திங்கள், 14 மார்ச், 2022

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா

 தோழி ரேவதி மூலமாக அறிமுகமான நண்பன் ராஜசிம்மன் . ரேவதியின் வீட்டிற்கு அருகில் அவன் வீடு இருந்ததால் அவன் வீட்டிற்கு அடிக்கடி க்ரூப் ஸ்டடிக்குப் போவோம்.


கல்லூரி காலத்தில் பேசிய மிகச் சில ஆண்களுள் அவனும் ஒருவன். அவனுடைய அப்பா எம். எஃப். எல்லில் பொறியாளர் என்று நினைவு. அவனுக்கும் அந்தத் துறையில் நிறைய ஆர்வமிருந்தது.

நான் இங்கி பிங்கி பாங்கி போட்டு தேர்ந்தெடுத்த துறையை அவன் யோசித்துத் தேர்ந்தெடுத்திருந்தான். பாடத்தை முழுமையாகப் படித்து உள்வாங்கி விளக்குவான்.

அவனுடைய அப்பா பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர் மாதிரி கம்பீரமாய் இருப்பார். அவனது அம்மாவும் தங்கையும் மிகவும் தோழமையாய் பழகுவார்கள். என் அப்பா நன்றாகப் பேசக் கூடியவர் என்பதால் குடும்பமாய் நண்பர்களாகிவிட்டோம்.

வாழ்க்கையின் சிறு சிறு விஷயங்களைப் பற்றி நிறைய யோசிப்பவனாய் அவன் அப்போது இருந்தான். ரேவதியின் செல்ல நாய் ஜீனோ இறந்து போன போது ஓவென்று அழுத அவளைத் தெளிவாய் பேசி சமாதானப்படுத்தியவன். பிள்ளையார் பக்தன்.

பரீட்சை நேரமெல்லாம் பகலில் ராஜசிம்மன் வீட்டில் படித்து விட்டு இரவு ரேவதி வீட்டிற்குச் சென்று விடுவேன். ஷானே எழுதிய புத்தகம் என்று நினைவு. மல்லாக்கப் படுத்துப் படிக்க முடியாத அளவிற்குப் பெரிது, குப்புறப்படுத்துக் கொண்டு தான் படிக்க வேண்டும். நானும் ரேவதியும் ஆளுக்கு ஒன்று என்று பங்கு போட்டு முக்கிய கேள்விகளைப் படித்து, பிறகு மற்றவருக்கு விளக்குவோம்.

அவன் எங்களைப் போன்றவனில்லை. எல்லாவற்றையும் நிதானமாய் புரிந்து கொண்டு முழுமையாய் படிப்பவன். புரியாத விஷயங்களைத் தெளிவாக விளக்குவான். அவனுடைய அப்பா அதே துறையில் வேலை செய்தால் அவனுக்கு அந்த ஆர்வம் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. எங்களைத் தவிர பிற நண்பர்களும் அவன் வீட்டுக்குப் படிக்க வருவார்கள்.

பரீட்சைக்குப் படித்து ரொம்பவும் ஸ்ட்ரெஸ் ஆகி சினிமாக்களுக்குக் கிளம்பிப் போன நினைவு இருக்கிறது.

ஒருமுறை டி.வி.எஸ் எக்ஸலை ஓட்டிக் கொண்டு போய் வேறொரு வண்டியுடன் நேராக மோதியதில் வண்டியின் பின்வீல் வளைந்து விட்டது. வீலின் பெண்ட் நிமிர்த்துவது முதற்கொண்டு மெக்கானிக் கடையில் செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்து கொடுத்தான்.

கடைசி வருட ப்ராஜெக்ட் அவன் புண்ணியத்தில். பெரும்பாலான வேலைகளை அவன் இழுத்துப் போட்டுச் செய்தான், ரேவதி சின்சியராய் உதவி செய்ய, என்னுடைய பங்கு அதில் குறைவு தான். கடைசி ப்ரெஸன்டேஷனிலும் குத்து மதிப்பாய் செய்தேன். மூன்று பேரை ஒப்பு நோக்க அவனுக்கே கம்மியான மதிப்பெண்களை வழங்கியிருந்தார்கள். பெண்கள் பொறுப்பாய் செய்திருப்பார்கள் என்று ஆசிரியர்கள். நம்பியிருப்பார்கள் என்று இப்போது தோன்றுகிறது.

கடைசி வருடம் அவனுக்கு ஏதோவொரு சப்ஜெக்ட்டில் மதிப்பெண் குறைந்துவிட அப்பீல் செய்த பின்னர் நல்ல மதிப்பெண் வந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் நண்பர்கள் பலரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்று பின்னால் ஒருமுறை சொன்னான்.
எட்டிப்பார்க்காத அவர்களுள் நானும் ஒருத்தி, அப்போதெல்லாம் அந்தந்த நேரத்து எண்ணங்களுடன் வாழ்ந்திருக்கிறேன். அந்தக் குறுகுறுப்பு இப்போதும் என்னுள் இருக்கிறது. என் அப்பாவின் தோழமையால் என் முசுட்டுத் தங்களை அவன் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டான் என்று இப்போது தோன்றுகிறது.

உன்னுடன் தொடர்பில் இருப்பேனோ இல்லையோ உன் அப்பாவுடன் தொடர்பில் இருப்பேன் என்று அவன் கல்லூரியின் கடைசி தினங்களில் சொன்னான்.

காலத்தால் தொலைந்து பல வருடம் கழித்து கல்லூரி வாட்சாப் குழுவில் மீண்டும் சந்தித்தோம்.

காலமெல்லாம் காதல் வாழ்க படத்தை நாங்கள் தியேட்டரில் சென்று பார்த்தோமா, இல்லை அந்தப் பாடல்களை அவனது வீட்டிற்கு அருகிலிருக்கும் ஸ்பீக்கரில் ஒலித்துக் கேட்டிருக்கிறேனா என்பது மறந்துவிட்டது,

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா பாடலைக் கேட்கும் போதேல்லாம், அவனது அம்மாவோடு அவனது வீடும், அதில் நாங்கள் சாப்பிட்ட நினைவும் உடன் வருகிறது.

2 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

​நண்பர்களை பற்றிய நினைவலைகள் சுவாரஸ்யம். முகநூலிலும் படித்தேன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நினைவலைகள் நன்று. கல்லூரி கால நட்பு குறித்து நினைப்பதும் ஒரு வித சந்தோஷமான விஷயம் தான்.