைத்தியக்காரி என்பார்!” என்றான் வில்லியம்.
கொஞ்சம் யோசித்து பின்னர் பேசத் துவங்கினேன்.
     மருத்துவர் தந்த மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனையில் தங்கியிருந்த நாட்களில் வில்லியம் ஒளியிழந்து காணாமல் போகத் தொடங்கினான். அவனது குரலும் தன் சக்தியை இழந்தது போல என்னை விட்டு விலகியிருந்தது.
அவன் திரும்ப வந்தால், பிடிச்சி சாங்கி ஜெயில்ல போட்டுடுவோம்ன்னு சொல்லுங்க!” என்று சொல்லியிருந்தார் மருத்துவர்.
வெகுநாட்களுக்குப் பிறகு ஓய்வைக் கண்ட மூளையுடன் மாத்திரைகளின் தாக்கமும் சேர, இரவு பகல் என்ற கணக்கின்றி தூங்கினேன்.
மீண்டும் என் வீட்டிற்குச் செல்ல வேண்டும், மகளை அணைத்துக் கொள்ள வேண்டும், ராகுலுடன் கை கோர்த்து நடக்க வேண்டும் போன்ற ஆசைகள் மட்டுமே இப்போது மனதிற்குள். அப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொண்டுவரும் நாளை எதிர் நோக்கி நாட்களை நகர்த்தத் துவங்கினேன் நான்.