வெள்ளி, 16 அக்டோபர், 2015

பெயர்


பாக் பக் பக்காக இருக்கலாம்

கொத்துவானாக இருக்கலாம், இல்லை

நாயாகவோ மாரியாத்தாளாகவோ

கூட இருக்கலாம்

சேவலின் பெயர்

கோழியின் பாஷையில்

 

பேசிக் கொண்டே இருக்கும்

‘சள சளா’வாக இருக்கலாம்

ப்ரசவித்த வெம்மை  தீருமுன்

அதன் முட்டையைத் திருடும்

திருடனாக இருக்கலாம்,

அல்லது

கூண்டிலடைக்கப் பட்ட

சுற்றத்தின் முன் அதை

சுடுநீரில் முக்கி சிறகுரித்து

பலவிதமாய் சமைத்துண்டு

திருப்தியாய் ஏப்பம் விடும்

அரக்கனாய் இருக்கலாம்

என் பெயரின் அர்த்தம்

கோழியின் பாஷையில்

 

 

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

உறைவிடம்


எங்கேயென்று தெரியவில்லை!
பேருந்தின் கூரையில் மழைத்துளி தாளமிட
வெகுதூரம் சென்றது மட்டும்
நினைவில் பொதிந்து ஈரமாய் . . .
நின்ற பேருந்திலிருந்து
தலை தப்ப
ஓடிய சில நொடிகளில்
வேகமாய் மண்டையிலடித்த
துளியின் ஊசிமுனைகளை
இன்னமும் உணரமுடிகிறது!
அதுவரை
கடின முகமணிந்து
ஆங்கிலம் மட்டுமே நடத்தி வந்த
பாகீரதி டீச்சர்
நீர் சொட்டும் தன் கூந்தலை
நுனிமுடிச்சிட்டு
சந்நிதி முன் பாடி, தன்
ஓடு கழற்றிய போது
விடிந்த தினத்தில் தான்
நாங்கள்
நனைந்த புல்வெளியில்
திராட்சை பழம் போட்ட
தயிர் சாதம் சாப்பிட்டது.
சாப்பிட்டு முடிக்கும் போது
வந்த அவசர தகவல்
எங்களுள் ஒருத்தியின்
தந்தை இறந்ததைச் சுமந்திருந்தது.
வெண்மையாய் குழைந்து
கைகளில் ஒட்டியிருந்த
பருக்கைகளைக்
கழுவிய கையுடன்
பயணம் முடிந்து திரும்பி விட்டோம்.
இப்போதும் கூட என்னால்
திராட்சை போட்ட 
தயிர் சாதத்தி லெல்லாம்
மழையை உணர முடிகிறது.
நுனிமுடிச்சில் ஈரம் சொட்ட
பாடியபடி இருக்கும்
பாகீரதி மிஸ்ஸீம்,
அடையாளம் மறந்து போன
தந்தையை யிழந்த மாணவியும் கூட
மழையுடன் சேர்ந்து அதில்
நிரந்தரமாய் உறைந்துவிட்டார்கள்.
 
 
 
 

வெள்ளி, 8 மே, 2015

ஒருவேளை கோப்பி

சல்லடைக் கண்களாய் பூச்சியரித்த
முருங்கைக் கீரையை
ஒரு வெள்ளி இருபது காசுக்கு
வாங்கியிருக்கும் என்னைப் பார்த்து
நீங்கள் சிரிக்கக் கூடும். . . . . .

அதை விற்ற பல்லுதிர்ந்த கிழவன் தன்
பதறும் சரீரத்தை நிலை நிறுத்தி
துரட்டி வைத்து பறித்திருக்கக் கூடிய சாத்தியத்தையும்,
விழப்போகிற இலைகளைப் பொறுக்கும் ஆவலோடு
கண் இடுங்க மேல் நோக்கி பார்த்தபடியிருக்கும்
கோலூன்றிய கிழவி யொருத்தியின் உருவத்தையும்
சித்திரமாய் வரைந்தது,
அவனது மிச்சமிருந்த பற்களின்
இடைவெளி வழி செவியடைந்த.
‘இந்த பணம் என் ஒரு வேளை கோப்பிக்கானது’ என்ற
மொழி கடந்த மலாய் வார்த்தைகள்.

காத்திருந்த கிழவியின் பங்கு கோப்பிக்காய்
இன்னொரு கட்டு கீரை வாங்கிய என்னை
நீங்கள் முட்டாள் என்றும் நினைக்கக் கூடும். . .
பரவாயில்லை!
அவர்கள் இந்நேரம் கோப்பி குடித்திருப்பார்கள்.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

மழைக் கவிதை


மழையைப் பற்றிய

அனுபவக் கவிதையை

நான் எழுதுவதற்குள்

என்னைப் பற்றி

எழுதிச் சென்றுவிட்டது

மழை.

வியாழன், 25 டிசம்பர், 2014

ஆலம் விழுது


 

   செடிகளின்  வேர்களுக்கு சுடுநீரை ஊற்றிவிடப்போவதாக க்ளாரா மிரட்டிய தினத்திலிருந்தே சரோஜா பாட்டிக்கு தூக்கம் கொள்ளவில்லை. அன்றிரவு, செம்பருத்திகளையும் ரோஜாக்களையும் அபரிதமாய் கொண்டிருந்த செடிகள் அவரிடம் வந்து தம்மைக் காப்பாற்றுமாறு  கண்ணீரோடு முறையிடுவதாகக் கனவு கண்டார். அவற்றைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் நேரம் கொதிநீரைக் கொண்டு வந்து கொட்டினாள் க்ளாரா. திடுக்கிட்டு விழித்த போது, சுடுநீர் தன் மீது தெறித்தாய் தோன்றிய உணர்வு மிக உண்மையானதாக இருந்தது, அவருக்கு. அது கனவு என்று அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. வெளியே சென்று செடிகளின் பாதுகாப்பை உறுதி செய்துக் கொண்ட பின்னும் உறக்கம் வரவில்லை.

   அன்றிலிருந்து மூட்டு வலி, முதுகு வலி போன்ற உடல் உபாதைகளெல்லாம் அவருக்கு ஒன்றுமற்றதாய் போய்விட்டது. நடுநிசியில் மெல்லிய சத்தம் கேட்டாலும் சட்டென்று சன்னல் வழியாக எட்டிப் பார்க்கத் தொடங்கினார். அவருக்கு தான் செடிகளை தொட்டியோடு தூக்கிக் கொண்டு போய் எங்கோ ஒளித்து வைப்பதாகவும், வைத்த இடத்தை மறந்து போய் அலைவதாகவும் கனவுகள் வரத் துவங்கின. கனவுகள் பூதங்களாய் பயமுறுத்தத் துவங்கிய நேரத்தில், ஆஸ்திரேலியாவிலிருந்து தொலைபேசியிருந்த  பேரன் ராசுவிடம் அதைப் பற்றிச் சொன்ன போது அவருக்கு அழுகை வந்தது. இந்த சனிக்கிழமை வருவதாய் சொல்லியிருந்த அவன் ஏதோவொரு தீர்வைக் தன்னோடு நிச்சயமாய் கொண்டு வருவான் என்று நம்பினார்.

   இரண்டு வருடங்களுக்கு  முன் ஆஸ்திரேலியா சென்ற பேரன், படிப்பு முடிந்து சிங்கப்பூருக்கு வரப்போகிறான் என்ற செய்தியே பாட்டிக்கு தெம்பையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. சரோஜா பாட்டிக்கு ராசுவின் மீது தனி வாஞ்சை உண்டு. தாயும் தந்தையும் வேலைக்குச் சென்ற காரணத்தால் பன்னிரெண்டு வயது வரை இவரிடம் முழுமையாக வளர்த்த பேரன் அவன். கடந்த இரண்டு வாரங்களைப் பேரன் வரப்போகிற அன்றைய தினத்தை நோக்கியே நெட்டித் தள்ளி வந்திருந்தார் சரோஜாப் பாட்டி. அவனுக்காக ஏதேனும் சமைக்க வேண்டும் என்று அவர் மனம் பரபரத்தது.


தனக்காக ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் தானே எல்லாவற்றையும் வாங்கி வருவதாகவும் அவன் சொல்லியிருந்தான். இருந்தாலும் அவருக்கு மனசு கேட்கவில்லை. பேரனுக்கு பிடித்த கோழியையாவது வாங்கிப் பொரிக்க வேண்டும் நினைத்துக் கொண்டார்.

   ஆகவேண்டிய வேலைகளை கவனிப்பதற்காக எழுந்த பாட்டி மூக்குக் கண்ணாடிக்காக தன் பக்கத்தில் இருந்த மேசையைத் தடவினார். அங்கே இல்லாமல் போகவே கண்களைச் சுருக்கி பார்த்தபடி, சலவை இயந்திரத்தின் பக்கத்தில், குளிர்பதன பெட்டிக்கு மேலே, சாப்பாட்டு மேசையின் மேலே, நாற்காலியில் என்று கவனமாய் கைகளால் தடவிக் கொண்டே வந்தார். கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்ததில் லேசாக தலையைச் சுற்றுவது போல இருந்தது. மின்விசிறியைப் போட்டுவிட்டு சற்று நாற்காலியில் அமர்ந்தார்.

   இப்போதெல்லாம் அவரால் முன்போல தொடர்ந்து வேலை செய்ய முடிவதில்லை. மயக்கமா தூக்கமா என்று புரியாத ஒரு சுழலுக்குள் அவரது மனமும் உடலும் அவ்வப்போது சென்று விடுகிறன. ஏதோ ஒரு கதையில் ராட்சஸன் ராஜகுமாரியைக் கடத்திச் சென்றது போல யாரோ தன்னை இந்த உலகத்திலிருந்து மாயாலோகத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் பின், தான் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் அவர் கற்பனை செய்துக் கொள்வார்.  அடிக்கடி ஆட்கொண்ட இந்த மனப்பெயர்ச்சி சோர்வைத் தருவதாக இருந்தது. தன் சொந்த வேலைகளை முடிக்க அது ஒரு தடையாக இருந்தது. இதனால் ஒரு சாதாரண வேலை கூட மலையாகத் தோற்றமளித்தது. அதை முடிப்பதற்குள் திணறிப்போனார்.

    முன்பெல்லாம் அவர் சுறுசுறுப்பிற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. பிள்ளைகள் வளர்ந்து கல்லூரிக்கும் வேலைக்கும் சென்ற பின் இவர் தனக்கென்று வேலைகளைத் தேடிக் கொண்டார். செம்பாவாங்கிலிருந்த பாலர் பள்ளி ஒன்றில் துப்புரவாளர் வேலையை முடித்து விட்டு அதே மூச்சில் ஜீராங் ஈஸ்ட்டில் ஒரு அலுவலகத்தை சுத்தம் செய்ய கிளம்பிவிடுவார். அதையும் முடித்து விட்டு கொஞ்சம் கூட அலுத்துக் கொள்ளாமல் வீட்டிற்கு வந்து பிள்ளைகளுக்கு உணவு பறிமாரி, மறுநாளைக்கான கறி சமைத்து, வீட்டையும்  துப்புரவாக துடைத்து அதன் பின் தான் படுப்பார். இது போல கிட்டத்தட்ட பதிநான்கு வருடங்கள். நாடி தளர்ந்து போன இன்றைய நாட்களில் அதை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்வார்.

   பெண் மற்றும் பிள்ளைகளோடு போய் இருக்க அவர் என்றும் விரும்பியதில்லை. முடிந்தவரை மற்றவற்களுக்கு உதவியாக இருக்க வேண்டும், முடியாவிட்டால் உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும் என்பது அவரின் கொள்கை. உடம்பு முடியாவிட்டால் இப்போது குளிக்காமல் கொள்ளாமல் கூட ஒரு நாள் ஓய்வாக படுத்துக் கொள்ளலாம். அடுத்தவர் வீட்டில் அப்படி இருக்க முடியுமா! சில இரவுகளில் சிறுநீரை அடக்க முடியாமல் போய் விடுவது உண்டு. அப்போது கொஞ்சமாய் நனைந்து போகும் துணிகளால் அவமானப்பட நேருவதில்லை. மற்றவருக்காக கவலைப்பட தேவையற்ற இந்த வாழ்க்கை வாழ்வதற்கு சுலபமாய் இருந்தது. என்ன, பேசுவதற்கு தான் ஆட்கள் யாரும் இல்லை!

   அப்படியொன்றும் போட்டியிட்டுக் கொண்டு இவரை தன்னுடன் வைத்துக் கொள்ள பிள்ளைகள் யாரும் ஆசைப்படவும் இல்லை. வாரம் ஒருமுறை தொலைபேசுகிறார்களே அது போதாதா! அவர்கள் பிள்ளை குட்டிகளை வைத்துக் கொண்டு தன் புறாக் கூண்டுக்குள் நிம்மதியாய் இருந்தால் போதும் என்று தன்னை சமாதானப் படுத்திக் கொள்வார். கொஞ்சம் ஏமாந்தால் இப்படி தான்! ஏதேதோ நினைப்புகள் ஆளை விழுங்கி விடுகின்றன. ‘இன்று உட்கார நேரமில்லை!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே நாற்காலியிலிருந்து எழுந்துக் கொண்டார்.

   உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திரிக்கும் போதே பூட்டுக்கு பூட்டு வலித்தது. கூடத்தைக் கடந்து குசினிக்குள் நுழையும் போது மூச்சு வாங்கியது. சற்று நிதானித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்துவிட்டதில் அடுப்பு பிசுக்கேறிப் போயிருந்தது. கண்ணாடியை சற்று மறந்து, அதை சுத்தப் படுத்துவதில் முனைந்தார். அடுப்பைத் துடைத்து முடிப்பதற்குள் கை வலியெடுத்துக் கொண்டது. அந்த வேலையை முடித்துவிட்டு நாற்காலியில் மறுபடி சென்று அமர்ந்துக் கொண்டார்.

   சாலையில் சென்ற தீயணைப்பு வண்டி அமைதியைக் கிழித்துக் கொண்டு அலறியது. அந்த சத்தம் தூரம் சென்று தேய்ந்த பின் நிசப்தம் ஆக்கிரமித்துக் கொண்டது. முன்பைவிட சப்தமின்மையின் வீர்யம் இப்போது  அதிகமாகி விட்டதாய் தோன்றியது அவருக்கு. இப்போதெல்லாம் அவரால் இந்த தனிமையைத் தாங்க முடிவதில்லை. பிள்ளைகள் ஓடி விளையாடிய வீடு, எப்போதும் கூச்சலும் குழப்பமுமாய் இருந்த வீடு, யாருமற்றிருப்பது பொட்டற்று வெறிச்சிடும் நெற்றி போல காட்சியளித்தது.

   குழந்தைகள் சிறுவர் சிறுமியராய் இருந்தவரை வேலைகள் சரியாய் இருந்தது சரோஜாவுக்கு. ஒரு புத்தகம் படிக்கக் கூட அவருக்கு நேரமிருக்காது. காலையில் பள்ளிக்குச் சென்ற மகள் திரும்பி வரும் நேரம் மகன் கிளம்ப தயாராகிக் கொண்டிருப்பான். இதில் கைக்குழந்தையாய் சிறியவன் வேறு. கணவர் மற்றும் மகன் வீடு திரும்பும் நேரத்திற்குள் மற்ற வேலைகளை முடிக்கவேண்டும். ஆரம்பகாலங்களில் இவர்கள் வீடு திரும்பும் நேரம் நோக்கியே அவரது வாழ்க்கை நகர்ந்தது. சரோஜா என்றும் வேலைக்கு அஞ்சியவர் இல்லை. இழுத்து செருகிக் கொண்டு ஆரம்பித்தால் வேலைகள் சட் சட்டென்று முடிந்துவிடும்.

   பிள்ளைகள் ஒவ்வொருவராய் திருமணம் முடிந்து சென்று, பின் கணவரும் இறந்த பின் கவிந்த இந்த சப்தமின்மை தான் அவருக்கு தாங்கமுடியாததாக இருந்தது. சேவாவுக்கு ஆளை வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். கண்ணாடி வைத்த இடத்தை அவரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. வர வர மறதி வேறு அதிகமாகிக் கொண்டு வருகிறது. ‘ஒலியில் சொல்லும் ராயல் ஃபுட்ஸ்சை முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் அவர்.

   கடைக்குச் செல்வதற்காக வீட்டின் கதவைத் திறந்த போது, வாசலிலிருந்த செடிகள், காய்ந்த இலைகளை உதிர்த்துவிட்டு பளிச்சென்று காட்சியளித்தன. இவை வந்த நேரம் இவர் வாழ்க்கை சற்று மாறிப் போயிருந்தது. நட்டநடுவில் இருந்த செம்பருத்தி செடி தான் முதலில் வந்தது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டிற்கு முன் அவளுடைய தோழி கொடுத்தது. அப்போது அது இவ்வளவு தூரம் கிளைத்திருக்கவில்லை. அன்புக்கு ஏங்கும் சோனிக் குழந்தையைப் போல ஒடுங்கிப் போயிருந்தது. அதற்கு, தண்ணீர்விட்டு, பேசி, கொஞ்சி, அதை பாசத்தோடு தடவி கொடுக்க சட்டென்று வளர்ந்துவிட்டது. அதற்கு அடுத்து இருக்கும்பட்ரோஸ் இவராக கேட்டு வாங்கி வந்தது. நடுவே இருக்கும் தக்காளிச் செடி இரண்டு மாதங்களுக்கு முன் மகள் வயிற்று பேரன் சிவா கொண்டு வந்தது. பள்ளியில் பாட சம்பத்தமாக விதைகளை விதைத்தவன் அதை இங்கே வைத்துவிட்டு போயிருந்தான். பாட்டியின் சற்றே சோம்பேறியான செல்லக் குழந்தை அது. முதல் இலை வெடித்து கிளம்ப கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் பிடித்தது. இளம்முடிகளைக் கொண்ட ஒரு குழந்தையின் பிஞ்சு உடலை நினைவுபடுத்தும் அதன் இளம் காம்புகளைத் தடவி தடவிப் பார்ப்பாள் பாட்டி. அவ்வப்போது அதை கோபத்தில் திட்டினாலும் அவள் மனம் பொறுக்காது. பாட்டியின் கொஞ்சலும் கெஞ்சலும் அதற்கு புரிந்தது போல இருந்தது, அதன் வளர்ச்சி. இப்படியாக ஏதோவொரு காரணத்தோடு  சேர்ந்து போன செடிகளின் வரிசை இப்போது மின் தூக்கிவரை நீண்டுவிட்டது.

   காலையில் எழுந்தவுடன் ரோஜா பாட்டி நேரம் செலவழிப்பது இந்த செடிகளோடு தான். பழுத்திருக்கும் இலைகளை நாசூக்காய் கிள்ளி. அழுக்கடந்திருக்கும் இலைகளை சுத்தமான துணியால் துடைத்து, கண்பட்டுவிடும் என்று  பூக்களை உள்பக்கமாய் வளைத்து விட்டு, பின் தேவையான அளவு தண்ணீர் தெளித்தோ ஊற்றியோ விடுவார். இவற்றின் காரணமாகவே அவர் வெளியே எங்கும் தங்குவது கிடையாது. கொப்பும் கிளையுமாக செழித்து வளர்ந்திருக்கும் இந்தச் செடிகள் பாட்டிக்கு இதம் தருவதாய் இருந்தன.

   அவருக்கு நிம்மதியைக் கொடுத்த அவை, அக்கம்பக்கத்தாருக்கு தொல்லையாய் அமைந்தது தான் பிரச்சனையாகிப் போனது. முதலில் கிளைகள் வெளிச்சத்தை மறைப்பதாய் புகார் செய்தாள் பக்கத்துவீட்டுப் க்ளாரா. அதன்பின் மற்றொரு நாள், அவளது பிள்ளை சீக்கில் படுத்ததற்கு அதிலிருந்து கிளம்பிய கொசுக்களே காரணம் என்று கோபத்தோடு கத்திய போது தான் அதன் வேர்களில் சுடுநீர் ஊற்றப் போவதாக சொன்னாள். அதைக் கேட்ட பாட்டியின் உயிர்க்குலை ஆடிப் போயிற்று.

குழந்தைகளாய் வளரும் இந்த பிஞ்சுகள் துடித்துப் போய்விடாதோ! அவள் பிள்ளைக்கு சீக்கு வந்ததற்காக என் பிள்ளைகளைக் குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்என்றெல்லாம் தனக்குத் தானே புலம்பியபடி இருந்தார். க்ளாரா அப்படி சொன்ன தினத்திலிருந்து பேரனின் வரவிற்காக காத்திருக்கும் இந்த நிமிடம் வரை அவள் சொன்னதை எண்ணி அவரது மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது.

   ராசு தன் இரண்டு கூட்டாளிகளோடு வந்த போது மணி மூன்றாகியிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் பார்த்ததை விட  உயரமாகியிருந்தான். அவனைப் பார்க்க பார்க்க பாட்டிக்கு நெஞ்சு நிறைந்து போனது. கையோடு பாட்டிக்கு பிடித்த இறைச்சி பிரியாணியை வாங்கி வந்திருந்தான் ராசு. அதோடு தான் பொரித்த கோழியையும் சேர்த்து, பேரனுக்கும் அவன் நண்பர்களுக்கும் பறிமாரி, தானும் அவர்களோடு அமர்ந்துக் கொண்டார் பாட்டி.  நெடுநாட்கள் கழித்து பேரனோடு கதைகள் பேசியபடி சாப்பிட்டது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

   ராசு உணவிற்கு பின் சற்று நேரம், வெளிநாட்டில் அவனது வாழ்கை முறையைப் பற்றியும், காரசாரமான உணவிற்காக ஏங்கிப் போன தன் நாவைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தான். பாட்டிக்கு அவனது பேச்சு வியப்பாயிருந்தது. அவன் படும் சிரமங்களை எண்ணி மனம் வருந்தினார். அவனுக்கு சீக்கிரம்  திருமணம் செய்து வைத்துவிட்டால் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். 

   பிறகு ராசு பக்கத்து வீட்டின் கதவைத் தட்டி க்ளாராவிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, சற்று நேரம் பேசினான்.  கோபத்தோடு பேசத் தொடங்கிய க்ளாரா  சற்று நேரத்தில் அமைதியடைந்தவளாக மாறினாள்.

   பின் ராசு, கூட்டாளிகளின் உதவியோடு  அதிகப்படியாக வளர்ந்திருந்த செடிகளின் கிளைகளை கழித்துவிட்டான். இருளடைந்திருந்த அந்த தாழ்வாரம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சத்தை அனுமதித்தது. குப்பைகளை வாரி சுத்தம் செய்ததும் பளிச்சென்று சுத்தமாகிப் போனது. பின் தொட்டிகளை இரண்டிரண்டாக அடுக்கி அவை அடைத்திருந்த இடத்தின் நீளத்தைக் குறைத்தான். இப்போது நடைபாதை அடைப்புகளற்று துப்புரவாக இருந்தது. பாட்டி ஆர்வமாய் செடிகளைத் தடவிக் கொடுத்தார். கண்கலங்க பேரனைக் கட்டிக் கொண்டார்.

ராசு கிளம்பும் முன்,

பாட்டி! எந்த பிரச்சனையாக இருந்தாலும் இனி அவங்க என்கிட்டயோ அம்மாகிட்டயோ பேசுவாங்க, நீங்க வீணா கவலைப்படாதீங்க! எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க! நான் பார்த்துக்கறேன்!” என்றான். பல வருடங்களுக்கு முன், சிறுவனாய் இருந்த ராசுவிற்காக பள்ளி ஆசிரியரிடம் பேசி, பின் அவனைச் சமாதானப்படுத்த தான் பயன்படுத்திய இதே போன்ற வார்த்தைகள் நினைவிற்கு வந்தன, பாட்டிக்கு. செடிகள் முடிவெட்டிக் கொண்ட சிறு குழந்தைகள் போல உற்சாகமாய் இலைகளை அசைத்துக் கொண்டிருந்தன. சரோஜா பாட்டிக்கு பேரனை நினைக்கையில் பெருமையாக இருந்தது.

முத்தமிழ் விழா 2013ல் இரண்டாம் பரிசு பெற்ற கதை


 

விற்பனையாளன்


கூடையைச் சுமந்தபடி

என் வீட்டைக் கடந்த போது

“தேங்கோ தேங்கோ. . .!” என்று

சத்தமாய் அவ னுதிர்த்த வார்த்தைகளிலிருந்து

புறப்பட்ட தேங்காய்கள் இரண்டும்

மோதி உடைந்ததில் தெறித்த சில்லுகள்  

தெருவெங்கும் சிதறிக் கிடந்தன.




 

சனி, 15 நவம்பர், 2014

அப்பாவுக்காக . . .



      நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் . . . பி.பி. ஸ்ரீநிவாஸின் குரல் காற்றில் மிட்டாயைப் போல கரைந்து வந்தது.

ஏண்டா! எவ்வளவு தைரியம் இருந்தா வீட்ல சொல்லாம படத்துக்கு  போவ . . .’

மழை கூரையின் மேல் தடதட வென்று விழுந்துக் கொண்டிருந்தது.

அப்பா வேணாம்பா . . .!’

ஐயோ! விட்டுடுங்க! அவன் எங்கிட்ட சொல்லிட்டு தான் போனான்

      மழைச்சாரல் உள்ளே வராமல் இருப்பதற்காக வாசலில் தடுப்பாய் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தகரத்தையும் மீறி வீட்டின் மண் தரை நனைந்து போயிருந்தது.

ஆயியும் மவனும் சேர்ந்துகிட்டு என்னை ஏமாத்துறீங்களா?’

அப்பா! அம்மாவ அடிக்காதீங்கப்பா! இனி நான் இப்படி போக மாட்டேன்!’

கண்களின் ஈரத்தினூடே யாரோ நிற்பது மசமசப்பாய் தெரிந்தது.

சங்கர் நின்றுக் கொண்டிருந்தான். ஆஸ்திரேலியாவில் இருக்கும் மகன். இவன் எப்போது இங்கே வந்தான்!

பொன்னையாவுக்கு குழப்பமாய் இருந்தது.

இறந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்குள் நினைவுகளைக் கொண்டுவர பிரயர்த்தனம் தேவையாய் இருந்தது.

சங்கர் சற்றே சதைப்போட்டிருந்தான்.

அடுத்த நொடி குழப்பம் மறந்து போய் சந்தோஷமானார்.

சங்கரு... எப்பாய்யா வந்தீங்க! அப்பாவ பாக்கணும்னு இப்பயாவது தோணுச்சா?”

பேசுவதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது அவருக்கு.

சங்கர் வந்து இரண்டு நாள் ஆகியிருந்தன. அவர் அவனை வரவேற்பது இது மூன்றாவது முறை.

     சங்கருக்கு கண்கள் கலங்கின. படுக்கையை ஒட்டியிருந்த நாற்காலியில் அமர்ந்து அப்பாவின் மெல்லிய கைகளை பிடித்துக் கொண்டான். தோல் சொர சொரவென்று நீர்பசையின்றி இருந்தது. கறுப்புத் தோலின் சுறுக்கங்களினூடே எலும்பின் வடிவம் சன்னமாய் தெரிந்தது. அம்னீஷியா வந்த பின் உடல் நன்றாய் மெலிந்து போயிருந்தது.

     ஒரு காலத்தில் இரவும் பகலும் ஓடியாடி வேலை செய்த அப்பா இவரில்லை என்று தோன்றியது. அப்போதெல்லாம் அப்பா வெள்ளை வேட்டி சட்டையைத் தான் அணிவார். நெற்றியில் பளிச்சென்று ஒரு திருநீறு கீற்று இருக்கும்.

     அப்பா எப்போதும் தன் உடைகளை தானே துவைத்துக் கொள்வார்.  அவர் தன் துணிகளைத் துவைப்பதில் ஒரு நேர்த்தி இருக்கும். காலை எழுந்த உடன் கட்டி சோப்பு போட்டு தேய்த்து துணிகளை ஊற வைத்துவிடுவார். பத்து மணி வாக்கில் குளியலறையில் கால்களை குத்த வைத்து அமர்ந்து, சட்டைகாலரில் ஆரம்பித்து, மெல்ல மெல்ல இணுக்கு விடாமல் ஒரு குழந்தையை தேய்ப்பது போல மென்மையாய் தேய்த்து, இரண்டு முறை அரை வாளி நீரில் அலசி, பிழிந்து, சுருக்கம் போக உதறி அதை நிழலில் உலர்த்துவார். ஏனோ உடைகளை வெயிலில் உலர்த்துவதில் அவருக்கு பிடித்தமில்லை.

     காய்ந்த பின் சுறுக்கங்களை விரல்களால் நீவி மடித்து வைப்பார். அலமாரியில் வைக்கப்பட்டிருக்கும் அவரது வேட்டி சட்டைகள் தொட்டு பார்ப்பதற்கு குழந்தையின் கன்னம் போல மெத்தென்று இருக்கும். இப்போது பிள்ளையின் வசதிக்காக லுங்கிக்கு மாறியிருந்தார்.

சாப்பிட்டியாப்பு!”

ஆச்சுப்பா!”

எப்படிப்பா போகுது வேலையெல்லாம்!”

ஐயோ தாத்தா! இதையே எத்தன முறை கேட்ப!” என்றான் அங்கே விளையாடிக் கொண்டிருந்த அண்ணன் மகன் சுதாகர்.

     பொன்னையாவின் கண்களில் குழப்பம் தெரிந்தது. முன்னர் கேட்டது நினைவின்றி, வெற்று நினைவுகளை ஆராய்ந்து பார்த்தார். இதைப் பார்த்த சங்கருக்கு வருத்தமாய் இருந்தது.      இப்படி கேட்பதால் அவருக்கு குழப்பமே ஏற்படும் என்பதை பாலா ஒப்புக் கொள்வதில்லை. ‘இவரை நீ கூட வச்சிருந்து பார்த்தா தான் தெரியும்!’  என்று வார்த்தைகளால் முகத்திலடித்து விடுவான்.

உனக்கு தெரியாது சங்கர்! அன்றைக்கு சோறும், மீன் சம்பாலும், அப்ப தான் சாப்பிட்டுட்டு உட்கார்ந்திருந்தார்.  அரை மணி தான் இருக்கும்! ராகவன் மாமா வந்து பேசிகிட்டு இருக்கார்.

பார் ராகவா! காலையிலேயிருந்து இன்னும் எனக்கு சாப்பாடே போடல! வயசாயிட்டா ரொம்ப நாள் உசிரோட இருக்கக் கூடாதுப்பா! பொண்டாட்டி எறந்துட்டா கூடவே நாமளும் போயிடனும் . . . முன்னல்லாம் பொண்டுகள் உடன் கட்டை ஏறுவாங்களே! அந்த மாதிரின்றார் சங்கர். எவ்வளவு சங்கடமாய் இருக்கு தெரியுமா? அன்னிக்கு எல்லாம் மாலா அழுதுகிட்டே இருந்தா!’

சங்கரால் புரிந்துக் கொள்ள முடிந்தது!

இப்போது அப்பாவின் முகம் கூம்பிப் போயிருந்தது.

எதுக்குமே லாயக்கி இல்லாமல் போயிட்டம்பா!” என்றார் அறையின் மூலையை வெறித்தபடி.

அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா!”

மனுஷனோட நினைவுகளுக்கு சாவு வந்துட்டா, பெறகு உயிர் இருந்தும் பிரயோசனமில்ல! எல்லாமே செத்துப் போயிடுது!”

அப்பா! நான் கூட தான் அப்பப்ப மறந்து போறேன்! அதுக்கெல்லாம் வருத்தப் பட்டா முடியுமா!”

நாம இருக்கறது யாருக்கும் தொல்லையா இருக்கக் கூடாதுப்பா!”

யாருக்கும் எந்த தொல்லையும் இல்லை. வந்துட்டேன்ல்ல! நான் பார்த்துக்கறேன். நீங்க தூங்குங்க!”

சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டார்.

உள்ளேயிருந்து கோழிக் குழம்பு வாசம் வந்தது.

மூடிய கண்களுக்குள் புடவைத் தலைப்பில் கைகளைத் துடைத்தபடி அவருடைய அம்மா வந்தாள்.

சாப்பிட வாப்பா! ‘ என்றாள். இவருக்கு பசித்தது. இருந்து கண்களைத் திறக்க சக்தியற்று அப்படியே கிடந்தார்.

அப்பா ஓய்வு எடுக்க விட்டு வெளியே வந்தான் சங்கர். 

     இவனை பள்ளிக் கூடத்திற்கு கையைப் பிடித்து அழைத்துப் போன அப்பாவை, தூங்கும் போது கிருஷ்ணன் கதை சொன்ன அப்பாவை, விடுமுறை நாட்களில் பட்டம் விட கற்றுக் கொடுத்த அப்பாவை, சைக்கிளில் உட்கார வைத்து சினிமாவிற்கு அழைத்துப் போன அப்பாவை நினைத்தபடி கோப்பி ஷாப்பில் உட்கார்ந்திருந்தான்.

     அவன் ஆஸ்திரேலியாவில் நல்ல வேலையிலிருந்தான். சிறுவயது முதலே அவனுக்கு வெளிநாட்டு படிப்பின் மீது, வேலையின் மீது ஒரு மோகம் இருந்தது. ஏன் அதன் மேல் ஒரு வெறி என்று கூட சொல்லலாம்! அப்பாவிற்கு பிள்ளையை வெளிநாடு அனுப்புவதில் அவ்வளவாய் விருப்பமில்லை. இருந்தாலும் அவனுடைய விருப்பத்தில் தலையிடாமல் கௌரவமாய் ஒதுங்கிக் கொண்டார்.

     அங்கே இரண்டு வருடம் படித்து முடித்து, இப்போது தான் வேலையில் சேர்ந்திருந்தான். திருமணம் முடிந்தபின் குடும்பத்தோடு அங்கேயே தங்கிவிடும் எண்ணம் இருந்தது. இப்போதிருக்கும் நிலையில் அப்பாவை அங்கே அழைத்துச் சென்று வைத்துக் கொள்ள முடியாது! அழைத்துச் சென்றாலும் அவரால் சமாளிக்க முடியுமா என்று சந்தேகமாய் இருந்தது.

     தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல், தன்னால் இயன்றதை பிள்ளைகளுக்கு செய்து, தங்களை வளர்த்த அப்பாவை இந்த நிலையில் பார்ப்பது அவனுக்கு வேதனையைக் கொடுத்தது.

     அப்பா, வேலை முடிந்து திரும்பி வரும் போது சாப்பிட ஏதோவொன்று இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்ததில்லை! இவனும், அப்பா      உள்ளே நுழையும் போது கையில் என்ன வாங்கி வருகிறார் என்பதை தான் முதலில் பார்த்திருக்கிறான். இவனுக்கும் பாலாவிற்கும் யார்  முதலில் அவர் கையிலிருக்கும் பொட்டலங்களை வாங்குவது என்ற போட்டி நடக்கும்.  பரோட்டாவோ, மீ கொரீங்கோ, மட்டன் வறுவலோ ஏதோவொன்று பொட்டலத்திற்குள் இருக்கும். பிள்ளைகள் இருவரும் சாப்பிடுவதைப் பார்த்து திருப்தியடையும் அப்பாவாகவே இருந்தார் அவர். அவர்கள் வாயில் ஒட்டியிருக்கும் உணவுத் துணுக்குகளைத் தன் மேல் துண்டினால் மெல்ல துடைத்துவிடுவார்.

     அவருக்கு நீர்விட்ட சாதமும் பச்சைமிளகாயும் போதும். கேட்டால் இதுதான்யா உடலுக்கு நல்லது என்பார். அவரது சம்பளத்தில் இவர்களுக்குச் செய்தது எவ்வளவு பெரிய விஷயம் என்று இப்போது அவனுக்குப் புரிந்தது.

     இப்போது அப்பாவிற்கு ஏதேனும் வாங்கிப் போக வேண்டும் என்று தோன்றியது. ஒரு பிரியாணி பொட்டலத்தை வாங்கிக் கொண்டான். அஜீரணக் கோளாறு ஏற்படுமோ என்று ஒரு கணம் யோசித்தான்! பின் பரவாயில்லை என்று அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான். 

அறைக்குள் நுழைந்த போது, ஜன்னலை வெறித்துக் கொண்டிருந்த அப்பாவின் பார்வை சட்டென்று இவன் கையிலிருந்த பொட்டலத்திற்கு தாவியது.

வாப்பா சங்கர்! எப்ப வந்த?” கண்கள் பொட்டலத்தின் மீதே இருந்தன.

அவருக்கு விளக்கிச் சொல்ல பிரயர்த்தனப்படாமல்

இப்பதாம்பா!” என்றான் சங்கர்.

என்னப்பா வாங்கிட்டு வந்த?’ என்றார் குழந்தையின் ஆர்வத்தோடு. பொட்டலத்தைப் பிரித்து, சாதத்தை  விரல்களால் நன்கு பிசைந்து கொடுக்க ஆசையோடு சாப்பிட்டார். கொஞ்சம் சாப்பிட்டானதும் போதும் என்று சைகை காட்டினார். தண்ணீரைக் குடித்தபின் அவர் வாயை துவாலையால் துடைத்து விட்டான் சங்கர்.  சாப்பிட்டு முடித்த திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது.

ஒரு முறை நாசி லெமாக் சாப்பிடணும்ப்பா. நம்ம வீட்டுக்கு கீழ ஒரு மலாய் கடை இருக்குமே, ஞாபகம் இருக்கா! இலையில வச்சு கட்டிக் கொடுப்பானே!” என்றார்.

சரிப்பாஎன்றான் சங்கர்.

தலையணையில் சாய்ந்தபடி, கால்களை நன்றாய் நீட்டிக் கொண்டார்.

ஏம்பா! அத்தைய நேத்து அதிகமா ஏசிட்டேன், கோபமா இருப்பாளா? அவளப் போயி பார்த்துட்டு வருவோமா?”

இருபது வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்திருக்க வேண்டும்! அத்தை இறந்து இரண்டு வருடங்களாகி விட்டது! நீண்ட காலத்துக்கு முந்தைய நினைவுகள் மறக்காமல் இருக்க, அண்மைய நினைவுகள் தொலைந்து போவது ஆச்சரியமாக இருந்தது.

சரிப்பாஎன்றான்.

இதையெல்லாம் வேண்டுமென்றே செய்வதாக அண்ணி மாலா நினைத்துக் கொள்கிறார்.

கழிவறைக்கு போகணும்னா ஒழுங்கா போகணுமில்லையா! இல்லை இவரையாவது கூப்பிடலாமா! ரெண்டுமில்லாம வாசலிலேயே அசுத்தம் பண்ணி வச்சுட்டார்! ஒருமெய்ட்எடுத்துட்டாக் கூட பரவாயில்ல! அதுக்கும் வர வருமானம் பத்தாது! என்ன செய்யறது!’ என்றாள் அவள்.

அண்ணியின் பொறுமை எல்லையை மீறிக் கொண்டிருக்கிறது என்று தோன்றியது. அவளையும் குறைச் சொல்ல முடியாது. சலிப்பாய் பேசினாலும் வேலைகளைச் செய்துக் கொண்டு தான் இருக்கிறாள்.

இதெல்லாம் தெரிந்து செய்யவில்லை!” என்றார் மருத்துவர்.

இந்த வியாதியே இப்படித்தான். பழசெல்லாம் தேதியோட பளிச்சுன்னு ஞாபகம் இருக்கும். இப்ப நடக்கறடெல்லாம் சுத்தமா மறந்து போயிடும். இது இவங்களுக்கு இரண்டாவது குழந்தைப் பருவம் மாதிரி! கூட இருக்கறவங்க தான் பத்திரமா பொறுமையோட பார்த்துக்கணும்என்றார்.

     அப்பா மருத்துவருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த கடிகாரத்தை பார்த்தபடி, ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தார். டாக்சியில் செல்லும் போது அப்பாவின் கண்கள் கலங்கியிருந்தன. சன்னலுக்கு வெளியே மழையில் நனைந்திருந்த சாலைகளைப் பார்த்தபடி வந்தார். அவ்வப்போது எச்சிலை விழுங்கிக் கொண்டார்.

     டாக்சியை விட்டு இறங்கும் போது என்ன நினைத்தாரோ, என்ன புரிந்துக் கொண்டாரோ, “என்னால யாருக்கும் எந்த பிரச்சனையும் வேண்டாம்! ஏம்ப்பா என்னை ஏதாவது இல்லத்துல சேர்த்துடேன்!” என்றார். அவர் குரல் நடுங்கியதில் வார்த்தைகள் தெளிவின்றி கேட்டது.

     ஒருமுறை தீபாவளி கொண்டாட்டத்தின் போது அப்பாவுடன் இவன் லிட்டில் இந்தியா சென்றிருந்தான். மின்விளக்குகளின் வெளிச்சத்தில் விதவிதமான பொருட்களை விற்ற கடைகளையும், மனிதர்களையும் பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டே வந்தான். அப்பாவின் கையை பத்திரமாய் பிடித்துக் கொண்டே வந்தவன் எப்படியோ கையைத் தவறவிட்டிருந்தான். 

     அந்த நிமிடம் அவ்வளவு பெரிய இடத்தில், உயரமான மனிதர்களுக்கிடையே மூச்சு முட்டுவது போல இருந்தது. சற்றுமுன் வண்ணமயமாய் தோன்றிய கடைகள் அப்போது இவனை விழுங்கக் காத்திருக்கும் பிரம்மாண்ட அரக்கர்கள் போல தோன்றின. இனி அப்பாவைப் பார்க்கவே முடியாதோ என்ற பயம் இவனை பிடித்துக் கொண்டது.

வென்று அழத் தொடங்கிய போது, எங்கிருந்தோ விரைந்து வந்த அப்பா அவனை தூக்கி வைத்துக் கொண்டு,

தம்பி இதோ இருக்கேம்பா அப்பா! எங்கேயும் போகலை!’ என்றார். பயத்தில் அவர் கழுத்தை கெட்டியாய் கட்டிக்கொண்டான் சங்கர். அதன் பின் வீடு வந்து சேரும் வரை அவனை கீழே இறக்கியே விடவில்லை, அப்பா.

இப்போது அப்பா அந்த நிலையில் இருப்பதாய் தோன்றியது!

உடல் குறுகி, தலைக் குனிந்து, நடுங்கும் விரல்களை இறுக்க மூடிக் கொண்டு நிற்கும் அவரைப் பார்க்கும் போது, தவறு செய்துவிட்ட சிறுவனைப் போல இருந்தார்.

மனம் சட்டென்று கனத்துப் போனது!

நான் இருக்கேம்ப்பா உங்ககூட! தைரியமா இருங்க!” என்றபடி அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

     அவர் கை இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தது. அப்பாவின் பயங்களைப் போக்கி ஒரு குழந்தையைத் தேற்றுவது போல தேற்ற வேண்டும் என்று தோன்றியது. அவனுக்கு தன்னைத் தோளில் சுமந்து சென்ற பழைய அப்பாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.

     இரவெல்லாம் தூக்கம் வரவில்லை, சங்கருக்கு. அப்பாவை நன்றாக பார்த்துக் கொள்வது என்பது தன்னால் மட்டுமே தனித்து செய்யக் கூடிய செயல் இல்லை என்று புரிந்தது. இங்கேயே வந்துவிட்டால் கூட, வேலைக்கு போகும் நேரமெல்லாம் அவரை எங்கே விடுவது!

எண்ணங்கள் மனதில் ஓட, புரண்டு புரண்டு படுத்தான். பின் எழுந்து சன்னல் அருகே சென்று நின்றுக் கொண்டான். வெளியே நிலா தனிமையில் உலா வந்துக் கொண்டிருந்தது.

     மிகவும் யோசித்த பின், முதலில் ஒரு திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். பின் அப்பாவைப் பார்த்துக் கொள்ள என்று மட்டுமே ஒரு பணிப்பெண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு முடிந்தவரை அப்பாவுடனேயே பொழுதைப்போக்க வேண்டும் என்று முடிவு செய்துக்கொண்டான். அதன் பின் தான் தூக்கம் வந்தது அவனுக்கு.

மறுநாள் காலை,

அப்பா! நான் இனி உங்ககூடவே இருக்கப் போறேன்!”

அப்ப உன்னோட வேலை?”

இங்க அதைவிட நல்ல வேலை கிடைக்கும்ப்பா!”

நெசமாவாய்யா!”

அப்பாவின் கண்கள் சந்தோஷத்தில் பனித்தன.

உண்மையா! இனி நீங்க எதுக்கும் பயப்பட வேணாம்! நீங்க என்னை பார்த்துகிட்டதுக்கும் மேல, உங்கள நான் பார்த்துப்பேன்!”

அப்பாவிற்கு எவ்வளவு புரிந்தது என்று தெரியவில்லை! ஆனால் அவர் சிரித்த சிரிப்பில் ஒரு நிம்மதி தெரிந்தது.

இந்த நிம்மதியை விட வெளிநாட்டு வேலை ஒன்றும் பெரிதில்லை என்று நினைத்துக் கொண்டான் சங்கர்.

(முத்தமிழ் விழா 2012ல் இரண்டாம் பரிசு பெற்ற கதை)