அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 மார்ச், 2022

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா

 தோழி ரேவதி மூலமாக அறிமுகமான நண்பன் ராஜசிம்மன் . ரேவதியின் வீட்டிற்கு அருகில் அவன் வீடு இருந்ததால் அவன் வீட்டிற்கு அடிக்கடி க்ரூப் ஸ்டடிக்குப் போவோம்.


கல்லூரி காலத்தில் பேசிய மிகச் சில ஆண்களுள் அவனும் ஒருவன். அவனுடைய அப்பா எம். எஃப். எல்லில் பொறியாளர் என்று நினைவு. அவனுக்கும் அந்தத் துறையில் நிறைய ஆர்வமிருந்தது.

நான் இங்கி பிங்கி பாங்கி போட்டு தேர்ந்தெடுத்த துறையை அவன் யோசித்துத் தேர்ந்தெடுத்திருந்தான். பாடத்தை முழுமையாகப் படித்து உள்வாங்கி விளக்குவான்.

அவனுடைய அப்பா பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர் மாதிரி கம்பீரமாய் இருப்பார். அவனது அம்மாவும் தங்கையும் மிகவும் தோழமையாய் பழகுவார்கள். என் அப்பா நன்றாகப் பேசக் கூடியவர் என்பதால் குடும்பமாய் நண்பர்களாகிவிட்டோம்.

வாழ்க்கையின் சிறு சிறு விஷயங்களைப் பற்றி நிறைய யோசிப்பவனாய் அவன் அப்போது இருந்தான். ரேவதியின் செல்ல நாய் ஜீனோ இறந்து போன போது ஓவென்று அழுத அவளைத் தெளிவாய் பேசி சமாதானப்படுத்தியவன். பிள்ளையார் பக்தன்.

பரீட்சை நேரமெல்லாம் பகலில் ராஜசிம்மன் வீட்டில் படித்து விட்டு இரவு ரேவதி வீட்டிற்குச் சென்று விடுவேன். ஷானே எழுதிய புத்தகம் என்று நினைவு. மல்லாக்கப் படுத்துப் படிக்க முடியாத அளவிற்குப் பெரிது, குப்புறப்படுத்துக் கொண்டு தான் படிக்க வேண்டும். நானும் ரேவதியும் ஆளுக்கு ஒன்று என்று பங்கு போட்டு முக்கிய கேள்விகளைப் படித்து, பிறகு மற்றவருக்கு விளக்குவோம்.

அவன் எங்களைப் போன்றவனில்லை. எல்லாவற்றையும் நிதானமாய் புரிந்து கொண்டு முழுமையாய் படிப்பவன். புரியாத விஷயங்களைத் தெளிவாக விளக்குவான். அவனுடைய அப்பா அதே துறையில் வேலை செய்தால் அவனுக்கு அந்த ஆர்வம் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. எங்களைத் தவிர பிற நண்பர்களும் அவன் வீட்டுக்குப் படிக்க வருவார்கள்.

பரீட்சைக்குப் படித்து ரொம்பவும் ஸ்ட்ரெஸ் ஆகி சினிமாக்களுக்குக் கிளம்பிப் போன நினைவு இருக்கிறது.

ஒருமுறை டி.வி.எஸ் எக்ஸலை ஓட்டிக் கொண்டு போய் வேறொரு வண்டியுடன் நேராக மோதியதில் வண்டியின் பின்வீல் வளைந்து விட்டது. வீலின் பெண்ட் நிமிர்த்துவது முதற்கொண்டு மெக்கானிக் கடையில் செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்து கொடுத்தான்.

கடைசி வருட ப்ராஜெக்ட் அவன் புண்ணியத்தில். பெரும்பாலான வேலைகளை அவன் இழுத்துப் போட்டுச் செய்தான், ரேவதி சின்சியராய் உதவி செய்ய, என்னுடைய பங்கு அதில் குறைவு தான். கடைசி ப்ரெஸன்டேஷனிலும் குத்து மதிப்பாய் செய்தேன். மூன்று பேரை ஒப்பு நோக்க அவனுக்கே கம்மியான மதிப்பெண்களை வழங்கியிருந்தார்கள். பெண்கள் பொறுப்பாய் செய்திருப்பார்கள் என்று ஆசிரியர்கள். நம்பியிருப்பார்கள் என்று இப்போது தோன்றுகிறது.

கடைசி வருடம் அவனுக்கு ஏதோவொரு சப்ஜெக்ட்டில் மதிப்பெண் குறைந்துவிட அப்பீல் செய்த பின்னர் நல்ல மதிப்பெண் வந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் நண்பர்கள் பலரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்று பின்னால் ஒருமுறை சொன்னான்.
எட்டிப்பார்க்காத அவர்களுள் நானும் ஒருத்தி, அப்போதெல்லாம் அந்தந்த நேரத்து எண்ணங்களுடன் வாழ்ந்திருக்கிறேன். அந்தக் குறுகுறுப்பு இப்போதும் என்னுள் இருக்கிறது. என் அப்பாவின் தோழமையால் என் முசுட்டுத் தங்களை அவன் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டான் என்று இப்போது தோன்றுகிறது.

உன்னுடன் தொடர்பில் இருப்பேனோ இல்லையோ உன் அப்பாவுடன் தொடர்பில் இருப்பேன் என்று அவன் கல்லூரியின் கடைசி தினங்களில் சொன்னான்.

காலத்தால் தொலைந்து பல வருடம் கழித்து கல்லூரி வாட்சாப் குழுவில் மீண்டும் சந்தித்தோம்.

காலமெல்லாம் காதல் வாழ்க படத்தை நாங்கள் தியேட்டரில் சென்று பார்த்தோமா, இல்லை அந்தப் பாடல்களை அவனது வீட்டிற்கு அருகிலிருக்கும் ஸ்பீக்கரில் ஒலித்துக் கேட்டிருக்கிறேனா என்பது மறந்துவிட்டது,

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா பாடலைக் கேட்கும் போதேல்லாம், அவனது அம்மாவோடு அவனது வீடும், அதில் நாங்கள் சாப்பிட்ட நினைவும் உடன் வருகிறது.

ஞாயிறு, 13 மார்ச், 2022

தென்பாண்டி சீமையிலே . . .

 லக்ஷ்மியின் வீடு மாமா வீட்டிற்கு நேர் பின்னால் இருந்தது. நான் அப்போது மாமா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு நெருக்கமாயிருந்த தோழிகளில் ஒருத்தி லக்ஷ்மி.


இருவரும் ஒரே வகுப்பு, வெவ்வேறு பள்ளி, நான் செயின்ட் மேரிஸ், அவள் அரசாங்கப் பள்ளி. செயின்ட் மேரிசில் படித்தற்காக உயர்வாய் நினைத்துக் கொள்ளும் மனநிலையெல்லாம் எனக்கு இல்லை. சாரதா வித்யாலயாவில் டென்த்தில் கணக்கில் நூறும் அறிவியலில் தொண்ணூரும் எடுத்துவிட்டு, அப்போது புதிதாய் சேர்ந்த செயின்ட் மேரிசின் புத்திசாலிகளுக்கு மத்தியில் பாடம் புரியாமல் தொலைந்து போயிருந்தேன்.

ஒருமுறை ஜெயலலிதா கலந்து கொண்ட பெரிய விழாவில் நடனமாட லக்ஷ்மிக்கு சமிக்கி வைத்து தைத்த கறுப்புப் பாவாடை, பெரிய ஜிமிக்கியுடன் கூடிய நகை செட் எல்லாம் அவளது பள்ளியில் கொடுத்திருந்தார்கள். ‘அம்மா ஜெயலலிதா . . .’ என்ற வார்த்தைகளைக் கொண்ட பாடல். அவ்வளவு பெரிய ஜிமிக்கி, மாட்டலுடன், ஓசியில் தருகிறார்களே என்று அவள் பள்ளியின் மீது பொறாமையாக இருந்தது. தடவித் தடவி பார்த்துக் கொண்டிருந்தேன். போட்டுப் பாரேன் என்று பெருந்தன்மையாய் சொன்னாள்.

இருவரும் ஒரே ட்யூஷன் போனோம். திடீரென ஒருநாள் காரணம் சொல்லாமல் ட்யூஷனிலிருந்து நின்றுவிட்டாள். சார் என்னை விசாரித்தார். அழைத்து வரச் சொன்னார். மறுத்துவிட்டாள். அதற்கான காரணத்தை அவள் சொன்ன நாளில் நான் ப்ளஸ் டூ படித்து முடித்திருந்தேன்.

அவளுடைய அப்பாவும் அம்மாவும் அண்ணனும் எக்ஸ்போட்டிற்காக பீஸ் எடுத்து வந்து வீட்டில் தைத்துக் கொடுப்பார்கள். சிறிய அறைகள் கொண்ட ஓட்டு வீடு அவர்களுடையது. அவளுடைய அப்பா இருந்தால் தையல் மிஷினின் மோட்டர் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். கோபக்காரர். நான் நன்றாக படிப்பவள் என்று ஏனோ நம்பி என்னிடம் மதிப்பாக பேசுவார்.

லக்ஷ்மி பெரும்பாலும் பாவாடை தாவணி அணிவாள். அவளது அண்ணன் யுவராஜ், அவனும் நல்ல நண்பன். தம்பி அவ்வளவாய் எங்களுடன் சேர்ந்ததில்லை. அப்போது கேபிள் டி.வி வந்த புதிது, கேசட் வாடகைக்கு எடுத்து வந்து படம் போட்டுப் பார்ப்போம். பள்ளி நேரம் போக, வீட்டில் வேலையில்லாத நேரமெல்லாம் லஷ்மியும் யுவராஜூம் எங்கள் வீட்டில் தான் இருப்பார்கள்.

ப்ளஸ் டூ ப்ளிக் எக்ஸாமில் பேப்பர் அவுட் ஆகிவிட்டது என்று சொல்லி தினமும் ஒரு கேள்வித்தாளைக் கொண்டு வந்து கொடுப்பான் யுவராஜ். நாங்கள் படித்துவிட்டு போவோம் ஆனால் அந்தப் பேப்பராக இருக்காது. அப்படி நினைத்து அலட்சியாமாய் பார்த்துவிட்டு போன இயற்பியல் பேப்பர் அப்படியே வந்தது. நல்ல வேளை அலட்சியமாய் என்றாலும் விடைகளை ஒரு முறை பார்த்து விட்டு வந்திருந்தேன்.

நானும் லஷ்மியும் சேர்ந்து லீவில் ஹிந்தி கிளாஸ் போனோம். ப்ராத்மிக் படித்தோம். ஹிந்தி சாருக்கும் உடன் படித்த இன்னொரு தோழிக்கும் விருப்பம் உண்டாகிவிட பிரச்சனை பெரிதாகிவிட்டது. என்னை மிண்ட் ஸ்ட்ரீட்டில் ஆள் வைத்து அடித்தார்கள் என்று வீங்கியிருந்த கட்டை விரலைக் காட்டினார் ஹிந்தி சார்.

நாங்கள் இருவரும் அந்தப் பெண்ணை வீட்டில் பார்க்கப் போனால் அவளுடன் தனியே பேசும் வாய்ப்பே கிட்டவில்லை. சீக்கிரமே அவளை அவளது மாமாவிற்கோ மாமா பையனுக்கோ கட்டி வைத்துவிட்டார்கள்.

மத்யமாவை புதிதாய் சேர்ந்த லஷ்மண் சாரிடம் நான் மட்டும் படித்தேன். அவள் சேரவில்லை.

லக்ஷ்மிக்கு இளையராஜா குரலை ஏனோ பிடிக்காது. எருமைமாடு குரல் என்பாள். எனக்கு இந்த வகை இனப்பிரிப்பெல்லாம் அப்போது தெரியாது. எஸ்.பி.பி குரலையே அடையாளம் காணத் தெரியாத அபலையாய் இருந்தேன். நிறைய நடிகர்களை, பாடகர்களை விமர்சிக்கும் ஒற்றைச் சொல்லைச் சட்டென உதிர்ப்பாள்.

அவளுக்கு கல்லூரி படித்து முடித்ததும் உறவிலேயே திருமணம் நிச்சயமாகிவிட்டது. சின்ன மாம்பலத்தில் ஓட்டல் கடை வைத்திருப்பவர்களின் வீடு.
திருமணத்திற்குப் பின்னர் தோழிகள் சேர்ந்து ஒருமுறை பார்க்கப் போனோம். மிகவும் யோசித்துப் பேசினாள். எதார்த்தமாய் ஏதோவொன்றைச் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டு, முறைத்த மாமியார் பக்கம் திரும்பிப் பார்த்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

அங்கிருந்து கிளம்பும் போது வருத்தமாய் இருந்தது. அது தான் அவளைப் பார்த்த கடைசி தினம். பின்னர் ஒருமுறை அவளுக்கு பையன் பிறந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டேன்.

அவளுடைய புகுந்த வீட்டிற்கான வழி இப்போது மறந்துவிட்டது. அவள் அம்மா வீட்டினரும் வீடு மாறி போய்விட்டார்கள்.

என்றேனும் ஒருமுறை தொலைந்து போய்விட்ட அவளைத் தேடிப் பிடித்து பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். திருமணத்தின் ஆரம்பத் தயக்கமெல்லாம் மறைந்து இப்போது பழைய லஷ்மியாகியிருப்பாள் என்று நம்புகிறேன்.

‘தென்பாண்டி சீமையிலே , தேரோடும் வீதியிலே…’
இளையராஜாவின் குரலில் கேட்கும் போதெல்லாம் அவளை நினைத்துக் கொள்கிறேன்.

அப்போது தனக்கென்று சொந்தக் கருத்தைக் கொண்டிருக்காத இந்தத் தோழியின் நினைவை எந்தப் பாடலாவது அவளுக்கு இப்போது கொண்டு வருமா என்று தெரியவில்லை!

புதன், 14 நவம்பர், 2018

என்னுள்ளே என்னுள்ளே


‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடலை இன்று கேட்ட போது இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி ஶ்ரீவள்ளி மற்றும் ப்ரபாகர் சார் நினைவுகளில் விழுந்தேன். ஆம், அப்போது மிண்ட் ஸ்ட்ரீட்டிலிருந்து வந்த ஹிந்தி சாரின் பெயர் ப்ரபாகர் என்று தான் நினைவு. அவருக்கு அன்று இருபத்தெட்டு வயது இருந்திருக்கும் என்று கணிக்கிறேன்

பத்தாவது முடித்த லீவில் டைப்ரைட்டிங்கும் ஹிந்தியும் கற்றுக் கொள்வது அப்போதைய ட்ரெண்ட். அப்படித் தான் கிருஷ்ணா இன்ஸ்ட்டிட்யூட்டில் ஹிந்தி க்ளாஸ் சேர்ந்தேன். மூக்கிலிருக்கும் வியர்வையை அடிக்கடி கர்ச்சீப்பால் துடைத்துவிட்டுக் கொள்ளும் மெலிந்த உயரமான ஶ்ரீவள்ளியை அங்கு தான் சந்தித்தேன்.

பயங்கர ஆர்வக்கோளாறு கொண்டிருந்த சமயம் அது. ஆம், ஆத்மி என்று சில வார்த்தைகளையும் ஒரு வாக்கியத்தை எப்படி அமைப்பது என்ற அடிப்படையையும் கற்றுக் கொண்ட நாளில் என் கற்பனை சிறகடிக்கத் தொடங்கியது. ஒரு சிறுகதை எழுதிக் கொண்டு போய் ப்ரபாகர் சாரிடம் காட்டினேன்.

என் ஆர்வத்தைப் பார்த்து புன்னகைத்த அவர், கொஞ்சம் பொறுக்கச் சொல்லி அன்றைய வகுப்பில் ஒரு வாக்கியத்தை இன்னும் முறையாக எப்படி எழுதுவது என்று கற்றுக் கொடுத்தார். (என் முதல் சிறுகதை முயற்சி ஹிந்தியில் இருந்திருக்கிறது) மறுநாள் அதைத் திருத்தி கொண்டுபோய் மீண்டும் காட்டினேன். மீண்டும் புன்னகைத்தார். என்ன நினைத்துப் புன்னகைத்திருப்பார் என்று இப்போது புரிகிறது.

ப்ராத்மிக் பாஸாகி மத்யமாவிற்குச் சென்ற நாட்களில் சிறு மாற்றம். நாங்கள் வகுப்பிற்குச் செல்லும் போது, முன்பே வந்திருக்கும் ஶ்ரீவள்ளியுடன் ப்ரபாகர் சார் பேசிக் கொண்டிருப்பார். நாங்களும் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.

ஒருநாள் நாங்கள் வகுப்பிற்கு வரும் போது ஶ்ரீவள்ளி அங்கு இல்லை. ப்ரபாகர் சாரும் தலையெல்லாம் கலைந்து போய் அயர்ன் பண்ணாத சட்டையுடன் அன்று லேட்டாக வந்தார். வகுப்பு முடிந்ததும், நாங்கள் ‘என்ன சார் ஆச்சு?’ என்று கேட்க, அவரது கண்கள் கலங்கி விட்டன. அதுவரை ஆண்கள் கலங்கி நான் பார்த்ததில்லை.

‘நேற்று ஶ்ரீவள்ளியோட மாமாக்கள் வந்து என்னை அடிச்சுட்டாங்க’ என்று பிசிறு தட்டிய குரலில் சொல்லி கட்டை விரலைக் காட்டினார்.
அப்பொழுது தான் இருவரும் காதலித்திருக்கிறார்கள் என்று என் களிமண் மண்டைக்கு உறைத்தது. அப்பொழுதெல்லாம் காதலென்பது எங்கள் அகராதியில் கெட்ட வார்த்தை. திகைத்துப் போனோம்.

அதன் பிறகு ஷேவ் செய்யாத கலைந்த உருவமாய் வந்து போனார் ப்ரபாகர் சார். பழைய கலகலப்பான சாரைப் பார்க்க முடியாத வருத்தத்தில் நாட்கள் சென்றன.

ஒரு நாள் வகுப்பு முடிந்ததும், என்னிடமும் லலிதாவிடமும் அவரது தொலைப்பேசி எண் எழுதியிருந்த தாளைக் கொடுத்து ஶ்ரீவள்ளியின் வீட்டிற்குச் சென்று அதைச் சேர்த்துவிட முடியுமா என்று கேட்டார். பயமாயிருந்தது. ஆனாலும் சரி என்றோம்.

அவருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை விட, அப்போது டெக்கில் பார்த்த சின்ன தம்பி முதலிய படங்கள் கொடுத்த அசட்டுத் துணிச்சலும், அதிலிருந்த த்ரில்லுமே எங்களை நகர்த்தியிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

ஶ்ரீவள்ளியின் வீட்டில் அவளைப் பார்க்க எங்களுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அவளது அம்மா நன்றாகப் பேசினார். ஆனால் அம்மா சென்று விட்ட பிறகும் கூட ஶ்ரீவள்ளியின் தம்பி எங்களுடனே தொக்கி நின்றான். எப்படியோ, அந்தத் தாளை ஶ்ரீவள்ளியிடம் சேர்த்துவிட்டுத் திரும்பினோம். அதன் பிறகு நாங்கள் அவளைப் பார்க்கவே இல்லை. எங்கள் ஹிந்தி சாரும் மாறிவிட்டார்.

மத்யமாவிற்குப் பின்னர் நான் ஹிந்தி க்ளாஸ் போகவில்லை. ஹிந்தி பேசும் நல்லுலகமும் ஒரு நல்ல சிறுகதையாசிரியரை இழந்தது.
அடுத்த சில மாதங்களில் ஶ்ரீவள்ளிக்கு அவளது மாமாவுடன் திருமணம் நடந்து விட்டதாகக் கேள்விப்பட்டோம்.

வள்ளி படத்தின் குறிப்பிட்ட அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் இருவரையும் பார்த்துப் பேச வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் எழுந்தபடியிருக்கிறது. அதை ஶ்ரீவள்ளி நிச்சயம் விரும்பமாட்டாள், ஆனாலும் சார் எழுதிக்கொடுத்த அந்தத் தாளின் நினைவுகளையும் அதைச் சுமந்து வந்த எங்களையும் ஶ்ரீவள்ளி  மனதின் மூலையில் ரகசியமாய் இன்னமும் ஒளித்து வைத்திருப்பாள் தானே!

வெள்ளி, 9 மார்ச், 2018

வசந்தா மிஸ்

“என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும்.

ஒருகாலத்தில் என் கணக்கும் அப்படி தான் ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. அன்றைக்கு என் படிப்பு 35 மதிப்பெண்களைக் குறி வைத்தே இருந்தது. அப்பொழுதெல்லாம் வகுப்பிற்கு வெளியே தரையில் உட்கார்ந்து பேடை மடியில் வைத்து பரீட்சை எழுதுவோம்.
12 X 44 X 6 X 0 =?
இது என் பரீட்சையில் ஒரு கேள்வி.
பென்சிலை மடியில்  வைத்துவிட்டு, பள்ளித் திடலில் குடை விரித்திருந்த மரத்தைப் பார்த்தபடி கொஞ்சம் நேரம் யோசித்தேன். பின்னர் நாக்கைத் துருத்தியபடி குனிந்து,
12 X 44= 528,
520 X 6= 3120
செய்த Transfer Errorஐக் கவனிக்காமல் மேலும் தொடர்ந்தேன்.
3120 X 0 = ம்ம்ம் . . .
இவ்வளவு பெரிய நம்பரை ஜீரோவால் பெருக்கினால் ஜீரோ என்பதை நம்ப மனமின்றி, எண்காருணிய அடிப்படையில் 3120வையே விடையாகப் போட்டு, அந்தக் கணக்கிற்கு, பூஜ்ஜியம் மதிப்பெண்களைப் பெற்றேன். அந்த அளவிற்கான பொது அறிவே அன்றைக்கு எனக்கு இருந்தது.

இப்படியாகத் தட்டுத் தடுமாறி ஒன்பதாம் வகுப்பில் நுழைந்த போது, செந்தூரத்தால் நீளமாய் ஒற்றை நாமமிட்டு, தளர்வான பின்னலுடன்  வஸந்தா மிஸ் வகுப்பாசிரியராய் வந்தார். கணக்கே வராத எனக்கு,  ஏனோ முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்துவிட்டது. அந்த பிடித்தல் அதிகமாகி பின்நாட்களில், ‘த’வின் வாலைக் கூடுதலான ஒரு வளைவுடன் இழுத்து விடும் அவரின் ஸ்டைலை நானும் முயற்சித்து தமிழாசிரியரிடம் திட்டு வாங்கினேன்.

கணக்குப் பாடத்தின் முதல் நாள் . . .
கணக்கைச் சொல்லிக் கொடுத்து விட்டு, யாராவது ஒரு மாணவர், கணக்கை போர்டில் செய்து காட்டுங்கள் என்று அவர் சொல்ல, ஏதோ ஒரு உந்துதலில் சட்டென கையைத் தூக்கி, கரும்பலகைக்கு அருகில் சென்றேன். அங்கு சென்று நின்ற போது தான் தன்நிலையை அடைந்தேன். அங்கிருந்து பார்க்கையில் வகுப்பே வித்தியாசமாகத் தெரிந்தது. அதுவரை புரிந்தது போலத் தோன்றிய கணக்கு அந்நியமாகியிருந்தது. எதையோ எழுதிவிட்டு, ‘உனக்கு எதுக்கு இந்த வேலை?’ என்று கேட்ட பெண்ணின் பக்கத்திலிருந்த என் இடத்தில் அமர்ந்தேன். உலகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. தவறாகிப் போன கணக்கையும் மீறி, ஆசிரியரிடம் என்னை அடையாளப்படுத்திக் கொண்டது மகிழ்ச்சியாய் இருந்தது.
எல்லோரிடமும் சகஜமாய் பழகிய வசந்தா மிஸ்ஸின் வீட்டு விலாசத்தை வாங்கி, அந்தத் தீபாவளிக்கு, ரோஜாப்பூக்கள் கொண்ட ஒரு வாழ்த்து அட்டை கூட அனுப்பி வைத்தேன்.
தீபாவளி முடிந்து வகுப்பிற்கு வந்த அவர், அந்த அட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தார். புன்னகைத்தபடி அவர் நீட்டிய வாழ்த்து அட்டையை எட்டிப் பார்த்தால், அதில் என் தோழியின் பெயரை எழுதி வைத்திருந்தேன். அவருக்கும் என் தோழிக்கும் ஒரே நேரத்தில் வாழ்த்தை எழுதி, விலாசம் மாற்றி அனுப்பி வைத்திருக்கிறேன்! அதைச் சொல்ல மீண்டும் அவரிடம் புன்னகை.

டியூஷன் எடுப்பதற்காக எங்கள் விடுதிக்கு அவர் வந்த போது, எங்க மிஸ் என்று எனக்குப் பெருமையாக இருந்தது. வெள்ளைத் தாட்கள் வைத்து அப்பா தைத்துத் தந்த லாங் சைஸ் ரஃப் நோட்டில் மார்ஜின் வரைந்து வைத்து, அவர் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். மார்ஜின் வரைந்து வைத்திருந்ததற்காகவே, என் நோட்டை வாங்கி அதில் தான் கணக்கைப் போட்டு சொல்லித் தருவார் அவர். இது மற்ற மாணவிகளுக்குத் அதிருப்தியைக் கொடுத்தாலும், எனக்கு அவருடனான நெருக்கத்தை அதிகப்படுத்தியது. அவர் கொடுக்கும் சவாலான கேள்விகளுக்கு என்னைத் தயார் படுத்திக் கொள்ள அதிக நேரம் பயிற்சி செய்தேன். மூலையில் யாரோ கசக்கிப் போட்டத் தாளில் கணக்குக் கேள்வி இருக்க, எடுத்து அதை சால்வ் செய்து அவரிடம் காட்டி சரியா என்று கேட்டேன். இப்படியாக, மெல்ல மெல்ல அவருக்கு விருப்பமான மாணவியானேன். பத்தாவது பொதுப் பரீட்சையின் போது, கணக்குப் பரீட்சைக்கு முன்தினம், எனக்கு நல்ல ஜூரம்.
‘அதெல்லாம் கவலைப்படாதே! இத்தனை நாள் செய்த பயிற்சி வீணாகப் போகாது, நீ நன்றாகச் செய்வாய்!’ என்று சொல்லி அனுப்பினார்.

‘நீ கணக்கில 100 மார்க் எடுத்திட்ட தெரியுமா?’ என்று சொல்லி, மதிப்பெண் தாளை வாங்க நுழைந்த என்னை வரவேற்றவரும் அவர் தான். அன்று தான் அவரைக் கடைசியாகப் பார்த்தது.

பின்னர் பள்ளி மாறிவிட்டேன். அவ்வப்போது அவரை நினைத்துக் கொள்வேன். சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றும். பள்ளி இருந்தது தி.நகர் என்பதால் சென்னைப் போகும் போதெல்லாம் அந்தப் பக்கம் போகவும் செய்வேன். ஆனாலும் ஏதோவொரு தயக்கத்தில் பள்ளியை வெளியிலிருந்து பார்த்துவிட்டு திரும்பிவிடுவேன். இரண்டு வருடங்களுக்கு முன், சென்னை சென்றிருந்த நேரம், பள்ளி, பழைய மாணவிகளுக்கு பொதுவாய் ஒரு informal அழைப்பு விடுக்க, நானும் சென்றேன். உள்ளே நுழைந்தவுடன் எனது முன்னாள் ஆங்கில ஆசிரியரான பாகீரதி மிஸ் கண்ணில் பட்டார். வசந்தா மிஸ் திருச்சி பக்கம் சென்றுவிட்டதாகவும், தற்போது அவருடன் தொடர்பில் இல்லை என்றும் சொன்னார். ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

‘எனக்குக் கணக்கு வராது!’ என்று சொல்லிக் கொண்டு வரும் மாணவர்களைப் பார்க்கும் போது எனக்குள் வசந்தா மிஸ் வந்து அமர்ந்துவிடுகிறார். உடனே நான் கணக்கு மருத்துவராய் மாறி விடுகிறேன். அந்த மாணவருக்கு கணக்குப் பாடத்தில் எங்குப்  பிரச்சனை துவங்குகிறது என்பதை முதல் வகுப்பில் ஆராய்ந்து, அதைப் போக்கும் வழிகளை அவருக்கேற்ப உருவாக்குகிறேன். மீண்டும் மீண்டும் பயிற்சி கொடுத்து, கணக்கைப் பார்க்கும் போதெல்லாம் துப்பறியும் நிபுணர்களாய் மாறக் கற்று கொடுக்கிறேன். சிதறிக் கிடக்கும் தடயங்களை வைத்து விடை கண்டுபிடிக்கும் வேலையை ரசனையுடன் அவர்கள் செய்வதைப் பார்த்து திருப்தி கொள்கிறேன். என்றேனும் ஒரு நாள் வசந்தா மிஸ்ஸை சந்தித்து, அவர் தான் இதற்குக் காரணம் என்று சொல்லியே ஆகவேண்டும். முடியுமா என்று தான் தெரியவில்லை!

வியாழன், 8 மார்ச், 2018

ஊனம்

இப்பொழுதெல்லாம் நடக்கச் செல்லும் முன், வெயில் உச்சியை நோக்கி கிளம்பிவிட்டதா என்று பார்த்துக் கொள்கிறேன். சென்ற வாரம் செம்பாவாங் சாலையைச் சோங் பாங்கில் பிடித்து அது அப்பர் தாம்ஸன் சாலையைச் சந்திக்கும் இடம் வரை நடந்து, வலது புறமிருந்த மண்டாய் சாலைக்குள் திரும்பி, நீ சூன் கேம்ப் வரை நடந்து, பேருந்து பிடித்து வீடு திரும்பினேன்.
அது போல நேற்றைக்கு முன் தினம்் யீஷூன் இன்டஸ்ட்ரியல் பார்க்கின் பக்கம்.
நடக்கத் தொடங்கிய இருபதாவது நிமிடம் சாலையைக் கடந்து இந்தப் பக்கமாய் வந்து கொண்டிருந்த நண்பரைப் பார்த்தேன். எனக்கு ஒரு ஊனம் உண்டு. புதிதாய் ஒருவரைப் பார்த்துப் பேசுவேன். அடுத்த முறை அவரை வெளியில் பார்த்தால், அவராக மீண்டும் அறிமுகப்படுத்திக் கொண்டாலே தவிர எனக்கு அடையாளம் தெரியாது. ஒரு ஐந்து முறையாவது பார்த்துப் பேசினால் தான் முகம் கொஞ்சம் பழகும். சாலையைக் கடந்த நண்பரைப் முகநூலில் புகைப்படம் பார்த்துப் பழகியிருந்தாலும் ஒரு சந்தேகம், கடப்பதா, நிற்பதா என்று யோசித்துத் தயங்க, நல்லவேளை அவரே கையசைத்தார். சற்று நேரம் பேசிக் கொண்டே நடந்தோம்.
அப்படியே அந்த சாலையைத் தொடர்ந்து கடைசி வரைச் சென்று, அவென்யூ எட்டில் திரும்பி, அவென்யூ ஒன்பதில் மறுபடி திரும்பி ஜங்ஷன் ஒன்பது கடைத்தொகுதிக்குள் சென்றேன். அங்கே மற்றொரு நண்பர். அல்லது நண்பரைப் போன்ற ஜாடை கொண்ட ஒருவர். மறுபடியும் ஹாய் சொல்வதா, கடப்பதா என்று குழப்பம். அவர் முகத்தில் என்னைத் தெரிந்து கொண்டதற்கான அடையாளம் காணப்படவில்லை. ஒருவேளை அவர் என்னை கவனிக்காமல் கூட இருந்திருக்கலாம் அல்லது வேறொருவராக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. நானாக அறிமுகப்படுத்திக் கொள்ள முயன்று வேறு யாரோவாக இருந்து விட்டால். சட்டென கடந்து தப்பித்தேன்.
ஆதலால் நண்பர்களே! தெருவில் சுற்றித் திரியும் என்னை யாரேனும் கண்டால், என் முகத்தில் அடையாளம் கண்டு கொண்டதற்கான அடையாளத்தைத் தேடாமல் சட்டென ஹாய் சொல்லிவிடுங்கள். இல்லையென்றால் அடையாள ஊனம் கொண்ட ஒருவரைத் திமிர் பிடித்தவர் என்று நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் நேரும்.

நடித்தல்

பள்ளி காலங்களில் வருகையைப் பதிவு செய்யும் போது மட்டும் அழைக்கப்படும் பெயராக என்னுடையது இருந்திருக்கிறது. வகுப்பறையில் மற்றவர்களைக் கவனித்தபடி பூச்சியாய் அமர்ந்திருப்பேன். அம்மாவிற்கு என் ஆசிரியரிடம் பேசிப் பழகி என் இருப்பை உணர்த்தும் சாமர்த்தியமெல்லாம் இருந்ததில்லை.
அப்போது இரண்டாம் வகுப்பு என்று நினைவு. பள்ளி ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நடக்கும் கலை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விருப்பப்பட்டேன். அதை ஆசிரியரிடம் வெளிப்படுத்தும் தைரியம் எனக்கு இருக்கவில்லை. கொஞ்சம் சத்தமாய் பேசினால் என் குரல் எனக்கே அன்னியமாய் தோன்றும்.
அன்று வகுப்பு நேரத்தின் பாதியில் திடீரென பள்ளி மணி ஒலித்தது. ஆசிரியர்கள் தங்களுக்குள் பேசியபடி, பரபரப்பாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். கொஞ்சம் நேரத்தில் எல்லோரையும் பையை எடுத்துக் கொண்டு வகுப்பிற்கு வெளியே வரிசையில் நிற்கச் சொன்னார்கள். எதற்கென்று புரியாமல், வரிசையில் நின்றபடி சுவரில் செதுக்கியிருந்த வடிவங்களின் வழி தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு முன்னால் நின்றிருந்த மாணவிகள், வகுப்பில் சற்று பிரபலமானவர்கள். அவ்வப்போது ஆசிரியர்களால், புத்தகம் தூக்கிச் செல்ல அழைக்கப்படுபவர்கள். வருடத் தொடக்கத்தில் வீட்டிலிருந்து டஸ்டர் தைத்து எடுத்து வருபவர்கள். அவர்கள் பேசிக் கொண்டிருந்த விஷயம் என்னை ஈர்த்தது.
அந்த வருடப் பள்ளி விழாவில் நாடகம் ஒன்றை போடப் போவதாகத் திட்டமிட்டு, நடிப்பதற்கு ஆட்களை அவர்கள் நிர்ணயம் செய்து கொண்டிருந்தார்கள். அது ராஜா ராணி நாடகம். யார் ராணியாக நடிப்பது என்று அவர்களுக்குள் போட்டி. ஓரிரு நிமிட இடைவெளியில், நன்றாய் பேசத் தெரிந்த பெண் வாதாடி தன்னை ராணியாக்கிக் கொண்டாள். இருந்ததில் உயரமான பெண் ராஜாவாக நடிப்பதற்கு ஒப்புக் கொண்டாள். பக்கத்தில் நின்றிருந்த நான் ஆர்வ மிகுதியில், “நானும் நடிக்கிறேன்ப்பா. என்னையும் சேர்த்துக்கோங்க!” என்றேன் பாவமாய்.
எதிர்பாராத திசையிலிருந்து வந்த குரலைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள் அவர்கள்.
நாடகத்தில் ராணியாக நடிக்க இருந்தவள், உதட்டை அலட்சியமாய் சுழித்தாள்.
ராஜாப் பெண் போனால் போகிறதென்று நினைத்தவள் போல,
“உங்க வீட்ல வேட்டி இருக்கா?” என்றாள்.
அப்பாவை வேட்டியில் பார்த்த நினைவு எனக்கு இல்லை. வேலைக்கு எப்போதும் பேண்ட் சட்டை தான் அணிந்து செல்வார். ஆனால் பாச்சை உருண்டை வாசம் படிந்த வேட்டிகளை, டிரங்க்குப் பெட்டியின் அடியில் பார்த்திருக்கிறேன். அதே நேரம் வேட்டி என்றால், ஆண் வேடம் என்றும் புரிந்தது. சமர்த்தியமாக எங்கள் வீட்டில் வேட்டி இல்லை என்று தலையையும் கைகளையும் ஆட்டியபடி சொன்னேன்.
“ஏய் உன் வீட்ல இருக்கா?” என்று ராணிப் பெண்ணைக் கேட்டாள் அவள்.
நல்லவேளை, எனக்கு வேட்டி ஈய ராணிப்பெண்ணுக்கு மனம் வரவில்லை. தப்பித்ததாய் நினைத்தேன்.
“சரி! ராணிக்கு பக்கத்தில நின்னு சாமரம் வீசுவாங்களே! அந்த தோழிப் பெண்ணா இருக்கியா?”
படத்தில் பார்த்திருந்த பளபள உடைப் பெண்கள் நினைவிற்கு வந்தார்கள். நெற்றிச்சுட்டியைக் கூட அவர்கள் நெற்றியில் பார்த்த ஞாபகம் இருந்தது. மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன்.
அந்த நேரம் நின்றிருந்த வரிசை நகர்ந்தது. எங்குச் செல்கிறோம் என்ற சந்தேகம் திடீரென தோன்ற இப்போது தோழமைக் கொண்ட அந்தப் பெண்களிடம் விசாரித்தேன்.
“யாரோ இந்திரா காந்திய ரிக்ஷாவில கடத்திகிட்டு போயிட்டாங்களாம்! அதனால நம்மளை வீட்டுக்கு அனுப்பறாங்க!” என்றாள் ராஜாப் பெண்.
இந்திரா காந்தியைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். எந்த பிள்ளை பிடிப்பவன் ரிக்ஷாவில் அவரைக் கடத்தியது என்று யோசித்தபடி பள்ளி வாசலில் முன்பே வந்து காத்திருந்த அம்மாவை நோக்கிச் சென்றேன். அன்றும் அதைத் தொடர்ந்த விடுமுறை நாட்களிலும் வெறும் கைகளால் சாமரம் வீசிப் பார்த்தபடி இருந்தேன்.
தொலைக்காட்சியில் இந்திரா காந்தியின் உடலை எடுத்துச் சென்ற, எரித்த காட்சிகளை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்ததில் நாடகத்தை எல்லோரும் மறந்துவிட்டார்கள் போல. அதன் பிறகு அதைப் பற்றி யாரும் பேசவே இல்லை!

பேச்சு வாக்கில் . . .

எனக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கு, சற்றும் சம்பந்தமில்லாத இடங்களில் நுழைந்து அங்கிருப்பவர்களைக் கவனிப்பது. இதன் காரணமாக சில முகநூல் மற்றும் வாட்ஸாப் குழுக்களிள் அவ்வப்போது இணைந்து கொள்வேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சிங்கப்பூர் இந்தியப் பெண்கள் தொடங்கியிருந்த வாட்ஸாப் குழு ஒன்றில் இணைந்தேன். எதிர் வரும் அவர்களின் சந்திப்பிற்கான தயாரிப்புகளைப் பற்றிய தட்டச்சு உரையாடல்கள் என்னுளிருந்த வெறுமையை நிரப்பியபடி இருந்தன. ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அவர்களைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அந்த நேரம், அவர்கள் பெரும்பாலும் ஹிந்தியில் பேசிக் கொள்வது தனக்குப் புரியவில்லை என்று ஒரு பெண் வெளியேற, உரையாடல் திசை திரும்பியது. அக்குழுப் பெண்களால் ஒரு இந்தியப் பெண்ணிற்கு ஹிந்தி தெரியவில்லை என்பதை நம்பவே முடியவில்லை!
ஒரு இந்தியனாக இருந்து கொண்டு தேசிய மொழியான ஹிந்தியைப் படிக்காமல் அதையும் பெருமையாகச் சொல்லிக் கொண்டு வெளியேறிய அந்தப் பெண்ணின் அறியாமையைச் சொல்லி ஸ்மைலிகளால் கண் மூடி சிரித்தார்கள்.
ஆங்கிலம் தெரியவில்லை என்பதை விட ஹிந்தி தெரியாதது எவ்வளவு பெரிய அவமானம் என்று வியந்து, இப்படி இருப்பதால் தான் உலக மேடையில் இந்தியர்களை யாரும் மதிப்பதில்லை என்றார்கள்.
ஆங்கிலம் என்பது புத்திசாலித்தனத்தின் அளவுகோல் அல்ல ஆனாலும் அம்மொழி இந்தியர்களின் ஸ்டேடசாகி விட்டதை எண்ணி வருத்தப்பட்டு, தங்கள் இயலாமையை மறந்தார்கள்.
நடுநடுவே, ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்டிராதவர்கள், தாங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து கற்றுக் கொண்டதை இடைச் செருக, அவர்களுக்குப் பாராட்டு கிடைத்தது.
பின்னர் அந்த பெண்ணிற்கு பிறருடன் பழகுவதில் பிரச்சனை இருந்து, அதனால் ஹிந்தி தெரியாத்தைக் காரணமாகச் சொல்லி வெளியேறியிருக்கக் கூடும் என்று சமாதானப் படுத்திக் கொண்டார்கள்.
‘பெண்கள் பொட்டுகளால் முழுமையடைகிறார்கள்
மொழி ஹிந்தியால் முழுமையடைகிறது’ போன்ற கவிதைகளெல்லாம் துள்ளி விழுந்தன. (இது ஏதேனும் பாடலா என நான் அறியேன்)
இதற்கிடையே இன்னும் சிலர் வெளியேறியிருக்க, அவர்களை இந்தியர்கள் அல்லாதவர்கள் என்றார்கள்.
இதெல்லாம் நான் வெளியே சென்றிருந்த நேரத்தில் நடந்திருந்ததால் வீட்டிற்குள் நுழைந்ததும் கிட்டத்தட்ட 200 தகவல்கள் என் கைப்பேசியில் வந்து விழுந்தன.
இதெல்லாம் பெண்கள் பேச்சு என்று சாதாரணமாய் இருந்துவிட முடியவில்லை. இவர்களின் எண்ணங்களே உண்மை என்று இவர்களின் பிள்ளைகள் நம்புகிறார்கள். இத்தகைய நம்பிக்கைகளின் நீட்சியே பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இட்டுச் செல்கிறது. தான் தவறென நினைக்கும் செயலை ஒரு பெண் செய்தால், தானே இறங்கி அவளுக்குப் பாடம் புகட்டலாம் என்று அவர்கள் வீட்டு பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறது.
இருந்த வேலையெல்லாம் விட்டுவிட்டு, என் முதல் தகவலை அந்த குழுவிற்காக தட்டச்சத் தொடங்கினேன்.
ஹிந்தியிலேயே பெரும்பாலான உரையாடல்கள் நடைபெறுகின்றன என்று அறியாமல் அக்குழுவினுள் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு வெளியேறும் சுதந்திரம் இருக்கிறது. அதற்காக அவளுக்குப் பின்னால் புறம் பேசுவது சரியில்லை. ஹிந்தி தேசிய மொழியா இல்லையா என்பது விவாதற்குரியது, அது தேசிய மொழி என்பது உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அதைப் படித்தாக வேண்டும் என்று நினைப்பது உங்கள் நம்பிக்கை. உங்கள் நம்பிக்கையை பிறர் மீது திணிப்பது தவறு. தோழமை என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டது. எந்த ஒரு மொழிக்குள்ளும் சிறைபட விரும்பாத்தால் வெளியேறுகிறேன் என்ற பொருள் படும் தகவலை ஆங்கிலத்தில் தட்டி விட்டு வெளியேறினேன்.
நிம்மதியாக இருந்தது.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

டிஷ்யூ விற்பவர்

எம். ஆர். டி நிலையத்திற்கு அருகில் இருக்கும் கடைத்தொகுதி அது. அங்கே இருந்த கடை ஒன்றில் சட்டைகளைப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பக்கமாக ஒரு வயதான பெண்மணி.... baju kurung அணிந்திருந்தார். என் அம்மாவின் வயதிருக்கும். நடையில் முதுமை தெரிந்தது.
என்னைத் தாண்டும் போது, கையிலிருந்த டிஷ்யூக்களை நீட்டி, இளைத்த குரலில் த்ரீ ஃபார் ஒன் டாலர், த்ரீ பார் ஒன் டாலர் என்றார். அவ்வார்த்தைகள் அவருக்கே இன்னும் பழக்கமாகியிருக்கவில்லை என்பதை அவர் குரலில் இருந்த தடுமாற்றம் உணர்த்தியது. மனதுள் பாறையாய் இறங்கியது அவரது இரைஞ்சல்.
வாங்க நினைத்த பொருளைப் பற்றி சுத்தமாய் மறந்து திகைத்து நின்ற சில நொடிகளில், நான் டிஷ்யூவை வாங்கப் போவதில்லை என்று முடிவு செய்தவர் போல தள்ளாட்டத்துடன், வேறு பக்கம் செல்லத் துவங்கினார்.
சில கணங்கள் அவரது நம்பிக்கை அலைகழிய காரணமாய் இருந்து விட்டேன் என்ற குற்றவுணர்வு நெருக்க, அவரைத் தொடர்ந்து சென்று, என்னால் இயன்ற வெள்ளிகளைக் கொடுத்தேன்.
நடுங்கும் கரங்கள் நீட்டிய டிஷ்யூ பேக்கட்களை மென்மையாய் மறுத்து எதிர் பக்கம் நடக்கத் துவங்கினேன். அவரது தேங்க்யூ என்னைத் துரத்தி வந்தது. அதைக் எதிர் நோக்க அஞ்சியோ என்னவோ, என் நடை துரிதப்பட்டிருந்தது.