திண்ணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திண்ணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

கைப்பிடிச் சோறு

          பானையில் வெந்துக் கொண்டிருந்த இட்லியின் மணம் நாசியுள் நுழைந்து செரிமான உறுப்புகளை இதமாய் தடவி விட்டது. அத்தோடு சட்டினி தாளிக்கும் ஓசையும் வாசமும் சேர்ந்துக் கொள்ள தன்னிச்சையாய் எச்சில் சுரந்தது.  தாளிப்பில் இன்று உளுத்தம்பருப்பு சேர்க்கவில்லைப் போல! என்னயிருந்தாலும் நான்கு பருப்பைப் போட்டு தாளித்தால் வரும் மணமே அலாதி. கோதாவரிக்கு பசிக்கத் தொடங்கி விட்டது. தலையை வீட்டினுள்ளே நீட்டிப் பார்த்தாள். நீண்ட ரேழி, கூடம், சாப்பாட்டு அறை, இவற்றையெல்லாம் தாண்டி வீட்டின் புழக்கடை தெரிந்தது. அங்கே தென்னை மரத்தினடியில் தேய்ப்பதற்காக காத்துக் கிடந்தது பாத்திரக் குவியல். மேலாக இருந்த குண்டானை காகம் தன் அலகால் சுரண்டிக் கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் தெரிந்த நெருப்பவிந்த கல்லடுப்பில் கரிக் குண்டான் ஒரு பக்கமாய் சாய்ந்து கிடந்தது.
     இப்போது அநேகமாக கணேசன் தட்டின் முன் உட்கார்ந்திருப்பான். சியாமளா அவனுக்கு இட்லிகளைப் பறிமாரிக் கொண்டிருப்பாள். பெரியவள் தலையை விரித்துப் போட்டபடி அம்மா வந்து பின்னி விடுவதற்காய் காத்துக் கிடப்பாள். முன்பெல்லாம் கோதாவரி நேராக உள்ளே சென்று வருபவளாக இருந்தாள். அப்போது அவளுடைய கணவன் திடமாய் இருந்தார். நிலையான வருவாய் இருந்தது. இவள் உண்டது போக மிகுதியாய் இருந்த உணவை வாங்கிச் செல்வதற்கு ஆட்கள் இருந்தார்கள். எப்போது சாப்பாட்டிற்காக அடுத்தவரின் கையை எதிர்பார்க்கவேண்டி வந்ததோ அதிலிருந்து மற்றவர்களின் வீட்டின் வாசற்படியேற தயக்கமாகி விட்டது அவளுக்கு. கணவர் இறந்த பின் அவளால் தன்னுடைய தேவைகளைக் குறைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் நடந்ததை  புரிந்துக் கொள்ளாமல் வயிறு அழிச்சாட்டியம் செய்தது.
     மணி எப்படியும் எட்டரைக்கு குறையாமல் இருக்கும். இன்று என்ன இவ்வளவு நேரம்! பள்ளிக் கூடத்திற்கு நேரமாகிவிட்டதே! ‘சியாமளா இன்று நேரம் கழித்து எழுந்தாளோ என்னவோ!’ என்று வாய்க்குள் முனகியபடியே திண்ணையில் அமர்ந்தாள் கோதாவரி.
     கோதாவரிக்கு இந்த கார்த்திகையோடு அறுபத்தி இரண்டு வயது முடிகிறது. இருந்த ஒரு பிள்ளை ஏழு வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்து போக தம்பி வீட்டிற்கு அருகிலிருந்த இடத்தில் குடிசை போட்டு தங்கிக் கொண்டாள். முதியோர் பென்சனும் தம்பி  கொடுக்கும் சொற்ப பணமும் அவளது வாழ்க்கையை ஓட்ட போதுமானதாய் இல்லை. கஷ்ட ஜீவனத்தோடு நில்லாமல் இப்போது உடம்பு வேறு படுத்தத் தொடங்கி விட்டது. கழுத்தெலும்பு வலிக்கிறது என்று அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போனால் தலை மேல் கனமாய் வைத்துத் தூக்கக் கூடாது என்று சொல்லி மஞ்சள் நிறத்தில் மாத்திரை கொடுத்தாள் டாக்டரம்மா. அதுமட்டுமல்லாமல் அடிக்கடி நிதானம் தவறிப் போகிறது கோதாவரிக்கு.
     தம்பியின் மனைவி கங்கா இருந்தவரை நாத்தியைத் தேடி வந்து மூன்று வேலை உணவையும் கொடுத்து விட்டுப் போவாள். வீட்டுப் பெண்ணின் வயிறும் மனமும் வாடினால் தன் குடும்பம் வாடும் என்ற அவளது நம்பிக்கை இவளது வயிற்றுப் பாட்டை கவனித்துக் கொண்டது. நான்கு மாதங்களுக்கு முன் எதிர்பாரா விபத்தில் அவளும் போய் சேர்ந்து விட இப்போது தம்பியில் மருமகள் போடும் சோற்றை எதிர் பார்க்க வேண்டியதாய் இருக்கிறது. கங்கா போனதற்கு தான் போய் சேர்ந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வாள் கோதாவரி.
     தெருவில் சைக்கிளை ஓட்டியபடி சென்ற பால்கார சேகர்  “என்ன அத்தை சாப்பிட்டாச்சா!” என்றான். “இல்லடாப்பா! எல்லாம் இனி தான்!” என்றாள். “! இன்னிக்கி என்ன வெரதமாஎன்றவாறு சைக்கிளை மிதித்தபடி சென்றுவிட்டான். ‘அதொன்னு தான் கொறையா இருக்கு!’ என்று நினைத்துக் கொண்டாள் கோதாவரி. நன்றாய் இருந்த காலத்தில் சோமவாரத்திலிருந்து சனிக்கிழமை வரை ஏதாவது ஒரு விரதத்தைக் கடைபிடிக்கவே செய்திருந்தாள். அதனால் ஏதாவது பலன் இருந்ததா என்று அவளுக்கு சந்தேகமாகவே இருந்தது.
     காலை வெயில் தெருவை இரக்கமின்றி சுட்டெரித்துக் கொண்டிருந்தது. பள்ளத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பைப்பில் இன்னமும் தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. திலகாவும், வசந்தியும் குழிக்குள் வைக்கப்பட்டிருந்த அன்னகூடையிலிருந்து தண்ணீரைக் கோரி தங்கள் குடத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி நிறைய குடங்கள் இருந்தன. பள்ளிக் கூடத்திற்கு செல்லும், ரெட்டை ஜடை போட்டு மடித்துக் கட்டிக் கொண்டிருந்த இரு பெண்கள் பேசியபடி சைக்கிளில் கடந்துச் சென்றார்கள். அந்த தெருவிற்கு சொந்தமான ராமு நாய் இங்குமங்கும் அலைந்தபடியிருந்தது.
     கோதாவரியின் மேல் வயிற்றிலிருந்து ஒரு பொறி போல கிளம்பிய பசி கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றை ஆக்கிரமித்தது. தன் அரூபக் கைகளைத் தொண்டை வழியாக நீட்டி தலையை கிடுக்கிப் போட்டு இழுக்கத் தொடங்கியது. உள்ளே கரண்டி கிண்ணத்தில் தட்டப்படும் ஓசை கேட்டது. சாப்பிடுகிறார்கள் போல! சற்று நடந்துவிட்டு வரலாம் என்று உட்கார்ந்திருந்த திண்ணையை விட்டு எழுந்தாள் கோதாவரி.
     மகன் இறந்து, வருமானம் குறைந்த பின் இரண்டு மூன்று மாதங்கள் இருப்பதை வைத்து ஓட்டினாள் அவள். ஒண்டி கட்டைக்கு என்ன வேண்டி கிடக்குது என்று நினைத்தாள். செயலாய் இருந்த சமயத்தில் ஞாயிறு ஆனால் ஆடோ கோழியோ குழம்பில் கொதிக்கும். அதோடு ஏதேனும் ஒரு மீன் காரமான மசாலையில் முக்கியெடுக்கப்பட்டு பொறிப்பதற்காய் காத்துக் கிடக்கும். மகனுக்கு அதெல்லாம் இல்லாமல் ஞாயிறு விடியாது.      
     முதலில் நாக்கு தற்போதைய தரித்திர நிலைக்கு அடங்கமாட்டேன் என்று அடம் பிடிக்கத் தான் செய்தது. அப்போதெல்லாம் சாப்பாட்டு நேரத்தில் யார் வீட்டிற்காவது சென்று பேசத் துவங்குவாள் கோதாவரி. அவர்களும் பேச்சு சுவாரஸ்யத்தில் அவளுக்கும் சாப்பிடுவதில் கொஞ்சம் கொடுப்பார்கள். ஆனால் இது நெடுநாள் நிலைக்கவில்லை. இவள் போகும் நேரம் ஆண்கள் உள்ளறையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள். இவளோடு பேசும் பெண் உணவைப் பற்றி முற்றிலும் மறந்து பேசிக்கொண்டிருப்பாள். அதற்கு மேல் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தால் பட்டும் படாமலும் பதில் வரும். பிறகு அங்கிருக்க கோதாவரியாலும் முடியாது.
     தொடக்க காலத்தில் இதெல்லாம் மனதிற்கு வலி தருவதாய் இருந்தது. எத்தனை பேருக்கு மீந்துப் போன உணவையெல்லாம் கொடுத்திருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வாள். அந்த நேரம் அவள் பார்வை, மாட்டிற்கு போடப்படும் பழைய உணவைக் கூட ஆராயத் தவறாது. ஒருநாள் பழையதாய்ப் போனால் தான் என்ன இட்லி கெட்டா போய்விடும் என்று நினைக்கத் துவங்கியிருந்த காலம் அது. ஆனால் அவளது நேரமோ என்னவோ, அந்தத் தெரு மக்கள் பழைய உணவையும் வீணாக்காமல் வத்தல் பிழிந்தோ அல்லது வேறு ஏதாவதாக உருமாற்றியோ உண்பவர்களாக மாறிப் போயிருந்தார்கள். இப்போது சற்று பரவாயில்லை. அவள் நாக்கு ருசியான உணவு வகைகளைத் தேடுவதில்லை, இருந்தாலும் குறைந்த பட்சம் மூன்று வேளைகளாவது சாப்பிடத் தேவையாய் இருக்கிறது.
    நேரம், வயிற்றுத் தீயை முந்தவிட்டு, பொறுமையாய் நகர்ந்துக் கொண்டிருந்தது. ராமு நாயும் தானும் ஒன்றாகிவிட்டதாய் தோன்றியது கோதாவரிக்கு. அந்தத் தெருவில் சாப்பாட்டை எப்போதும் நினைத்துக் கொண்டே அலைபவர்கள், அதன் வாசனையால் தூண்டப்படுபவர்கள் தாங்கள் இருவரும் மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டாள் அவள்.
     பசி உக்கிரமாகத் துவங்கியது. இன்னும் பத்து நிமிடத்தில் கணேசன் வெளியே வந்து விடுவான். எப்படியும் சாப்பிட்டியா அத்தை என்று விசாரிப்பான். பிறகு சியாமளாவைப் பார்த்து, அத்தைக்கு நாலு இட்லி கொடு!’ என்பான். இட்லியின் சுவை இப்போதே நாவில் தெரிந்தது கோதாவரிக்கு.
     கங்கா இறந்த கொஞ்ச நாளைக்கு பழக்கத்தின் காரணமாக உணவு கோதாவரியைத் தேடி வந்து கொண்டு தான் இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல  தாமதமாய் வரத் தொடங்கியது. சிறு வயதிலிருந்தே அவளது வயிறு பசியைக் கண்டதில்லை. பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, ஆண்கள் சாப்பிடுவதற்கு முன் உணவைத் தட்டில் போட்டு சாப்பிடும் சுதந்திரம் அவளுக்கு இருந்தது. பழக்கமற்ற பட்டினியால் வயிறு இடும் ஓலம் தாங்க முடியவில்லை. அதனால் தம்பியின் வீட்டுத் திண்ணையில் சென்று காத்திருக்கத் தொடங்கினாள் கோதாவரி.
     ‘நீங்க வேணா பாருங்க! சாப்பிடற நேரத்துக்கு கரெக்டா வந்துடுவாங்கஎன்று சியாமளா சொன்னதாய் அமுதா ஒருமுறை சொன்ன போது நாண்டுக் கொள்ளலாம் போல தான் இருந்தது அவளுக்கு. ஆனால் அதற்கு தைரியம் வரவில்லை. அந்த நேரம், மறுபடி அந்த வீட்டு வாசலை மிதிக்கக் கூடாது என்ற வைராக்கியமெல்லாம் கூட எழுந்தது. அதெல்லாம் அடுத்த சாப்பாட்டு வேளை வரை தான். பிறகு சியாமளா போடும் கைப்பிடி சோற்றை எதிர்பார்த்து அவளது ஐம்புலன்களும் தவமிருக்கத் தொடங்கிவிட்டன.
     தன் குடிசைக்குச் சென்று ஒரு செம்பு தண்ணீரைக் குடித்து விட்டு வெளியே வந்தாள் கோதாவரி. காற்றில் மிதந்த படி வந்த ஒரு பிஸ்கட் பாக்கெட் முள் வேலியில் சிக்கியிருந்தது. அதை விடுவித்து உள்ளே பார்த்துவிட்டு மறுபடி காற்றின் கைகளில் கொடுத்துவிட்டு தெருவிற்கு வந்தாள்.
     இப்போது திலகா குடத்தை சுமந்தபடி தன் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தாள். கிண்ணத்தில் இட்லியையோ எதையோ ஊட்டியபடி, குழந்தைக்கு ராமுவை வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தாள் சந்திரா. ‘இதோ பாரு... ஜூ, ஜூ, ஜூபாப்பா சாப்பிடலைன்னா நீ மொத்தத்தையும் சாப்பிட்டுடு,’ என்ற கையிலிருக்கும் உணவை போட்டுவிடுவது போல பாவனை காட்டினாள். அவள் கையிலிருந்து விழப்போகும் உணவுக்காக கண்களில் உயிரைத் தேக்கியபடி ராமுவும், அப்படி விழுந்தால் அதை ராமு உண்ணுவதைப் பார்க்க குழந்தையும், ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். கோதாவரியைப் பார்த்ததும் கைகளால் கிண்ணத்தை மறைத்துக் கொண்டு எதிர்புறம் திரும்பிக் கொண்டாள் சந்திரா. ராமுவும் இப்போது அந்தப் பக்கம் மூச்சிரைக்க ஓடிச் சென்று தரை சேரப் போகும் இட்லிக்காக மூச்சிரைக்க தவமிருக்கத் தொடங்கியது.
     கேட் திறக்கும் சத்தம் கேட்ட கோதாவரிக்கு பக்கென்றானது. நேரமாகிவிட்டதோ! கணேசன் கிளம்பிவிட்டான் போல. இந்நேரம் திண்ணையில் இருந்திருந்தால் கண்டிப்பாய் கேட்டிருப்பான். அதுவும் இயற்கையாய் இருந்திருக்கும். இப்போது போனால் சாப்பாட்டுக்கு வந்தது போல தான் இருக்கும். ஆனாலும் மான ரோஷமெல்லாம் பாத்து ஒரு வேளை உணவை இழக்க  அவள் வயிறு தயாராக இல்லை. சற்றே வேகமாய் நடையை எட்டிப் போட்டாள்.
     வண்டியை வெளியே எடுத்துக் கொண்டிருந்தான் கணேசன். இவளைப் பார்த்ததும் பின்பக்கம் திரும்பி மகளின் ‘டை’யை சரியாக்க முற்பட்டாள் சியாமளா. வரப்போகும் வார்த்தைகளைப் பிடித்துக் கொள்ள மூச்சை உள்ளடக்கி, காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள் கோதாவரி. பெண்ணை வண்டியின் பின்னால் உட்கார வைத்து விட்டு வண்டியைக் கிளப்பிய கணேசன், ‘அத்தே! சாப்பிட்டுட்டு போங்கஎன்றான். அந்த சொற்கள் குளிர்ச்சியாய் செவி வழியே உள்ளே இறங்கி  நாவின் எச்சில் சுரப்பிகளை அவிழ்த்து விட்டது. நிச்சயமாகி விட்ட இந்த வேளையின் உணவு மற்ற எதையும் நினைக்க விட வில்லை. வயிறு பழக்கி வைத்த நாய் போல கர்ர்ர் என்றது. இன்னும் சற்று நேரத்தில் தனக்காக வரப்போகும் இட்லியைப் பற்றிய கனவுகளுடன் காத்திருக்கத் தொடங்கினாள் கோதாவரி. குழந்தையைச் சுற்றிப் போடப்பட்ட கடைசி வாய் உணவை வேகமாய் விழுங்கிக் கொண்டிருந்தது ராமு.
(19 செப்டம்பர் 2016,  திண்ணை) 







வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

தமயந்தியம்மாள் இல்லம், 6, பிச்சாடனார் தெரு


தமயந்தியம்மாள் இல்லம் நான்கு தலைமுறையினைப் பார்த்துவிட்டது. இல்லம் என்றால் முழு வீடும் இல்லை, பின்னால் இருக்கும் ஓடு வேய்ந்த சமையல் அறையும், அதை ஒட்டியிருக்கும் தளம் போட்ட பூஜை அறையும் மட்டும். அவை இரண்டும் தான் தியாகராஜனின் தாத்தா காலத்தில் இருந்தன. இப்போதைய சாப்பிடும் அறை அப்போது கூடமாக இருந்தது. தியாகராஜனின் அப்பா தன் காலத்தில் அதனுடன் புது கூடம் ஒன்றை இணைக்க, முன்னது கூடம் என்ற பட்டத்தை இழந்து அறையாகிப் போனது.
அந்த அறையில் தான் பழைய பச்சை வண்ண டிரங்கு பெட்டி வைக்கப்பட்டிருக்கும். திறக்கும் போது ரசக்கற்பூர வாடையடிக்கும். அதனுள்ளே பட்டு வேஷ்டியிலிருந்து புதுப் பென்சில் வரை அனைத்தும் இருக்கும். எப்போதாவது சுத்தப்படுத்தப்படும் நேரம், முக்கியத்துவம் குறைந்து போனதால், அதிலிருந்து வேண்டாம் என தூக்கி எறியப்படும் வாழ்த்து அட்டைகள், பழைய டைரி, அடர்ரோஜா வண்ண திருமண பத்திரிக்கைகள் போன்றவை தியாகராஜனுக்கும் அவர் தம்பிகளுக்கும் பொக்கிஷங்கள். தோழர்களிடம் அந்தப் பெட்டியை காட்டி அதனுள்ளிருக்கும் பொருட்களைப் பற்றி பெருமையாய் சொல்லிக் கொள்வார்கள்.
வீட்டைச் சுற்றிலும் முள் காடாக இருந்தது, அப்போது. இருந்தும், வீட்டில் நுழையக் கூடிய பூச்சிகளைப் பற்றிய பயம் இருந்ததில்லை யாருக்கும். அது பாட்டிலும் அது, இவர்கள் பாட்டிலும் இவர்கள் என்று ஒருவர் மற்றவர் வழியில் குறுக்கிடாமல், தன் வழியே சென்று கொண்டிருந்தார்கள். பிள்ளைகளுக்கு பூச்சிகளும் புழுக்களும் விளையாட்டு தோழர்கள். பள்ளி விடுமுறைகளில் பட்டாம்பூச்சிகளின் பின்னே திரிந்தார்கள். மழை நாட்களில் வரும் ரயில் பூச்சிகளைக் குச்சியால் தொட்டு அவை சுருட்டிக் கொள்வதை ஆர்வமாய் பார்த்தார்கள். மரவட்டையை இரண்டாக வெட்டிய பின்னும் அது நகர்வதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். வீட்டின் பின்னாலிருந்த மாமரத்தில் ஏறியிறங்கினார்கள். அருகேயிருந்த இலந்தை மரத்தின் காயை பழுக்கும் முன்னரே பறித்து கடித்தார்கள். அதன் துவர்ப்பு அவர்களின் நாவை உறுத்தவில்லை. இலந்தம் பழம் என்ற பெயரே உண்ண போதுமானதாய் இருந்தது அவர்களுக்கு. தியாகராஜனுடைய அம்மா தினமும் வீட்டை ஒட்டி முளைக்கும் புற்களை செதுக்கியபடி இருப்பாள். செதுக்குவதற்காகவே செய்யப்பட்டது போல உறுதியாக, கருமையின் பளபளப்போடு இருக்கும், அவளுடைய கைகள். வீட்டைச் சுற்றிலும் கட்டை துடைப்பத்தின் தடம் எப்போதும் பதிந்திருக்கும்.
தியாகராஜனுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த அகிலாண்டம், மாமியாரை விட அதிகமாய் வீட்டைப் போற்றினாள். குடிசை வீட்டிலிருந்து வந்திருந்த அவளுக்கு வீட்டின் அருமை தெரிந்திருந்தது. திருமணத்திற்கு முன் வரை, வெயிலின் போது மண் தரையை சாணமிட்டு மெழுகி, மழையின் போது ஒழுகும் இடங்களில் பாத்திரம் வைத்து, அது நிரம்பும் நேரம் மாற்றி பழக்கப்பட்டவள். மழைக்காலத்தின் போதுஈரமான இடங்களைத் தவிர்த்து, உலர்ந்திருக்கும் கொஞ்சம் இடத்தில் சாக்குப்பைகளை விரித்து, குடும்பமே ஒண்டிக் கொண்டு படுத்திருக்கும் நேரம், அகிலாவின் கனவுகளில் மச்சுவீடு இருக்கும்.
திருமணத்திற்கு பிறகு தளம் போட்ட வீட்டிற்கு வந்தது அவளுக்கு மிக திருப்தியாய் இருந்தது. மாமியாருக்கும் மருமகளுக்கும் பல விஷயங்களில் ஒத்துப் போகாவிட்டாலும், வீடு விஷயத்தில் மட்டும் இருவரும் விட்டுக் கொடுத்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டை யார் சுத்தம் செய்வது என்ற பிரச்சனை அவர்களுக்குள் எழுந்ததேயில்லை. அகிலா மாமியாருக்கு ஒரு படி மேலே போய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டைக் கழுவும் போது சுவர்களையும் சேர்த்து துடைப்பவளாக இருந்தாள். இதில் மாமியாருக்கு மிக பெருமை. அதை வெளிப்படுத்தும் விதமாக எப்போதாவது, ‘சுவத்தை ஒரேடியா தேய்ச்சி எடுத்துடாதடி! கஷ்டப்பட்டு கட்டியது’ என்பாள். தியாகராஜனின் பங்காக இந்த வீடு வந்த போது யாருக்கும் அதில் பெரிதாக ஒன்றும் தோன்றி விடவில்லை.
தியாகராஜனின் பிள்ளைகள் வளரும் போது பழைய அறைகளுக்கு வயதாகி விட்டிருந்தபடியால், மழை நேரம் சுவர்களில் ஈரம் கசியத் துவங்கியது. அடுப்பங்கரை ஓட்டின் இடுக்குகளிலிருந்து தேள்கள் கொட்டத் தொடங்கின. அகிலாவிற்கு இதனால் ஏற்பட்ட மன வருத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. வீடு, தாங்கள் தங்குவதற்கு ஏற்றதாய் இல்லை என்ற எண்ணம் அவளுக்குள் வலுப்பெற்றபடி இருந்தது. தங்கள் காலத்திற்குள் இப்போதிருக்கும் பழைய வீட்டைப் புதுப்பித்து, மேலும் குறைந்தது மூன்று அறைகளாவது கட்டிவிட வேண்டும் என்று நினைத்திருந்தாள் அகிலா. மூன்று பிள்ளைகளின் திருமணத்திற்கு பிறகு ஆளுக்கு ஒரு அறை வேண்டும் தானே என்று நினைத்தாள். வரப்போகும் மருமக்களுக்காக தனித்தனி ஆட்டுரல், அம்மிக்கல் என்று சேர்த்தபடியிருந்தாள். அவங்க என்ன இங்கெல்லாம் வந்து தங்கப் போறாங்க!’ என்ற தியாகராஜனின் வாதமெல்லாம் எடுபடவில்லை.
உச்சி வெயிலில் நிலத்தில் உழுதெடுத்த பணத்தைப் போட்டு மிகப் பெரிய கூடமும் அதிலிருந்து பிரியக் கூடிய இரண்டு அறைகளும், அதற்கு மேலே மச்சுமாய் கட்டினார்கள். பழைய கூடத்தோடுசேர்த்து இப்போது மூன்று அறைகளாகிப் போயிருந்தது. வீட்டிற்கு தன் அம்மாவின் பெயரையே சூட்டி தமயந்தியம்மாள் இல்லம் என்று பெயர் வைத்தார் தியாகராஜன். அவர்கள் தெருவிலேயே மிகப்பெரிய மச்சு வீடாக அது அடையாளப்பட்டுப் போனது.
பொதுவாய் இருட்டியதும் பிச்சாடனார் தெரு ஆண்கள், திண்ணையில் அமர்ந்து நாட்டு நடப்புகளைப் பற்றி பேசுபவர்களாகவும், பெண்கள், சாணியிட்டு மெழுகிய தரையில் அமர்ந்து, தெருச் செய்திகளைப் பகிர்ந்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அந்த சமயம் தெருப்பிள்ளைகள் கண்ணாமூச்சியோ அல்லது கள்ளன் போலீஸ் விளையாட்டையோ விளையாடியபடி இருப்பார்கள். அது போன்ற நேரங்களில்
‘என்ன அகிலா! புள்ளைங்க கல்யாணத்த உங்க வீட்டு கூடத்திலேயே வச்சிடலாம் போல! எம்மாம் பெரிய வீடா கட்டிட்ட!’
என்று சுற்றுபட்ட பெண்கள் ஆச்சர்யத்தோடு சொல்வார்கள். அப்போதெல்லாம் அகிலாவிற்கு பெருமையாய் இருக்கும்.
அதன் பிறகு தெருவில் யார் வீட்டு மஞ்சள் நீராட்டானாலும், கல்யாணமானாலும், வளைகாப்பானாலும் இவர்களுடைய மாடியே பந்திக்கு என்றானது. பல நல்ல விஷயங்கள் நடக்கும் வீடு மங்களகரமான வீடாகத் திகழந்தது. இதில் அகிலாவிற்கு மிக சந்தோஷம். அவள் வழக்கம் போல வீட்டைச் சுற்றி முள் செதுக்கியபடியும், குழந்தையின் வாயிலிருந்து ஒழுகும் பாலைத் துடைத்து விடுபவள் போல் சுவர்களை பார்த்து பார்த்து துடைத்தபடியும் இருந்தாள்.
தியாகராஜனின் மூத்த மகனுக்கு பெண் தேடும் போது பின்னால் கழிவறையும் குளியலறையும் கட்டினார்கள். இருந்தும் மருமகள் வரும் வரை அதை விறகு அடுக்க பயன்படுத்திக் கொண்டார்கள். பட்டிணத்திலிருந்து வந்த பெண் சுமாராய் படித்திருந்தாள். அவளுக்கு சிரமமான வேலைகள் செய்து பழக்கமில்லாததால், தொடர்ந்து சுத்தம் செய்யும் பணி அகிலாவிடமே தங்கிப் போனது. அகிலா அதற்கெல்லாம் சலித்துக் கொள்ளவில்லை. உள் வேலைகளை மருமகளிடம் கொடுத்து விட்டு சுற்று வேலைகளைத் தானே எடுத்துக் கொண்டாள். அவளைப் பொறுத்த வரை வீடு, உயிருள்ள ஒரு அஃறிணையாக, அவளுடைய சுக துக்கங்களை பகிர்ந்துக் கொள்ளும் ஒரு தோழியாக மாறிப் போயிருந்தது.
நான்கைந்து வருடங்களில் இளைய பிள்ளைக்கு டில்லியிலேயும், மற்ற இரு பிள்ளைகளுக்கு சென்னையிலேயும் வேலை அமைந்தது. அதற்கேற்றவாறு அவர்களின் குடும்பங்களும் அங்கங்கே தங்கி விட, தமயந்தியம்மாள் இல்லம் வெறிச்சோடிப் போனது. பின்னாலிருந்த மாமரத்தில் வெயிலோடு அணில்கள் மட்டுமே ஏறியிறங்கியபடி இருந்தன. யாருமற்ற அறைகள், முன்பிருந்தவர்களின் நினைவுகளைத் தம்முள் நிறைத்தபடி வாளாவிருந்தன. சூரிய ஒளி வீட்டில் நுழையவும் வெளியேறவும் முயன்றபடி இருப்பதை பார்த்தவாறு அமர்ந்திருப்பார் தியாகராஜன். மாடியில் வற்றல் பிழிந்தும், காய்ந்தவற்றை அண்டாக்களில் அடுக்கியும், ஊறுகாய்களைப் போட்டு ஜாடிகளில் அடுக்கியும் காலம் தள்ளியபடியிருந்தார் அகிலா. அவர்களின் மனம் முழுக்க விடுமுறையில் ஊருக்கு வரும் பிள்ளை, பேரப்பிள்ளைகளின் வரவை எதிர்நோக்கியபடி இருந்தது.
தொடக்கத்தில் விடுமுறைகள் கலகலப்பாக கழிந்தன. பேரப்பிள்ளைகளின் கூச்சலும் கும்மாளமுமாக வீடு நிறைந்துவிடும். பரம்பரையாய் வந்த பச்சை வண்ண டிரங்கு பெட்டி, பேரப்பிள்ளைகளையும் கவர்ந்தது. நினைத்த போது அதை திறக்கச் சொல்லி உட்கார்ந்துக் கொள்வார்கள். அதனுள் கருப்பு வெள்ளை புகைப்படங்களில் விறைப்பாய் புன்னகைக்கும் இளவயது தியாகராஜனையும், அவரின் தோளை ஒட்டி நின்று கேமராவை உற்று முறைக்கும் அகிலாவையும், தமது தந்தைமார்களையும் ஆவலோடு பார்த்தார்கள். மாமரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடினார்கள். கன்று பால் குடிப்பதை ஆச்சர்யமாய் பார்த்து அதன் கழுத்தைத் தடவிக் கொடுத்தார்கள். அறைக்கு அறை ஓடி, தாவி விளையாடிய அவர்களின் குரல், அவர்கள் சென்ற பிறகும் வீட்டுச் சுவர்களில் எதிரொலித்தபடியிருக்கும்.
அடுத்த சில வருடங்களில் நடுப்பிள்ளை வேலை நிமித்தமாக தன் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சென்று விட, தில்லியிலிருக்கும் பிள்ளையாலும் வருடத்தின் அனைத்து விடுமுறைகளுக்கும் வரமுடியாமல் போனது. பிறகு அனைவரும் ஏதேனும் விசேஷத்தை முன்னிட்டு மட்டுமே ஊரில் சந்திப்பது என்றாகிப் போனது. தந்தையையும் தாயையும் தம்மோடு வந்து தங்கிக் கொள்ளும் படி அழைக்கத் தொடங்கினார்கள் பிள்ளைகள்.
ஆசைப்பட்டு ஒரு முறை சிங்கப்பூருக்கு விமானமேறினார்கள் தியாகராஜனும் அகிலாவும். போன புதிதில் சீனர்களின் முகம் முதற்கொண்டு எல்லாம் பிரம்மிப்பாக இருந்தது அவர்களுக்கு. பல இடங்களைச் சுற்றிப்பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். அந்த நாட்டின் உணவை மட்டும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்கு சென்றாலும் கட்டுச் சோற்றைக் கையோடு கட்டி எடுத்துக் கொண்டார்கள். மற்ற பிள்ளைகளிடம் தொலைபேசியில் தான் பார்த்தவற்றையெல்லாம் வியப்போடு பகிர்ந்துக் கொண்டார்கள்.
ஒரு மாதத்தில் அவர்களுக்கு புது இடத்தின் மீதிருந்த மோகம் குறைந்து போனது. அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்த பின், ஓய்வாக இருந்த நேரத்தில், வீட்டு நினைவு அகிலாவை ஆக்கிரமிக்கத் துவங்கியது. வெட்டாமல் விட்டதால் வளர்ந்த செடிகள் புதராகி வீட்டை விழுங்குவது போலெல்லாம் அவருக்கு கனவுகள் வரத் தொடங்கின. தியாகராஜனுக்கு, வேப்பங்குச்சியைக் பல்லிடுக்கில் கடித்தபடி லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு வெறுங்காலோடு கழனி வரை நடக்காமல் பொழுது விடிந்ததாய் தோன்றவில்லை. பார்க்கும் தமிழர்களையெல்லாம் மடக்கி வைத்து பேசத் தொடங்கினார் அவர். அடுத்த ஒரு மாதத்தை பல்லைக் கடித்துக் கொண்டு தாங்கினார்கள்இருவரும். அதற்கு மேல் முடியவில்லை. ஊரைப் பார்க்க கிளம்பிவிட்டார்கள்.
நாட்கள் செல்ல செல்ல பிச்சாடனார் தெரு மக்கள் இரவு நேரங்களில் வீதியில் அமர்ந்து பேசுவதைக் குறைத்துக் கொண்டார்கள். தொலைக்காட்சி நாடகங்களும், படங்களும் அவர்களின் சந்திக்கும் நேரத்தை விழுங்கத் துவங்கியிருந்தன. வீட்டிற்கு வருபவர்களிடம் கூட இடைவேளை நேரங்களில் மட்டுமே பேசுவது என்பது அவர்களின் வழக்கமாகிப் போனது. தியாகராஜனுக்கும் அகிலாவுக்கும் பொழுதை நெட்டித் தள்ள உதவியாய் இருந்தது தொலைக்காட்சி. அதில் வந்த நெடுந்தொடர்க் கதாப்பாத்திரங்களின் சூழ்ச்சிகளில், தம் பிரச்சனைகளையும் மறந்து, மனதைத் தொலைத்தார்கள் இருவரும். வீட்டு வேலைகளும் முன்பு அளவிற்கு இல்லை இப்போது. அம்மாவின் வசதிக்காக கிரைண்டர் வாங்கித் தந்திருந்தான் நடுப்பிள்ளை. முதலில் பிடிவாதமாக ஆட்டுக் கல்லில் அரைத்துத் தான் சாப்பிடுவோம் என்று இருந்த அகிலாவும் தியாகராஜனும், வயது ஏறஏற உடல் முடியாமல் போனதில், கிரைண்டருக்கு மாறினார்கள். வாங்கி வைத்திருந்த மூன்று ஆட்டுகற்களோடு தன் ஆட்டுகல்லையும் குடம் வைக்கப் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கினார் அகிலா. அம்மிக்கல் மட்டும் பிடிவாதமாய் பயன்பாட்டில் இருந்தது.
அகிலா மூட்டு வலியால் சிரமப்பட்ட போது, ஓரிரு அறைகளைப் பூட்டி வைத்தால் அம்மாவிற்கு வேலை குறையும் என்று மூத்த மகன் சொல்லப் போக, அன்று இரவு முழுவதும் அகிலா அழுதபடி இருந்தார். வீட்டைப் பராமரிக்க தன்னால் முடியாது என்பதை கடைசி வரை அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. மாரடைப்பில் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னர் கூட, சாப்பாட்டு அறையின் சுவர்களில் இருந்த விரிசல்களை, எங்கிருந்தோ ஒரு கை சிமெண்ட் வாங்கி வந்து, பூசியபடியிருந்தார்.
அகிலாவின் காலத்திற்கு பிறகு தான் வீடு சமாளிக்க முடியாத ஒரு பொருளாகிப் போனது. இவ்வளவு பெரிய வீட்டை யார் கவனிப்பது என்ற பிரச்சனை எழுந்தது. அதை தினமும் பெருக்குவதே பெரும்பாடாயிருந்தது. காசிற்காக வேலை செய்தவர்கள் கூட அதன் பிரம்மாண்டத்தை அலுத்துக் கொண்டார்கள். களையெடுக்காமல், பெருக்காமல் விடப்பட்ட மண் தரையில் சிறு கற்களும் மணலும் காலை உறுத்தத் துவங்கின. வீட்டைச் சுற்றிலும் பூண்டுச் செடிகள் உயரமாய் வளரத் துவங்கியிருந்தன.
மனைவியின் நாட்களுக்குப் பிறகு தியாகராஜன், தனிமையைப் விரட்ட, தில்லியில் சில நாட்களையும் சென்னையில் சில நாட்களையும் கடத்த முயற்சித்தார். ஆனால் அவரின் மனம் தன் ஊரைத் தவிர வேறு எதிலும் ஒட்டவில்லை. அதனால் தன் அந்திம காலத்தை, தான் பாடுபட்டு கட்டிய வீட்டின் சுவர்களையும், வாங்கி வைக்கப்பட்டிருக்கும் அம்மி கற்களையும் தடவியபடி கழித்துக் கொண்டிருக்கிறார். வெளியூருக்குச் செல்லும் வழியில் இருக்கும் கிராமங்களிலுள்ள பெரிய வீடுகளைப் பார்க்கும் போதெல்லாம் அவருள்ளிருந்து பெருமூச்சு கிளம்புகிறது.
தற்போது தன் பழைய பொலிவையெல்லாம் உதிர்த்துவிட்ட கூடாய் நிற்கிறது தமயந்தியம்மாள் இல்லம். காற்று மட்டுமே அதன் அறைகளில் உலாவிக் கொண்டிருக்கும் அரூபக் கதைகளை வாசித்தபடி, அதற்கு சாட்சியாய் வீட்டிற்குள் அலைந்துக் கொண்டோ திண்ணையில் படுத்துக் கொண்டோ இருக்கும் கிழவரைத் தழுவிச் செல்கிறது. இப்போதும் அந்த தெருவாசிகள் அதில் வசித்த மனிதர்களைப் பற்றி நினைத்தபடியே தான் அந்த வீட்டைக் கடக்கிறார்கள்
திண்ணை (4/ 8/ 2014)

புதன், 7 மே, 2014

கொள்ளெனக் கொடுத்தல்

அந்த பெரியவர் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக எதையோ தேடிக் கொண்டிருந்தார். பாலர் பள்ளிக்கு வெளியே இருந்த இருக்கைகளையும் அதற்கு கீழேயும், சற்று தள்ளி சுவரின் மூலையில் இருந்த பச்சை நிற குப்பைத் தொட்டிக்கு உள்ளேயும் பார்த்த படி இருந்தார். எப்படியும் எழுபது வயதிற்கு மேல் இருக்கும். தலைமுடி கருப்பு நிறத்திலிருந்தாலும் தோல் சுருக்கங்களும், களைப்படைந்த கண்களும் வயதை தெள்ளெனக் காட்டின. காக்கி கால் சட்டையும் ‘அன்பு நிரத்தரமானது’ என்று பொருள்தரும் வார்த்தைகள் கொண்ட வெளிர் நீல டீசர்ட்டையும் அணிந்திருந்தார். சற்றே அழுக்காய் தெரிந்தார்.

அந்த இடத்தில் அவர் தேடியது கிடைக்கவில்லை போல! அவ்விடத்தை விட்டு மெல்ல அகன்று சற்று தள்ளியிருந்த விளையாட்டுத் திடலின் அருகே சென்றார். அவர் நடையில் மெல்லிய நடுக்கம் இருந்தது. திடலில் இருந்த காலி இருக்கைகளை உற்றுப் பார்த்தார். அதன் மேல் விழுந்திருந்த ஒன்றிரண்டு காய்ந்த இலைகளை கைகளால் தள்ளி விட்டு அதில் அமர்ந்தார்.
பிள்ளைகளெல்லாம் பள்ளியினுள்ளே சென்றுவிட்ட அந்த வெயில் கூடிய மதிய பொழுது மிகவும் அமைதியாக இருந்தது. காற்று கூட எதையும் கலைத்துவிடாதபடிக்கு மிக லேசாய் வீசிக் கொண்டிருந்தது. ஏனோ என்னால் அவரை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. சற்று நேரம் எதையோ யோசித்து விட்டு பின் அங்கிருந்து பார்வையால் தரையைத் துழாவியபடியே மறுபடி பள்ளிக்கு அருகே வந்தார். முன்பு பார்த்த இடத்திலேயே திரும்பவும் தேடினார்.

எனக்கு அவரைப் பார்க்கும் போது என் அப்பா ஞாபகம் வந்தது. அப்பாவிற்கும் ஏறக்குறைய இவர் வயது தான் இருக்கும். இவரைப் போலவே இப்போது அவரும் உடல் மெலிந்து, கறுத்துப் போய் லேசாக கூன் போட்டிருந்தார். முதுமையில் அனைவரும் ஒரே சாயலைக் கொண்டு விடுவார்கள் போல!
அப்பாவிற்கு இன்று எப்படியும் தொலைபேசிவிடவேண்டும் என்று நினைத்தபடி மாடிப்படிகள் தொடங்கும் இடத்தில் எழுதப்பட்டிருந்த உடல்நலம் தொடர்பான வாக்கியங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது “அம்மா!” என்ற குரல் கேட்க திடுக்கிட்டுத் திரும்பினேன். அந்த பெரியவர் என்னருகே நின்றுக் கொண்டிருந்தார். கண்களில் பசியும் தயக்கமும் தெரிந்தன. உதடுகள் துடித்தபடி இருந்தன. கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். காசு கேட்கப் போகிறார் என்று தோன்றியது.

இது போன்றவர்களை நான் சில நேரங்களில் எதிர் கொள்வதுண்டு. ஒருமுறை தேக்கா செல்ல பேருந்து எடுக்க போகும் வழியில் திடீரென்று எதிர்பட்ட பதின்ம வயது பெண் ஒருத்தி “ஆன்டி, தயவு செய்து ஐந்து வெள்ளிகள் இருந்தால் கொடுங்கள்! வீட்டிற்கு போவதற்காக வைத்திருந்த காசை தொலைத்துவிட்டேன்!” என்றாள். அவளது குரலுடன் சேர்ந்து கண்களும் கெஞ்சின. பள்ளிப்பையுடன் களைத்துப் போய் நின்றபடியிருந்த அவளது தோற்றம் கையிலிருந்து சில வெள்ளிகளைக் கொடுக்க வைத்தது. அதே போல எங்கள் வீட்டினைக் கடந்து செல்லும், மனநலம் குன்றிய தோற்றம் கொண்ட ஒருவர், எப்போதாவது நின்று “ஒரு வெள்ளி கொடுங்கள்!” என்பார், என்னவோ கொடுத்து வைத்ததைக் கேட்பவர் போல.

ஒரு முறை ஒரு தோழியைப் பார்ப்பதற்காக மார்சிலிங் சென்று திரும்பும் போது காசிற்காக கெஞ்சிக் கொண்டிருந்த மூதாட்டியைப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன். அவர் என் அடுக்கு மாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் வசிப்பவர். விடியற்காலையில் தகர டப்பாக்களைப் பொறுக்கி, எங்கிருந்தோ கிடைக்கும் அட்டை பெட்டிகளையெல்லாம் சேகரித்து, வாரம் ஒரு முறை அதை காரங்குனியிடன் போட்டு பணம் பெற்றுக் கொள்பவர். பக்கத்தில் இருந்த கோப்பிக் கடையில் மேஜையைத் துடைக்கும் போது பார்த்திருக்கிறேன்.
அவ்வப்போது சேர்ந்துப் போகும் செய்தித்தாள்களை அவருக்குக் கொடுத்தால் அதைக் கூட மிகுந்த தயக்கத்தோடு பெற்றுக் கொள்வார். அதைத் தவிர வேறு எதை கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார். இதற்கு பிரதிபலனாக சீனப் பெருநாளின் போது மறக்காமல் அங்க் பாவில் இரண்டு வெள்ளிகள் வைத்துக் கொடுப்பார். அன்று அவருக்கு உதவ வேண்டும் என்று தோன்றினாலும் என்னை அங்கே பார்த்தால் அவர் சங்கடப் படக்கூடும் என்று தோன்ற வேகமாய் அந்த இடத்தை விட்டு அகன்றேன். அதன் பிறகு பார்த்த போது கொடுத்த காசைக் கூட அவர் என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளவில்லை.

பெருவிரைவு ரயில் நிலையம் செல்லும் வழியில் டிஷ்யூ தாள்கள் வைத்தபடி அமர்ந்திருக்கும் வயதானவர்களுக்கும் நான் அவ்வப்போது ஏதாவது செய்வதுண்டு. எங்கள் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வரும் போது அவர்களுக்கு ஐந்து வெள்ளிகளோ, பத்து வெள்ளிகளோ கொடுப்போம். கோவில் உண்டியலில் போடுவதை விட இதில் போடுவது மேல் என்பது என் கருத்து. கடவுளுக்குச் செய்ய, நான் இல்லாவிட்டாலும் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த முதியவர்களுக்கு நான் கொடுக்கும் சில வெள்ளிகள் அவர்களது அன்றைய தினத்தில் ஒரு சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.

“ஏம்மா, என் கண்ணாடியை எங்கனயோ வச்சுட்டேன்! நீ பார்த்தியாம்மா!” என்றார் அந்த பெரியவர். கண்ணாடியைத் தான் இவ்வளவு நேரம் தேடிக் கொண்டிருந்தாரோ! அவர் இதுவரை தேடிய இடங்களை என் கண்களால் துழாவிய படியே “இல்லையே!” என்றேன். அவர் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை வெளியேற்றினார்.
“காலையில இங்கன தாம்மா தமிழ் முரசு படிச்சுகிட்டு இருந்தேன். எப்பவும் படிச்சுட்டு பத்திரமா பையில வெச்சிடுவேன். இன்னிக்கு என்னவோ ஞாபகம். எங்கேயோ வச்சுட்டேன். வயசாயிடுச்சுன்னா இது ஒரு பிரச்சனை! எல்லாம் மறந்திடுது!”

“ம்ஹீம்…! எம்மவன் கிட்ட மறுபடி கேட்கோணும்! இதை வாங்கிக் கொடுக்கும் போதே படிச்சு படிச்சு சொன்னான். அவனை விட அவென் கட்டிகிட்டு வந்தது தான் அதிகம் பேசும்… ம்ஹீம்! அவங்களும் பாவம்! எவ்வளவு தான் மத்தவங்களுக்கு செய்யமுடியும். ஒரு வயசுக்கு மேல எதுவும் முடியறது இல்லை. யாரையாவது எதிர்பார்க்கத் தொடங்கினோம்னாலே பிரச்சனை தான். அவங்கள என்ன சொல்றது? எம் மறதிய சொல்லோணும்!” நான் அங்கே இல்லையென்றாலும் இதையெல்லாம் தனியாகவே சொல்லிக் கொண்டிருந்திருப்பார். அவரது அப்போதைய தேவை கேட்பதற்கு இரு காதுகள் மட்டும் தான் என்று தோன்றியது. “எங்கனயாவது பார்த்தா சொல்லும்மா!” என்றார் தயக்கத்துடன்.

அவர் இன்னும் என் முகத்தைப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தது வித்தியாசமாய் இருந்தது. அவர் உண்மையாக கண்ணாடியைத் தொலைத்தார் என்று எனக்கு தோன்றவில்லை. காசு கேட்க கூச்சப்படுவது போல தெரிந்தது.
“ஏதாவது சாப்பிட்டிங்களாப்பா!” என்றேன்.
“இன்னும் இல்லைம்மா! மருமவளும் மவனும் வேலைக்குப் போனதும் பசியாறிட்டு கீழே இறங்கினேன். கூட்டாள்களோட பேசிட்டு, பேப்பர படிச்சுட்டு அதோ அந்த விளையாட்டுத் திடல் பக்கமா கொஞ்ச நேரம் லாத்திட்டு வந்தேன். நடுவுல எங்க வச்சேன்னு தெரியலை!”
உலகெங்கும் பெற்றோர்களின் நிலை இது தான் போல. அனைவரும் எதையும் பேச யோசித்தபடி இருக்கிறார்கள். என் பெற்றோர் கூட எங்களின் படிப்பிற்காக இருந்த அனைத்தையும் செலவு செய்துவிட்டு இப்போது விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொந்த வீட்டிலிருக்கிறார்கள் என்பது மட்டும் தான் ஒரே நிம்மதி. அவர்களுக்கு எனது அண்ணன் செலவு செய்யத் தயாராக இருந்தாலும் அண்ணிக்கு விருப்பம் இல்லை. அவர்களும் மற்றவர்களிடம் கேட்க கூச்சப்பட்டுக் கொண்டு ஒரே பெண்ணான என்னிடமும் வாங்க முடியாமல் தயக்கத்துடன் காலம் தள்ளுகிறார்கள்.
           
     இவர் வீட்டிலும் இதே நிலை தான் இருக்க வேண்டும். என் அப்பாவே “ஏதாவது இருந்தா கொடும்மா! ரொம்ப பசிக்குது..!” என்று கையேந்தி நிற்பதாய் தோன்றியது எனக்கு.
“இதை வச்சிக்கோங்க! முதல்ல போயி எங்கேயாவது சாப்பிடுங்க! பிறகு தேடிக்கலாம்!” என்றபடி ஐந்து வெள்ளிகளை அவர் கையில் கொடுத்தேன். “இல்லைம்மா காசெல்லாம் வேண்டாம்!” என்றார் பதறியபடி. கையேந்துவது கண்டுபிடிக்கப் பட்டதில் ஏற்பட்ட பதட்டம் அவர் உடல் மொழியில் தெரிந்தது.
என் கணவராயிருந்தால் இப்படி கொடுப்பதைத் தடுத்திருப்பார். “எல்லாம் காசுக்காக சொல்ற பொய். காசு கொடுத்து கொஞ்ச நேரம் கழிச்சுப் பாரு, எங்கேயாவது தண்ணி குடிச்சுட்டு சாய்ஞ்சு கிடப்பார்” என்பார். இவர் அப்படி செய்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டேன். உண்மையிலேயே பசியாயிருந்து நான் அதை கடந்து போவதை விட, ஏமாந்து போவது பரவாயில்லை என்று தோன்றியது.

அதற்கு மேலும் அவர் தர்மசங்கடத்துடன் மறுப்பதைக் கேட்கும் தெம்பு எனக்கிருக்கவில்லை. “பரவாயில்லை! வச்சிக்கோங்க!” என்று அவரை மேலே பேச விடாமல், பலவந்தமாய் அவர் கைகளில் அந்த வெள்ளிகளைத் திணித்துவிட்டு, மேலும் பேச்சைத் தவிர்க்க, பள்ளியின் வாயிலை நோக்கி நகர்ந்தேன். அவர் முகம் உணர்ச்சிக் குழப்பத்தில் இருந்தது. வயதான என் பெற்றோரின் அருகில் இருந்து கவனித்துக் கொள்ளாத மன குறுகுறுப்பை இப்படி தீர்த்துக் கொள்கிறேனோ!

அவர் தனக்குள்ளே ஏதோ பேசியபடி தளர்ந்த நடையோடு, அடுக்குமாடி குடியிருப்புகளினூடாக நுழைந்து என் பார்வையிலிருந்து மறைந்தார். என் அப்பாவிற்கே உணவு பரிமாறியது போல எனக்கு நிம்மதியாய் இருந்தது.
பள்ளியின் கேட் திறக்கும் ஒலி கேட்டு நடப்பிற்கு வந்தேன். பிள்ளைகளை விடத் தொடங்கினார்கள். அம்மாவைப் பார்த்ததும் இந்தக் குழந்தைகளின் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி! இப்படித் தானே ஒருகாலத்தில் என் தாயும் என்னை எதிர்பார்த்து பள்ளியின் வாயிலில் காத்து கிடந்தார். அப்படி இருந்தவருக்கு என்னால் செய்ய முடிந்தது தான் என்ன? இப்போது பார்த்த பெரியவரும் இப்படித் தான் தன் பிள்ளையைப் படிக்க வைத்திருப்பார். இதை அவருடைய பிள்ளை யோசிப்பானா?

என்னைப் பார்த்ததும் என் மகள் வேகமாய் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். மூன்று மணி நேரம் கழித்துப் பார்த்த மகிழ்ச்சி. பள்ளியை விட்டு வெளியே வந்த குழந்தைகளும் அவர்களை அழைக்க வந்தவர்களுமாக அந்த இடம் கலகலத்துப் போனது. என் பெண் பள்ளிப் பையை என்னிடம் கொடுத்து விட்டு தன் நண்பர்களுடன் விளையாடத் தொடங்கினாள். நான் அந்த விளையாட்டை ரசித்தபடி நின்றேன். என் பெண்ணிற்கு பிற்காலத்தில் தன் பெற்றோரைப் பற்றிய அக்கறை நிச்சயம் இருக்கும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
அனைத்து பிள்ளைகளையும் அனுப்பி முடித்த ஆசிரியர்கள், பள்ளியின் கேட்டை மூடிக் கொண்டிருந்தார்கள். “யாரோ வெளியே இதை மறந்து வைத்துவிட்டார்கள் போல! காலையில் இஸபெல்லின் அம்மா என்னிடம் கொடுத்தார்.” என்று அவர்களில் ஒருவர் சொல்வது கேட்க, அவசரமாய் உள்ளே எட்டிப் பார்த்தேன். அவர்களின் கையில் பழுப்பு நிறச் சட்டமிட்ட மூக்குக் கண்ணாடி.

‘அடடா! இது தான் அந்த பெரியவர் விட்டுச் சென்ற மூக்குக் கண்ணாடியா? அப்படித் தான் இருக்க வேண்டும்!”
“நான் பார்க்கவில்லையென்று சொல்லி அதோடு நிறுத்தியிருந்தால் இந்தப் பள்ளிக்கு வந்து விசாரித்திருப்பாரே!”
நான் அவரை வலிய திசைத் திருப்பி விட்டேனோ என்ற குற்றவுணர்ச்சி அழுத்தத் தொடங்கியது. “எங்கனயாவது பார்த்தா சொல்லும்மா!” என்ற அவரது குரல் காதில் ஒலிக்க, அவசரமாய் அவர் சென்று மறைந்த திசையை கண்களால் தடவினேன். எப்படியாவது அவரைப் பார்த்து இந்த கண்ணாடி இங்கே இருப்பதைச் சொல்ல வேண்டும் என்று என் மனம் பரபரக்கத் தொடங்கியது.

april 27th 2014 திண்ணையில் வெளியானது

சனி, 26 அக்டோபர், 2013

அப்பா ஒரு நாய் வளர்க்கிறார்

 
அப்பா வீட்டிற்கு ஒரு நாய்குட்டியைக் கொண்டு வந்திருப்பதாக அம்மா ஃபோனில் சொன்னாள். அதிலும் வேலையற்று சுற்றிக் கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்கு சொந்தமானதை.
இதைச் சொல்லும் போது அவள் குரலில் எந்த ஒரு மிகைப்பட்ட உணர்ச்சியும் இல்லை. பால் வாங்க கடைக்குச் செல்கிறேன் என்பது போல் மிக சாதாரணமாய்ச் சொன்னாள். அவளின் குணமே அப்படிதான். அப்பா மேற்கே போகிறேன் என்றால் சரி என்பாள். இல்லையில்லை தெற்கே போகிறேன், அந்தப் பக்கம் தான் சூரியன் உதிக்கிறது என்றால் அதற்கும் தலையாட்டுவாள்.
என்னை பொறுத்தவரை எனக்கு இது ஒரு அதிர்ச்சியான செய்தி. அப்பாவிற்கும் நாய்க்கும் பொதுவாய் ஒத்துப் போனதில்லை. அதைக் கண்டால் அவருக்கு பிடிப்பதில்லை அல்லது பிடிக்கும் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
 
அம்மாவிற்கு என் தங்கையின் தலைப்பேனின் மீதுள்ள ஆர்வம் போல அப்பாவிற்கு நாய். அவர் நாயை அடிப்பதை ஒரு அழகிய சம்பிரதாயமாய்க் கருதி, அதை ரசித்து செய்வதாக தோன்றும். தெருவில் நாயைப் பார்த்தவுடன் உற்சாகத்திற்கு இணையான ஒரு உணர்ச்சி அவர் முகத்தில் தெரியும், ரகசியமாய் யாருக்கோ தெரியாமல் குறும்புத்தனம் செய்யப் போகும் குழந்தையைப் போல அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நோட்டமிட்டபடி, நாயின் கவனத்தை கவனமாய் தவிர்த்து, அரைச் செங்கல்லாக பார்த்து ஒன்றை எடுத்துக் கொள்வார். இது வரை அவர் முழுக்கல்லால் நாயை அடித்து நான் பார்த்ததில்லை. அதைப் பிடிப்பதில் ஏற்படக்கூடிய வசதியின்மை காரணமாய் இருக்கக் கூடும்.
அந்த செங்கல், அவர் கைப்பட்டதும் மட்டையில் அடிப்பதற்காக பிடிக்கப்பட்ட பந்தைப் போன்ற தோற்றத்தைக் கொண்டுவிடும். அதன் கனத்தை அளவிடுவது போல மெதுவாய் இரண்டு மூன்று முறை ஊஞ்சலாட்டுவது போல ஏற்றி இறக்குவார். அதன் பிறகு கையை பின்தள்ளி விசையோடு கல்லை முன்னோக்கி வீசினாரென்றால், அது நாயை ஏதேனும் ஒரு பகுதியில் தாக்காமல் கீழே விழாது.
ராமருக்கு பாணம் போல அப்பாவிற்கு அரைக்கல். நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்ற வழக்கே அவர் அகராதியில் கிடையாது. அரைக்கல் கிடைக்கும் போதெல்லாம் அதை வீட்டின் இடப்பக்கத்தில், நான் பிறப்பதற்கு முன்பே எதற்காகவோ தோண்டப்பட்டு காரியம் முற்றுபெறாத்தால் பாதியிலேயே கைவிடப்பட்ட பள்ளத்தில், போட்டு வைத்திருப்பார். அங்கே மட்டுமின்றி வீட்டைச் சுற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலவற்றைப் போட்டும் வைத்திருப்பார். எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் நாயைச் சந்தித்தால் எடுப்பதற்கு வசதியாய் அப்படி போட்டு வைத்திருந்திருக்க வேண்டும்.
 
நாயை அடிப்பது அப்போது அவருக்கு ஒரு விருப்பமான பொழுது போக்கென்றே தோன்றியது. அவரது குறிக்கு இலக்காவது தெருவில் அநாதையாய் திரியும் நாய்கள் மட்டுமே! ஏனோ வளர்ப்பு நாய்களை முறைப்பதோடு நிறுத்திக் கொண்டார். அது அவற்றின் முதலாளிகள் மீது அவர் வைத்திருந்த மரியாதைக்காகவோ அல்லது வீண் வம்பு வளர்க்க விரும்பாத காரணத்திற்காகவோ இருக்கக் கூடும்.

அம்மாவிடம் ஒரு முறை கேட்டதற்கு அப்பத்தா நாய் கடித்து இறந்ததிலிருந்து அப்பா நாய்களை அடிப்பதாகக் கூறினாள். இச்செயலை அப்பா செய்ததால் அதில் நூறு சதவிகிதம் நியாயம் இருப்பதாகவே நம்பினாள். நான் அதிகமாக நீதிக்கதைகளைப் படித்து வளர்ந்ததால் உயிரைத் துன்புறுத்துவது பாவம் என்று கருதினேன். இதன் காரணமாக தெரு நாய்களின் மீது அளவிற்கு அதிகமான அன்பு இல்லையென்றாலும் ஒருவித பரிதாபம் தோன்றியது.
இத்தகு பெருமைகளைக் கொண்ட அப்பாவின் நாயடி தொழில் நான் வளர வளர சற்றே தேய்ந்தாலும், அதன் மீது பாசம் வைத்து வளர்க்கும் அளவிற்கு எதிர்வினையாற்றியிருக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை. நாய் குட்டியின் வருகைக்குப் பின் அவருக்கும் எனக்குமான உறவு கூட சற்று தளர்ந்து போயிருந்தது.
 
பொதுவாய் ஒவ்வொரு வாரமும் தொலைபேசும் போது, ஊரில் நடந்த அந்த வார நிகழ்ச்சிகளையெல்லாம் தொகுத்து வைத்து சொல்வார் அப்பா. நாயின் வருகைக்குப் பின் அது குறைந்து போனது.
அடுத்தடுத்த நாட்களில், நாயை தன் அருகில் படுக்க அனுமதிப்பது, அதற்கென்று கீழத் தெருவிற்கு போய் மாட்டுக் கறி வாங்கி வருவது போன்ற அப்பாவின் நாய் வளர்ப்பு பிரதாபங்கள் தொலைபேசி வழியாக காதில் விழுந்து, நம்பிக்கையின்மையை மேலும் அதிகமாக்கியதால் எனக்கு அவரது மனநிலையைப் பற்றிய சந்தேகம் ஏற்பட்டது. அது தந்த கவலையில், ஜீன் விடுமுறையில் ஊருக்கு செல்ல விமான நுழைவுச் சீட்டுகளை ஏற்பாடு செய்தேன்.
 
வீட்டிற்குள் நுழையும் போதே, அங்கே புன்னகையுடன் எதிர் கொண்ட அம்மாவை முந்திக் கொண்டு ஓடி வந்து கால்களை நக்கி வரவேற்க முயன்றது இளம் நாயாக வளர்ந்திருந்த நாய்குட்டி. சங்கீதா சட்டென்று திண்ணையின் மீது தவ்வி உட்கார்ந்து கால்களை மடித்துக் கொண்டு அதை அசூயையுடன் பார்த்தாள். ரேணு தாயின் மடியில் அமர்ந்தபடி நாயை சந்தேகமாய் பார்த்தது. நாய், யாரென்று அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தோடு மூச்சிறைக்க என்னை சுற்றி வந்துவிட்டு, திண்ணையில் அமர்ந்திருந்த அவர்களை அண்ணாந்து பார்த்தது.

அம்மா சிரித்தபடி, “ராமு கடிக்க மாட்டான். தைரியமா வாங்க” என்றாள். அதைத் தூக்கிக் கொண்டாள். எனக்கு தெரிந்து என் தெருவில் வளரும் மூன்றாவது ராமு இது. இதனோடு தான் தங்க வேண்டுமா என்று விழிகளாலேயே கேட்டாள் சங்கீதா. அவளின் கண் பேசும் வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல் திகைக்கத் தேவையின்றி, இந்த ஆறு வருடங்களில் அதை புரிந்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருந்தேன். பதிலேதும் சொல்லாமல் அம்மாவின் பக்கம் பார்வையைத் திருப்பி அவளைப் பின் தொடர்ந்தேன்.
 
அப்பா தோட்டத்தில் இருந்த நாய் வீட்டை செப்பனிட்டுக் கொண்டிருந்தார். “வாப்பா! நல்லாயிருக்கியா, பயணமெல்லாம் நல்லாயிருந்ததா?” என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல்,
“இவ்வளவு நேரமா வெளிய தான் இருந்தேன். இப்பத்தான் இதை முடிச்சுடலாம்ன்னு வந்தேன். இன்னும் கொஞ்சம் தான்! உள்ள உட்காருங்க, வந்திடறேன்” என்றுவிட்டு தன் பணியைத் தொடர்ந்தார்.
சாப்பிடும் போது ரேணுவிடம், ராமுவின் விளையாட்டுகளையும் பயங்களையும் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அவரது தற்குறிப்பேற்றிய பேச்சில் ரேணு மயங்கி, அடுத்து வந்த நாட்களில், நாயின் ஒவ்வொரு அசைவிற்கும், குரைப்பிற்கும் அர்த்தம் கண்டுபிடிக்க தொடங்கி, ஐந்து நாட்களில் ஒரு சொற்பொருள் அகராதி போடுமளவு முன்னேறியிருந்தாள்.
ராமுவிற்கு பேருக்கு தான் தோட்டத்தில் வீடு, அதன் இருப்பு முழுவதும் நாங்கள் புழங்கிய எங்கள் வீட்டிற்குள் தான். சமையலறையிலிருந்து படுக்கையறை மெத்தை வரை அனைத்தையும் பயன்படுத்த முழு உரிமையையும் பெற்றிருந்தது அது.
 
“நாம வேணுமானால் அதோட வீட்டிற்கு போயிடலாம்!” என்றாள் சங்கீதா நக்கலாக.
வீட்டு விருந்தாளி என்ற மரியாதைக் காரணமாகவோ என்னவோ அது அவளை மட்டும் அவ்வளவாக சீண்டுவதில்லை. எனக்கு அதன் இருப்பு பழகிவிட்டது என்றாலும், அது எப்போதும் காலை நக்க முயற்சிப்பது மட்டும் சங்கடமாய் இருந்தது.

ரேணு அதனோடு நன்றாக சினேகமாகி விட்டிருந்தாள். அப்பா எங்கே போனாலும் உடன் ரேணுவும் ராமுவும் போய்வந்தார்கள். அவர்கள் மூவரும் ஒரு சிறந்த கூட்டணியை அமைத்துவிட்டதாய் தோன்றியது. அப்பா ஊரில் அனைவருக்கும் பெருமையாய் பெயர்த்தியைக் காட்டினார். ராமுவும் ரேணுவைக் காணும் போதெல்லாம் வாலை வேகமாய் ஆட்டி மகிழ்ச்சியைக் தெரிவித்தான். ரேணுவிற்கு எங்கள் ஊர் பெட்டிக் கடைகளில் விற்ற தேன்மிட்டாய்களை மிகவும் பிடித்து விட்டது. வீட்டிற்கு வரும் போது கைநிறைய மிட்டாய்களை அள்ளி வருவாள். அதன் சுகாதாரத்தைப் பற்றிய சந்தேகத்தில் சங்கீதா மறுப்புக் குரல் எழுப்பியது கூட அவளை பாதிக்கவில்லை.
 
கொஞ்சம் நாட்களில் ராமு என்னை சலனப்படுத்தாத அளவிற்கு மாறிப் போயிருந்தான். அல்லது நான் அவனுக்கேற்றார் போல மாறிவிட்டேன். அப்பா சுறுசுறுப்பாய் சுற்றி வந்ததே, எனக்கு ராமுவைப் பிடிக்க போதுமான காரணமாய் இருந்தது. சங்கீதாவும் அதைப் பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் கிளம்பும் போது எடுத்துச் செல்ல மிளகாய்த் தூளும், சாம்பார்ப் பொடியும் அரைத்து பேக் செய்வதில் கவனம் செலுத்தி, ராமுவைப் பற்றிய கவலைகளைக் குறைத்துக் கொண்டிருந்தாள்.

ஊருக்கு செல்லும் நாள் நெருங்க நெருங்க நெஞ்சிலிருந்து கவலைப் பந்து மேலெழுந்து தொண்டையை அடைக்க ஆரம்பித்தது. அம்மா, அப்பாவின் முகங்களிலும் வேதனையைக் காணமுடிந்தது. மறுநாள் விமானத்திற்கு பெட்டியெல்லாம் கட்டி கூடத்தின் ஒரு மூலையில் வைத்துவிட்டு திண்ணையில் அமர்ந்த போது அப்பா பக்கத்தில் அமர்ந்தார். ரொம்ப நாட்கள் கழித்து அப்படி அமர்வது மனதிற்குள் சொல்ல முடியாத ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றவர்களெல்லாம் உள்ளே படுத்துவிட்டிருந்தார்கள். அந்த நேரத்து மௌனத்தைக் கலைக்க மனமின்றி நான் மரங்களுக்கிடையே மறைந்திருந்த நிலவைத் தேடிக் கொண்டிருந்தேன்.
 
திடீரென்று, “ஏம்ப்பா! ரொம்ப சிரமப்பட்டு வேலை செய்யாத! வீட்டில கொஞ்சம் நேரம் செலவழிக்கணும்ப்பா. இல்லைன்னா வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போகும்” என்றார் அப்பா .
சங்கீதா நான் ஓவர் டைமில் மூழ்கிக்கிடப்பதை மாமனார் மாமியாரிடம் சொல்லியிருக்கிறாள்!
“இந்த வயசுல குழந்தையோட நேரத்தை செலவு செய்யலைன்னா, பின்னால நினைச்சா கூட அதுக்கு வாய்ப்பு வராதுப்பா!”
அதை ஆமோதிப்பது போல மௌனமாய் இருந்தேன்.
பிறகு என்ன நினைத்தாரோ,
‘நீ வேலைக்குன்னு ஊரவிட்டு கிளம்பி போயிட்ட பிறகு வெறிச்சுன்னு போயிடுச்சுப்பா! நீ சின்னதா இருந்தப்ப நான் வேலைய விட்டு வீட்டுக்கு வந்தா, நான் வரத எப்படி தெரிஞ்சுப்பியோ, ஓடி வந்து வாசல்ல நிப்ப. நானும் அதை எதிர்பார்த்து எதையாவது வாங்கிட்டு வருவேன்”
அவர் என்ன வாங்கி வருவார் என்ற ஆர்வம் மேலோங்க உள்ளும் புறமும் அலைந்தது எனக்கு நன்றாய் நினைவிருந்தது.
“பெரிசா ஆக ஆக ஓடி வரலைன்னாலும் என்னோட வரவ நீ மனசுக்குள்ள எதிர் பாக்கறது நல்லா தெரியும். பக்கத்துல உட்காருவ அன்னிக்கு பள்ளியில என்ன நடந்ததுன்னு சொல்லுவ . . .”

அப்போதெல்லாம் அப்பாவுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. என் சாதனைகளைச் சொல்லி அவரை ஆச்சரியபடுத்த முயற்சித்திருக்கிறேன்.
“நீ சிங்கப்பூருக்கு கிளம்பி போன பிறகு இனி வாழ்க்கையில என்ன இருக்குன்னு தோண ஆரம்பிச்சுது.”
ஆரம்பத்தில் தினமும் தொலைபேசி பிறகு வேலைப்பளுவில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாக குறைத்து, திருமணத்திற்கு பின் வாரம் ஒருமுறையாக மாறிப்போனது.
“ராமு வந்த பெறகு சித்த பரவாயில்லை!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் .
எனக்கு பேசமுடியாமல் தொண்டையை அடைத்தது.

மறுநாள் வாடகைக் காரில் ஏறுகையில் ராமுவிடம்,
“பை சொல்லுடா ராமு!” என்றார் அப்பா. ராமு உடல் பதற வாலை ஆட்டிக் கொண்டிருந்தான்.
ரேணு ராமுவிற்கு கை காட்டிவிட்டு உள்ளே ஏறினாள்.
கார் நகர ஆரம்பித்ததும்,
“ஏம்ப்பா நாம இவங்களையெல்லாம் கூட்டிட்டு போகக்கூடாது?” என்றாள்.
பதிலேதும் சொல்லாமல் நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். அப்பாவும் அம்மாவும் ராமுவும் தூரத்தில் கலங்கலாய் தெரிந்தார்கள்.
                                                                             
                                                                                           திண்ணை.com   23/9/2013
                                                                                           படம் இணையத்திலிருந்து