அண்ணாநகரு ஆண்டாளு
ஐனாவரம் கோபாலு
ஐ.சி.எஃப்புல
எடுக்கறாண்டா தண்டாலு…
இந்தப் பாடலைக்
கேட்கும் போது ரேவதி நினைவுக்கு வருவாள்.
பொறியியல் கல்லூரி
இரண்டாம் வருடத்தில் அறிமுகமான தோழி. அவளுடைய வீடும் என் வீடும் ஓரளவிற்கு அருகில். இருவருமே,
அவள் சைக்கிளில் நான் டி.வி.எஸ் எக்ஸ்செல், லோக்கோ ஸ்டேஷனில் சந்திப்போம். ரயிலின்
பெண்கள் பெட்டியில் ஏற்கனவே ஏறியிருக்கும் தோழிகளுடன் சத்தமாய் பாட்டெல்லாம் பாடிக்கொண்டு
போவோம். மானாமதுர மாமரக் கிளையிலே, வெண்ணிலவே வெண்ணிலவே . . .
செமஸ்டர் பரீட்சைக்கு
முன்தினம் அவளது வீட்டில் தங்கிவிடுவேன். எந்தெந்த கேள்விகள் வருமென அனுமானம் செய்து
அவற்றை சாப்டர் வாரியாகப் பங்கு பிரித்து, இரவெல்லாம் படித்து, ஒருவர் படித்ததை மற்றவருக்குச்
சொல்லி படிக்கும் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்வோம்.
அவளது அப்பாவும்
என்னுடைய அப்பாவும் நல்ல நண்பர்களாகவும் ஆகியிருந்தார்கள். மாலையானால் கதவை மூடி வையுங்கள்
என்று சொல்லும் லோகத்தில் திறந்து வைம்மா அப்போது தான் கொசுவெல்லாம் வெளியே போகும்
என்று அவளுடைய அப்பா சொன்னதாக நினைவு. என்னை யோகாவிலும் தியானத்திலும் சேரச் சொல்லி
அந்த அத்தியாயத்தை என் வாழ்வில் சீரியஸாகத் தொடக்கி வைத்தவள் அவள்.
இப்போது போலவே
அப்போதும் நானொரு மகா introvert. அதோடு கோபமோ அழுகையோ சட்சட்டென வரும். யோசிக்காமல் அதை அப்படியே வெளிக்காட்டி விடுவேன்.
நம் கண்ணீருக்கு மதிப்பில்லாத இடத்தில் அதை வெளிக்காட்டிவிடக் கூடாது என்று அவள் சொன்ன
தினம் மூடியிருந்த மூளையின் ஒருசிறுபகுதி திறக்க, இன்று வரை கண்ணீர் முட்டி
வரும் தினங்களில் ரேவதி நினைவுக்கு வருவாள்.
திருமணத்திற்குப்
பின்னர் தொடர்பு நீங்கி தொலைந்து போனோம். திருமணத்தின் தொடக்கால குழப்பங்கள் நீங்கி
அவள் வீட்டைத் தேடிச் சென்ற போது அவளுடைய அம்மா அன்று பார்த்த அதே போல இருந்தார், அவளும்
கூட. நட்பு விட்ட இடத்திலிருந்து மீண்டும். நடுவில் மறைந்த இரண்டு தசாப்தங்களில் என்
பிறந்த நாளை அவள் மறந்திருக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் பிறந்தநாளில் அவளிடமிருந்து
எனக்கு வாழ்த்து வந்துவிடுகிறது. (குறிப்பு: இன்றோ நேற்றோ, அதற்கு முன் தினமோ, நாளையோ,
அதற்கு மறு தினமோ என் பிறந்த நாள் அல்ல!)
குற்றவுணர்வு
உந்த இந்த வருடம் தான் அவளிடம் அவளுடைய பிறந்தநாளைக் கேட்டிருக்கிறேன். அடுத்த வருடம்
முதல் நானும் வாழ்த்திவிடுவேன்.
சைட்டடிச்சா
ஐ.சி.எப்புல எடுக்கறாண்டா தண்டாலு….
எம். ஃப். எல்ன்னு
அவ அப்பா வேலை செய்யுற கம்பெனியை சொல்லக் கூடாதா, உங்கப்பா வேலை செய்யுற பென்ஷன் பே
ஆபீசை சொல்லக் கூடாதா,
ஏண்டா என்னோட
அப்பா வேலை செய்யுற ஐ.சி.எப்ல தண்டால் எடுக்கறீங்க என்று சிரித்தபடி அவள் கேட்பது,
இப்போது ஒலித்துக்
கொண்டிருக்கும் அண்ணாநகரு ஆண்டாளு பாடலை விட சத்தமாய் கேட்கிறது.
3 கருத்துகள்:
இப்படி ஒரு நட்பு அமைந்திருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நினைவுகளை பகிர்ந்திருந்த விதம் இனிமை.
நினைவுகளை பகிர்ந்திருந்த விதம் இனிமை
கருத்துரையிடுக