செவ்வாய், 8 செப்டம்பர், 2015

உறைவிடம்


எங்கேயென்று தெரியவில்லை!
பேருந்தின் கூரையில் மழைத்துளி தாளமிட
வெகுதூரம் சென்றது மட்டும்
நினைவில் பொதிந்து ஈரமாய் . . .
நின்ற பேருந்திலிருந்து
தலை தப்ப
ஓடிய சில நொடிகளில்
வேகமாய் மண்டையிலடித்த
துளியின் ஊசிமுனைகளை
இன்னமும் உணரமுடிகிறது!
அதுவரை
கடின முகமணிந்து
ஆங்கிலம் மட்டுமே நடத்தி வந்த
பாகீரதி டீச்சர்
நீர் சொட்டும் தன் கூந்தலை
நுனிமுடிச்சிட்டு
சந்நிதி முன் பாடி, தன்
ஓடு கழற்றிய போது
விடிந்த தினத்தில் தான்
நாங்கள்
நனைந்த புல்வெளியில்
திராட்சை பழம் போட்ட
தயிர் சாதம் சாப்பிட்டது.
சாப்பிட்டு முடிக்கும் போது
வந்த அவசர தகவல்
எங்களுள் ஒருத்தியின்
தந்தை இறந்ததைச் சுமந்திருந்தது.
வெண்மையாய் குழைந்து
கைகளில் ஒட்டியிருந்த
பருக்கைகளைக்
கழுவிய கையுடன்
பயணம் முடிந்து திரும்பி விட்டோம்.
இப்போதும் கூட என்னால்
திராட்சை போட்ட 
தயிர் சாதத்தி லெல்லாம்
மழையை உணர முடிகிறது.
நுனிமுடிச்சில் ஈரம் சொட்ட
பாடியபடி இருக்கும்
பாகீரதி மிஸ்ஸீம்,
அடையாளம் மறந்து போன
தந்தையை யிழந்த மாணவியும் கூட
மழையுடன் சேர்ந்து அதில்
நிரந்தரமாய் உறைந்துவிட்டார்கள்.